09

09

நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்ட தலிபான்களின் துப்பாக்கியை கண்டு அசராத பெண் – வைரலாகும் படம் !

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள்  தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காபூல் போராட்டத்தின் போது தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், களத்தில் இருந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதற்கு சற்றும் அசராமல் அந்தப் பெண், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். இது குறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக் டொலர் – 3 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கும் சீனா !

ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளையும், 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக் டொலர்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள ஏனைய நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.

இதன்போது அவர் தலிபான்களால் நிறுவப்பட்ட அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களிடம் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளும் கொவிட் -19 தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு உதவுதல், எல்லை துறைமுகங்களை திறந்து வைப்பது, அகதிகள் மீதான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தினார்.

அதேநேரம் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் தலிபான்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் பயங்கரவாதக் குழுக்களைக் கைது செய்து ஒழிக்க உளவுத்துறை பகிர்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துமாறும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் என்பதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முழு கடமையையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்.” – ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஸ்டாலின் மேலும் ஒரு நகர்வு !

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வமான உரிமையாகும். இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது.

அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 என்று பெயரிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளாக வருபவர்களைச் சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ அல்லது எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வதாக அமையாது. அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானதாகும்.

அதிலும், குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் எல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? என்றும் இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.