25

25

பௌத்த தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை !

பௌத்த தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாடு உட்பட பிரிவினா ஆசிரியர்களின் நியமனங்கள் , சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் யோசனைகளையும் திட்டங்களையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்;.

இது குறித்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதற்கு சகல சமய ரீதியிலான பதிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒழுங்கு படுத்துவதற்கும் ராஜாங்க அமைச்சின் பூரண தலையீடு காணப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை கண்டறிந்து அதனை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழகங்களுக்கும், தொழில்களுக்கும் இணைத்துக்கொள்ளும் போது அறநெறி சான்றிதழுக்கு முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

“உயிர் நீர்தவர்களை நினைவு கூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது” – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் !

உயிர் நீர்தவர்களை நினைவு கூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு கிடைக்கத்தக்கவாறு ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (25.09.2020) நடைபெற்றது. இவ் அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கான விசேட பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

இப்பிரேரணைக்கு சபை ஆதரவு கோரப்பட்ட போது சபையில் பிரசன்னமாயிருந்த உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.

இவ்விடயத்தில் பிரேரணையினைச் சமர்ப்பித்து கருத்துரைத்த தவிசாளர், போரில் நேரடியாகத் தொடர்பு பட்டும் தொடர்புராமலும் உயிர் நீத்தவர்களை அஞ்சலிப்பதற்கு எமது மக்களுக்கு உரிமை உண்டு. நினைவு கூர்தல் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். சர்வதேச சமவாயங்கள் ரீதியிலும் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதற்கான சகல உரிமையும் எமக்கு இருக்குறது.

இந் நிலையில் தற்போது நினைவு கூர்தலுக்கு பல்வேறுபட்ட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் அரசாங்கம் நாட்டில் நினைவு கூர்தலுக்கான உரிமையைக் கேள்விக்குட்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி அலகு என்ற வகையில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

“தமிழ்க்கட்சிகளின் இணைந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தில் மாற்றம்“ – சட்டத்தரணி என்.சிறிகாந்தா

தமிழ் கட்சிகள் திட்டமிட்ட உண்ணாவிரத போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும்.  ஆனால் மாற்று இடமொன்றில் போராட்டத்தை நாளை காலையில் ஆரம்பிப்பதென தமிழ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த முடிவை இன்று (25.09.2020) மாலை தமிழ் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நீதிவானின் கட்டளையில் பிரதிவாதிகளாக யாரையும் குறிப்பிடவில்லையென்ற போதும், நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து நீதிமன்ற கட்டளையை மீறாமல் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழில் இல்லாது சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பப்பட்டால் மட்டுமே என்னால் நீதிமன்றம் செல்ல முடியும் ” – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழில் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரி தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்த அழைப்பாணையினை நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

குறித்த அழைப்பாணை கடிதம் மூன்று தாள்களில் கிடைத்துள்ளது, அதில் தமிழ் மொழியில் உள்ளதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் என்னால் நீதிமன்றம் செல்லமுடியாது என கூறி குறித்த அழைப்பாணை கடிதத்தினை பொலிஸாரிடமே கொடுத்துள்ளார். சிங்கள மொழியில் குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டால் மட்டுமே என்னால் நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் அந்த காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்க முயற்சித்ததுயும் அவர்களை ஒரு கொட்டிலுக்குள் தடுத்து வைத்திருந்ததும் காணொளி வெளி வந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

2020 மேலுமொரு சோகம் !- “மறைந்தது பாடும் நிலா “ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் !

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இந்நிலையில், சற்று முன் SPB உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார்.

பாடகர் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தகவல் – news7 India

”ஒருவருடைய சமூகசேவைகளை கருத்திற்கொண்டே இனிமேல் சமதானநீதவான் பதவி வழங்கப்படும் ” – நீதியமைச்சர் அலி சப்ரி

கல்வித் தகைமைகளை வைத்து அன்றி சமூக சேவைகளை கருத்திற் கொண்டதாகவே சமாதான நீதவான்கள் பதவி வழங்கப்படுகின்றன என நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக செயற்பாடுகளுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சித்தியடைந்தவர்கள் சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  சாந்த பண்டார எம்.பி தமது கேள்வியின் போது,

சமாதான நீதவான்களை நியமிக்கும் போது கருத்திற்கொள்ளும் ஆகக்குறைந்த கல்வித் தகைமைகள் எவை என்பதை தெளிவுபடுத்துமாறு கோரினார்.

அதற்கு பதிலளித்த போதே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

சமாதான நீதவான் பதவிகளை வழங்கும்போது 60 வயதுக்கு குறைந்தவர்களானால் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களானால் அவர்களின் சமூக சேவை, நன்னடத்தை ஆகியவையே கருத்தில் கொள்ளப்படும். பாரிய சமூக சேவைகளை செய்தவர்கள் கிராமப்புறங்களிலும் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இரண்டாவது நாளாகவும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில் ஆறாயிரத்து 634பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் வைரஸ் தொற்று பரவியதற்கு பிறகு பதிவான இரண்டாவது நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி (7,860பேர்) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், நான்கு இலட்சத்து 16 ஆயிரத்து 363பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 41ஆயிரத்து 902பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 228பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“வல்லரசு நாடுகளின் பனிப்போர் களமாக மாறும் பெலாரஸ் – ஜனாதிபதியை பதவி விலகக்கோரி ஒருமாதத்திற்கும் மேலாக தொடரும் மக்கள் போராட்டம் !

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும்.
அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல்
நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
ரஷிய அதிபரிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ  அறிவிப்பு - lifeberrys.com Tamil இந்தி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா போலாரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் ஆயுத உதவி கேட்ட  பெலாரஸ் அதிபர் || Belarusian leader says he asked Putin for weapons
இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால், வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடைபெறும் களமாக பெலாரஸ் மாறி வருகிறது. இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ நேற்று பெலாரஸ் நாட்டின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது. மேலும், அவர் ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெலாராஸ் நாட்டின் ஜனாதிபதியாக அலெக்ஸ்சாண்டர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடுகளுடன் நடைபெற்றுள்ளதால், அவர் ஜனாதிபதியாக அங்கீகரிக்க முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.
பெலாரஸ் அதிபராக அலெக்ஸ்சாண்டர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அந்நாட்டு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அலெக்ஸ்சாண்டர் பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக பெலாரசில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

”“டக்ளஸ் தேவானந்தா பேசும் போது எவரும் தடுப்பதில்லை . ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் கதைக்கும் போது மட்டும் தடுக்கமுற்படுகிறீர்கள்” – பாராளுமன்றில் கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஒலித்த சுமந்திரனின் குரல் !

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் திலீபன் நினைவேந்தல் பற்றி பாராளுமன்றில் கதைக்க முற்ப்பட்டமையை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு தடை செய்ய முயன்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் குறுக்கிட்டு  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சார்பாக பேசியிருந்தார்.

அங்கு உரையாற்றிய சுமந்திரன் அவர்கள்…,

“டக்ளஸ் தேவானந்தா கதைக்கும் போது எவரும் தடுப்பதில்லை . ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கதைக்கும் போது மட்டும் தடுக்கமுற்படுகிறீர்கள். ஒரு கட்சியின் தலைவராக மக்கள் பிரச்சினையை கதைப்பதற்கும் பாராளுமன்றில் குரல்கொடுப்பதற்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு அனைத்து உரிமைகளும்  உள்ளது. அவர் பேசுவதை  தடுக்க எவராலும் முடியாது ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ் அரசியல் ஆர்வளர்கள் பலராலும் பாராட்டப்பட்டிருப்பதுடன் சமூகவலைதளங்களிலும் பரவலான பேசுபொருளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரே நாளில் 86,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா ! – மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்வு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. உள்ளது.
இந்நிலையில், இன்று காலை இந்தியமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,141 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,56,165 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 81177 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,70,116 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.59 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 81.74 சதவீதமாகவும் உள்ளது.