கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த திணைக்களங்களின் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் அந்தந்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் அம்மாவட்டத்தின் கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டிடம் ஆகிய திணைக்களங்களின் தலைவர்கள் இன்று 20ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், சிவநகர், புதுமுறிப்பு, கோணவில், யூனியன்குளம், மலையாளபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அதேவேளை இவர்கள் நாளை பளைப் பிரதேச மதிப்பீடுகளைச் செய்யவுள்ளனர். இதேநேரம் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் அம்மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் நாளை மறுதினம் புதன்கிழமை துணுக்களாய் பிரதேசத்திற்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள், அழிவுகள் குறித்து இவர்கள் மதிப்பீட்டின்போது விஷேட கவனம் செலுத்துவர்.
இம்மதிப்பீட்டு நடவடிக்கைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்து அது தொடர்பான அறிக்கை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.