2009

2009

யாழ். மாநகர, வவுனியா நகரசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா?

sri-lanka-provincial-council.jpgயாழ். மாநகர, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை இடம்பெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த இரு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதா? குறித்து இன்னமும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலையில் பாரிய உயிர், உடைமை அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையிலும் தற்போது தேர்தல் நடத்துவது குறித்து அதிருப்தி அடைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தேர்தல்களை ஒத்திவைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். சொல்லொணாத் துன்பத்தில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய பின்பே தேர்தல் நடத்துவது “ஜனநாயகம்’ என்று அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளனர். அவர்கள் போருக்குப் பின்னரான நிலைவரம் தொடர்பாக இந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 9 ஆம் திகதியே டில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதன் பின்னரே யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் ஒன்று கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று குறிப்பிட்ட அந்த உறுப்பினர், தேர்தலைப் பிற்போடுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில் போட்டியிடும் நிலைமையேற்படலாம் என்று கூறினார்.

இதேவேளை, யாழ்.மாநகர, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக தமிழக பத்திரிகையொன்றில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இரா.சம்பந்தனின் புகைப்படத்துடன் இச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாயினும் மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

முசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீள்குடியேற்றம் – 551 குடும்பங்கள் மீள்குடியேற்றம்; பசில் எம்.பி.தலைமை

basil.jpg‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கான இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெறுகின்றது.

ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட 551 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற வைபவத்தில் வட மாகாணத்துக்கான விசேட செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. பிரதம அதிதியாகவும் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் ஆலோசனைக்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத பிடியிலிருந்து நாட்டை படை வீரர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்ததன் மூலமே இடம்பெயர்ந்த இந்த மக்களை வெகுவிரைவில் மீள்குடியமர்த்த கிடைத்தது.

மன்னார், முசலி, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டாரவெளி, கடலான்குளம், சின்னபுலச்சி, பொட்கேணி, அரிப்பு மேற்கு மற்றும் அரிப்பு கிழக்கு ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இன்று மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

பொலிஸ் நிலையம், பாடசாலை திறக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையிலேயே இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். அத்துடன் இந்த மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறையைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளுமே இங்கு அதிகமாக உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றப்படுவதுடன் இந்த மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களும், மீன்பிடி வலைகளும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. கூட்டுறவு கடைகள், தபாலகம், மருந்து நிலையம், போக்குவரத்து வசதிகள் இன்றைய தினம் செய்து கொடுக்கப் படவுள்ளது. இதேவேளை அண்மையில் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள மெனிக்பாம் மற்றும் பல்வேறு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதைக்கப் பட்டுள்ள கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் முசலி மக்களை போன்று அந்த மக்களும் வெகு விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர்.எனவேதான் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதை கண்காணிக்கும் பொருட்டு விசேட பிரிவு ஒன்றும் நிறுவப் பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பசில் ராஜபக்ஷ எம். பி. இதற்கான சகல நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு

ஐரோப் பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு 43 சதவீதமாக அமைந்திருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரடித் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து மிகக் குறைவான வாக்களிப்பு இந்த முறைதான். வாக்காளர்கள் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், வாக்களித்துள்ளவர்களும் கூட பெரும்பங்கில் தேசிய அரசியல் காரணங்களை முன்னிட்டே வாக்களித்துள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனைப் பொறுத்தவரையில், ஆளும் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மோசமான முடிவு, பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வாரம் அமைச்சர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், கோர்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கிவருகின்றன. இளநிலை அமைச்சரான ஜேன் கென்னடி அரசாங்கத்தில் இருந்து கடைசியாக விலகியிருக்கிறார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்கள்; அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

jaffna-000.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல்களை முன்னிட்டு அடையாள அட்டை அற்ற வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது.

இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை கிடையாது என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது.

சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு சுகாதார வசதி; 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன

camb000dr.gifவடக்கி லிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில் 5 சுகாதார வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்காக தனித்தனியே மருத்துவர்கள், தாதிமார் அடங்களாக சுகாதார உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

5 சுகாதார வயலங்களிலும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 60 மருத்துவர்கள், 15 பதிவு செய்யப்பட்ட உதவி மருத்துவர்கள், 57 தாதிமார், 15 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 30 மருந்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்து வந்துள்ள 272,000 மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் அளிக்கும் வகையில் 15 ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார அமைச்சு அதில் வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்படும் 3 ஆஸ்பத்திரிகளும் அடங்குவதாக கூறியது.

செட்டிக்குளத்தில் பிரான்ஸ் தற்காலிக ஆஸ்பத்திரியும் வலயம் ஒன்றில் இந்திய ஆஸ்பத்திரியும் மெனிக்பாமில் எம். எஸ். எப். ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. இந்த 15 ஆஸ்பத்திரிகளிலும் சுமார் 6741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக சகல நிவாரணக் கிராமங்களிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு இவற்றுக்கென தினமும் கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்தாளர் குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது. இது தவிர மோதல் காரணமாக காயமடைந்த மக்களுக்கு உதவுவதற்காக பதவிய, மன்னார், வவுனியா, செட்டிக்குளம், கெபதிகொல்லாவ, மதவாச்சி மற்றும் குருணாகல் ஆஸ்பத்திரிகளுக்கு மேலதிகமாக 232 மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரேசில் கடற்படையால் 16 உடல்கள் மீட்பு

airfrancetail.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர்

அகாசி இன்று வருகிறார்

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுவர் ஒருவரை ஜப்பான் இந்த வாரம் இலங்கைக்கு அனுப்புகிறது.  3 நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று திங்கட்கிழமை கொழும்பு வருகிறார். யுத்தத்தால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவே அகாசி வருகை தருவதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை அகாசி சந்திக்கவிருப்பதாக ஜப்பானிய தூதரகம் கூறியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பான முன்னேற்றம், தேசிய நல்லிணக்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து அகாசி கலந்துரையாடவுள்ளதாக தூதரக பேச்சாளர் தெரிவித்தார். 2003 ஜூனில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளுக்கு 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கு அகாசி உதவியிருந்தார். பின்னர் 2008 இல் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவடைந்ததை அடுத்து அந்த நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன.

பிரஞ்ச் ஓபன் டெனிஸ் சம்பியன் பட்டம் முதற்தடவையாக பெடரர் வசம்

images-rojapedaral.jpgபிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கிராண்ட ஸ்லாம் போட்டியான பிரான்ஸ் பகிரங்க டெனிஸ் சம்பியன் போட்டியில் டெனிஸ் உலகில் மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ரொபின் சொடர்லிங்கை நேர்செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை முதற்தடவையாக கைப்பற்றியுள்ளார்.

பெடரர் கைப்பற்றியுள்ள கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 14 ஆக உயர்ந்துள்ளதுடன் இதன் மூலம் இவர் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற வரிசையில் பெடரர் ஆறாவது இடத்தை வகிக்கின்றார். ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 27 வயதுடைய பெடரர் சுவீடனின் சொடர்லிங்கை 6-1   7-6   6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.

கெப்டன் அலி கப்பலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgஇலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்தபோது கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் கப்பல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இக்கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே கைது செய்யப்பட்ட வர்த்தகர் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. இக்கப்பலில் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எனினும் இக்கப்பலுடன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இக்கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

அசோக்க டீ சில்வா 32ஆவது பிரதம நீதியரசராக நியமனம்

asoka-de-silva000jpg.jpgஇலங் கையின் 32ஆவது பிரதம நீதியரசராக அசோக்க டீ சில்வா இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பான வைபவம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

சட்டத்துறையில் 37 வருடகாலம் சேவையாற்றியுள்ள புதிய பிரதம நீதியரசர் இத்துறையில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில்; 1972ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக சேர்ந்துகொண்ட இவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்தார். பின்னர் 1992ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றார். இதனை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் என்ற நியமனமும் இவருக்கு கிடைத்தது. இவர் நீதியரசராகக் கடமையாற்றியபோது யுத்தக் குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.