2009

2009

போர்நிறுத்த உடன்படிக்கையை நியாயப்படுத்துகிறார் ரணில்

ranil.jpgபோர் நிறுத்த உடன்படிக்கையின் மூலமாக வடக்கையும் கிழக்கையும் பிரபாகரனுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருந்தால் 2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பேன் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினூடாக நாட்டின் இறைமையை அரசாங்கத்தால் பாதுகாக்க முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரபாகரனை தனிநாட்டுக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கச் செய்ய முடிந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கெஸ்பாவையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க கூறியதாவது;

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எமது படைத்தரப்பினருக்கு மட்டுமே உரித்தானது என்பதை அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்றுக் கொண்டார். அதனூடாக வடக்கு, கிழக்கு கடற் பிரதேசத்தையும் முழு நாட்டினதும் அதிகாரத்தை எமது அரசாங்கத்தால் பாதுகாத்து உறுதி செய்ய முடிந்தது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஒருநாடு ஒரு அரசாங்கம் என்பதை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு அன்று முதல் தனிநாடு என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது உலகின் ஏனையநாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே காணமுடிகிறது. உலகின் ஏனைய நாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அரசுகளும்தீவிரவாத அமைப்புகளும் தத்தமது பிரதேசங்களை தற்காலிகமாக வேறுபடுத்திக் கொண்டன. இங்கு அவ்வாறு நடக்கவில்லை, முழு ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசிடமே உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவுக் கடல் எல்லையின் உரிமை தமது அமைப்பிடமே இருப்பதாகக் கூறி வந்த விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அந்த உரிமை அரசுக்கே உரியது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு கடல் எல்லையின் உரிமையை போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நான் தாரை வார்த்துக் கொடுத்ததாகக் கூறி இன்றைய அரசிலுள்ளவர்களும் சில தீய சக்திகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். அது உண்மையாக இருந்தால் விடுதலைப்புலிகள் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டு என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லையே. என்னை எப்படியும் தோற்கடிக்கவேண்டு மென்பதற்காகவே அந்த தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்து நிறுத்தி என்னைத் தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்தனர்.

அன்று நாம் போர்நிறுத்த உடன்படிக்கையை செய்ததன் காரணமாகவே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடிந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இன்று வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம்.

No_One_Is_Illegalபிரான்சில் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் இன்று சனிக்கிழமை (14.03.2009) அன்று பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés Rochchouart முன்றலில் நடைபெற இருக்கிறது.

இவ் ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF ) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social) சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளனர். எனவே பிரான்சில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட அனைவரையும் மற்றும் சக அக்கறையாளர்களையும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையோடு அழைக்கிறார்கள் .

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கரிசனையும் அக்கறையும் கொண்டு செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினர் சென்ற ஞாயிறு (07.03.2009) இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பாரிசில் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஊர்வலத்தில் வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களுக்கு பிரான்சில் வதிவிட அனுமதி வழங்கவேண்டுமென்ற கோசத்தையும் முன்வைத்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது-மஹிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது என இலங்கை மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக 2800 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் 7000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த கூற்று தவறானது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எமது நாட்டு தூதுவருடன் கலந்தாலோசித்து இருக்கலாம்.  கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற கூட்டத்தொடருக்கு நான் கலந்து கொண்ட சென்ற வேளையில் ஐ. நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமளித்தேன் அப்பொழுது கூட அவர் இது தொடர்பில் எவ்வித கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. இது ஒரு தலைபட்சமாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஆகும்.

இந்த அறிக்கையை வெளியிடமுன் இலங்கை மனித உரிமை தொடர்பான இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரும் உள்ளார் அவராவது இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றிருக்கலாம். கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக 2224 நோயாளர்கள் வன்னியிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது அவர்களுடன் 971 பொது மக்களும் அழைத்து செல்லப்பட்டார்கள். இதை அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்த்துள்ளனர் இது சர்வதேச யுனிசெப் நிறுவனமும் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தது.

மேலும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வலையத்தினுள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லை என சர்வதேசத்த்திற்கு இராணுவ தளபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரசினால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயங்கரவாதத்திலிருந்து சிலியன்களை பாதுக்காப்பதே எமது நோக்கம் அதற்காகவே நாம் பயங்கவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சிலியன்களை கொல்வது எமது நோக்கம் அல்ல எனவே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையை நாம் மறுக்கிறோம் என இலங்கைக்கான மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் ஈரானுக்கு ஏற்றுமதி- அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தகவல்

dmjayarathna.jpgஇலங்கையின் தேயிலை மற்றும் இறப்பருக்கு ஈரானில் சந்தை வாய்ப்புக் கிட்டவுள்ளதாகவும் விரைவில் அதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப் படவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மஹ்மூத் றஹீம் கோஜியை அண்மையில் அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தேயிலை உற்பத்தி தெடர்பாக ஆராயவும் தேயிலை உற்பத்தியில் பங்கெடுத்துக்கொண்டு அவற்றை கொள்வனவு செய்யவும் ஈரான் விரும்புவதாகவும்  அந்நாட்டின் தூதுவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்ப ஈரானிய வர்த்தகப் பிரமுகர்கள் குழு ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றும் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விழுமியங்களுக்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்

navanethem.jpgவன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதுடன் மனிதாபிமான விழுமியங்களுக்கு இருதரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் இருதரப்பிற்கும் இடையிலான மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பதனால் தொடர்புடைய தரப்பினர் போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அப்பாவி பொதுமக்களை கருத்திற்கொண்டு போர்நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதேசங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தாம் விரும்பிய இடத்திற்குச் செல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி மக்களுக்கு அனுமதியளிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு இலங்கை குறித்து நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்

sarathkumar.jpgஇலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.

இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு உரிமை கோரி 60 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உடனே, இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்கள் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சேவை மனப்பான்மை, தொலைநோக்கு பார்வையுடன் உழைக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும் என்றார்.

7 இலட்சம் டொலர் ஜப்பான் நிதியுதவி

japan.jpgவட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்காக 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கான சுவிஸ் அமைப்பிடம் இது தொடர்பாக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளதென இலங்கைக்கான தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் புலம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் இடம்பெறுகின்றன. இம் மக்களின் நலன் கருதி, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கான உதவிகளை ஜப்பான் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கான சுவிஸ் அமைப்பிடம் வழங்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வவுனியாவில் 1000 கட்டில்கள் கொண்ட நடமாடும் வைத்தியசாலை அமைக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சு தகவல்

health-care.jpgவடக்கில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 1000 கட்டில்களைக் கொண்ட நடமாடும் வைத்தியசாலை ஒன்றை வவுனியாவில் அமைக்கத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கென தற்காலிக சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் முல்லைத்தீவிலிருந்து கூடுதலான அளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் நடமாடும் வைத்தியசாலைகள் இல்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு அல்லது கடனுதவியாக நடமாடும் வைத்தியசாலை ஒன்றைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தலைவராக டி.எஸ்.டி. சில்வா தெரிவு

sl_cricket.jpgஇலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிலாரி கிளின்ரன் ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

hillary-clinton.jpgஅமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இத்தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மையானதென ஹிலாரி கிளின்ரன் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என ஹிலாரி குறிப்பிட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.