பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா’ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம்.
இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம்.
காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது?
விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள்.
இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது. இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.
அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.