அமெரிக்காவின் சியாட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் பர்ச்காட் மருத்துவம் மற்றும் ரசாயன துறை விஞ்ஞானியான இவர் சில வருடங்களுக்கு முன் செக்ஸ் குறைபாடு உள்ள வர்களுக்காக வயகரா என்ற மாத்திரையை கண்டுபிடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பரப்பாக பேசப்பட்டவர்.
இது தவிர அவர் அறிவியலில் ரசாயனம் மற்றும் வேதியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். இதற்காக அவருக்கு 1998 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
92 வயதான ராபர்ட் பர்ச்காட் சியாட்டில் நகரில் மரணம் அடைந்தார். அவர் இறந்ததை குடும்பத்தினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2009
2009
மத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும், ஊடகவியலாளருமாவார். இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும், இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான் இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.
1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன், லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’, ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும்.
மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் – டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும், மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் – தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.
கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?
பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.
கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..
பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும், தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.
பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை, கவிதை, நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட, கலைமகள், தாமரை, தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”, “நிழலின் அருமை”, “கரு”, “நெருடல்கள்”, “அந்த நிலை”, “யாரோ எவரோ எம்மை ஆள”, “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும், மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.
ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட, பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.
கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?
பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட, இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதை யடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.
“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே, இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும், தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே, எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.
கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.
பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ, அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே, பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.
கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?
பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும், தமிழ்மொழியினூடாக சமய, கலாசார, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால், இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட, இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம் இவர்கள் பற்றிய தரவுகள், விபரங்கள், குறிப்புகள் இன்மையே.
இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட, தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன், அவற்றைத் தொடரவில்லை. எனவேதான், இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன், http://noolaham.org/wiki இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும், என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.
கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?
பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும், இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.
கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட, அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)
இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள், அரசியல்வாதிகளின் செல்வாக்குகள், பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.
கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும், வகைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.
பதில்:- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும், ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா, த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா, சிவராசா, ஜீவகன், புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன், லண்டன் குரல், காலைக்கதிர், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி., தீபம் தொலைக்காட்சி, ஜெர்மனியில் மண், அவுஸ்திரேலியாவில் உதயம், இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும், சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.
இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.
எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.
கேள்வி:- இந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?
பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால், இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில், ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின், தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும், ஆர்வமும், முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.
இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.
கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?
பதில்:- எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம், பிறந்த திகதி, பெற்றோர், கற்ற பாடசாலைகள், தொழில், எழுத்து, ஊடகம், கலைத்துறையில் ஈடுபாடு, சாதனைகள், பெற்ற விருதுகள், இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே, இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும், நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி : 0094 -812 -493 892
தொலை நகல் : 0094 -812 -493 746
மின் அஞ்சல் : pmpuniyameen @ yahoo.com
நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009
யாரிவன்? பிரபாகரனா? யாராய்தான் இருந்தால் என்ன? இவன் ஒரு தமிழ் புலி வீரன் மட்டுமல்ல முக்கியமான ஒரு தளபதிதான். இவ்வளவு இராணுவமும் சுற்ற சூழ நின்று பார்க்கத் துடிக்கிறதே. இவன் ஒரு புலிகளின் முக்கியமானவன்தான். அதைத்தான் பிரபாகரன் என்கிறது அரசு. இல்லை என்கிறார்கள் புலம்பெயர் தமிழர். யாராய்தான் இருந்தால் என்ன? அவன் எம்தேசத்தை நேசித்தான், அதனால் போராட உந்தப்பட்டான் அல்லது திணிக்கப்பட்டான். இந்தத் தேசத்தைத் தாங்கிய நெஞ்சம் எதிரியின் கைகளில் அநாதைப் பிணமாய் போகிறதே. ஈரமுள்ள நெஞ்சங்களே யாராவது இவன் உடலை உரிமை கோரினீர்களா? உங்களுக்காய் இவன் தன் இளமையையே தொலைத்தானே! நீங்கள் அன்று தூக்கி வைத்துக் கொண்டாடிய இப்புலிவீரன் எமது ஈழக் கோரிக்கைகள் போல் கேவலமாய் போனானே.
இப்பாடையில் போவது புலி வீரனோ பிரபாகரனே அல்ல. எம்மக்களின் தலைவிதி, சுயநிர்ணய உரிமை இதுமட்டுமல்ல எம்தேசமும் எமக்கிழைத்த நாசமுமே. உலகெங்கும் கொடி பிடித்துக் கோசம் போட்ட சமூகமே! உங்களுக்காய் ஒரு தேசம் அமைக்கபோய் எதிரியின் கையில் ஒரு ஈனனாய் அநாதைப் பிணமாய் போகும் இவனுடலை யார் உரிமை கோரினீர்கள்? ஈன இனமே உனக்கு விடுதலை ஒருகேடா?
அன்று ஈழவிடுதலை என்று ஆயுதம் தாங்கிப் புறப்பட்ட ஒவ்வொருவனும் தன்நலனை விட்டு மக்களுக்காக என்றே புறப்பட்டனர். எந்த நேரமும் தன்னுயிர் போகலாம் என்றே பயணத்தைத் தொடங்கினர். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க இயலாது. பாதைகள் மாறின, பயணங்கள் தடுமாறின, எதிரியை நோக்கிய துப்பாக்கிகள் எங்களை நோக்கியும் திரும்பின. காலம் இந்த ஈனவினத்தை அழிக்க நினைத்ததோ என்னவோ?
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சியில் சிலர் இறங்கியுள்ளார்கள். சிலர் கண்மூடித்தனமாக புலிகளின் ஊதுகுழல்கள் கூறுவது நம்புகிறார்கள். பிரபா உயிருடன் இருந்தால் மகிழ்சியானதுதான். ஒரு மரணத்தில் மகிழ்ச்சியுறும் மனம் எனக்கில்லை. ஆனால் பிரபாகரன் என்று அரசுகாட்டும் படம் பிரபாகரன் இல்லையென்று நிரூபிப்பதற்காகவாவது புலம்பெயர்ந்த தமிழர்களோ அன்றி உறவினர்களோ அந்த உடலை உரிமை கோரியிருக்கலாம். அரசின் முகமூடியாவது கிழிந்திருக்குமல்லவா?
கடைசிகாலத்தில் பிரபாகரனும் புலிகளும் எப்படி நடந்தார்களோ அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு. எம்மினத்துக்காக துப்பாக்கி தூக்கியவர் என்ற முறையிலும், எமக்காக தலைமறைவு வாழ்க்கைளை மேற்கொண்டவர் என்ற வகையிலும், ஒவ்வொரு இறந்த புலிவீரனும் மரியாதைக்குரியவனே. இராணுவம் அவர்கள் பூதஉடல்களை மரியாதையாகத்தான் நடத்துகிறதா? கார்த்திகையை புனிதமாதமாக்கி 27ம் திகதியை புண்ணிய நாளாக்கி உலகெங்கம் தீபமேற்றினார்கள் புலிகள். அவையெல்லாம் உங்கள் பிள்ளைகளை மேடையில் காட்டுவதற்கான கொண்டாட்டமாகவே கருதியிருக்கிறீர்கள்? இவனைப்போல் எத்தனை புலிவீரர்கள் முகம் தெரியாமல் இடம்தெரியாமல் புதைக்கப்பட்டார்களோ? எரிக்கப்பட்டார்களே?
நீங்கள் துதிபாடிய, நேசித்த, சூரியபுத்திரன் என்று கூவியழைத்துக் கும்பிட்ட பெயரைச் சொல்லிக் கொண்டு அநாதைப் பிணமாய் ஒரு புலிவீரன் போனானப்பா? நெஞ்சு கனக்கிறது. ஈனஇனமே உன்நெஞ்சை தொட்டுப்பார் எங்கே உன்னிதயத்தில் ஈரம்?
புலிகள் குண்டுகளாலோ, போர் விமானங்களினாலோ சிதறவில்லை. எத்தனை துரோகங்கள்? எத்தனை வஞ்சகங்கள்? இத்தனையாலும் தானே புலிகள் சிதறினர். ஒரு சிலரை மட்டும் நம்பி இயக்கம் நடத்தியதன் விளைவுதான் இது. ஒரினமே சில தனிமனிதர்களின் கையில் அடைவு வைக்கப்பட்டு, விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்காதவாறு ஆக்கப்பட்டது. ஒரு தனிமனிதனுக்காகவே ஒரு கட்டமைப்பு இருக்கக் கூடாது. கட்டமைப்பானது மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் புலிகள் நிச்சயம் வீழ்திருக்க மாட்டார்கள்.
கப்பல் கப்பலாய் 19 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ஒரு கப்பல் சரி இரண்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்பும் அதேவழியில் யுத்தளபாடங்களை எந்த மடையன் அனுப்புவான். யார் பதில் சொல்வார்களா? இங்கேதான் பெரும் சதி நடந்தேறியிருக்கிறது. கப்பல் மூழ்கினால் கணக்கு யாருக்குக் காட்டுவது. வந்த சரக்கு கோடிகள் என்பது தானே கணக்கு. வெளிநாட்டில் மலசலகூடம் தேய்த்து போருக்காக, மக்களைக்காக்கவென கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட பணமல்லவா அவை.
போதிய யுத்த தளபாடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் புலிகள் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருப்பார்கள். ஒரு விமானத்தை விழுத்த வக்கில்லாமல் போனது ஏன்? அதுவும் பழைய இரஸ்சிய மிக்29ஐ விழுத்தப் புலிகளால் முடியாமல் போனது ஏன்? சதி இங்கேயும் சரசமாடியே இருக்கிறது. இரஸ்சிய விமானத்தை விழுத்த இரசியாவிலேயே ஏவுகணைகளை வாங்கலாம். சதிகளால் மட்டுமே புலிகள் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை. இச்சதிகாரர்கள் யார்? தமிழர்களின் தலைவிதியை அடைவுவைத்த துரோகியார்? ஈனச்செயலுக்கு துணைபோய் நம்பிக்கை மோசடி செய்தவன் யார்? துரோகிகள் என்றும் அருகிலேயே இருப்பார்கள் இருந்திருப்பார்கள் என்பதை அறிக.
அப்பிணமானது பிரபாகரனினது இல்லையாயினும் யாரோ ஒரு புலி வீரனினுடையதாகக் கூட இருக்கட்டுமே? ஏன் இறந்தவர்களை யாருமே உரிமை கோரவில்லை? சரி இறந்துபோன உறுதிப்படுத்தப்பட்ட மற்றய தளபதிகளின் உடல்களை ஏன் உறவினர்கள், நண்பர்கள், ஊதுகுழல்கள் ஏன் உரிமை கோரவில்லை? இவனுக்கும் எம்மைப்போல் தாய், தந்தை, சகோதரம், உறவுகள் என்று இருந்துதானே இருந்திருக்கும். இவர்கள் வீரர்கள் இல்லையா? அறிவுள்ள சனங்களே அநாதையாக அனுப்பினீர்களே. ஒரினத்தை நெஞ்சில் தூக்கியவர்கள் அல்லவா இவர்கள். பொங்கு தமிழிலும், மாவீரர் தினங்களிலும் மேடை மேடையாய் தெருத்தெருவாய் கேட்டோமே எல்லாம் பொய்யா?
இராணுவம் ஒரு புலிவீரனையும் கொலை செய்யவில்லை என்கிறீர்களா? இக்கட்டுரையை பலர் பலவாறு கருத்துக் கூறினாலும் உ.ம் புலிகள் என்ன செய்தார்ளோ அதுவோ புலிக்கு நடந்தது எனலாம். இதற்கெல்லாம் அப்பால் நின்று ஒவ்வொரு தமிழனையும் கேட்கிறேன். இப்படி எம்புதல்வர்கள் அநாதைப் பிணமாய், ஏதிலியாய், யார் யாரோ எள்ளி நகையாட பிணமாய் போனார்களே. தெருவில் செத்த பிச்சைக்காரப் பிணத்துக்குக் கிடைத்த மரியாதை இவர்களுக்குக் கிடைத்ததா? எலும்பும் தசையுமாய் அள்ளி எடுத்து கூழம் குப்பை போல் எரிக்கப்பட்டார்களே! எரிகிறதையா இதயம், நோகிறதையா நெஞ்சம். எத்தனை புலி வீரர்களின் உடல்கள் உரிமை கோரப்பட்டன? அடையாளம் கண்டபின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன? பிரபாகரன் வாழ்கிறாரா? செத்தாரா? என்று தேடுகிறீர்களே உண்மையில் செத்தவர்களை என்ன செய்தீர்கள்? இறந்தவர்களில் ஒருவராய் பிரபாவாக இருந்தாலும் அவருக்கும் இன்நிலைதான். இந்த நன்றி கெட்ட ஈனத் தமிழ்சாதிக்கு உயிர்கொடுத்தவர்களும் ஈனராய் போனார்களே. இந்த இனத்துக்கு விடுதலை ஒருகேடா?
இது என்வேதனையின் விசாரமே தவிர வேறில்லை.


”எமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் கடந்த 17ம் திகதி இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி யுத்தத்தில் வீரமரணமடைந்த செய்தி எனக்குத் தெரிந்த நண்பர்களுடாக உறுதி செய்யப்பட்டது. தலைவர் வீரமரணமடைந்துவிட்டார்.
அந்த மகாபாரத்த்தில் கூறப்படும் கண்ணின் பாத்திரம் போல எனது தலைவன் தனது இரு வெற்றிப் புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பினார். வெற்றிப் புதல்வர்கள் என் தலைவனின் மடியில் வந்து வீழ்ந்தார்கள். சிங்கள இராணுவத்தின் குண்டடிபட்டு. இருந்தும் மனம் தளராத தான் முன்வைத்த தனது விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்களின் விடிவை நோக்கி எமது மக்களின் சுதந்திரத்தை நோக்கி தான் எடுத்த பயணத்தை தொடர்ந்து சிங்கள இராணுவத்துடன் போராடி சண்டையில் வீரமரணம் அடைந்தது எம்மினம் மிகவும் கவலையுற்ற இந்த நேரத்தில் வீர மகா புருசரை தமிழினம் கண்டது ஒருவகையில் எமது இனத்திற்குப் பெருமைதான். அவருடைய மனைவி இறுதி மகன் பாலா இவர்களுடைய இவர்கள் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.
என்னைப்பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல்களின்படி தளபதிகள் பொட்டம்மான் சூசை போன்றவர்களும் தலைவனின் பாதையில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள். ”
செல்வராஜா பத்மநாதன் பிபிசி தமிழோசைக்கு இன்று (மே 24 2009)வழங்கிய செவ்வி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதை தமிழழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நேரடி மோதலில் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
ஆனால் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் போராளிகள் குடும்ப அங்கத்தவர்கள் சரணடைந்த பின்னரே மரண தண்டனை வழங்கும் பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலைத் தகனம் செய்ததாக அறிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் நலமாகவே உள்ளார் என்று நிச்சயமாகத் தெரிவித்து இருந்த சர்வதேச இணைப்பாளர் இன்று இதனை உறுதிப்படுத்த முன்வந்தமையின் பின்னணி தெரியவரவில்லை. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!
செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
24 வைகாசி 2009
தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்
தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.
கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.
அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.
தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
செல்வராசா பத்மநாதன்
அனைத்துலக வெளியுறவுச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
முன்னைய செய்தி: பிரபாகரன் – பொட்டு அம்மான் – சூசை : புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடைசியாக இடம்பெற்ற நேருக்கு நேரான மோதலில் இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.
மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பலனளிக்காத நிலையில் கடைசியாக நடைபெற்ற மோதலில் இவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இவர்களுடைய உடலங்கள் இன்று மாலை கொழும்பிற்கு எடுத்துவரப்பட உள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.
வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.
மத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் லோக்சபா துணை சபாநாயகராக நியமிக்கப்படலாம்.
திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது. மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு புதிய பாதுகாப்புத் தலைமையகங்கள், இரண்டு விமானப்படைத் தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கவிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய இராணுவக் கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை விமானப்படையினர் தமது ஓடுதளமாக மாற்றவுள்ளனர். வவுனியாவிலுள்ள வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு மேலதிகமாகப் புதிய தலைமையகங்கள் அமைக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார ஆங்கில வார இதழொன்றுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், இரணைமடுவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் அமைந்திருந்த பகுதி விரிவாக்கப்பட்டு விமானப்படையினரின் ஓடுதளம் அமைக்கப்படும் என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறியுள்ளார். தாக்குதல் விமானங்கள் இறங்கக்கூடியளவு விமானத்தளம் அமைக்கப்படும் எனவும், இரண்டாவது தளம் விமான ஒடுதளத்துடன் முல்லைத்தீவில் அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மற்றும் வடதெற்குக் கரையோரங்களை மையமாகக்கொண்டு கடற்படையினரும் புதிய தளங்களை அமைக்கவுள்ளனர். புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் அமைப்பதற்கு 50 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ் தலைமையகம் அமைக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை இராணுவ வெற்றியின் பின்னால், போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பாக மேற்குலக நாடுகள் ஆராய இருக்கின்றன எனவும் என்.டி.வி நிருபர் நிட்டன் கோக்லி பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடனான நேர்காணலின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
உலகில் எல்லா நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடும் போது இலங்கை இராணுவம் ஆரம்பத்திலிருந்து இறுதிரை பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மிகவும் சாதுர்யமான முறையில் அம்மக்களை காப்பாற்றியே இந்த வெற்றியை அடைந்துள்ளது என தெரிவித்த அவர் ஜக்கிய நாடுகள், மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழு என்பன இலங்கை இராணுவம் தொடர்பான போர் குற்றங்களை ஆராய முன்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் போர் குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து விட்டே இலங்கை விடயம் தொடர்பாக பேச வேண்டும் என தெரிவித்தார்.
யாழ். கண்டி ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். பாதையைத் திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி இருப்பதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்ததாவது, ஏ ஒன்பது நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு விட்டது. தற்போது இராணுவ வாகனங்களும் உணவு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளும் இப்பாதை வழியாக பயணிக்கின்றன.
யாழ். குடாநாட்டு மக்கள், இப்பாதை மூடப்பட்டிருப்பதால் கடந்த பல வருடங்களாக பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக தென்பகுதிக்கு வருவோர் கப்பலையும் விமானத்தையும் நம்பி பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உள்ளது. இம் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பாதையை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதை புனரமைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கிடைத்தவுடன் பாதை திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.
இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.
இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.
இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.
தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் “ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, “இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.
“”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்” என்று நோர்வே கூறியுள்ளது. “”இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.
இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது.