2009

2009

450 பேர் கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து போர்க்காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து புதுமாத்தளனுக்கு இன்று காலை சென்றடைந்த கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே இந்த நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் நாளையும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘எழவு வீட்டில் ஓட்டு கேட்கும் சோனியா’ – பாரதிராஜா

bharathiraja1.jpg இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து அவர் ஓட்டு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசாத கூட்டமைப்பினர் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தமில்லை – அரசாங்கம் அறிவிப்பு

axman-yappa.jpg“தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழமாநிலம் அமைய பாடுபடுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை

jayalalitha.jpgஇலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

– பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

– அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

– தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

– கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

– இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிப்பு

images-ipl.jpgதென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 2 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகின்றன. 37 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

வழக்கமாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டமும் 31/4 மணிநேரம் நடைபெறும். கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் 10 ஓவர்கள் வீசப்பட்டதும், 71/2 நிமிடங்கள் இடைவெளி விடப்படும். இந்த வகையில் 15 நிமிடங்கள் அதிகமாக கிடைக்கும். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

வணிக நோக்கமே இந்த புதிய இடைவேளை திட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், ஆப்பிரிக்காவில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் இந்த இடைவெளியில் காண்பிக்கப்பட உள்ளன. இதன் மூலமும் ஐ.பி.எல்.க்கு வருவாய் கிட்டுகிறது. மொத்தம் 118 இரண்டரை நிமிட விளம்பர இடைவேளை விற்பனைக்கு தயாராக உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை சோனி மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்ழூ.எஸ்.ஜி.) பெற்றுள்ளன. அவை, 9 ஆண்டுகால ஒளிபரப்புக்கு ரூ.8200 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் சோனி செட்மேக்ஸ் சேனல் ஐ.பி.எல். ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 33 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்ப நேரம் தர வேண்டும் என்று ஒளிரப்பு தாரர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஓவர்கள் முடிவிலும் 40 வினாடிகளும், விக்கெட் விழுந்தால் அந்த இடைவெளியில் சுமார் ஒரு நிமிடமும் விளம்பரத்தை ஒளிபரப்ப அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், ஓர் இன்னிங்சில் மொத்தமே 2 அல்லது 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தாலோ அல்லது 15 ஓவர்களுக்குள்ளேயே போட்டிகள் முடிவடைந்தாலோ அது ஒளிபரப்புதாரர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

india-elc-2009.jpgஇந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மொத்தம் 124 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 வது கட்டமாக மே 13 ந்தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். 25ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

5வது கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு: தமிழ்நாடு 39, உத்தரபிரதேசம் 14 ,மேற்குவங்காளம் 11, பஞ்சாப் 9, உத்தரகாண்ட் 5, இமாச்சலபிரதேசம் 4, காஷ்மீர் 2, புதுச்சேரி 1, சண்டிகார் 1, மொத்தம் 86

இந்திய மத்திய அரசிடம் கூட்டமைப்பு 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

tna_.jpgஇந்திய மத்திய அரசிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்திய அரசின் அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினர், டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் உரையாடினர்.

இலங்கையில் தொடரும் நெருக்கடிகள் தொடர்பில் பேச்சு நடத்தும் பொருட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்திய மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் எஸ்.எஸ். மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரைச் சந்தித்து நிலைமையை விளக்கியதுடன், இந்திய மத்திய அரசு உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் மாலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மத்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசிய பின்னர் கூட்டமைப்பு சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தகவல் தருகையில், மூன்று கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் நடந்த சந்திப்பின்போது மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

முதலாவதாக இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் இராணுவ தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கையை இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக போர் நடைபெறாத பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாவதாக போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள 2 இலட்சம் தமிழர்களை பாதுகாக்க, அந்த பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

 இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். இதேவேளை, இன்று 17ஆம் திகதி இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் இலங்கையில் நிலவும் உண்மையான நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கமாக பேட்டி அளிக்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.

ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி இலங்கை விஜயம்

vijaynambiar.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.இலங்கை வந்துள்ள் அவர் நேற்று வியாழக்கிழமை மாலை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். விஜய் நம்பியாருடன் ஐ.நாவின் அரசியல் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஹிற்றோக்கி டென்னும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஏர்டன்குடாவில் பதினொரு கடற் கொள்ளையர்கள் கைது; பிரான்ஸ் வீரர்களின் துணிச்சலான செயலை உலக நாடுகள் பாராட்டு

somaliya-robbery.jpgசோமாலியாவின் கடல் எல்லையிலுள்ள ஏர்டன் குடாவில் வைத்து சென்ற புதன்கிழமை பதினொரு கடற்கொள்ளையர்களைக் கைது செய்த பிரான்ஸ் கடற் படையினர் கொள்ளையர்களின் கப்பலையும் தடுத்து வைத்துள்ளனர். சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது கடற் கொள்ளையர்கள் ரொக்கட் தாக்குதலை நடாத்தினர்.

இந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் மேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதி கடல் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏர்டன் குடாவில் இடம் பெறும் கடற் கொள்ளைகளை முறியடிக்க உலக நாடுகளின் கூட்டான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. வருடாந்தம் சுமார் 16 ஆயிரம் கப்பல்கள் சுயஸ் கால்வாயூடாக ஏர்டன் குடாவை நோக்கி பயணம் செய்கின்றன.

எரிபொருட்கள் தானியங்கள் இராணுவ உபகரணங்கள் என ஏராளமான பொருட்களை இக்கப்பல்கள் வியாபார உதவி நோக்கங்களுக்காக கொண்டு வருகின்றன. இந்தக் கப்பல்களை சோமாலியாவின் கடல் எல்லைகளிலுள்ள கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையிடுவது பெரும் தலையிடியை உருவாக்கியது. இதனால் பல நாடுகள் இணைந்து இக்கடல் எல்லைகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் கொடியுடன் ரோந்தில் ஈடுபட்டுள்ளன. சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதால் பிரான்ஸ் கடற் படைக் கப்பல் புதன்கிழமை மாலை ஏர்டன் குடாவில் தரித்து நின்றது.

கொள்ளையர்களின் பத்து மீட்டர் நீளமான படகு ஆயுதங்களுடன் வந்த பொழுது பிரான்ஸ் கப்பலிலிருந்து கிளம்பிய ஹெலிகொப்டர் கொள்ளையர்களின் படகைச் சுற்றி வளைக்க பிரான்ஸின் கடற்படை கப்பல் கொள்ளையர்களின் படகை நெருங்கி கப்பலையும், கொள்ளையர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கென்யாவின் ஐநூறு மைல் கடல் எல்லையில் வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் கடல் எல்லைகளில் அதிகரித்துச் செல்லும் கடற் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கவென அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ள வேளையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர் .

கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்குதல் அவர்கள் செயற்படும் நாடுகளில் கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட யோசனைகளிலுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள போதும் பிரான்ஸ் கடற்படையே முதற் தடவையாக கடற் கொள்ளையர்களைக் கைது செய்துள்ளது.

உலகில் முன்மாதிரி இராணுவம் – ஜனாதிபதி உரை

pre-kili.jpgபாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கெளரவம் உரித்தாகட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு சென்று படை வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது இராணுவ வீரர்கள் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்கள். இன, மத, ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் சுதந்திரமாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் இவர்கள் பாடுபடுகின்றனர் எனவும் ஜனாதிபதி கூறினார்.

உலகில் மிகவும் கொடிய பயங்கரவாதப் புலிகளை இன்று அழித்து ஒழிப்பதற்கு எமது இராணுவ வீரர்களால் முடிந்துள்ளது.

இராணுவ வீரர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சரியான தலைமைத்துவத்துக்கும் பாராட்டுக்கள் உரித்தாகும். அதே போல் இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பெற்றுக் கொடுத்தல், அவர்களது குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசேடமாக கிளிநொச்சியில் இன்று நான் காலடி வைக்க முடிந்தமை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இப்பிரதேசத்திற்கு இன்று நான் விஜயம் செய்வதற்குரிய காரணம் பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து இராணுவ வீரர்களினதும் வரையறையற்ற அர்ப்பணிப்பான சேவையினாலாகும். கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்ட ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.