June

June

“நான்கு மாதங்களுக்குள் 8000 விபத்துக்கள் – நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் ” – தேசம் திரை காணொளி இணைப்பு !

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துள்ள விபத்துக்கள் தொடர்பில் தேசம் திரை YouTube பக்கத்தில் வெளியான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யவும்..!

பொறியியல் மாணவர்கள் இருவர் தற்கொலை – பொறுப்புக் கூறவேண்டியது யார்?

தமிழ் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் பலர் உள்ளனர். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பங்குண்டு. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடப்பதோ வேறு. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் முன்னிலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளது. ஆனாலும் அது தன் சமூகப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வருடாந்தம் ஒரு மாணவராவது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

இது தொடர்பான மேலதிகமான தகவல்களை அறிய கீழுள்ள தேசம் திரை Link ஐ Click செய்யவும்.

 

கடுமையான பொருளாதார நெருக்கடி  – வங்கிகளை கொள்ளையடிக்கும் மக்கள் !

லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகின்றது. இந்நிலையில்  வங்கிகளின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  ”பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் ”என  வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில்  அங்குள்ள வங்கிக் கட்டிடங்கள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வெவ்வேறு இடங்களில் இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நற்குணராசா குகதீஷ் (வயது 22)

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் நற்குணராசா குகதீஷ் (வயது 22) பல்கலைக்கழக மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்த அறையின் கழிப்பறையிலிருந்து இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி வரணி பகுதியை சேர்ந்த இவர் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை (16.06) சடலமாக மீட்கப்பட்

விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23)

டுள்ளார். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவன். அத்தோடு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் ஆண்களுக்கான பழுதூக்கல் அணியின் உபதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல.” – பெண் பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில்,

“பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தற்போது, தோர்ப் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார். வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி தோர்ப் மேலும் கூறியுள்ளதாவது:- விடாமல் பின் தொடர்வது, தீவிரமாக பாலியல் உறவுகளுக்கு அழைக்கப்படுவது, தமது உடல் அத்துமீறி தொடப்படுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். அலுவலக கதவுகளை திறக்கவே அஞ்சினேன். வெளியே செல்வதற்கு முன் மெதுவாக திறந்து எவருமில்லையென உறுதி செய்து கொள்வேன். கட்டிடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் எவரையேனும் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பலர் இருந்தாலும், தங்களுடைய நலனுக்காக அவர்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை. இவ்வாறு தோர்ப் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சியும் வான்-ஐ இடைநீக்கம் செய்து விட்டது. ஆஸ்திரேலியாவில், பாராளுமன்றத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் 2021-ம் வருடத்திலிருந்து வரத் தொடங்கியுள்ளது. அரசியல் உதவியாளர் பிரிட்டனி ஹிக்கின்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒருவர் பாராளுமன்ற அலுவலகத்திற்குள்ளேயே தம்மை கற்பழித்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கென தனித்தனியே 5 விசாரணைகள் நடைபெற்றன. ஹிக்கின்ஸ் வழக்கு நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இதற்கென நடைபெற்ற ஒரு விசாரணை, முறையற்ற வகையில் நடந்ததாக கூறப்பட்டாலும், ஹிக்கின்ஸின் மனநலத்திற்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால் மறுவிசாரணை செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பல பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் மேலும் தன் மீது குற்றஞ்சாட்டியவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரித்தார். மேலும் அவர், சம்மதமில்லாத பாலியல் உறவுக்கான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்தார். அரசாங்கம் நடத்திய 2021 விசாரணை ஒன்றும் ஆஸ்திரேலியா அரசியலில் உள்ள பெண்களுக்கெதிரான நிலையை கடுமையாக விமர்சித்துள்ளது.

அப்பொழுது, பாராளுமன்றத்தில் பணியாற்றும் 3-ல் 1 பங்கினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒரு முறையாவது ஆளானதாக தெரிவித்தனர். இவற்றில் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 63% பெண் உறுப்பினர்கள் அடக்கம்.

 

பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஆபாச படங்களை உருவாக்கிய நபருக்கு ஆயுள் தண்டனை!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27) என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச காணொளி எடுத்துள்ளார். பின்னர் அந்த காணொளிகள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.

இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளார். 120 பெண்களின் 400 காணொளிகள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்டன.

காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள் !

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள நபர்களின் வரிசையில் 7 இலங்கையர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச காவல்துறையின் சிவப்பு பட்டியல் வரிசையில் மொத்தமாக 6872 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தேடப்பட்டு வரும் பட்டியலில் நான்கு இலங்கையர்கள் இலங்கையில் தேடப்பட்டு வருவதாகவும், மூன்று இலங்கையர்கள் வெளிநாடுகளில் இழைத்த குற்றச்செயல்களுக்காக அந்தந்த நாடுகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இன்டர்போல் சிவப்பு பட்டியல் என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒருவரைக் கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்ய உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.

இதனடிப்படையில், இன்டர்போல் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேடப்படும் நால்வர் கொஸ்கொட சுஜீ என்ற 38, நடராஜா சிவராஜா, 49, முனிசாமி தர்மசீலன், 50, மற்றும் விக்னராசா செல்வந்தன், 35 ஆகிய நால்வராவர்.

கொலை வழக்கு தொடர்பில் கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிரகாமரின் கொலைக்கு உதவிய நடராஜா சிவராஜாவுக்கும் இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசீலன் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளை வைத்திருந்ததற்காக தேடப்பட்டு வரும் நிலையில், செல்வந்தன் மீது திருட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மற்ற மூன்று இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இன்டர்போல் கண்டுபிடித்து வருகிறது.

அதன்படி, நவநீதன் கொலைச் சம்பவம் தொடர்பில் ருமேனியாவினால் தேடப்படும் வவுனியாவைச் சேர்ந்த குமாரசாமி, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் இந்தியாவினால் தேடப்படும் அலபொடகமவைச் சேர்ந்த 61 வயதான மொஹமட் பௌமி, கனடாவால் தேடப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் விஜயராஜா (41) ஆகியோர்களே தேடப்படுகின்றார்கள்.

இதேவேளை, மேலும் ஐந்து இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் மஞ்சள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

காணாமல் போனவர்கள், பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிவதற்கு அல்லது தங்களை அடையாளம் காண முடியாத நபர்களை அடையாளம் காண்பதற்கு மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

“இந்தியாவின் பிரதமராக தமிழர்.” – பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அறிவிப்பு !

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார்.

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தாா்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வேண்டும் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர், அண்ணாமலை பிரதமராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தலைவர்களை இதுபோன்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

“தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளின் பட்டியலில் நான்கு இலங்கையர்கள் !

ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது.

Biocon on Twitter: "Congratulations @kiranshaw for being recognized as  India's First Lady of #Biotech and representing #India in the Biomedical  Sciences sector in the Top 100 Asian Scientists Report of the prestigious

ஆசியாவின் முன்னணி STEM மற்றும் ஹெல்த்கேயார் மீடியா நிறுவனமான சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வைல்ட் டைப் மீடியா குழுமத்தால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.

Oceanswell இன் ஸ்தாபகரான Asha DeVos, மற்றும் Dr. Rohan Pethiyagoda ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து சதுரங்க ரணசிங்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இருந்து அஷானி சவிந்த ரணதுங்க ஆகியோருடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஷா டிவோஸ் ஒரு கடல் உயிரியலாளர், கல்வியாளர் மற்றும் நீல திமிங்கல ஆராய்ச்சி துறையில் முன்னணியில் உள்ளார். கடல் பாலூட்டி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் மற்றும் நாட்டிலிருந்து முதல் தேசிய புவியியல் ஆய்வாளர் ஆவார். இத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், இலங்கையில் இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியதற்காகவும், கள உயிரியலுக்கான மேக்ஸ்வெல்-ஹன்ரஹான் விருது, வனிதாபிமான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் உலகளாவிய ஆசிரியர் பரிசு உள்ளிட்ட பல விருதுகளை DeVos பெற்றுள்ளது. TED ஃபெலோவாகவும் இருக்கும் டி வோஸ், இலங்கையின் முதல் கடல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான Oceanswell ஐ நிறுவினார்.

கலாநிதி ரோஹான் பெத்தியகொட விலங்கியல் துறையில் 2022 லின்னியன் பதக்கத்தை வென்றார், மேலும் பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். இலங்கையில் பல்லுயிர் பாதுகாப்பில் அவரது நிலையான ஆராய்ச்சி, எழுத்து மற்றும் வாதிட்டதற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

சதுரங்க ரணசிங்க 2022 ஆம் ஆண்டில் 7ஆவது ஷேக் ஃபஹாத் ஹிரோஷிமா-ஆசியா விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் விருதைப் பெற்றார். இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணருக்கு விளையாட்டு மருத்துவத்தில் அவர்களின் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.

அஷானி சவிந்த ரணதுங்க, கைத்தொழில் மற்றும் விவசாய கழிவுகளை பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியமைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்மாண மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதற்கும் 2022 OWSD-Elsevier அறக்கட்டளை விருதைப் பெற்றுள்ளார்.

லண்டனில் போலிச்சாமியார் கைது !

லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான முரளிகிருஸ்ணன் என்கிற சரவணசாமி, இலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து Colindale பொலிஸ்சாரல்

மதியம் மூன்று மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அதிக நிதிகளை வழங்கியதாக சந்தேகிக்கபடும் லைக்கா தொலைபேசி நிறுவன உரிமையாளர் மற்றும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் உட்பட நிதிவழங்கிய பல தமிழ் வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்த படலாம் என தெரியவருகிறது.

இந்தச் சாமியாரை மையப்படுத்திய தீவிர பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

அந்தக் காணொளிகளை அவரது தரப்பு மறுத்திருந்தது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் மூவர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து கொலின்ல் பகுதி காவல்துறை நேற்று இவரை கைதுசெய்து கடந்த 24 மணிநேரமாக விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இவரது கைதை அடுத்து அவரது ஆச்சிரம பக்தர்களிடம் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இவருக்கு அதிக நிதியுதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாமென்பதால் இவரை பிணையில் எடுப்பதற்கு அவருக்கு நெருக்கமான சிலர் தீவிர முயற்சியெடுத்து வருவதாக தெரியவருகிறது.

அதேவேளை, கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்தச் சாமியரது காணொளிகள் என்று கூறப்பட்டு, சில ஆபாச காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தன.

தென்னிந்திய தொலைக்காட்சிகள் சிலவும்  அந்தச் சாமியார் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமது செய்தி அறிக்கைகளில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.