சாதாரண மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பேசுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எனக்கெதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம் – ஜனாதிபதி

mahi-raja.jpg“கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை அழைத்துப் பேசுவதைச் சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்கு தொடரப் போகிறார்களாம். நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு குறைகளைச் சுமத்துகிறார்கள்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம் உள்ளிட்ட வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொருட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமார் 3000 பேர் மத்தியில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறியதாவது,

இந்த ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் நான் பேசுவதாக சிலர் குறைபடுகிறார்கள். இங்குள்ளோரை கிராமங்களுக்கு வந்து சந்திக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. பலரை இவ்விடத்திற்கு அழைத்து இந்த மாளிகையை அசிங்கப்படுத்துவதாக ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார்.  இந்த மாளிகைக்கு அப்பாவி மக்கள் வந்து பல அனுபவங்களைப் பெற்றதன் மூலம் அவர்களது உள்ளங்களில் ஏற்பட்டுள்ள ஆனந்தத்தையும் அபிலாஷைகளையும் நான் நன்கு உணர்ந்தேன். நான் உங்களை எல்லாம் இங்கு அழைத்துப் பேசுவதை சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆடம்பரமான வகை தொகை படைத்தவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்பதே.

இந்த நாட்டின் கிராமப்புறப் பகுதியில் பிறந்து வளர்ந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு என்மீது குறை கூறுகிறார்கள். இவ்வாறு மக்களுடன் நான் தொடர்பு கொள்வதை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

இந்த நாடு பல்லின மக்களைக் கொண்ட நாடாகும். இவர்களின் சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் பல வகைப்பட்டவை. அவர்களின் எழுச்சிக்கும் வாழ்க்கைக்கும் உதவும் வகையில் அவர்களை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஆதரிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். முஸ்லிம் மக்களின் கல்வி பல நிலைகளிலும் பின்னடைவை நோக்கி இருப்பதாக எனக்குப் பலராலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆரய வேண்டியுள்ளது. இது குறித்து நான் மிகுந்த கவனத்தை எடுப்பேன்.

புலிகளின் கெடுபிடியால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் பாரிய வெற்றியே நாம் அடைந்துள்ளோம். இதன் பொருட்டு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மக்கள் கல்வியையும் மற்றும் இயல்பு வாழ்க்கையையும் இன்று இட்டுச் செல்லக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.  குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருக்கிறார்கள். இவர்களில் முஸ்லிம்கள் பெரும் அளவில் அரசுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருக்கிறார்கள். இது நல்லதோர் அறிகுறியாகும். ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருப்பதன் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் உள்ள எனது முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அப்பாவி தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே எமது தலையாய பணியாகும். இதனையே நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.எனவே புலிகள் இத்தருணத்திலாவது இந்த நிலைப்பாட்டை உணர்ந்து அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *