2009

2009

மனித உரிமைகள் குறித்து பேச்சு பெருமளவில் ஆயுதங்களும் விற்பனை

flag_uk.jpgஇலங் கையில் யுத்தப் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிரிட்டன் அரசு இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளமை தெரிய வந்துள்ளதாக பி.பி.ஸி.தெரிவித்துள்ளது.  இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் சமர் நடைபெற்று வரும்நிலையில் இலங்கை அரசுக்கு பல இலட்சம் பவுன்ஸ் பெறுமதியான போர்த்தளபாடங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தமொன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரத்துப்பாக்கிகள், விமானப்படை விமானங்களுக்கான தொலைத்தொடர்புக் கருவிகள், ஹெலிகொப்டர்களுக்கான உதிரிப் பாகங்களும் இந்தவிற்பனை ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. இதேநேரம் இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்து தனது கொள்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வெளியுறவு விஷேட குழுவின் தலைவரும் தொழிற்கட்சி பாராளுமன்ற உருப்பினருமான மைக்கேப்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு பிரிட்டன் விற்பனை செய்யும் ஆயுதங்கள் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிட்டிஷ் அரசின் வழிகாட்டு விதிகளை மீறுவதாயிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

mahi-raja.jpgஆயுதங் களைக் கீழே வைத்துவிட்டுப் படையினரிடம் சரணடையுமாறு நான் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் படைநடவடிக்கை நிறுத்தப் படமாட்டாது. அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.

புலிகளை கடலில் தள்ளவும் முடியாத சூழலே தற்போது தோன்றியுள்ளது. அவர்களைக் களப்பில்தான் தள்ளி விட வேண்டியுள்ளது. எனினும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தத்தையோ வேறு எதனையோ காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை மீள அபகரிக்க ஒருபோதும் அரசு முற்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில்  தேர்தல் பிரசாரக் கூட்ட மொன்று நேற்றுக் குருநாகல் மாளிகா பிடிய மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி இங்கு மேலும் கூறிய தாவது:-

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கையை ஒரே நாடாகவே ஜே.ஆர். ஜயவர்தனவிடம் பாரம் கொடுத்தார். எனினும் நாம் நாட்டைப் பொறுப் பேற்கையில் புத்தளம் வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்கள் புலிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு இந்த நாட்டை என்னிடம் ஒப்படைத்த மக்கள் ஒரே ஒரு ஆணையை மட்டுமே எனக்கு வழங்கினர். பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே அந்த ஆணையாகும். அதனை நான் உறுதியுடன் நிறைவேற்றியுள்ளேன்.

முல்லைத்தீவில் இப்போது இறுதி யுத்தம் நடக்கிறது. புலிகள் போக்கிடமின்றி தற்போது சிவிலியன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒழிந்து கொண்டுள்ளனர்.

நான் குருநாகல் மாவட்டத்திற்கு வருகை தரும்போது பெருமைப்பட முடிகிறது. வட க்கு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான படைவீரர்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே அந்தப் பெருமைக்குக் காரணமாகும். இப்பிரதேச மக்களும் என்னைப் போன்றே பெருமைப்படுவீர்கள் என்பது உறுதி என்றார்.

புலிகளின் தடைகளையும் மீறி 5000 சிவிலியன்கள் நேற்று வருகை

udaya_nanayakkara_.jpgமோதல்கள் நடைபெறும் வன்னிப் பகுதியிலிருந்து நேற்று மேலும் சுமார் 5000 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இவர்களுள் மிதிவெடியில் சிக்கி காயமடைந்த ஒருவரும், புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றுவரை வவுனியாவுக்குள் 8200 பொதுமக்கள் வந்துள்ளனர். வன்னியிலிருந்து வரும் பொது மக்களை தங்கவைக்கவென பம்பைமடுவில் மேலும் ஒரு முகாம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வமடு, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, குப்பிலான் குளம் பகுதியிலிருந்து நேற்றுமுன் தினம் 5000 பேர் படையினரின் கட்டுப்பட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் நேற்று படையினர் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களுள் சுமார் 1000 பேர் நேற்று வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 400 நோயாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து தருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சனசமூக நிலைய ங்களிலேயே தற்காலிகமாக புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இயங்குகின்றது. இப்பகுதி கடற்கரைப் பகுதியை அண்டியுள்ளதால் நோயா ளிகளை கடல்மார்க்கமாகவேனும் திருகோணமலைப் பிரதேசத்திற்கு அழைத்துவருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நகர் படையினரின் முழுமை யான கட்டுப்பாட்டில் வந்துள்ளமையால் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மாவட்ட வைத்திய பணிப்பாளர் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்பவும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை மீண்டும் இயங்கவைக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைக்கு ஆயுதம் அனுப்பவில்லை: காங். தங்கபாலு

thangabalu.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண கோரியும் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,  

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசும், தி.மு.க.வும் பல முனைகளில் போராடி உள்ளன. இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக பலநேரங்களில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இலங்கை பிரச்சினைக்காக இப்போது குரல் கொடுக்கும் கட்சிகளே அப்போது கிடையாது.

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்பதை இந்த மேடையில் பட்டவர்த்தனமாக சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளுடன் அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்றார்.

புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி – ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி அறிக்கை

sangari.jpgsitharthan.jpgsritharan.jpgவன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற்படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கிறது.

வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.

ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.

இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.

அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

புலிகளின் அதிவேகப்படகு ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு

_bort.jpgபுலிகள் பயன்படுத்தும் அதிவேக படகு ஒன்று ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கியது. இலங்கையில் இருந்து புலிகள் யாரும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் ஓலைக் குடா அருகே உள்ள நரிக்குட்டி கடற் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கையில் இருந்து வந்த ஒரு பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. நல்ல நிலையில் காணப்பட்ட அந்த படகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதன் உள்பகுதியில் நாவல்மர இலைகள் கிடந்தன. இதனால் இந்த படகு காட்டுப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த படகில் என்ஜின், டீசல் கேன்கள் எதுவும் இல்லாததால் படகில் வந்த மர்ம நபர்கள் அவற்றை அந்த பகுதியில் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று பொலிஸார் சோதனை நடத்தினார்கள். முட்புதர்கள் நிறைந்த காட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை.அதன் பின்னர் இந்திய கடற் படையினர் வந்து அந்தப் படகை மீட்டு ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாக, இது போன்ற அதி நவீன பிளாஸ்டிக் படகுகளை புலிகளின் கடற் பிரிவினரான கரும்புலிகள் பயன்படுத்துவது வழக்கம். இலங்கை அரசின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த அதிவேக பிளாஸ்டிக் படகுகளை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து வரும் மக்களை தங்கவைக்க நவீன மாதிரிக் கிராமம் அமைக்கும்பணி முன்னெடுப்பு – வவுனியாவில் பசில் ராஜபக்ஷ

basil.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, அங்கிருந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான நவீன மாதிரிக் கிராமங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக் பார்ம் பகுதியில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கதிர்காமர் கிராமத்தைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஸன் தாலா உட்பட அரச அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பஷிலுடன் இணைந்துகொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்; கிழக்கில் விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அங்கு யுத்தத்தால் இடம்பெயர்ந்த 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது தாயக மண்ணில் மீளக் குடியமர்த்திய பணியை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது.  மக்களை மீளக் குடியமர்த்தியது மட்டுமல்லாமல், கடற்றொழில், விவசாயம், சுயதொழில், போன்றவற்றை அம்மக்கள் மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியதுடன், அதற்கான உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

தாம் வாழ்ந்த பிரதேசத்தில் சிறிய வீடுகளாக இருந்தாலும், மக்கள் அதையே பெரிதும் விரும்புவர் என்பதை நாமறிவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் அதே பிரதேசத்தில் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவே இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அப்பிரதேசங்களில் அகற்றப்பட்டதும், இம்மக்கள் மீண்டும் மீளக் குடியமர்த்தப்படுவர். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மடு புண்ணிய தலம் உட்பட அப்பிரதேசம் இன்று பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மின்சாரம், குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மனிதநேய நடவடிக்கைகள் ஒருபுறம் இடம்பெறும்போது, அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்திகளும் இடம்பெறுவது இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் தான் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தற்போதைய இராணுவ நகர்வை குறைத்து மதிப்பிட்டு, போலியான பிரசாரங்களை வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டு நச்சு விதைகளை விதைக்கின்ற போதும், அவற்றுக்கு எதிராக உண்மையை உள்ளபடி கூறி, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள தலைவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்றார். இம் முகாமில் உள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்துகொண்ட பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கான சிற்றுண்டிகளையும் வழங்கினர்.

அனைவரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழினம் காக்கப்படும் – முதல்வர் கருணாநிதி

0302-karunanidhi.jpgதிமுக வினருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே …

உடன்பிறப்பே என்று அழைத்து இந்த வேண்டுகோள் கடிதம் நான் எழுதும் போது, தி.மு.க. உடன் பிறப்புகளை மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று கருதாமல், தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளின் செயல் வீரர்களையும், தூய தொண்டர்களையும் விளித்து எழுதுவதாகவே கருதி, நான் உறவு கொண்டாடி உரைக்கின்ற விளக்கங்களையும், விடுக்கும் வேண்டு கோளையும் சிந்தித்து ஏற்பீர் என்ற நம்பிக்கையில் எனக்காக -உனக்காக என்றில்லாமல் தமிழ் இனத்துக்காக கடமையாற்றிடக் கனிவுடன் அழைக்கிறேன்.

தமிழ் இனம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்று பட வேண்டும் என்று கூறுவது, வெறும் உபதேசமல்ல, `ஊருக்கல்லவா சொன்னேன், உனக்கும் எனக்குமல்லவே’, என்று நினைத்திடும்- அல்லது அவ்வாறு நடந்திடும் உபதேசிகளையும் கொண்ட உலகம் தான் இது. அத்தகைய ஒவ்வா நிலையிலிருந்து ஒதுங்கி வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்பே, உனக்கு இதை உரைக்கின்றேன்.

50 ஆண்டுகளுக்கு மேலாக – அறநெறியில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும், ஆயுதம் தாங்கி அடலேறுகள் நடத்திய போராட்டங்களிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்வு காணாமல் நீடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கிடையே நடைபெற்ற சகோதரப் போராட்டங்களும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுதர இங்கே தமிழகத்தில் இயங்கிடும், அரசியல் இயக்கங்களுக்கிடையே தொடரும் சகோதர யுத்தங்களும் தான் என்பதை மறக்கவும் கூடாது, மறைப்பதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவுக்கு வழி வகுக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களைப் போரின் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், ஒரே விதமான உணர்வும் கொள்கையும் கொண்டவர்கள் இங்கே, தமிழ்நாட்டில் ஒற்றுமையாகச் செயல்பட முடிந்திருக்கிறதா என்பதைத் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, இனியாவது நல்ல முடிவு எடுத்து ஒற்றுமைச் சூழ்நிலையை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் சேர்ந்த உடன் பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க.  தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.

அதிமுக, மதிமுக புறக்கணித்தன …

அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற “மனிதச் சங்கிலி” நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன.

டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிட என் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் சென்ற போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க. ஆகியவை அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளுங் கட்சி சார்பில் நானே முன் மொழிந்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்திட சட்டமன்றத்தில் 3 முறை விடுப்பித்த வேண்டுகோள் தீர்மானம் கூட பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு என்ற செய்தியோடு தான் முடிவுற்றது.

திமுகவை அழைக்கவில்லை …

பிரதான எதிர்க்கட்சியின் தோழமை கட்சிகள் இலங்கை பிரச்சினைக்காக நடத்திய அறப்போர்களிலும், பிரதான எதிர்க்கட்சி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இந்த கட்சிகளால் முறையாக அழைக்கப்படவே இல்லை.

எனினும் ஆளுங்கட்சி என்ற பொறுப்பும் கடமையும் இருப்பதை எண்ணி எதிர்க் கட்சி முதற்கொண்டு எல்லா கட்சிகளின் ஆதரவையும் திரட்ட முயற்சி மேற்கொண்டு அதிலும் வெற்றி பெற முடியாத நிலைமையே ஏற்பட்டது.

சில கட்சிகளின் தலைவர்கள், இந்தப்பிரச்சினையில் தி.மு.க. தான் முன் நிற்க வேண்டுமென்று முழங்கினார்களே தவிர, நாம் என்னவோ, போர் நிறுத்தம் என்பதற்கு எதிரிகள் போலவும், இலங்கைத் தமிழர் பற்றி அக்கறையற்றவர்கள் போலவும் அறிக்கைகள் – பேட்டிகள் அளிக்க முற்பட்டு, ஒற்றுமை முகிழ்ப்பதைக் குலைத்திடக் காரணமானார்கள். குறிப்பிட்டு அவர்கள் யார் என்று சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை. இனியும் பிளவு மனப்பான்மை அதிகமாகி விடக் கூடாதே என்பதற்காக.

இதோ, அயல்நாடுகள் பலவும் அக்கறையுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திட அறிவிப்புகள் செய்துள்ளன.

நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை வரவேற்கிற அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இம்மாதம் தொடர்ந்து நாம் நடத்த இருக்கிற பேரணிகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் இவற்றில் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே ஆம் நம குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிராமல், இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை.

இது பாசம், உறவு, உணர்வு இவற்றோடு ஒன்றிக் கலந்தது எனும் உண்மை உணர்ந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு ஒரே குரலில் ஒலித்து, இரண்டு பிரிவுகளாய் இருப்பினும், கத்திரிக்கோல் போல இருந்து காரியமாற்றிடக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைய பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க.வின் சார்பில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய கொள்கையை, அவர் ஏற்ற நடைமுறையை, இன்றைக்கும் அக்கட்சியின் உடன்பிறப்புகள், ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டு, அவ்வாறே எதிர்பார்த்து.

ஒன்றாக இருப்போம் வாரீர் …

இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர் களின் உரிமை களை யும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அழைக்கிறேன்.

எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி, உறுதி, உறுதி.

அந்த நிலையை நோக்கி நாம் நடக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேர வையின் சார்பில் நடைபெறும் – பேரணி, பொதுக் கூட்டம் அறப்போர் ஆர்ப்பாட்டம் அனைத்திலும் யாரையும் புண்படுத்தாத முழக்கங்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்க!, நிலையான அமைதிக்கு வழி காண்போம்; வாரீர்!, தமிழினம், தாழாது, தாழாது! யாரையும் தாழ்த்தாது!, தடுப்போம் – தடுப்போம், இனப்படுகொலையை தடுப்போம்!.

உடன்பிறப்பே இந்த முழக்கங்களை மட்டும் இதனையொட்டிய முழக்கங்களை மட்டும் பேரணிகளில் கூட்டங்களில் ஒலித்திட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 17 இலட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி

ballot-box.jpgஎதிர் வரும் மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்காக 17 இலட்சத்து 46 ஆயிரத்து 449 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். இதில் கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் 10 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 456 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளர்களின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் போனஸாக 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 22 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி 2 உறுப்பினர்களுமாக 58 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? – ஐ.தே.க. தலைவர் ரணில் கேள்வி

ranil-2912.jpgமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத மகிந்த அரசு யுத்தத்தின் பின்னாள் ஒளிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார். கம்பளை நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு வினவிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

வடக்கு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எமது படையினர் பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்றதாக கூறும் அரசு ஏன் மத்திய மாகாண சபையின் ஆட்சியை மக்களிடம் கோருகின்றது. மத்திய மாகாண சபைக்கும் யுத்தத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றாலும் இல்லாவிட்டாலும் யுத்தம் தொடரும். எனவே, அரசு யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு அரசியல் நடத்த முற்படக்கூடாது.

மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க சரத் ஏக்கநாயக்கவுடன் அல்ல, ஜனாதிபதியுடன் தான் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி டி.பி. விஜேதுங்கவை மலையக பிரஜை என்ற போதிலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. அதேபோல் ஹங்குராங்கெத்தவை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக்குவோம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணமில்லை என்கின்றனர். ஆனால், மிஹின் எயார் விமான சேவைக்கு 600 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனினும், ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு மாதத்தினுள் அமுல் செய்யக்கூடிய வகையில் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால், இலங்கை அரசிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை.

மத்திய மாகாண சபை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட எந்தவொரு பொதுப்பணியையும் மக்களுக்கு செய்யவில்லை. சர்வதேச சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளது. ஆனால், அரசு பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி 8 சதவீத வரி வருமானத்தைப் பெற முயற்சிக்கின்றது. பால்மா உற்பத்தியை நீண்டகாலத்தில் மட்டுமே அதிகரிக்க முடியும். எமது பால் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமேயாகும். இதனை உடனடியாக 40 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசு அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு இலட்சம் ரூபாவால் வீட்டு வாடகை என்ற பேரில் வழங்குகின்றது. இது மக்களின் பணமாகும். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாப் பத்திரத்தைக் கூட சரியாக தயாரிக்கத் தெரியாத அரசு எப்படி கல்வித்துறையை முன்னேற்ற முடியும். மத்திய மாகாணத்தின் அபிவிருத்தியை ஐக்கிய தேசிய கட்சியினூடாக மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.