21

21

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் !

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் முறைப்பாடுகளை ஏற்கும் இறுதி திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினரை அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 5 முன்னணி அரச வங்கிகளில் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கும் நட்டத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் மற்றும் வெளிதரப்பினரை அடையாளங் காண்பதற்குமான பொறுப்பும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரச வங்கி கட்டமைப்பை செயற்றிறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் அரச வங்கிகளில் இடம்பெறும் குளறுபடிகளை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஏற்ப இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

”ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என மைத்திரிபால சிறீசேன தெரிவித்தார் ” – ஹேமசிறி பெர்ணான்டோ

ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இஸ்லாமிய போதகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ், அல்ஹைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டதோடு, அவ்வாறான அமைப்புகளிடம் ஆயத பயிற்சியைப் பெற்று நாடு திரும்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் அவர், அவ்வாறான நடவடிக்கைகளால் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, உடனடி நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

“பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும்“ – சஜித் பிரேமதாச

“ஐக்கிய நாட்டுக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்“ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாம் 20ஆவது திருத்தச்சட்டத்தை என்றும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இதனை தோற்கடிக்க தேவையான அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் மேற்கொள்வோம்.

மக்கள் இதற்காக அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. எனினும், அரசாங்கம் இதனை மறந்துதான் தற்போது செயற்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் 20 இற்கு எதிராக எம்மால் முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் தற்போது உறுதியாகவுள்ளது. இந்தப்பயணத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எமது கதவுகள் திறந்து தான் காணப்படுகிறது.

ஐக்கிய நாட்டுக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது மிகவும் புதியக் கட்சியாகும். பொதுத் தேர்தலின்போது எமக்கு சரியான முறையில் அமைப்பாளர்கள்கூட இருக்கவில்லை. இந்த நிலையில்தான் இவ்வாறான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம். தற்போதுதான் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று உள்ளார்கள். இது உண்மையில் புரட்சி என்று தான் கூறவேண்டும்.

இப்படியான எமது பலத்தை பயன்படுத்தி 20 இற்கு எதிராக மட்டுமன்றி, சுற்றாடல் அழிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்துக்கு எதிராகவும் செயற்படுவோம்.

மக்கள் கொஞ்சம் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களித்திருந்தால், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்காது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் அனைத்து மக்களுக்காகவும் செயற்படுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” – அமைச்சர் சரத்வீரசேகர

”13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது.

அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.

மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. மாகாணசபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணங்களாக பிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்து மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அங்கு 900 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்காய், மரக்கறிகள் உள்ளிட்ட பல பயிரினங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 ஏக்கர்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையும் ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றது.

புத்தளத்திற்கு ஜனாதிபதி இன்று கண்காணிப்பு விஜயம் - அவரே நேரடியாக  குறிப்புகளை எடுத்தார் ~ Jaffna Muslim

இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் வண. கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த நன்கொடை ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். 50 மாணவர்கள் தங்கி இருந்து பயிற்சி பெறக்கூடிய வகையில் நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு இங்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கார்தினல் ஆண்டகை குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் மாளிகையின் கண்காணிப்பின் கீழ் நிறுவனம் நிர்வகிக்கப்படும். பயிற்சி நிலையத்தின் பாதிரிமாருடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.

மதுரங்குளி மாதிரி பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி, மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி, உடனடியாக அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு குறிப்பிட்டார்.

வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார். வீதிகள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் பல பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவற்றுக்கு உடனடியாக தீர்வினையும் வழங்கினார்.

மதுரங்குளி பாலச்சோனை முதல் தலுவ பிரதேசத்திற்கு பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பீட்ரூட், புகையிலை, மிளகாய் மற்றும் வெங்காய பயிர் நிலங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளை ஊக்குவித்தார்.

தலுவ நிர்மலபுர காற்று விசையின் மூலம் இயங்குகின்ற மின் நிலையத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். பேராயர் வண. கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சின்தக்க மாயாதுன்னேவும் இதன்போது இணைந்து கொண்டனர்.