09

09

மீண்டும் வருகிறார் யுவராஜ்!

பீல்டிங், பேட்டிங்,  பவுலிங் என மூன்று துறைகளிலும் அசத்தியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராகவும் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு மற்றும் சகலதுறை வீரராகவுமு்  திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பி.சி.சி.ஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் இணைந்து தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.

பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் தாவித் மலன்!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 இங்கிலாந்து தொடரை வென்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான  தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ஓட்டங்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

“2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் ” – ஜப்பான் உறுதி.

இந்த ஆண்டு சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகினுடைய 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வருகின்ற நிலையில் 2020,2021 ஆகிய வருடங்களில்  நடைபெறவிருந்த உலககூட்டத்தொடர்கள், விளாயாட்டுப்போட்டிகள் என்பன ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு செலவிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கு இப்போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை 23 ம் தேதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்‍கியோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக்கிற்கான அமைச்சர் ஹஷிமோடோ, கொரோனா இருந்தாலும், இல்லையென்றாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருவதாக ஹஷிமோடோ தெரிவித்துள்ளார்.