வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்துடன் கூடியதாக வட பகுதியில் பல சித்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்படும், என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவசமாக மண் பாத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. மக்களனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார் என சிலர் கூறி வருகின்றனர். எமது நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கூறுவோரே இவ்வாறு கூறிவருகின்றனர். பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இவ்வாறு பொய்யான பிரசாரங்களைப் பரப்பி வருகின்றவர்களாவர். சிறுநீரக நோயினால் வருடாந்தம் பெருமளவு உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அனுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு இலவசமாக மண்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் (80000) குடும்பங்களுக்கு இதுவரையில் மண் பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.