இலங் கையில் யுத்தப் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிரிட்டன் அரசு இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளமை தெரிய வந்துள்ளதாக பி.பி.ஸி.தெரிவித்துள்ளது. இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் சமர் நடைபெற்று வரும்நிலையில் இலங்கை அரசுக்கு பல இலட்சம் பவுன்ஸ் பெறுமதியான போர்த்தளபாடங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தமொன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக இயந்திரத்துப்பாக்கிகள், விமானப்படை விமானங்களுக்கான தொலைத்தொடர்புக் கருவிகள், ஹெலிகொப்டர்களுக்கான உதிரிப் பாகங்களும் இந்தவிற்பனை ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. இதேநேரம் இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்து தனது கொள்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வெளியுறவு விஷேட குழுவின் தலைவரும் தொழிற்கட்சி பாராளுமன்ற உருப்பினருமான மைக்கேப்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு பிரிட்டன் விற்பனை செய்யும் ஆயுதங்கள் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிட்டிஷ் அரசின் வழிகாட்டு விதிகளை மீறுவதாயிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.