December

December

தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றங்களை வரவேற்கிறோம் – ஈ.பி.டி.பி. அறிக்கை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும், நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்கின்றோம்” என ஈ. பி. டி. பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும். அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் நாம் அதனை மனமகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம். ஆனாலும், அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆனாலும், அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை. இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு எமது கட்சியாகிய ஈ. பி. டி. பி. வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.

அதேவேளை, ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் பயணம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் முடிவு

ஈரோஸ் (ஈழவர் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஈரோஸ் தலைவர் ‘தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரினாலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் என்பது பூஜ்யம். இத்தகைய ஒருவரினால் ஒரு ஜனநாயக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

சந்திரிக்காவின் புதல்வர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தேர்தலில் களமிறக்கப்படக் கூடிய சாத்தியம்?

vimukthi.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமுக்தி குமாரதுங்க தற்போது இங்கிலாந்தில் மிருக வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் வெடி விபத்து; 102 பேர் பலி; 135 காயம்

ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர், 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விடுதியின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மனைவியின் எலும்புகளோடு உறங்கிவருபவர்: வியட்நாமில் வியப்பு தகவல்

வியட்நாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இறந்த தனது மனைவியின் எலும்புக்கூட்டோடு படுத்து உறங்கி வருகிறார் என்ற தகவல் அந்நாட்டில் பரவலாக அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.  ஐம்பது வயதைத் தாண்டிய வான் என்ற இந்நபர், தனது மனைவியின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து தனது மனைவியைப் போன்ற ஒரு மெழுகு பொம்மை செய்து, அதனுள் அவரது எலும்புகளை வைத்து, அந்த பொம்மைக்கு ஒப்பனை எல்லாம் செய்து உடன் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளளார்.

மனைவியின் உருவத்தின் அருகே லி வானும் அத்தம்பதியருடைய 12 வயது மகனும் உடலை அனைத்துக்கொண்டு படுத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, இப்படியான சம்பவங்களைத் தடுப்பதற்கோ தங்களிடம் அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி – ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர்.

delan-shaly.jpgபொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதன் மூலம் கட்சியின் ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர். கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியுடன் நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். .நான் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் , கட்சிக்கு ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் அரசியலிருந்து வீட்டுக்கு செல்வதா? ஓய்வெடுப்பதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்றும் அவர் சொன்னார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, .கட்சியின் செயற்குழுவிற்குள் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிக்குமாறு கோரினோம் அதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கட்சியையும் யானை சின்னத்தையும் மாற்றவேண்டாம் என்று கோரினோம். .தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சியின் பெயர் விற்கப்பட்டு விட்டது. தேர்தலில் ரணில் முன்வந்தால் தோல்வியடைவார் என்று தெரியும். அதனால் தான் எஸ்.பி போட்டியிடுவதற்கு தயராக இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்கு கட்சிக்குள் பலர் இருக்கின்றனர். கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் அரசியலிருந்து வீட்டுக்கு போவதா? ஓய்வு பெறுவதா? அல்லது அரசாங்கத்துடன் இணைவதா? என்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும். அரசாங்கத்தில் பதவிகளை ஏற்பதாயின் பலர் செல்வதற்கு முன்னரே நான் பதவியேற்றிருப்பேன் என்றார். .

மாநாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதை இட்டு நான் சந்தோஷமடைகின்றேன் அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது சிங்கள நாடு, பௌத்த சிங்களவர்களுக்கே உரித்துடையது. சிறுபான்மையினர் எதனையும் கேட்கமுடியாது அவர்கள் வெளியிலிருந்து இங்குவந்தவர்கள் என்று கூறியிருந்தார்..

அவரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்திலிருக்கு அமைச்சர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் அல்லது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன் அது நடைபெறவில்லை.. இதனையடுத்தே 12 கட்சிகளை இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு நான் தலைமையேற்றேன். கடந்த தேர்தல்களில் யானை சின்னத்திற்கு சிறுபான்மையினர் கண்ணை மூடிக்கொண்டு புள்ளடியிட்டனர் ஆனால் இன்று யானை சின்னமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, கட்சியின் தலைவரோ தேர்தலில் இல்லை. .இது வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயமாகும் என்றார்.

தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை

telo mp jivajilingam
வீரகேசரி நாளேடு 12/5/2009 9:05:44 AM – இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழ் வேட்பாளரை கூட்டமைப்பு தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேற்சையாக களமிறங்கி போட்டியிடுவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(telo) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஜிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவும், முன்னாள் தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்ஷவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படு கொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.

ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.

இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

K Thevathasanதேவதாசன் சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். இடதுசாரி அரசியல் பின்புலத்தை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் லண்டன் வந்திருந்தபோது தேசம் சஞ்சிகை புலம்பெயர் சினிமா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் ஈழவர் திரைக்கலை மன்றம் இவரது ஆவணப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. எப்போதும் தனித்துப் போராடத் தயங்காத இவர் தனியனாகவே சில போராட்டங்களை முன்னெடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர்.   –  இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்து 17 மாதங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்திருப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. மேலும் க தேவதாசனுக்கு இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியை வழங்கியவர்கள் ஜேவிபி யினரே.  திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டமை ஜே.வீ.பி.யின் முக்கியஸ்தரான அனுரதிஸாநாயக்க கலாசார அமைச்சராக இருந்த காலகட்டத்திலாகும். இது உள்வீட்டு அரசியல் விவாதமாகவும் உள்ளது.

இவரது கைது தொடர்பாக லண்டன் வந்திருந்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சந்திரசேகரனிடம் கேட்ட போது க தேவதாஸன் தொடர்பாக அரசு சட்டவிரோதமாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார். அரசு தனது விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சட்டத்தைப் பயன்படுத்துவதாக அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

._._._._._.

From:
K Thevathasan
No: 9544, J/Ward
New Magazine Prison
Colombo- 09
21-11-2009

To:
The hon.Milinda Moragoda
The hon minister of Justice
Ministry Of Justice
Superior Courts Complex
Colombo-12

கெளரவ அமைச்சர் அவர்கள்,

க.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”

கனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.

கடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:

1.
08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.

2.
B148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன்? இதைச் செய்தது யார்? எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது? இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.

3.
2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன? எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது? அல்லது அறியவே முடியாதா?

4.
கல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நடைபெறுமா? அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா?

“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

சட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு! என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.

இதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இங்கனம்
க. தேவதாசன் (ஒப்பம்)
கனகசபை தேவதாசன்
(Kanagasabai thevathasan)

Thevathsan_K_in_Thesam_Meetingக தேவதாசனின் கைது தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:

யமுனா ராஜேந்திரன்: நண்பர் தேவதாசனை நான் ஈழவர் திரைக்கலை மன்றம் நிகழ்த்திய கலைந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். மாற்றுச் சினிமாவின் மீதும் சமூகக் கடப்பாடுடைய உலக சினிமாவின் மீதும் தீவிரமான ஈடுபாடுகள் கொண்டவர் அவர். அவரது கருத்துக்கள் இடதுசாரிச் சாய்வு கொண்டனவாகவே இருந்தன. பொதுவாகவே அதிகாரத்தின் தன்மை எத்தகையது ஆயினும் கலைஞர்கள்தான் அதிகார வேட்டையின் முதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.

மெலிந்த உடலும் மென்மையான மனமும் மெல்லப் பேசும் இயல்பும் கொண்டவர் அவர். களப்பணியியையும் திரைச் செயல்பாட்டையும் இணைக்க முயன்றவர் அவர். ஈழத் திரைத் துறையில் புகலிடத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் – மனசாட்சியுள்ள தமது சிங்கள இடதுசாரித் திரைத்துறை நண்பர்களையும் சேர்த்துக் கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிடுவது அவரது விடுதலைக்கான அழுத்தத்தை தருவதாக அமையும் என நம்புகிறேன். அவர் மீதான விசாரணை என எதுவேனும் இருப்பின் அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இச்செயல்பாடு அமைய முடியும்.

ஜயக்குமரன்: ஆயுதம் ஏந்துவது தமிழ் இளைஞர்களின் மிகப்பெரும் கனவாக இருந்த காலத்தில்கூட, ஆயுதம் மக்களுடைய உண்மையான விடுதலைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் தேவதாசன். ஆயுதம் ஏந்தாத அரசியல் எதிப்பாளர்களது செயற்பாட்டுவெளி எந்த அளவிற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் குறுக்கப்பட்டு விட்டது என்பதை தேவதாசனது கைது வெளிச்சமாக்கியுள்ளது.

பிள்ளை: கைது செய்ப்பட்ட தேவதாஸன் தன்க்குரிய மனித உரிமைகளுடன் இந்த இலங்கை அரசு இவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை எதிர்கெள்ள சர்வதேச அமைப்புகள் உதவி செய்ய வேண்டிய அவசிய தேவையுள்ளது. இவற்றிக்காக நாம் மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் – இதற்கான பணிகளை செய்ய தேசம் நெற் முன்வந்து செய்ய வேண்டும்.

சத்துருக்கன்: கனகசபை தேவதாஸன் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது 1999 மற்றும் 2002 ஆண்டுகளில் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.

எட்வேட்: தேவதாசன் அவர்கள் சட்டக்கலூரித்தெரிவின் போது தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி அவர்களை போராடச்செய்தார். அவர்களூக்காக தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் கதைத்துப் பார்த்தார். அவர் ஜனநாயகப் போராட்டத்தில் கடைசிவரைக்கும் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஜேசுதாஸ்: தேவதாசனை பல்வேறு கூட்டங்களிலும் தனித்தும் சந்தித்திருக்கிறேன். புலிகளுடைய இனவாப் போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவிப்பவர். இடதுசாரிப் பார்வையுடையவர். அரசின் அராஜகப் போக்குகளையும் கடுமையாக விமர்சிப்வர்.

ராபின் மெய்யன்: புலம்பெயர்ந்த ஜனநாயக ஆர்வலர்கள் ஒரு உண்மையான ஜனநாயகப் போராளியின் கைதைக் கண்டிக்க ஏன் தயங்குகிறார்கள்? தமது எஜமானர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு விட்டார்களா? அல்லது பிள்ளையானால் மட்டும்தான் ஜனநாயகம் மலரவேண்டும் என்று காத்திருக்கிறார்களா?

குருவி: முன்னாள் விடுதலை இயக்கமொன்றீன் தலைவரான கரவெட்டியை சேர்ந்த தேவதாசன் பின்னர் அவ் இயக்கம் செயலிழந்து தமிழ்நாட்டில் அவியக்கத்தின் போராளீகள் கைவிடப்பட்டு வேறூ இயக்கங்களீல் சேர்ந்துகொண்டனர்.அதிலும் குறீப்பாக தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைஎன்.எல்.எவ்.டி ஆகிய அமைப்புகளூடன்நட்பு ரீதியான தொடர்பு வைத்திருந்த தேவதாசன் தமிழ்நாட்டிலிருந்த காலத்தில் திரைப்பட துறாக்குள் பிரவேசித்தார்.அதிலும் தோல்விகண்டு அனாதரவான தேவதாசனை புலிகள் இயக்கத்தினரே காப்பாறீ தமது படகில் இலங்கைக்கு அனுப்பியும் வைத்தனர்.பிற்காலங்களீல் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்பட துரையில் இலங்கையிலும் ஈடுபடத்தொடங்கினார்.இலங்கை தமிழ் திரை வரலாற்றூ ஆவண வெளீயீட்டில் கூடுதல் ஆர்வம் காட்டி செயற்பட்டு வந்தார்.

ரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்!

 நாவலன்: 80 களில் தேவதாசன் வடபகுதியில் இடதுசாரி தேசிய விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.வடமராட்சிப் பகுதியில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்த இவ்வியக்கம் இந்திய நக்சல்பாரி அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தது புலிகளுக்கெதிரான கருத்தமைவைக் கொண்ட அமைப்புக்களுடன் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திய இவரின் கைது சந்தேகத்திற்குரிய உள்நேக்கம் கொண்டதாகவே இருக்கும்.

ஐ.தே.க. சம்மேளனத்தில் அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்

இன்று வெலிசறையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விசேட சம்மேளனத்தின் போது அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.