2009

2009

தமிழ் சிங்கள பாடசாலைகளின் தவணைக் காலத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

students1.jpgநாட்டில் உள்ள அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் மற்றும் 3ஆம் தவணைக் காலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திருத்தத்தின்படி சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முடிவடைவதோடு 3ஆம் தவணைக்காக மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008.11.04 இல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின்படி இவ்வருடம் ஜுலை மாதம் 31ஆம் திகதியே இரண்டாம் தவணைக் காலம் நிறைவுபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு கட்டுநாயக்காவில் காணி

anura_priyadarshana_yapa4.jpgகட்டுநாயக்கா ஏற்றுமதி வலயத்துக்கு அருகில் சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு காணி ஒன்றை வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

குத்தகை அடிப்படையில் 50 வருட காலத்துக்கு ஐந்து கோடியே 58 இலட்ச ரூபாவுக்கு இக்காணி வழங்கப்படுகிறது. காணி வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட தொகையின் 25 வீதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும்

யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள்

north_.jpgவிசேட தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி, பாடசாலையை விட்டு வெளியேறிய ஐயாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.யோகராஜன் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வடமராட்சி மாணவர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும் இணைந்து வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக தொழில் பயிற்சிக்கழகத்தில் ஐந்து கற்கை நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கற்கை நெறியில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஆறாம், ஏழாம் திகதிகளில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பயிற்சி நெறிகள் மூன்று மாதகாலத்துக்குரியதாக நடத்தப்படுமெனவும் பகுதிநேர அலுவலக கணினிப் பயிற்சி நெறி, ஆங்கில மொழி, சிங்கள மொழி பகுதிநேர கற்கை நெறி, தமிழ் சுருக்கெழுத்து பகுதி நேரம், முழுநேரக் கற்கை நெறியாகவும் நடத்தப்படவுள்ளது.

முதலாவது அணியாக மின்தட்டு, நீர்க்குழாய் பொருத்துதல், மேசன் வேலை, கணினிகற்கை நெறி, மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகிய பயிற்சி நெறிக்கு 900 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறிகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதார அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகள்

nimal-sripala.jpgசுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

நாட்டில் நிலவும் அவசரத்தேவைக்கு ஏற்ப டெண்டர் முறையின்றி குறைந்த விலையை சமர்பித்துள்ள உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான மைக்ரோ நிறுவனத்திடம் இவற்றை உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 வீத வற்வரி உட்பட 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 20 அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் என்ஜின் தடம்புரண்டு தீப்பிடிப்பு தலாவ ரயில் நிலையத்தில் நேற்று சம்பவம்

அனுராதபுரத்திற்கு எரிபொருளை எடுத்துச் சென்ற சரக்கு ரயிலின் என்ஜின் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று தடம் புரண்டு தீப்பற்றியதாக அனுராதபுரம் ரயில்வே பிரதான கட்டுப்பாட்டாளர் எம். எம். எஸ். மனதுங்க தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு எரிபொ ருளை எடுத்துச் சென்ற ரயில் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் தடம் புரண் டது.

ரயிலின் என்ஜின் உட்பட மூன்று எண்ணெய் கொள் கலன்கள் தடம்புரண்டன.  இதனால் ரயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

அனுராதபுரம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீயினால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை. அத்தோடு ரயிலின் பெட்டிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இச்சம்பவம் ஏற்படும் போது ஐந்து ரயில் கொள்கலன்களில் 29 ஆயிரம் லீட்டர் டீசலும், ஒரு கொள்கலனில் பத்தாயிரம் லீட்டர் பெற்றோலும் இருந்தன. இச்சம்பவத்தினால் அவற்றுக்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிப்பு

medical_lorry.jpgவன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் படுகாயமடைந்து வவுனியா செட்டிகுளம் ஆஸ்பத்திரிகளிலும் பம்பைமடு மற்றும் வவுனியா திருச்சபை பாடசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையின் தொண்டர்கள் 24 மணி நேரமும் உதவிப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதற்காக 240 தொண்டர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் செஞ்சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து கடமையிலிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்தார்.

வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு காரணமாகவே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர். சிறு சிறு காயமடைந்தவர்கள், சத்திரசிகிச்சைக்குள்ளானவர்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் இவர்களில் அடங்குவார்கள்.

நலன்புரி நிலையங்களில் திடீரென சுகயீனம் ஏற்படும் நோயாளர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க அம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், நலன்புரி நிலையங்களுக்கு பௌசர்கள் மூலமும் செஞ்சிலுவைச் சங்கம் நீர் விநியோகம் செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம்

bandula_gunawardena.jpg2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

வாத்தக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வேர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவவேண்டுமென ரணில் கோரவேண்டும்

ranil-wickramasinghe.jpgபேதங்களை மறக்க வேண்டுமென கேட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியத்தை கோர வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“பேதங்களை மறந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். இவ்வாறு வந்தால் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இதேநேரம், எச்.எஸ்.பி.சி. வங்கி அரசாங்கத்துக்கு கடன் கொடுத்தால் அதை நாம் பொறுப்பேற்க மாட்டோமென எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, இலங்கைக்கு உதவ வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கட்சித் தலைவர் தற்போது கோர வேண்டும்.

நேர்மையாக உதவ முன்வந்தால் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்’

“இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை கூடிய விரைவில் அவரவரது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். கிழக்கில் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் மீள் குடியேற்றங்களை செய்தது போல் வடக்கிலும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மக்கள் வெகு விரைவில் மீளகுடியமர்த்தப்படுவார்கள்.

இதேவேளை, அனைவரும் தற்போது முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட முன்னர் போலன்றி தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு இந்தியாவில் சென்று கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில், தனி இராச்சியம் குறித்து பேச அவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன் இந்தியாவும் எமக்கு மில்லியன் கணக்கில் உதவியுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கைக்கு இயன்ற வரை உதவ தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். அதன் நோக்கமாகவே ஜனாதிபதியின் இந்திய விஜயமும் அமையவுள்ளது.

இதேவேளை, ஜே.ஆர்.ஜெவர்தனவின் அரசியலமைப்பின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட (13 ஆவது) அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் குறித்தவொரு காலப்பகுதிக்கு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. எனினும் அது தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பை எமக்கு மீறி செயற்பட முடியாது.

கிழக்கில் மாகாண சபை செயற்படுத்தப்பட்டது போல, விரைவில் வடக்கிலும் மாகாணசபை செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு சமாந்தரமாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி கூடிய விரைவில் வடக்கிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும்’ என்று கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மூவின மக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் நிமால் சிறிபால

nimal-siriiii.jpgமூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எமது நாட்டை வளங்கொழிக்கச் செய்யமுடியுமென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதார அமைச்சர் தெரிவு செய்யப்பட்டதற்காக ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் அவருக்கு கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதிகள், வீதி புனரமைப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் பெருந்தோட்டப் பகுதிகளில் துரிதப்படுத்தப்படும். மேலும் இந் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள் போன்று வாழ வேண்டும். அதற்கான அடித்தளமும் பதுளையிலேயே ஆரம்பிக்கப்பட்டு ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.

ஆரம்ப காலம் முதல் தோட்டத் தொழிலாளர்களும் கிராமவாசிகளும் மிகுந்த ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமையும் இருந்து வந்தது. ஆனால், யுத்த சூழலின் போது ஏற்பட்டிருந்த பரஸ்பர ஒற்றுமையில் இரு சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டன. தற்போது யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ் யுத்தமானது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் அல்ல. பயங்கரவாதத்திற்கெதிராகவே மேற்கொள்ளப்பட்டதாகும். இனிமேல், யுத்தமோ, பயங்கரவாதமோ எமது நாட்டிற்குத் தேவையில்லை. மூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டினை துரிதமாக அபிவிருத்தி செய்யும் யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலமே இந் நாட்டை வளங்கொழிக்கச் செய்ய முடியும்.

இந்நாட்டின் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும். பாகுபாடுகள், பாரபட்சங்கள் எவ்வகையிலும் இடம்பெறக்கூடாது. பெருந்தோட்டப் பகுதி மக்களினது கல்வி, சுகாதாரம், வீதிபுனரமைப்பு, குடிநீர் விநியோக வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் புதியதோர் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விசேட திட்டத்தினை முன்வைத்துள்ளேன். ஏனைய சமூகத்திற்கு நிகராக பெருந்தோட்ட சமூகம் இருக்கவேண்டும். இதனை பதுளை மாவட்டத்திலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

ஊவா மாகாண மக்கள் இவ்வருடத்தின் மூன்று தேர்தலை எதிர்கொள்ள் வேண்டியுள்ளது. முதலாவதாக வருவது ஊவா மாகாணசபைத் தேர்தல், அதையடுத்து ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல், இத்தேர்தல் அனைத்திலுமே அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீ.ல.சு. கட்சியே வெற்றியடையும். ஆகையினால் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையே ஆதரிக்க முன்வந்துள்ளனர். நடைபெறும் தேர்தல்கள் அனைத்திலுமே பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் ஸ்ரீ.ல.சு.கட்சியையே பூரணமாக ஆதரித்து அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியடைய வைப்பர். இதுவிடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) – புன்னியாமீன்

world-environment-day-wed-2009.jpgஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும்,  சுற்றுச் சூழல்லைப்  பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின்  முக்கியத்துவம்,  இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது.  இதில் சுற்றுச் சூழலுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் சூழல் மாசடையச் செய்வதிலும், அதிக அளவு இயற்கை வளங்களை சர்வ நாசஞ் செய்வதிலும் ஈடுபடுவது மனிதனே! என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல்  (World Environment Day)  தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

சூழல் மாசடைதலை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவதாக நிலம் மாசடைதல், அடுத்தாக நீர் மாசுறுதல்.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள்,  வனாந்திரங்கள்,  வனசீவராசிகள், வளிமண்டலம்,  பறவைகள்,  சோலைகள்,  கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம்,  விலங்கினம், பறவையினம்,  தாவரங்கள்,  கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி,  உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.நவீன விஞ்ஞான,  தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக  சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள்,  புகை என்பன நீர் நிலைகள்,  வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல்,  ஓசோன் படை பாதிப்பு,  நன்னீர் வளம்,  சமுத்திரம்,  கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு,  வனாந்திரமாக்கல்,  உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம்,  சுகாதாரம்,  இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும்,  அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை

ENUP  இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை,  சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும்,  குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,  தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும்,  சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு,  கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம்,  சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல்   இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை  மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம்  ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல்,  புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி,  பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் – வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி,  ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி,  நம் வசிப்பிடம்,  நம் வீடு
1997 – பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி – நம் எதிர்காலம்,  காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு – செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் – அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் – இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் – கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் – தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி – ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் – குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி,  ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ்  சூழல் சம்பந்தமான விடயங்களுக்கு மனிதநேயத்தை வழங்குதல்,  மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுப்பான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல். சூழல் சம்பந்தமான விடயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல்,  எல்லா நாடுகளுக்கும்,  மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா 
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து

2009ல் உலக சூழல் தின முதன்மைக் கொண்டாட்டத்தை  மெக்சிக்கோவில் நடத்துவதாக ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்ட தலைவரும் நிர்வாகப் பணிப்பாளரும், அறிவித்துள்ளார்கள். எனினும், எனினும் தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் ஆரம்பம் மெக்சிக்கோவில் இடம்பெற்றதாகக் கருதப்படுவதினால் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சில தாக்கங்கள் உருவாகலாம் என கருதப்படுகின்றது.

இன்னும் 180 நாட்களில் கோப்பன் ஹேகனில் நடைபெறவுள்ள நெருக்கடியான சூழல் மகாநாட்டில் காலநிலை மாற்றம் பற்றியும் வறுமை ஒழிப்பு பற்றியும், காடுகளின் சிறப்பான முகாமைத்துவம் பற்றியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர உள்ளனர். இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெறவுள்ளது.  ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன.  இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர் கெள்ளும் சவால்களிளொன்று சுற்றுச் சூழல் மாசடைதலாகும். இந்நடவடிக்கையானது மக்களால் தன்னிச்சையாக ஏற்படுத்தப்படுகின்ற அபாயகமரான செயற்பாடாகும் என்றும் கூறலாம். இதனால் சர்வதேசமும் அதனைச் சூழவுள்ள பிரபஞ்சமும் அதன் இயற்கை சமநிலையிலிருந்து மாற்ற மடைகின்றது. எனவே இவ்வையகத்தே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதும் இச்சுற்றாடல் மாசடைதல் என்பது வெள்ளிடைமலை. ஏலவே இதுபற்றிய விழிப்புணர்வை அனைவர்களுக்கும் உண்டாக்க வேண்டிய கடப்பாடு புத்திஜீவிகளையே சாரும்.