2009

2009

(02-09-2009)”இந்தியாவுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வவுனியா முகாம்களிலுள்ள அகதிகள்’

srilanka-refugees.jpg இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட தமிழர்கள் இப்போதும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் முன்னர் போன்று அல்லாமல் குறைந்தளவு அகதிகளாக வருவதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது. தற்போது அநேகமானவர்கள் விமானம் மூலம் வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 109 தமிழ் மக்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஜூனில் 142 பேரும் ஜூலையில் 89 பேரும் சென்றிருக்கின்றனர். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் இந்தியாவுக்குப் பெருந்தொகையாகச் சென்றனர். கடல் மார்க்கமாகப் படகுகளில் மிக நெருக்கடியான பயணங்களை அவர்கள் மேற்கொண்டனர்.

இப்போது கொழும்புக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவதாகவும் படகில் செல்வது இப்போது இலகுவானவிடயமாக இல்லாததால் விமானம் மூலம் வருவதாகவும் “ஒவ்வர்’ அமைப்பின் தலைவர் சீனா சந்திரஹாசன் கூறியுள்ளார். மே மாதம் 109 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூனில் இந்தியா சென்ற 142 பேரில் 39 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூலையில் 10 பேர் படகில் சென்றனர். இதேவேளை, வவுனியாப் பகுதி முகாம்களில் உள்ள 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்களில் அநேகமானவர்கள் இந்தியாவுக்குச் சென்று புதிய வாழ்வை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பாக விசாரிப்பதாக சந்திரஹாசன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களில் கணிசமான தொகையினர் மத்தியில் இந்தியாவுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ஆனால், புலிகளின் பகுதிகளில் இருந்த இந்த மக்களுக்கு இடமளிப்பது தொடர்பான விடயம் அரசியல் நிலைவரத்தில் தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 73,475 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ளனர். இதனை விட பலர் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

இந்தியாவுக்கு தமிழ் மக்கள் செல்வதற்கு விரும்பும் பிரதான காரணம் அவர்களுக்கு உள்ள அச்சமே என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார்

n13.jpgபிலிப் பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொராஷோன் அகினோ நேற்றுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அகினோவின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 10 நாட்கள் துக்கம் கடை பிடிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி குளோரியா மெகாபாக்ல் அரோயோ அறிவித்துள்ளார். அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர் பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்தில் ஆறு வாக்குச் சாவடிகள்!

election_fingercolur.jpgயாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும்  மக்களில் 4388 பேர் யாழ். மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம். நபீல் தெரிவித்துள்ளார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி,  பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம்,  கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர்பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா

chandrika.jpgநமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுபோது இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராதனையில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  1963 இல் மூடப்பட்ட சட்டத்துறை இந்த வருடம் முதல் மீண்டும் கலைப்பீடத்தில் ஒரு திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் வருட மாணவர்களாக 48 பேர் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டனர்.

இந்த 48 பேரில் 40 பேர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மடுத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

madhu_mary.jpgமன்னார் மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை மடுமாதாத் தேவாலயத்திற்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரியிருக்கும் பொலிஸார்,  இதற்கான விண்ணப்பப்படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
 
அத்துடன்,  மதவாச்சி சோதனைச்சாவடியிலிருந்து,  மடுமாதாத் தேவாலயம்வரை பக்தர்கள் பயணிப்பதற்கான விசேட காலவரையறையை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, இம்மாதம் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும், 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மடுத் தேவாலயத்திற்கு பக்தர்கள் செல்லமுடியுமெனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடுமாதாத் திருவிழா இம்மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,  15 ஆம் திகதி விண்ணேற்புத் திருவிழா நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆபாசப்பட இணையத்தளங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம்

computer.jpgஆபாசப் படங்களைப் பிரசுரிக்கும் இணையத்தளங்களைக் காண்காணிப்பதற்காகக் குழுவொன்றை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமித்துள்ளது. ஆபாசப் படங்களைக் கொண்ட இணையத்தளங்கள் தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதற்குத் தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்கும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தவும் அவை இணங்கியுள்ளன. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட 12 இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப் படங்களைக் காண்பிக்கும் இணையத்தளங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த காரியப்பெரும வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பாகவும் இணையத்தளத்தில் அவர்களின் செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

hand-phone.jpgபாடசா லைகளில் வகுப்பறை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பாவிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தினை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன் வேண்டுகோள் வித்துள்ளார். அண்மையில் மலையக கல்வி வளர்ச்சியில் எதிர்நோக்கப்படும் புதிய பிரச்சினைகள் என்ற தலைப்பில் அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; பிரிடோ நிறுவனத்தால் சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு அறிவூட்டல் நிகழ்வுகளின் போது வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியில் பேசுவது தங்களின் கல்விக்கு பெரிதும் தடையாக இருப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகள் வந்தால் சில ஆசிரியர்கள் அத்துடன் பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவதாக குறைகூறும் மாணவர்கள் இதனால் கல்வி பெறுவதற்கானதமது உரிமை மறுக்கப்படுவதாக் கூறிவருகிறார்கள். இந்த பின்னணியில் அண்மையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனும் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிப் பாவனை மாணவர்களின்கல்வியை பாதிப்பதால் வகுப்பு நேரத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையை தடை செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்தத் தீர்மானத்துக்குப் பிரிடோ நிறுவனம் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் இத்தடையை உடனடியாக உத்தியோகபூர்வமாக அமுல்நடத்துமாறு அமைச்சரிடம் கோரவிருக்கிறது.

கையடக்கத் தொலைபேசிகள் இன்று தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால், பாட நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதோ அல்லது அவற்றிற்கு பதில் சொல்வதோ ஆசிரியரின் கருத்தூன்றிக் கற்பிக்கும் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாணவரின் கவனத்தையும் திசை திருப்புகிறது. பல்லாண்டுகளாக பின்னடைவுக்குள்ளாகியிருந்த மலையக கல்வி பலசிரமங்களுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேற முயற்சிக்கும் அதேவேளையில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப்பிரிவில் கல்வி வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்களும் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில் ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசிப்பாவனை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.

பொதுவாக ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைக்களங்கள் என்பன நடைபெறும் போது கூட அவை முடிவடையும் வரை கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் பங்குபற்றுவோரிடம் கோருகிறார்கள். பல அரசு காரியாலயங்களுக்கு உள் நுழையும் போதும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அந்த கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதாரண கூட்டங்களின் போது கூட இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது மாணவரும் ஆசிரியரும் ஒருமித்த கவனத்தோடு ஈடுபட வேண்டிய குறுகிய நேர பாடவேளையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கூடாது என்ற கோரிக்கையை எவரும் அநீதியானது என கூற முடியாது.

ஆசிரியர் தங்கள் பாட வேளைக்குப் பின்னர் அல்லது இடைவேளைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் கூட பாட வேளைக்குப்பின்னர் அவற்றிற்குப்பதில் அளிக்கக் கூடிய வசதியிருப்பதால் எதுவித பாதகமும் ஏற்பட வழியில்லை. இது விடயத்தில் ஆசிரியர்களே சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் வைத்திருக்க முன்வருவதே சிறந்தது. ஆசிரியர் இதை செய்யாத போது மாணவர்கள் அது தொடர்பாக அதிபருக்கோ அல்லது அதிகாரிக்கோ முறைப்பாடு செய்யும் நிலை ஏற்படும். இதேவேளையில் பாடநேரத்தில் ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பது ஒரு சமூக விரோதச்செயலாக கருதும் மனப்பாங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

எனினும், இது விடயத்தில் வெறும் நல்லெண்ணத்தால் மட்டும் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாததால் மலையக சமூகத்தின் கல்விஅபிவிருத்தி நலன்கருதி வகுப்பு நேரத்தில் கையடக்க தொலைபேசிப் பாவனைக்கு உத்தியோகபூர்வ தடையை உடனடியாக கொண்டு வருமாறு பிரிடோ நிறுவனம் கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறது. இது பின்தங்கிய சமூகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு விடுக்கப்படும் இந்த வேண்டுகோளை ஆசிரியர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

மெனிக்பாம் முகாமில் இருக்கும் மக்கள் முதல் கட்டமாக மீள்குடியமர்த்தப்பட உள்ளனர்: றிசாட் பதியுதீன்

risadbadurudeen.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் வசிக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் 5 ஆம் திகதி தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக, ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளதாக அமைச்ச்ர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1445 பேரும்,யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுமே இம் மாதம் 5 ம் திகதி புதன்கிழமை, 60 பஸ் வண்டிகளில் வவுனியாவிலிருந்து சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.

உண்டியல் கொண்டுவருவார் கண்டீரோ? : குலன்

undialபிரபாகரன் கொல்லப்பட்டதுடன் கொல்லப்பட்டதா எம்மினத்தின் போராட்டம்? ஈழத்தமிழனுக்கு விடுதலை கிடைத்து விட்டதா? இல்லையென்றால் எங்கே உங்கள் போராட்டங்கள்? தரைப்போர், கடல்போர், வான்போர், நட்சத்திரப்போர், கெரில்லாப்போர், அறப்போர் பனிப்போர் எனப் பலபோர்கள் உலகெங்கும் நடந்தும், எமது தேசத்தில் மட்டுமே மனநோயாளியின் தனிப்போர் நடந்து மிககேவலமான முறையில் முடிவடைந்தது. மிருகத்தின் பெயரைக் காவித்திரிந்ததால் ஆறாம் அறிவு வெளியே தாவிவிட்டதா? பங்கருக்குள் இருந்து வெளியே வந்திருந்தால் இன்னொரு உலகம் இருப்பது தெரிந்திருக்கும். எதிர்காலம் அறியும் திறன், தீர்க்கதரிசனம், மக்கள்நேயம், உலகஅரசியல், பொருளாதார மாற்றங்கள் என்பன பற்றிய ஏதாவது ஒரறிவிருந்திருந்தாலாவது குறைந்தபட்ச உடன்பாட்டுடன், எம்மக்களின் அழிவைக் குறைத்து தமிழீழம் தவிர்ந்த ஏதாவதொரு அரசியல் தீர்வுடன் எம்மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான, விடுதலைக்கான அடுத்த படியில் கால்வைத்திருக்கலாம்.

எம்மக்களைக் காப்பாற்றுங்கள், போரை நிறுத்து, இனவழிப்பைச் செய்யாதே என்று ஐரோப்பிய வட அமெரிக்கத் தெருவெங்கும் கொடிகொண்டு கோசம் போட்டுத் திரிந்தோரே! உங்கள் கோரிக்கைகள் பிரபாகரன் இறந்ததுடன் நிறைவேறிவிட்டதா? நீங்கள் யாருக்காகப் போராடினீர்கள்? உங்கள் போராட்டங்கள் எல்லாம் பிரபாகரனைக் கொல்வதற்கென்றே ஆகிவிட்டதே. அறப்போர் மறப்போர் என்று உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் எனக் குறைப்போர் நடத்தினீர்கள் அறமழிந்து மக்கள் அகதியாக அவலப்படுகிறார்கள் எம்மண்ணில். எங்கே உங்கள் போராட்டம்?. மக்கள் மக்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த மாற்றுக் கருத்தாளர்களே! மாறாக் கருத்தாளர்களே! அந்த மக்களுக்கான விடிவும், தீர்வும் கிடைத்ததா? ஏன் மௌனம்? போரை நிறுத்து மக்களைக் காப்பாற்று என்றீர்களே போரைவிட கொடுமையான பசி, பட்டினி, சித்திரவதைகளையல்லவா எம்மக்கள் நாள்தோறும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருத்தெருவாய் கொடிபிடித்துக் கோசம் போட்டுப் பட்டினிப்போர் நடத்தியோரே! இன்று எம்மக்கள் பட்டினியுடன் முள்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். நீங்களோ பிரபாகரனுடன் தமிழினமே அழிந்துவிட்டது எனக் கருதி ஒரு பிணவாழ்வைத் தொடங்கிவிட்டீர்கள். canada1.jpgபோராட வேண்டிய காலம் இதுதான். நீங்கள் நடத்திய தெருப்போராட்டங்கள் பிரபாகரனையும், புலித்தலைமையையும் காப்பாற்றத்தான் நடத்தினீர்கள் என்பது வெளிச்சம் போட்டே காட்டப்பட்டுவிட்டது. உங்கள் பக்திவாதமும் பகட்டும் பொடிப்பொடியான பின்பு, எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல், மாடு செத்ததும் உண்ணி களர்வதுபோல் களன்று, பிரிந்து, சேர்த்த காசுகளைப் பங்குபோடுவதிலும், முதலீடு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து அடிபடுகிறீர்கள். உங்கள் தலைமையைக் காக்க இவ்வளவுகாலமும் தம்முயிர் உடமைகளைக் கொடுத்த தியாகச்சின்னங்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, வதைப்பட்டு சித்திரவதைக்கப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கே உங்கள் போராட்டம்? எங்கே உங்கள் மக்கள்?

வெளிநாட்டு பங்கர்களுக்குள் ஒளித்திருந்த பலர் சிறு சிறு குழுக்களாகப் புலிவழியே பணம் பறிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். புலிகளோ உடைத்த உண்டியலை பங்குபோடுவதிலும், மீண்டும் புதிதாக உண்டியல் கொண்டு திரிவதற்காக அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் மீதமிருப்பதையும் பிடுங்குவதற்காக தலைமையைப் பங்கு போடுவதிலும் அக்கறை காட்டுகிறார்கள். மாற்றுக்கருத்தாளர்கள் பலர் புலிகள் பாணியிலே வன்னிமக்களைச் சாட்டிக் கொண்டு உண்டியலுடன் திரிகிறார்கள். இப்படி முன்பு சேர்த்த பணங்கள் போய் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்ததாகத் தெரியவில்லை. இங்கே எல்லா மாற்றுக்கருத்தாளர்களையும் குறிப்பிடவில்லை. நீங்கள் எவரும் புலிகளை விடச்சிறந்தவர்கள் என்று கூறி விட முடியாது. புலியும் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நிதிதிரட்ட உண்டியலுடன் வந்தார்கள். இதன் மறுவடிவம்தான் நீங்கள் இன்று மக்களிடம் கொண்டு வரும், கொண்டுவரவிருக்கும் உண்டியல்கள். சிலமாறாற்றுக்கருத்தாளர்களின் உதவிகள் உரிய இடத்தில் போய் சேர்ந்தாலும். போகும் வழியில் தேன் எடுக்கப்போறவன் விரல் நக்காதிருப்பானா? என்ற மாதிரியாகி விடுகிறது.

கோடிக்கணக்கில் மக்கள் கொட்டிக் கொடுத்துப் போராட்டம் கோட்டை விடப்பட்ட பின் இன்று மக்களிடையே இருப்பது என்ன? வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டமுடியாது தவிக்கிறார்கள் புலம்பெயர்ந்தோர். உலகெங்கும் உள்ள அரசுசாரா நிறுவனங்களும், அரசு சார்நிறுவனங்களும் அகதிகளாய் அல்லலுறும் எம் வன்னிமக்களுக்கு உதவிசெய்யத் தயாராக உள்ளார்கள். இவர்களையும் வெளிநாட்டு ஊடகங்களையும் உள்ளே அனுப்ப என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? போராட்டங்கள் எங்கே நடத்தப்பட்டன? என்ன அழுத்தங்கள் உயர்மட்டங்களில் பிரயோகிக்கப்பட்டன? வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அந்த வன்னிமக்கள் அன்று புலிகளின் பாதுகாப்புக்குக் கேடயமாக இருந்தார்கள். இன்று அரசின் பணப்பைக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த வாய்பேசா ஜீவன்களை என்னசெய்யப் போகிறீர்கள். இவர்களுக்கான போராட்டம் எங்கே? கூட்டம்கூடி உண்டியல் கொண்டு திரிந்து யாருடைய பணப்பைகளை நிரப்ப நிற்கிறீர்கள்? தோல்வியை விட அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு முழுமையான சரணாகதியடைவதால் எம்மினத்தை நாமே எதிரியிடம் அடைவு வைக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

புலிகள், மாஜிப்புலிகள், பிரிந்தபுலிகள், ஆயுதம் தாங்கிய தாங்காத தமிழ் அரசியல் கட்சிகள், மாற்றுக்கருத்தாளர்களே! இன்று வன்னிமக்களுக்காக இணைந்து வெளிநாட்டு உதவிநிறுவனங்களையும் ஊடகங்களையும் வன்னிக்கு அனுப்புமாறு போராடுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள், தயங்குகிறீர்கள்?. யார் தலைமைதாங்குவது என்று பிரச்சனையா? தனிமனித பக்தியை விட்டுவிட்டு எல்லோருமே தலைமை தாங்குங்கள். இன்று நீங்கள் தனிமனிதராகவோ, குழுக்களாவோ கொண்டு திரியும் உண்டியல்கள் அரசுக்கும், அங்குள்ள ஆயுதம்தாங்கிய குழுக்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் தலையணையாகும். வெளிநாட்டு அழுத்தங்களினூடாக அவர்கள் உள்நுளையும் போதுதான் அங்குள்ள அநியாயங்கள், அஜாரகங்கள், அடக்குமுறைகள், போரின் வடுக்கள், இனவழிப்புத்தடயங்கள், பாலியற்பலாற்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்தும் வெளிவரும். ஏன் நாயணநிதியம் கொடுத்த உதவிப்பணங்கூடச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கண்காணிப்பும் இருக்கும். வெளிநாட்டு அரசுசார்ந்த சாரா நிறுவனங்கள் வன்னியில் நின்றால் மட்டுமே உதவிப்பணங்கள் சரியான முறையில் குறைந்தது 20 சதவீதமாவது வன்னிமக்களுக்குக் கிடைக்கும்.

அகதிகளை இப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பதினூடாகப் பெறும் வெளிநாட்டு உதவிகளினால் தம்குடும்பத்துப் பணப்பைகளை நிரப்பவதுடன், போர்தடையங்களை தடையங்களை மறைக்கவும், சர்வதேச நீதிமன்றின் நிற்கும் நிலையை தவிர்க்கவும், போரின் செலவுகளை சரிக்கட்டலாம் என்பதை அரசு நன்கறியும். வன்னி அகதிகளை வெளிநாடு போகவிடும் அரசு ஏன் அவர்களை தத்தமது வாழ்விடங்களுக்குப் போக அனுமதிக்கவில்லை. இதனால் இலாபம் பெறுபவர்கள் பலர். வெளிநாடு போகும் தமிழன் போனால் போனதுதான் என்பது தெரிந்ததே. வெளிநாடு போவதற்கு மற்றைய இயக்கங்கள், அரசபடைகள் அடிபட்ட அகதிகளிடமே பணத்தை வாங்கியபின் கொண்டு போய் விடுகிறார்கள் இப்பணங்களின் ஒருபகுதி இராஜபக்சவின் கூட்டுக்குப் போய்சேருகிறது. இப்பணங்கள் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சுருங்கச் சொல்லின் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதிலும், அழிவதிலும் அரச கூட்டின் பணப்பை நிரம்புவதிலும் அரசு அக்கறையாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு தலையணை எடுத்து வைத்துத் தாலாட்டுகிறது புலம்(ன்) பெயர் உண்டியல்கள்.

அமெரிக்கா வரும் என்று பிரபாகரன் இருந்தாராம், அவர்கள் ஏமாற்றி விட்டார்களாம். புதுக்கதைகள் புறப்படுகின்றன. புலிகள் அமெரிக்காவுடனும் போருக்கு நின்றவர்கள்தானே. நல்லபிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு நாசமாய் போனதுதான் முடிவு. அமெரிக்காவின் நிபந்தனைக்கு இணங்கினால்தான் நாணயநிதியத்துக் கடன் கிடைக்கும் எனப்பரப்புரை விட்ட அமெரிக்கா அடுத்த நாளே இலங்கை கேட்ட 190 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேலாக 250 கோடியாக கொடுத்துள்ளது. இதுவே அமெரிக்காவின் வழமையான நாடகம். பாலஸ்தீனருக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டு இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்காவை நம்பிய பிரபாகரனின் அரசியல் தலைமையை என்ன என்பது. மக்களை நம்பிப் போராடவக்கில்லாதவர் அமெரிக்காவை நம்பிப் போராடினாராம். இது திருநாவுக்கரசுவின் திருகுதாளமா? அமெரிக்கர்களைக் கொண்டுவந்து புலிகளுக்குக் கேடயமாக வைத்திருக்கலாமே. இறந்தவர்களுக்கும் நோபல் பரிசு கொடுக்கிறார்களாம். பிரபாகரனுக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசு முன்மொழிகிறாரே? அமெரிக்க சார்வானவர்களுக்குத்தானே அமைதிக்கான நோபல்பரிசும் கிடைக்கிறது.

குறிப்பிட்ட ஊர், சாதி, மதத்தவர்கள் தம்மவர்க்காக உண்டியலுடன் திரிகிறார்கள். முக்கியமாக சிலஊரைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டில் அதிகமாக உள்ளார்கள். அப்படியானால் மற்றக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மற்றக் கிராமத்தவர்களும் உண்டியல் கொண்டு திரியலாமே என்று கேட்பது கேட்கிறது. அதற்கு போதிய மக்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இது பிரதேசவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். பிரதேசவாதம் கொண்டு ஐரோப்பா வடஅமெரிக்காவில் பல எண்ணற்ற கொலைகள் நடந்தேறின. மதங்களினூடு உதவிகள் சேரும்போது மதமாற்றம் தலைதூக்குகிறது. மதம் என்பது இருக்கிறதோ இல்லையோ என்பதற்கு அப்பால் மனிதனின் நம்பிக்கை என்பது அவனது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறக்கக்கூடாது. ஒருவன் தான் மாக்ஸ்சிட் என்று எப்படி நம்ப உரிமை உண்டோ அதேயளவு உரிமை தான் என்ன மதத்தைத் தழுவுகிறேன் என்பதிலும் உண்டு. சாதி என்பது அடியுடன் தவிர்க்க, அழிக்கப்படவேண்டிய ஒன்று. ஆதலால் பிரிவுகள் எதுவாகவும் இருக்கட்டும் உடனடியாக அந்த பாவப்பட்ட வன்னிமக்களுக்காக புலம்பெயர் மக்களே போராட்டத்தை ஆரம்பியுங்கள். உங்களின் வரிப்பணத்திலும் தான் அரசுசார்- சாரா அமைப்புகள் இங்கு இயங்குகின்றன. இவ்வுதவிகள் எம்மக்களை அடையாவிட்டால் அது வேறு எங்கோ ஒருநாட்டில் கொடுக்கப்படும். அதை ஏன் எம்மக்கள் பெறக்கூடாது. ஒன்றாய் கூடி, இணைந்து நாம் வாழும் நாடுகளின் கதவுகளைத் தட்டுவோம். வன்னிச்சிறை உடையும். எப்போ? எப்போ??

அகதிகளைக் கருத்திற் கொண்டு அரசிடம் போனவர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி சலுகைகளைப் பெற்றுத் திரும்பி வந்துவிடுகிறார்கள். மனிதவுரிமை சாசனத்தில் (கொன்வென்சனில்) இப்படியாக அகதிகளை நடத்த முடியாது என்பது அரசுக்குத் தெரியும். ஐ.நா வுக்கும் தெரியும், ஆனால் ஐ.நா என்பது க்கியமற்ற நாக்காக அல்லவா இருக்கிறது. இவ்வம்மணங்களை மறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? எம்மக்களின் மேல் பிரயோகிக்கப்படும் பலாற்காரங்களையும் சித்திரவதைகளையும் வெளிநாடுகளில் அம்பலப்படுத்தவும் உயர்மட்ட அழுத்தங்களை ஏற்படுத்துவதினூடாக இலங்கை அரசின் சித்திரவதைச் சிறைக்கூடமாக இருக்கும் வன்னி முகாங்களைத் திறப்பதற்கான போராட்டங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதைவிட்டுவிட்டு யேசு சீவிக்கிறார் என்பதுபோல் பிரபாகரன் இருக்கிறார், கே.பி புல(ன்)பெயர்ந்த தமிழ்ஈழம், அகதிகளுக்கு உதவி, கல்வி என மாற்றுக்கருத்தும் மாறாக்கருத்தும்கொண்டு உண்டியலுடன் ஓடித்திரியாது, அங்குள்ள மக்களை கருத்திற் கொண்டு பொதுப் போராட்டங்களை இங்கே ஆரம்பியுங்கள். உங்கள் உண்டியல்களால் அங்குள்ள வயிறுகள் நிறையப்போவதில்லை. இந்த உண்டியல்களால் உங்கள் உண்டிகள்தான் நிரப்பப்படுகிதோ யார் அறிவார்? வெளிநாட்டு பொது நிறுவனங்கள் உள்நுளையும் போதுதான் சிறைப்பட்ட மக்களின் நிலை, உணர்வுகள், தேவைகள் என்பன எமக்கும் என்பது எமக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும், மனிதஉரிமை அமைப்புகளுக்கும் நீதியின் கண்களுக்கும் தெரியவரும். அங்குள்ள மக்களின் தேவைகளும் தீர்க்கப்படும். எம்மக்களுக்கான போராட்டத்தை புலத்தில் இருந்தும் நாம் தொடரலாம், தொடரவேண்டும். இப்படியான போராட்டங்களை உருவாக்கி நடத்துவதனூடாக மாற்றுக்கருத்துக்களும் மாறாக்கருத்துக்களும் ஒன்றினைந்து மக்கள் கருத்தாகப் பிரணமிக்கும் வாய்ப்புகள் உண்டு. வெளிநாடுகளிலுள்ள அரசியல், பொதுநல, அரசுசார்ந்த, அரசுசாரா அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், ஐ.நா, மனிதநேய அமைப்புகள் என எல்லாக் கதவுகளையும் ஒன்று சேர்ந்து தட்டுங்கள். எம்மக்கள் சிறைப்பட்டிருக்கும் வன்னிச் சிறைக்கதவுகள் உடையட்டும். செய்வீர்களா? எப்போ? வன்னிஅகதிகள் மரணவீட்டிற்குப் பின்பா?

ஆயுதப்போராட்டம் அடக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டு, புலிகள் பிரிக்கப்பட்டு, வன்னி மக்கள் அகதிச்சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டன. வன்னிமக்களுக்காக நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்த முன்னெடுப்புக்கள் என்ன? வரிசைப்படுத்துங்கள்? அன்று புலிகளும் அதன் சகோதர அமைப்பான ரிஆர்ஓ வும் கொண்டு ஓடித்திரிந்த உண்டியல்களை சின்னதாக உருமாற்றி மற்றவர்கள் அனைவரும் கொண்டோடித் திரிகிறார்கள். ஆரம்பத்தில் புலிகளும் சின்ன உண்டியலுடன்தான் ஓடித்திரிந்தார்கள். உண்டியல் கொண்டு உங்கள் உண்டிகளை நிரப்புவதை விட்டுவிட்டு, வன்னி மக்களுக்கு போதியளவு உண்டி கொடுக்க வெளிநாட்டுதவிகளை அனுப்ப உங்கள் போராட்டங்களை முன்வையுங்கள். அமைதியாக அசந்து தூங்கும் புலமும் புலத்து அரசுசின் காதுகளும் கதவுகளும் அதிரட்டும். எமது மூன்றாம் உலகநாடுகளின் பாட்டன் பீட்டனின் பணத்திலும் உடமைகளிலும் தான் ஐரோபியர்கள் கோட்டை கட்டியவர்கள். எம்மினத்தின் அழிவுக்கு வழிகோலியவர்களில் ஐரோப்பியர்களுக்கும் பங்குண்டு. எம்பங்காளிகளை நாவறுக்கக் கேட்பதும், அவர்களின் அமைதியைக் கலைத்து துலைத்து எமது உரிமைகளை நிலைநாட்ட முயற்சிப்பதில் எந்தத்தவறும் கிடையாது. இன்னும் மாறி மாறாக்கருத்து என்றில்லாது மக்கள் கருத்துக்காக எம்கரங்களை எம்வன்னி மக்களுக்காக உயர்த்துவோமா?