யாழ். கண்டி ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். பாதையைத் திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி இருப்பதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்ததாவது, ஏ ஒன்பது நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு விட்டது. தற்போது இராணுவ வாகனங்களும் உணவு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளும் இப்பாதை வழியாக பயணிக்கின்றன.
யாழ். குடாநாட்டு மக்கள், இப்பாதை மூடப்பட்டிருப்பதால் கடந்த பல வருடங்களாக பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக தென்பகுதிக்கு வருவோர் கப்பலையும் விமானத்தையும் நம்பி பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உள்ளது. இம் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பாதையை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதை புனரமைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கிடைத்தவுடன் பாதை திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.