வன்னியிலிருந்து இடம்பெயர்வோருக்கு சுகாதார வசதி, போசாக்கான உணவு

hospital.jpgவன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் உள்ள மக்களுக்கும் சுகாதாரவசதிகள் மற்றும் போசாக்குள்ள உணவுகள் வழங்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே தெரிவித்தார்.

இங்குள்ள ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இயங்கி வருவதாகவும் அவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார் மருந்துகள், அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வன்னியில் இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் கூறியதாவது:

மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வட பகுதி மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி எமது அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.  இதன்படி ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் உயர் மட்ட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ஏனைய பகுதிகளுக்கு சமமாக வட பகுதி மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எனது தலைமையிலான உயர் மட்ட சுகாதார அமைச்சின் குழுவொன்று  (19) வவுனியாவுக்கு விஜயம் செய்தது. யுனிசெப், ஐ.சி.ஆர்.சி., உலக சுகாதார ஸ்தாபனம் அடங்கலான சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. வன்னியில் இருந்து வந்துள்ள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள மெனிக்பாம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டோம். வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்குவதற்கென மருத்துவர்கள், தாதிமார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு அம்பியூலன்ஸ், போசாக்கு உணவுகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

 மெனிக் பாம் முகாமுக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் வைத்தியசாலையையும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். நெடுங்குளத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமில் சுகாதார நிலையமொன்றை அமைத்து தேவையான சுகாதார அதிகாரிகள், மருந்துகள், அம்பியூலன்ஸ் என்பன வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வன்னியில் இருந்து வரும் மக்களுக்கென திரீபோசா அடங்கலான போசாக்கு உணவுகள் 40 லொறிகளில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டன.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளின் நிலைமைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளருடன் தினமும் தொடர்புகொண்டு உரையாடி வருகிறோம். அங்குள்ள குறைபாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக ஆஸ்பத்திரி செயற்பாடுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது ‘செல்’ விழுந்து 18 நோயாளிகள் இறந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

செல் தாக்குதலினால் இரு நோயாளிகள் சிறுகாயமடைந்ததாக ஆஸ்பத்திரி மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். இந்த தாக்குதலை யார் செய்தனர் என்று தெரியாது. தாக்குதலில் புலிகள் இறந்ததை சிவிலியன்கள் என பி.பி.சி. தவறாக செய்தி வெளியிட்டிருக்கலாம். செல் விழுந்து சிவிலியன்கள் பலியானதாக தவறான தகவல் வழங்கிய மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இராணுவ கட்டுப்பாடற்ற பகுதியில் உள்ள நோயாளிகள் வவினியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு வந்த 34 நோயாளிகள் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் புதுக்குடியிருப்புக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தமது உறவினர்கள் அங்கு இருப்பதால் அவர்கள் புதுக்குடியிருப்பிற்கு திரும்பிச் சென்றனர். மூன்று தினங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் 7 கர்ப்பிணி தாய்மார்களை அழைத்துக்கொண்டு வவுனியா வந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *