2009

2009

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென்பதால் படையினரின் நடவடிக்கைகளில் தாமதம் – விமல்வீரவன்ச

parliament2301.jpgபொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனாலேயே படையினரின் நடவடிக்கைகள் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., இல்லாவிட்டால் படையினரின் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை திருத்தம் செய்யப்பட வேண்டும். நோர்வேயின் அனுசரணை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளே இருந்தன. ஆனால், இன்றோ அரசாங்கம் போர் நிறுத்தத்தையே முடிவுக்கு கொண்டு வந்து, நோர்வேயின் பாத்திரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, அதற்கு அப்பால் சென்று விடுதலைப் புலிகளை தடையும் செய்துள்ளது.

எனவே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை இன்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதைப் பெற உரைத்தவர்கள் என்ற வகையில் நாம் சந்தோஷமடைய வேண்டும். படையினர் இன்று புலிகளை இறுதி நிலைக்குக் கொண்டு சென்று சிக்க வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளுக்கு நேரடியாகவே தூதுபோகும் ஒரு சில உறுப்பினர்கள் படையினருக்கு கடலுக்குள் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்கள். ஆனால் இன்றோ புலிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று இராணுவ வெற்றிகளை பாராட்டும் நிலைக்கு வந்துள்ளார். எனினும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றிய போது கூட இதை அவர் கூறவில்லை. அதன் போது எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறே கூறினார். ஆனால், படையினர் முல்லைத்தீவையும் கைப்பற்றி இறுதி வெற்றிக்குச் செல்லும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் படையினர் வெற்றிகளை பாராட்டத் தொடங்கியுள்ளார்.

இதேநேரம், போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்திற்கும் உட்பட்டு, இறுதித் தோல்வி நிலையில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்க மீண்டுமொரு போர் நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தாது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே படையினர் தங்களது மனிதாபிமான நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டு வருகின்றனர். இல்லாவிட்டால் படையினரினர் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்கும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போன்றோ அல்லது காஸாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டது போன்றோ பொதுமக்களின் நலன் குறித்து கருதாமல் இலங்கைப் படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. இவ்வாறான நிலைமையில் அமெரிக்காவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி இலங்கைப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது, புலிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒட்சிசன் வழங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்றார்.

இந்திய உதவியுடன் யாழ். ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி! -அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

daglasdevananada.jpgசுமார் மூன்று தசாப்த காலமாக செயலிழந்துபோயுள்ள யாழ் குடாநாட்டுக்கான ரயில் சேவையை இந்தியவின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளில்; சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
   
இவ்விடயம் தொடர்பாக அனைத்து உரிய தரப்பினருடனும் கலந்துரையாடி வரும் அமைச்சர் இதற்காக இந்தியாவின் உதவிகளையும் நாடியுள்ளார்.

வெகுவிரைவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் மூலம் யாழ் குடாநாட்டு மக்களும் ஏனைய பிரதேச மக்களும்  பாரிய நன்மைகளை அடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படும்!

risard.jpgபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிக்கோட் திட்டத்தின் கீழ் 500 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலாசார மண்டபத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர் டிக்சன் சரத் சந்திரடிலா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பேசுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எனக்கெதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம் – ஜனாதிபதி

mahi-raja.jpg“கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை அழைத்துப் பேசுவதைச் சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்கு தொடரப் போகிறார்களாம். நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு குறைகளைச் சுமத்துகிறார்கள்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம் உள்ளிட்ட வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொருட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமார் 3000 பேர் மத்தியில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறியதாவது,

இந்த ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் நான் பேசுவதாக சிலர் குறைபடுகிறார்கள். இங்குள்ளோரை கிராமங்களுக்கு வந்து சந்திக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. பலரை இவ்விடத்திற்கு அழைத்து இந்த மாளிகையை அசிங்கப்படுத்துவதாக ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார்.  இந்த மாளிகைக்கு அப்பாவி மக்கள் வந்து பல அனுபவங்களைப் பெற்றதன் மூலம் அவர்களது உள்ளங்களில் ஏற்பட்டுள்ள ஆனந்தத்தையும் அபிலாஷைகளையும் நான் நன்கு உணர்ந்தேன். நான் உங்களை எல்லாம் இங்கு அழைத்துப் பேசுவதை சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆடம்பரமான வகை தொகை படைத்தவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்பதே.

இந்த நாட்டின் கிராமப்புறப் பகுதியில் பிறந்து வளர்ந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு என்மீது குறை கூறுகிறார்கள். இவ்வாறு மக்களுடன் நான் தொடர்பு கொள்வதை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

இந்த நாடு பல்லின மக்களைக் கொண்ட நாடாகும். இவர்களின் சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் பல வகைப்பட்டவை. அவர்களின் எழுச்சிக்கும் வாழ்க்கைக்கும் உதவும் வகையில் அவர்களை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஆதரிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். முஸ்லிம் மக்களின் கல்வி பல நிலைகளிலும் பின்னடைவை நோக்கி இருப்பதாக எனக்குப் பலராலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆரய வேண்டியுள்ளது. இது குறித்து நான் மிகுந்த கவனத்தை எடுப்பேன்.

புலிகளின் கெடுபிடியால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் பாரிய வெற்றியே நாம் அடைந்துள்ளோம். இதன் பொருட்டு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மக்கள் கல்வியையும் மற்றும் இயல்பு வாழ்க்கையையும் இன்று இட்டுச் செல்லக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.  குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருக்கிறார்கள். இவர்களில் முஸ்லிம்கள் பெரும் அளவில் அரசுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருக்கிறார்கள். இது நல்லதோர் அறிகுறியாகும். ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருப்பதன் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் உள்ள எனது முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அப்பாவி தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே எமது தலையாய பணியாகும். இதனையே நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.எனவே புலிகள் இத்தருணத்திலாவது இந்த நிலைப்பாட்டை உணர்ந்து அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ராதா படையணி – பிரபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைமையகம் படைவசம்

udaya_nanayakkara_.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாக். விஞ்ஞானி: வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

world-news.jpgபாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரகசியமாக விற்றதால் 2004-ல் கைது செய்யப்பட்டார்.

தனது குற்றத்தைக் கான், ஒப்புக்கொண்டதால் அப்போதைய அதிபர் முஷாரப், கானுக்கு மன்னிப்பு வழங்கினார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தார்.  அவர் நேற்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் இனிமேல் நாட்டின் எந்த பகுதிக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செல்லலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கானின் வழக்கறிஞர் இக்பால் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசோ, கான் நினைத்தபடி சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவரது பாதுகாப்பு நலன் கருதிதான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அர்ஜுனா சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம்

supreme_court.jpgஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா ரணதுங்கவை நீக்கியதன் மூலம் சர்வதேச ரீதியில் அவர் சம்பாதித்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதை பார்த்த உடனயே தெரியவருவதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஆட்சேபித்து அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே உயர் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் 25 வருட அரசியல் வாழ்க்கையின் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கு கொண்டவர்களின் உணவுப்பட்டியலுக்கான கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செலுத்த மறுத்ததையடுத்தே இடைக்கால கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா நீக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால கிரிக்கெட் சபையிலிருந்து அர்ஜுனா ரணதுங்க நீக்கப்பட்டமை இயற்கை நியதிகளுக்கான நீதி மற்றும் சகல சட்டங்களுக்குமான நியமனங்களுக்கு மாறானதென அர்ஜுனா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் விளையாட்டுத்துறை அரசியல் மயமாகிவிடக் கூடாதென்ற காரணத்துக்காக தனது அமைச்சர் பதவியை துறந்த அர்ஜுனா, எந்தவொரு விளம்பரத்திலும் தோன்றாமல் இருந்ததன் மூலம் சிறந்த உதாரணத்துக்குரிய விளையாட்டு வீரராக திகழ்ந்தாரென இதன்போது சஞ்சீவ ஜயவர்தன குறிப்பிட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் நடவடிக்கையின் மூலம் அர்ஜுனா ரணதுங்க தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சம்பாதித்திருந்த நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்தது.

இதன் பிரகாரம் அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை முழுமையாக விசாரணை செய்ய அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி நடத்தவும் தீர்மானித்தது. இந்த மனு பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, அசோக டி.சில்வா, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

வவுனியா வரும் மக்களுக்கான உணவை வழங்க உலக உணவு திட்டம் உறுதி

வன்னிப் பகுதியிலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசமான வவுனியாவிற்கு வரும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க உலக உணவுத் திட்டம் உறுதியளித்துள்ளது. வன்னியிலிருந்து ஒரு இலட்சம் பொது மக்கள் வவுனியாவிற்கு வருகை தருவரென எதிர்பார்க்கப்படுவதையடுத்து முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் பொது மக்களுக்குத் தேவையான உணவினை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹாலிதீன் தெரிவித்தார்.

அமைச்சு மேற்படி அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்வுணவுப் பொருட்களை வழங்க உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளதாகத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் தேவையானளவு உணவுப் பொருட்களை வழங்கவும் அவ்வமைப்பு பின்நிற்காது எனவும் தெரிவித்தார்.

அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருவோருக்கான சகல அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் மஹாஓயா ஆற்றிலிருந்து ஆறு கிலோமீற்றருக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது.

மெனிக்பாம் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் வவுனியாவுக்கு நேரடியாகச் சென்று சகல நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து வருகிறார்.

எந்தளவு மக்கள் வவுனியாவுக்கு வந்தாலும் அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதற்குப் போதுமான நிதியினை வழங்கவும் அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சு தயாராகவே உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலுள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச சமூகத்தின் பணி – கோத்தாபய : செஞ்சிலுவை குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்- விமல்

gotabhaya.jpgபுலிகளைப் பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு புலிகளின் பிடியிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச அமைப்புக்களினதும், தன்னார்வ நிறுவனங்களினதும் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களை பாதுகாப்பதாக கூறி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர். யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிக்கும்படி சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் கொடுப்பதுடன் அதற்கான உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மக்களை விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் எமது பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை திசை திருப்பும் வகையிலும், அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடனும் சில சர்வதேச அமைப்புக்களும், வெளிநாட்டு ஊடக நிறுவனங்களும் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குற்றஞ்சாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.  இதன் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியதாவது:-

புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிப்பவர்களும், அதனை திரிவுபடுத்தி பொய்ப்பிரசாரங்கள் செய்கின்றவர்கள் எவரும் அப்பாவி பொது மக்களை புலிகள் பலாத்காரமாக பிடித்து மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதையோ விடுவிக்காமல் இருப்பதையோ பேசுவதில்லை.

ஆயுதங்களை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்வது எமது நோக்கமாக இருந்திருந்தால் இன்று இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். பொது மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்டதனாலேயே இந்த நடவடிக்கையை எமது படையினர் இன்று வரை நீடித்துச் செல்கின்றனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தொடர்பாக பலர் பேசுகின்றனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக புதிதாக கூற வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில், அவர்கள் சரணடைய வேண்டியது மாத்திரமே உள்ளது. இதில் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.

கிழக்கை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான புனர்வாழ்வையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை நாங்கள் நடைமுறையில் காண்பித்துள்ளோம் என்றார்.

இலங்கையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ, அமைப்புக்கள் சிறந்த சேவைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் இந்த நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகளோ மோசமாகவும், புலிகளுக்கு சார்பான நிலையிலும் செயற்படுகின்றனர்.

புலிகள் ஆயுதத்தை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்யவில்லை. இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்கு வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே தான் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருப்பவர்களும், சில சர்வதேச அமைப்புக்களும் புலிகளுக்குச் சார்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

படையினர் நடத்திய மோட்டார் தாக்குதல்களிலேயே அநேகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சிலரிடம் சூட்டுக் காயங்களும் காணப்படுகின்றன. நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கே சூட்டுக் காயம் ஏற்படும். துப்பாக்கியுடன் காயமடைந்த நிலையில் இருப்பவர்களை புலி உறுப்பினர்கள் என்றும், துப்பாக்கி இல்லாத நிலையில் காயமடைந்தவர்கள் இருந்தால் அவர்கள் சிவிலியன்கள் என்றும் சொல்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அநேகமான புலிகள் சிவில் உடைகளுடன் இருந்து கொண்டே மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் அரைவாசி பிரதேசத்திலேயே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது. இலங்கை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வரும் எந்த ஒரு நாடும் வழங்காத பல சந்தர்ப்பங்களை நாங்கள் பொது மக்களுக்காக வழங்கியுள்ளோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக ஒருசிலரும், இரண்டரை இலட்சம் மக்கள் இருப்பதாக இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்த எண்ணிக்கை புலிகளின் அழுத்தத்தினால் கூறப்பட்டவையாகும்.

இரண்டு இலட்சத்து எட்டாயிரம் பொதுமக்களே உள்ளார்கள் என்று 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். இது தவிர மலையகம் உட்பட ஏனைய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையானவர்கள் சென்றுள்ளதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், கடந்த சில மாதங்களாக வருகை தந்த பெருந்தொகையானோர் வவுனியாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய

படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளும், அவர்களுக்கு சார்பானவர்களும் கூறுவது போன்று பெருந்தொகையான பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான எந்தவித தகவல்களும் இல்லை என்று தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முல்லை மாவட்டத்தில் எத்தனையோ குளக்கட்டுகள் வந்த போதிலும் அவற்றை பயன்படுத்தி மக்கள் விவசாய நடவடிக்கைகள் செய்த எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.

புலிகள் உலகளாவிய ரீதியில் பாரிய வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் பெருமளவிலானவர்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளமையும் தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் இராணுவ ரீதியான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்!  விமல் வீரவன்ஸ ஆவேசம்

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல்கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, போல் கஸ்ட்டெலாவையும் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சித் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு: பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்து அவர்களின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக எமது படையினர் போராடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராகச் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒருபுறம் இணைத்தலைமை நாடுகள் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுகின்றன. மறுபுறம் சில சர்வதேச அமைப்புகள் புலிகளைக் காப்பாற்றிவிட முற்படுகின்றன.  அந்த வகையில் செஞ்சிலுவை  சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவான வகையிலும் எமது படையினருக்கு எதிரான வகையிலும் அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
வன்னி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார். அவரது கூற்றில் எந்த உண்மையுமில்லை.  எமது படையினர் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றவே யுத்தம் செய்கின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

ஆனால், போல் கஸ்ட்டெலா ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை படையினர் மீது சுமத்துகின்றார். அவர் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார். அவ்வாறான ஒருவரை நாட்டில் வைத்திருக்கக்கூடாது. அரசு அவரை உடனடியாக நாட்டிலிருந்து அனுப்பவேண்டும். அத்தோடு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் இங்கிருந்து விரட்டிவிடவேண்டும். எமது மக்களுக்கு எமது அரசு போதுமான உதவிகளைச் செய்துவருகிறது  என்றார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசும் குற்றச்சாட்டு

red-cr.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது.

கொழும்பில் உள்ள தமது அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களால் கல் வீசித்தாக்கப்பட்டதாகவும், தமது அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

733 பொதுமக்கள் பலி; 2,615 பேர் படுகாயம் ஒரு வார வன்னி அவலம் குறித்து சபையில் சுரேஷ்

suresh-mp.jpgவன்னியில் ஜனவரி 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் படையினரின் ஷெல் மற்றும் விமானக் குண்டுவீச்சுகளினால் 733 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 2615 பேர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழினப் படுகொலை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாமென நினைத்து அரசு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்க அரசு முன்வராத வரையில் இப்பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியாவோ, அமெரிக்காவோ எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்கள் மீது திணித்துவிட முடியாது. அதனை ஏற்பதற்கும் தமிழ் மக்கள் தயாரில்லையெனவும் கூறியதுடன், இலக்கினை அடையும் வரை விடுதலைப் போராட்டம் தொடருமெனவும் சூளுரைத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியதாவது; இலங்கை அரசும் சிங்கள மக்களும் கோலாகலமாக கொண்டாடிய சுதந்திர தினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கரிநாள். தற்போது தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

வன்னியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் எவரும் இல்லை. குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் மூன்றில் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பேரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி சுதந்திரதினத்தைக் கொண்டாடமுடியும். எனவே, இச் சுதந்திரதினம் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய தினமாகும்.

வன்னியிலிருந்து வாருங்கள் உங்களை சிறப்பாக பராமரிக்கின்றோமென அரசு கூறியது. இதையடுத்து படுகாயமடைந்த 300 பேர் வவுனியாவுக்கு வந்தனர். இவர்களில் கை, கால்களை இழந்த பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என பலர் இருந்தனர். இவர்களை அழைத்து வந்த பெற்றோர், பராமரிப்பாளர்களை இவர்களுடன் வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதி மறுத்த இராணுவம், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு மற்றையவர்களை நலன்புரி நிலையமென்ற பேரில் இயங்கும் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளது.

கை, கால்களை இழந்த பச்சிளங்குழந்தைகள் வலியால் தாயைத் தேடி கதறுகின்றது. தாயோ தடுப்பு முகாமில் பிள்ளையை பார்க்க முடியாத வேதனையில் துடிக்கின்றார். பச்சிளம் குழந்தைகளின் வேதனையைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி மற்றும் இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் உண்மையான பெற்றோர்களாக இருக்க முடியாது. வேதனையை உணர்ந்திருந்தால் அவர்கள் இவ்வாறு மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள்.

ஜனவரி 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் மட்டும் வன்னியில் ஷெல் மற்றும் விமானக்குண்டு வீச்சுகளினால் 733 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜனவரி 3 ஆம் திகதி மட்டும் 322 பேர் கொல்லப்பட்டதுடன், 985 பேர் படுகாயமடைந்தனர். அரசு ஏவும் ஒவ்வொரு ஷெல்களும் சிங்களவர்களிடமிருந்து தமிழ் மக்களை விலகி ஓட வைக்கின்றது. தமிழ் மக்களின் மனங்களை கோரமாக்குகின்றது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தி அதனை அழித்துள்ளீர்கள். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒரு இராணுவ இலக்கு. அங்கு புலிகள் சிகிச்சை பெற்றுவந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய கூறுகின்றார். அவ்வாறானால் தென் பகுதியில் உள்ள பல வைத்திய சாலைகளிலும் இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், தென் பகுதி வைத்தியசாலைகளை புலிகள் இராணுவ இலக்குகளாகக் கருதினால் நிலைமை என்னவாகும்?

வன்னியிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்கிய அரசு, மக்கள் வெளியேறும் வழிவகைகள் தொடர்பாகவோ, அவர்கள் வர வேண்டிய இடம் குறித்தோ, பாதைகள் குறித்தோ எதுவுமே அறிவிக்கவில்லை. அத்துடன், அந்த 48 மணிநேரமும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்களை நடத்தியதால் மக்கள் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வரவில்லை. இவ்வாறான நிலையில், அரசின் அறிவிப்பு மக்களுக்கு எப்படி தெரியவரும். எனவே, அரசு ஏமாற்று வேலையாகவே 48 மணிநேரத்தை அறிவித்து உலகை ஏமாற்றியது. வன்னியில் இடம்பெறும் விமான, ஷெல் தாக்குதல்களினால் பொது மக்கள் மட்டுமன்றி, ஐ.சி.ஆர்.சி. மற்றும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தாதிஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வன்னியில் ஒட்டுமொத்த தமிழினப்படுகொலை நடக்கிறது. மக்கள் துரத்தித்துரத்தி, கும்பல் கும்பலாக கொல்லப்படுகின்றனர். குடும்பம் குடும்பமாக கொல்லப்படுகின்றார்கள். படுகாயப்படுத்தப்படுகின்றனர். ஊனமாக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவே தமிழினப்படுகொலை இடம் பெறுகின்றது. சிங்களவர்களுடன் தமிழ்மக்கள் இணைந்து வாழ முடியாதென்ற நிலையை அரசு இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. என்றோ ஒருநாள் உலகம் உண்மையை புரிந்து கொள்ளும், நீதி பேசும் உங்களுக்காக பேசும் உலகம் நாளை எங்களுக்காக பேசும். தமிழர் தாயகம் தனிநாடாகும் நிலைக்கு நீங்கள் தான் கொண்டு செல்கிறீர்கள்.

நலன்புரி நிலையங்களென்ற பேரில் வவுனியாவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து வருவோர் அங்கு சிறை வைக்கப்படுகின்றனர். பெண்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றால் இராணுவத்தினரும் கூடவே செல்கின்றனர். வன்னியிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்காக 4 கிராமங்களை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். சொந்த நில முள்ள மக்களுக்கு அகதிமுகாம்கள் எதற்கு? சிங்கள, தமிழின விரோதத்தையே மேலும் மேலும் வளர்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் துணைப்படைகள் இராணுவத்துடன் இணைந்துகொண்டு மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி ஊர்வலங்களை நடத்துகின்றார்கள். சுதந்திர தினம் கொண்டாட வைக்கின்றனர். இதேபோன்று கிழக்கில் கருணாவின் அடியாட்கள் மக்களை மிரட்டி ஊர்வலங்களை நடத்துகின்றனர். நாம் தமிழ் மக்களுக்காக கதவடைப்பு செய்யுமாறு அழைப்பு விட்டபோது வெறும் கதவடைப்பு செய்யக் கூடாதென இராணுவமும் துணைப்படையும் ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதமிருந்த பங்குத் தந்தைகள் மிரட்டப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். கிழக்கில் கடத்தல், கொலை, கப்பம் அதிகரித்துச் செல்கின்றது. பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னும் 1520 வருடங்கள் ஆட்சி புரிய வேண்டுமென்பதற்காக படை வீரர்களை ராஜபக்ஷ குடும்பம் பலி கொடுக்கிறது. அரச கட்டில்களை பாதுகாப்பதற்காக அப்பாவி படை வீரர்கள் பலி கொடுக்கப்படுகின்றார்கள். எமது போராட்டம் பிரபாகரனோடோ பிரேமச்சந்திரனோடோ முடிந்து விடாது. தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர அரசு முன்வராத வரையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

இந்தியாவோ அமெரிக்காவோ எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் மீது திணித்து விட முடியாது. அவ்வாறானதொரு தீர்வுத்திட்டத்தை ஏற்கவும் தமிழ் மக்கள் தயாரில்லை. நாம் தமிழ் மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். எமது தாயகத்தை நாம் தான் ஆளுவோம். எமது பகுதிகளை நாம் தான் அபிவிருத்தி செய்வோம். இந்த உரிமைகள், அதிகாரங்கள் எமக்கு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.