2009

2009

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பாக இழுபறி ரணிலுடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ranil-wickramasinghe.jpgகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் பொருட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது தடவையாகவும் கூடுவதாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

எனினும் நேற்று முன்தினம் மாலை ஐ.தே.க.தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலின்றி கூட்டமொன்று நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட இடமொன்றில் சந்தித்து பேசியுமிருக்கின்றனர்.

முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம்  காலை 9 மணிதொடக்கம் சுமார் 2 மணித்தியாலங்களாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைமைத்துவத்திற்கு எதிராக ஒரு தரப்பால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக காரசாரமான வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையிலேயே அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட முடிவாகியிருந்தது.

நேற்று  முன்தினம் காலை நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் அவ்வாறானதொரு யோசனை செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்தக் கூட்டத்தை நடத்துவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம்  காலை கூட்டமொன்று நடைபெற்றதை உறுதிப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, அதில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்தே பேசப்பட்டதுடன், நேற்று முன்தினம்  காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட எந்தவொரு விடயம் பற்றியும் பேசவில்லையென்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் கூறப்பட்டது.

இதேநேரம், இந்தக் கூட்டத்தின் நிறைவில், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமான இடமொன்றில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இதை எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவர் உறுதிப்படுத்தியதுடன், சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டம் பற்றி கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க, அதன் பின்னரான கட்சித்தலைவருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் கட்சித் தலைமைத்துவம் குறித்து மீண்டும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படக்கூடுமென்பது மட்டுமன்றி, ஏதேனும் தீர்மானங்களும் எட்டப்படக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாளர், திருமதிக்கு இனிமேல் தடை

eu_flag.jpgஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு; திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை முழுப் பெயரையும் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

மேலும், , ‘sportsmen’ என்ற வார்த்தைக்குப் பதில் இனிமேல், ”athletes’ ‘என்று அழைக்க வேண்டும். அதேபோல அரசியல்வாதிகளை குறிப்பிடுவதாக இருந்தால், ”statesmen’ என்ற வார்த்தைக்குப் பதில் ‘political leaders’ எனக் கூப்பிட வேண்டுமாம். அதேபோல ‘man-made’ என்ற பதத்திற்குப் பதில் sportsmen அல்லது ‘synthetic’ என்று கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், fireman, airhostess, headmaster, policeman, salesman, manageress, cinema usherette, male nurse ஆகிய பதங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் waiter’, ‘waitress’ ஆகிய பதங்களுக்கு பொதுவான வார்த்தை இந்த கையேட்டில் பரிந்துரைக்கப்படவில்லை. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்டிராஸ்பர்க் நகரங்களில் நடந்த நிகழ்ச்சியி?ல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 785 உறுப்பினர்களுக்கும் இந்த கையேட்டை, நாடாளுமன்ற செயலாளர் ஹரோல்ட் ரோமர் வழங்கினார்.

இந்த புதிய உத்தரவுக்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. ஸ்டுருவான் ஸ்டீவன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களது பாஷை ஆங்கிலம். அதில் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கே கற்றுத் தருகிறார்கள். இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றார்.

அதேபோல பிலிப் பிராட்பார்ன் என்ற எம்.பி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விட்டனர். எனது பாஷைய எனது இஷ்டப்படிதான் நான் பேசுவேன். இதில் உள்ள ஒரு மாற்றத்தைக் கூட நான் பின்பற்ற மாட்டேன். எனது பாஷையை எப்படி பேச வேண்டும் என எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல முடியாது என்றார் காட்டமாக.

இதை விட முக்கியமாக மேடம் என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இந்த கையேடு தடை செய்கிறது.

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

Regie_Varsa திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டு இருந்த வேளையில் 11.03.09 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இக்கொடூர நிகழ்வு திருமலையில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்துள்ள தமிழ் மக்களையும் உலுக்கி உள்ளது.

சம்பவத்தின் விபரமானது:

பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டினருடன் ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார்.

வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு “ஆட்டோ”விலேயே பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முனைகையில் அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்த நிலையிலும் வத்சா ‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்’ என்று சொல்லியதில் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கியதில் பாடசாலை மூலம் பொலிஸாரிடம் புகார் கொடுத்து தீவிரமாக தேடத்தொடங்கினர்.

இந்நிலையில் வத்சாவைக் கடத்திய நபர்கள் தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களுடன் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார்.

இதே நேரம் பாடசாலையிலும் அலுவல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வத்சாவை பலவிதத்திலும் தேடத் தொடங்கினர். பாடசாலையில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறத் தொடங்கின.

வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி உறுப்பினர் தனது நண்பர்கள் அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து திரிந்தனர். இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்)வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர்.

வத்சா கொல்லப்பட்ட பின்னரும் கொலையாளிகள் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள ஓடித்திரிந்துள்ளனர்.

குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார்.

பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளந்திரையன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர்.

வத்சா என்ற இச்சிறுமி இருவருக்கு மேற்பட்டோரால் மிக மிருகத்தனமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன் அகோரத்தினாலேயே சிறுமி மரணித்து உள்ளதாகவும்  பிரேத பரிசோதணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பெண்ணுறுப்பு மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு உள்ளதும் அச்சிறுமி அணிந்திருந்த ஆடை முழு இரத்தத்தில் தோய்ந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது. இதனை பெற்ற தாயால் எப்படிப் பார்க்க முடியும். இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.03.09) ஊரே சோகமும் திகிலும் விடுபடாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

நீதவான் இளந்திரையன் அவர்களின் விடா முயற்சியால் மேவின் உட்பட்ட குற்றவாளிகள் 6 பேர் கைதானார்கள். இன்னும் இரு முக்கிய குற்றவாளிகள் இதுவரை தேடப்பட்டு வருகின்றனர். (வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு) கடந்த ஞாயிறு குற்றவாளிகளை வைத்திய பரிசோதணைக்கு கொண்டு சென்ற நேரத்தில் ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் என்ற குற்றவாளி தப்பி ஒட முயன்றதாக சொல்லப்பட்டு பொலிஸாரால் அதே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகுதி கொலையாளிகள் விசாரணையில் உள்ளனர். மேவின் தப்ப முயன்றதாக சொல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதானது மேவினுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்றதாக தெரிகின்றது.

ஏனெனில் இப்படியாக கடந்த காலங்களில் நடந்து வரும் இது போன்ற கடத்தல், கொலை மிரட்டல், கப்பம் கேட்டல், கொலைகள் என்பன ஏதோ ஒரு விதத்தில் இலங்கை புலனாய்வுக்குப் பின்னால் இயங்கும் தகவல் கொடுப்போரை (இன்போமர்) மையப்படுத்தியே ஒரு கூட்டு வேலைத் திட்டமாக பலதரப்பட்ட தகவல் மூலம் தெரிகின்றது.

இந்த சிறுமியின் கடத்தல், கப்பம் கோரல் கூட கொலைவரை வந்து கொலையாளிகள் கையும் மெய்யுமாக பிடிபட்டதாலேயே தெரியவந்துள்ளது. (திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை) மற்றும் படி கடத்தல் மிரட்டல் நடைபெறுவதும், லட்சம் லட்சமாக கப்பப் பணம் பொது மக்களிடமிருந்து பறிக்கப்பட்டும் இவ் விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் வெளியே வராமல் அவர்களே ஒடுங்கிப்போய் அடுத்த வீட்டிற்கு கூட தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியாமல் பீதியிலும் சொல்லோணாத் துன்பங்களுடன் நெருப்பிற்குள் வாழ்கின்றனர். யாரும் வெளியே வந்து சாட்சி சொல்லிவிட்டு உயிருடன், உறவுகளுடன், உடமைகளுடன் வாழமுடியுமா?

மொத்தத்தில் கிழக்கில் குறிப்பாகத் திருமலையில் நடையெறும் கொடூரங்களும் சட்ட விரோதச் செயல்களும் பல்வேறு கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. அதாவது: 

சிறிது காலமாவே பாலையுற்று, அன்புவழிபுரம் போன்ற நகர்புற கிராமங்களிலும், திருமலை நகரப் பகுதியிலுள்ள சோனகவாடி என்ற பகுதியிலும் ரி.எம்.வி.பி யைச் சேர்ந்தோரும், இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் ஒட்டி உறவாடிக்கொண்டு தகவல் கொடுக்கும் (இன்போமர் குழுவினரும் தீவிரமாக கப்பம் கடத்தல் கொள்ளை கொலை என்பவற்றில், ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது. (சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.)

மேலும் ரி.எம்.வி.பியிலிருந்து கருணா பிரிவதற்கு முன்பே இருந்து இதுவரை இவர்கள் மிக மோசமாகவே கப்பம் கேட்டு துன்புறுத்துவதாகவும் அதுவும் கருணா – பிள்ளையான் குழு என பிரிந்த நிலையிலும், இன்று வரை இந்த இரு குழுவிலிருந்து பிரிந்து உதிரியாகி வீதியில் திரியும் இவர்கள் உறுப்பினர்கள் வரை தங்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் தமது தேவைகளுக்காக, வெளிநாட்டிற்குச் செல்வதற்காக என மிக மோசமாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகின்றார்கள்.

எனவே மொத்தத்தில்:

1) கருணா குழு

2) பிள்ளையான் குழு

3) அல்லது கருணா – பிள்ளையான் மோதலால் உள்ளிலிருந்து வெளியேறிய உதிரியான உறுப்பினர்கள்

4) கருணா குழு, பிள்ளையான் குழுக்களுடனும் இலங்கை இராணுவத்துடனும் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் கொடுக்கும் குழுவினர் (ஊரிற்குள் இருந்து கொண்டு காட்டிக் கொடுப்போர் உட்பட)

5) எதேச்சதிகாரம் கொண்ட இலங்கை ராணுவக் குழுக்கள்

என இந்த 5 வகைக்குடுபட்டோரின் மூலமே கிழக்கில் – முக்கியமாக திருமலையில் அனைத்து அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. நடைபெறும் சம்பவங்களில் 95 வீதமானவை பலவிதத்திலும் மக்களை மிரட்டி மறைக்கப்படுகின்றன. வெளிவரும் சில சம்பவங்கள் – கொலைகள் கூட சட்டத்தின் முன், நீதியின் முன்நிறுத்தப்பட்டாலும் இறுதியில் அவை சட்டத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்டவையாகி விடுகின்றது. இவை  அனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் இலங்கை இராணுவத்தாலோ, அல்லது அதிகார வர்க்கத்தினாலோ சாட்சிகளை மிரட்டி, விடயத்தை திசை திருப்பியோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை ஓடவைத்தோ, காணாமல் பண்ணியோ, சட்டங்களை தமதாக்கியோ அல்லது இழுத்தடித்தோ, உண்மைகள் – நியாயங்கள் – அத்தனையும் நிர்மூலமாக்குகின்றன.

உதாரணமாக:

1) மூதூரில் நடந்த ‘அக்சன் பாம்’ 17 பேர் படுகொலை

2) திருமலை கடற்கரைமுன் நடந்த 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை

3) திருமலை கோணேஸ்வரர் ஐயர் படுகொலை

4) கல்முனைப் பகுதியில் வீட்டினுள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு சகோதரிகள்

5) வெல்லாவெளியில் 28.02.09ல் நடந்த 14வயது சிறுமி புனிதவதியின் பாலியல் பலாத்காரம்

6) இதனைத் தொடர்ந்து 02.03.09ல் மகாதேவி சிவகுமார் என்ற பெண்ணின் பாலியல் பலாத்காரமும் படுகொலையும்

7) ஒரு வாரத்தில் வெல்லாவெளியில் இன்னொரு பெண் சுட்டுக்கொலை என முடிவில்லாமல் தொடரும் படுகொலைகள் பாலியல் வன்முறைகள்

பிந்திய செய்தி:

1) உவர்மலை (ஓசில்) என்னுமிடத்திலிருந்த ரி.எம்.வி.பி அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

2) திருமலை நகரிலுள்ள ‘பெரியகடை’ என்னும் பகுதியிலுள்ள பிள்ளையான் அல்லது கருணா குழுவினரின் அலுவலகம் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் முக்கிய தடயங்களும், ஒரு முக்கிய சந்தேக நபரான இவர்களின் இயக்க உறுப்பினரான ஒருவரும் கைதாகியுள்ளதை அறிய முடிகின்றது. கடந்த கால இப்படியான பல குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் இக் கைது நடந்துள்ளது தெரிகின்றது.

2006 நடுப்பகுதிக்குப் பின்னர் திருமலை மாவட்டத்தில் இலங்கையரச இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ராணுவக் குழுக்களான கருணா – பிள்ளையான் குழுக்கள் உட்பட்ட ரி.எம்.வி.பி கட்சியனரும், இலங்கை ராணுவத்திற்கு தகவல் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சில முஸ்லீம் நபர்களும் தங்கள் சொகுசு வாழ்கைக்காகவும், ஆடம்பர தேவைக்காகவும் திருமலை மக்களை பல வழிகளிலும் துன்புறுத்தியுள்ளனர். கொலை செய்துள்ளனர். நாட்டை விட்டே ஓட வைத்துள்ளனர். என்ன? எப்போது நடக்கும் என தெரியாமல் மக்கள் பீதியின் மைத்தியிலேயே வாய் திறவா மௌனிகளாக வாழ்ந்துள்ளனர்.

தற்போது வவுனியாவிலிருந்து திருமலைக்கு மாற்றலாகி வந்திருக்கும் நீதிவான் இளந்திரையன் அவர்களின் உற்சாகத்தாலும் – விடாமுயற்சியாலும் அவரின் நேர்மைத்திறனாலும் இப்படியான குற்றச்செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றது. அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முகமென் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலத்திவைக்கப்படல் வேண்டும். இபபடி பாரபச்சமற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படுமானால் நாடு ஏதோ சிறிது தப்பிக்கொள்ள வழியுண்டு. 

மேலும் கருணா பிள்ளையான் மோதல்களால் சிந்துஜன் உட்பட 5 உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் கண்டெடுக்ப்பட்டது. அதை நியாயம் கேட்கப் போன சிந்துஜனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் உட்பட பார்த்து நிற்கையில் கழுத்து வெட்டிக்கொலை. பிரான்ஸில் இருந்து வந்த மகிலூரைச் சேர்ந்த வேலுச்சாமி நடேசன் என்ற கிலீபன் அல்லது ஜீவன் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். இவற்றுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் 17 பேர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அதின் பின்னர் கொல்லப்பட்டனர். இப்படியே குழுவாதங்களாலும் பதவி ஆசைகளாலும் இயக்க மோதல்கள் வன்முறைகள் முடிவின்றித் தொடர்கின்றது.

Related News:

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

சிவிலியன்களின் வருகை மீண்டும் அதிகரிப்பு

navy_civilians.jpgபுலிகள் சிறியதொரு பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதால் அவர்களின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் தாக்குதல் நடத்தியும், துப்பாக்கிச் சூடுகளை மேற் கொண்டும் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களைநோக்கி வருவதைத் தடுத்து வருகின்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 619 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் 478 பொது மக்கள் இராணுவத்தினரிடமும் 139 சிவிலியன்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

478 பொது மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை நோக்கி வருகை தந்துள்ளனர். இவர்களில் 190 சிறுவர்களும் அடங்குவர்.இதேவேளை, பளமாத்தளன் பிரதேசத்திலிருந்து படகுகள் மூலம் 139 பொதுமக்கள் தப்பி பருத்தித்துறை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டபடி வந்த இந்த பொது மக்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். 47 ஆண்கள், 38 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகள் இவர்களில் அடங்குவர்.இதேவேளை ஐயம்பெருமாள் பிரதேசத்தை நோக்கி மேலும் இருவர் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1704 சிவிலியன்கள் கட்டுப்பாட்டு பகுதி வருகை

Wanni_Warமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து 1704 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கி நேற்று மாத்திரம் 1565 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாக படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து 139 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுள் 47 ஆண்களும், 38 பெண்களும், 27 இளைஞர்களும் 27 யுவதிகளும் அடங்குவதாகவும் படையினர் தெரிவித்தனர். இவர்கள் பாதுகாப்பான முறையில் பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப் பட்டதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஸ்ரீகொத்தா கூட்டத்திற்கு செல்லாது ரணில் பகிஷ்கரிப்பு

ranil-wickramasinghe.jpgஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்குவதற்கென ஸ்ரீகொத்தாவில் நேற்று மாலை நடத்தப்படவிருந்த இரகசிய வாக்கெடுப்புக்கு ரணில் விக்கிரமசிங்க சமுகமளிக்கவில்லை.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது கூட்டத்தை ஒத்தி வைத்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக இன்று (18) நடைபெறவுள்ள அரசியல் அதியுயர்பீட கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று மாலை ஸ்ரீகொத்தாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்தும் கூட அவர் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 ஸ்ரீகொத்தாவுக்கு சமுகமளித்த ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை கட்சி உறுப்பினர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவிக்குமிடத்து தலைமைத்துவப் பதவியிலிருந்து தாம் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் தெரிவித்தி ருப்பதாகவும் தெரிய வருகிறது.

சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

varsa.jpgதிருகோண மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷாவின் படுகொலை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் 5 பேரும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களில் இருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் தமது விசாரணைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, சந்தேக நபர்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம் பெற்ற 30இற்கும் மேற்பட்ட ஆட்கொலைகள், கப்பம், ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

வர்த்தகர்கள் ,சினிமா திரையங்கு உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கப்பம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நபர்கள் கொலை செய்தவர்களின் சடலங்கள் கடந்த காலங்களில் நடுக்கடலில் வீசப்பட்டுள்ளன. சிறுமியின் சடலத்தையும் இதே பாணியில் கடலில் போடுவதற்கே இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் கடற்படையினரால் விதிக்கப்படடிருந்த மீன் பிடித்தடை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்

உயிர் நீத்த படை வீரர்களின் குடும்பத்தினரை பாதூகாப்புச் செயலாளர் சந்தித்தார்

defence_sec.jpgஉயிர்நீத்த மற்றும் படுகாயமுற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதூகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ (17) சந்தித்து உரையாடினார். அநுராதபுரம் சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைப்பிரிவின் முகாமில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

படை வீரர்களின் குடும்பத்தினரின் துயரங்களைக் கேட்டறிந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் நாட்டை மீட்பதற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் எக்காலத்திலும் நினைவுகூரப்படுவர் என்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களின் பட்டியலில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

இந்திய டாக்டர்கள் இராணுவத்தினர் அல்லர் பாராளுமன்றில் அமைச்சர் நிமல் தெரிவிப்பு

nimal.jpgஇந்தியாவிலிருந்து புல்மோட்டைக்கு வருகை தந்திருப்பவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்ற முழுமையான ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் இந்தியாவுடன் மேற்கொண்ட இராஜதந்திர மட்டத்திலான உறவுகளின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

புல்மோட்டைக்கு டாக்டர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர். இந்த விடயத்தை பிரதானமாக்கிக் கொண்டு ஜே. வி. பியினர் தங்களது போஸ்டர் பிரசாரத்துக்கான புதிய தொணியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்திய டாக்டர்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளமை தொடர்பாகவும், அவர்கள் புல்மோட்டையில் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவும் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

இலங்கை வந்துள்ள மருத்துவக் குழு இராணுவ மருத்துவக் குழு என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புல்மோட்டை பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு கனியப் பொருட்கள் உள்ளன. எனவே இந்த இந்திய டாக்டர்களின் புல்மோட்டை வருகையை ஜே. வி. பியினர் விமர்சனத்திற் குள்ளாக்குகின்றனர். ஜே. வி. பியினர் தேவையில்லாத கற்பனையை செய்து கொண்டு உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் சுனாமி நேரத்தில் இந்தியா உதவி வழங்கிய போது ஏன் இந்தியாவின் உதவியை ஏற்கவில்லை என கேட்டனர். இப்போது ஏன் உதவியை பெறுகிaர்கள் என கேட்கிறார்கள் ஜே. வி. பி. இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறது. புல்மோட்டையில் 45 கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படை சிகிச்சையை பெறுபவர்கள் பதவிய, கந்தளாய், திருமலை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுவார்கள். உடனடியாக கழற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியவாறுதான் இந்த ஆஸ்பத்திரி இயங்குகிறது. இதனாலேயே இதனை நடமாடும் ஆஸ்பத்திரி என்று கூறுகிறோம். இது கூட தெரியாமல் நடமாடும் ஆஸ்பத்திரி என்றால் என்ன? என ஜே. வி. பி. கேள்வி கேட்கிறது.

இந்தியா பெருந்தொகையான மருத்துவப் பொருட்களை எமக்கு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் அல்ல. எமது நாட்டிற்கு ஏற்ற எம்மால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்கியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகள் பலவும் உதவி வழங்க முன்வந்துள்ளன. எவரையும் நாம் நிராகரிக்கவில்லை.

இந்திய டாக்டர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக இலங்கையின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. முப்படைகளுக்கும் நிரந்தர டாக்டர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. நாட்டுப் பற்றாளர்கள் என கூறிக்கொள்பவர்களின் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 50 டாக்டர்களை கட்டாயமாக முப்படையின் மருத்துவ பிரிவுக்கு அனுப்ப வேண்டி வந்தது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மரணத்தின் விளிம்பில் வன்னி மக்கள் நிற்க, லண்டனில் ….. : த ஜெயபாலன்

Marie_CalvinMarie_CalvinMarie_Colvin_Before1._._._._._.

வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.

200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.

சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.

இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.

2._._._._._.

‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே  நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.

வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.

இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?

இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.

வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.

அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.