24

24

”அமேசான் காடுகளை நான் அழிப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை ” – பிரேஸில் ஜனாதிபதி

அமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகப் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ பேசும்போது, ”அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பிரேசிலின் அமேசான் வளம்மிகுந்த பகுதியாகும். எனவே, இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக பிரேஸில் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதைத் தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசிலின் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்ஸனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன்அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதனை பிரேஸில் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை  கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் உள்ளன. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது

”கொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உதவியது” – சீன விஞ்ஞானி பரபரப்பு பேட்டி !

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாகவும் சீனா திட்டமிட்டே வைரஸை பரப்பியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய ஆயிரம்ரூபாய் தாளை வெளியிட்டுள்ளது மத்தியவங்கி ! !

இலங்கை மத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நாணயத்தாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன்வினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் புதிய 1,000 ரூபாய் தாள் அறிமுகம்! - Today Jaffna  News - Jaffna Breaking News 24x7

விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளத்தில் வைத்து குறித்த நாணயத்தாள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சைப்படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக டக்ளஸ்தேவானந்தா பயன்படுத்தப்படுகின்றார் ”- பாராளுமன்றில் விக்கினேஸ்வரன்.

““எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சைப்படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக டக்ளஸ்தேவானந்தா பயன்படுத்தப்படுகின்றார் ”என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று(24.09.2020) நாடாளுமன்றத்தில் திலீபனின் தியாகம் தொடர்பாகவும் அவர் மேல் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முறையற்ற விமர்சனம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

விக்னேஸ்வரனின் இந்த கருத்தானது நேரம் போதாமையினால் நாடாளுமன்றத்தில் ஹன்சாட்டில் உள்வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டது.

 நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரன் அவர்கள்ஹன்சாட்டில் உள்வாங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட உரையின் பகுதி வருமாறு !

மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால்த்தான் இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன. அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ? நான் அறியேன். அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா? இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ ஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே? மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதைத் தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்து திலீபனின் அன்றைய நியாயமான கோரிக்கைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. தமிழ் அரசியற் கைதிகளுக்கு இன்றும் விமோசனம் கிடைக்காதிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. தமிழர் பிரதேசங்களில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்து அங்கு தமிழ் பேசாதவர்களைப் பதவியில் இருத்துவது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்று அவர் எதற்காக ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து மடிந்தாரோ அதே கோரிக்கைகள் 30 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அரசாங்கம் தொடர்ந்தும் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரிக்கப்பார்க்கின்றார்கள். ஆனால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் உலக அரசாங்கங்களினாலும் ஐ.நா. சபையாலும் கவனமாக உற்று நோக்கப்பட்டே வருகின்றன என்பதை அரசாங்கம் மறக்கக் கூடாது. கலாநிதி பச்சலட் அவர்களின் அண்மைய கூற்று இதனை வெளிப்படுத்துகின்றது. அடக்கு முறைகளின் மூலம் எமது மக்களின் உணர்வுகளை அடக்குவது இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குக் குந்தகமாகவே அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே தயவு செய்து எதிர்வரும் 26ந் திகதி எமது மக்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

மூன்றாவதாக திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நினைக்கின்றேன். முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சைப்படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் தேவானந்தா பாவிக்கப்படுகின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக திலீபன் சம்பந்தமாக கௌரவ அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் அவரின் கட்சி இயற்றிய அட்டகாசச் செயற்பாடுகள் பற்றியோ, மகேஸ்வரன் கொலை பற்றியோ, அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொலை பற்றியோ எவரும் கூறாதிருக்க ஏன் திலீபன் பற்றியும் என்னைப் பற்றியும் மிகுந்த கரிசனை காட்டுகின்றார் அவர் என்பது புரியவில்லை.

அத்துடன் மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தம் அற்றதும் விளக்கமற்றதுமான கருத்துக்களைக் கூறுவதையும் அமைச்சர் டக்ளஸ் அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றியோ, தேவையான அதிகாரங்கள் பற்றியோ என்ன விளங்கப் போகின்றது? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று கேட்டு எனது பேச்சை இத்துடன் நிறைவு செய்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செல்வச்சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ! – வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு.

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, தமிழ் தேசியம் சார்ந்த பத்து அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.

இதன்போது,  வரும் 26ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறும் நினைவுகூருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு, சமூக சிவல் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வெண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

28வருடங்களின் பின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் கூடிய ஏற்றுமதி அபிவிருத்தி சபை !

ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் ஒன்று கூடியது.

1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையை மீள செயற்படுத்தி, முதலாவது சந்திப்பு நேற்று (23.09.2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும். துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளக்கிய ஜனாதிபதி, அந்தந்த நாடுகளுக்கு தேவையான வகையில் ஏற்றுமதித்துறையில் பல்வகைத்தன்மையை கொண்டிருப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கைச்சாத்திடப்பட்டுள்ள பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் நாட்டுக்கு அனுகூலமானவையல்ல. நாட்டுக்கு அனுகூலமான அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய வகையில் இந்த உடன்படிக்கைகளை விரைவாக மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதித் துறையில் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையை விரைவாக மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்றுமதி காரணமாக கடந்த காலங்களில் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரியதாகும். விவசாயிகளினதும் உற்பத்தியாளர்களினதும் நாட்டுக்கே உரிய உயர் தரத்துடன் கூடிய உயர்தரம் வாய்ந்த பயிர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உயர் தரத்துடனும் சிறந்த கண்காணிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக சந்தையில் சுதேச உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும். ஊக்கத்துடன் செயற்படுமாறு தான் தனிப்பட்ட முறையில் தூதுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியுள்ள இலக்குகளை அனைவருக்கும் நிர்ணயிக்க உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தூதரக அலுவலகங்களில் உள்ள வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் !

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (24.09.2020) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் பிரதான வாயிலை மறித்து இடம்பெற்ற இந்தப் போராட்டத்தினால் பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் இடம்பெறவில்லை.

262 மாணவர்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும் பாடசாலை ஒழுக்க விதிகளைப் பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களைப் பாதுகாத்துத் தருமாறு கோரி பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி கோட்டக்கல்லி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் பெற்றோரிடம் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

”விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது ” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனவும் அவர்களின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையானது எந்தவொரு அதிகாரத் தரப்புடனும் இணையாத அணிசாரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

75ஆவது பொதுச் சபையின் பொது விவாதத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் எனவும் அது அந்தந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் துடிப்பு மற்றும் தேவைகளை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையானது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த நிலையில், அனைத்து பயங்கரவாத செயல்களையும் உள்நாடு அல்லது சர்வதேசமாக இருந்தாலும் மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது.

இலங்கை மண்ணிலிருந்து அது நீக்கப்பட்ட போதிலும், இந்தப் பயங்கரவாத அமைப்பின் சர்வதேச தொடர்பாடல் எஞ்சியிருக்கிறது. அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தி சில தலைநகரங்களை அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரசாரங்களைப் பரப்புவதற்கு செல்வாக்குச் செலுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ் தொடர்ந்து ஆதரிக்கும் மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இலங்கை ஆழ்ந்த உறுதிபூண்டுள்ளது என்பதை வெளிப்படுத்திய ஜனாதிபதி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டவிரோத உற்பத்தி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்துவரும் நுட்பத்தைப் பற்றியும் இலங்கை மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதனை நிவர்த்தி செய்வதற்காக போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஒரு ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அந்தக் குழு பாராட்டத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம் !

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட “இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி” க்கு, அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் நேற்று முன்தினம் 22ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நியமனம் செய்யப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“யுத்தகாலத்தில் புலிகளால் வடக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள – முஸ்லீம் மக்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டும் ” – இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர

யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் அவர்கள் மீண்டும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று(23.09.2020) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் இடம்பெறாத காரணத்தினால் சில விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.இதன்போது நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்று எங்கு உள்ளனர்? அவர்களுக்கு தேர்தல் உரிமை உள்ளதா? என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும். 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாட்டின் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் என கூறிக்கொண்டு நாடு நாசமாகிவிட்டது. கடந்த ஆட்சியில் அரசியல் அமைப்பு சபையில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் கையாள்களாக இருந்து தீர்மானம் எடுத்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் எப்படிப்பட்டவர் என்றால் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர். இவர்கள் இருவரும்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தனர். அவர்களில் ஒருவர் தான் ரட்ணஜீவன் ஹூல்.

தகுதியில்லாத ஒருவரை இவர்கள் தேர்தல்கள் ஆணைகுழுவிற்கு கொண்டுவந்தனர். நல்லாட்சியில் நடந்த ஊழல் குற்றங்களின் போது, வழக்குகள் தொடுக்காத ஹூல் 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது முதலாவது வழக்கை தொடுத்தார்.

எனவே இவர்களில் கொள்கை என்ன என்பது எமக்கு நன்றாக தெரியும். தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பக்கச்சார்பான, என்.ஜி.ஓ காரர்களை நீக்க எமக்கு 20 வது திருத்தம் வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.