புளொட் அமைப்பினர் ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இன்று 16ம்திகதி வியாழக்கிழமை வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதி தொடங்கி புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த வகையில் வீரமக்கள் தினம் இடம்பெறும் தினங்களில் அஞ்சலி நிகழ்வுகள் அஞ்சலிக் கூட்டங்களைத் தவிர புளொட் அமைப்பினரால் சிரமதானம், இரத்ததானம், அன்னதானம், தண்ணீர் பந்தல், நலன்புரி நடவடிக்கை என்பனவும் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 20வருட காலமாக மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுவிஸ்லாந்தில் வீரமக்கள் தினத்தினை அனுஸ்டிப்பது மாத்திரமன்றி சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியருக்கான போட்டிப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி மாணவ மாணவியரை கௌரவிக்கும், ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றது. சுவிஸ்வாழ் புலம்பெயர் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
புளொட் அமைப்பினரால் ஜூலை 13முதல் ஜூலை 16வரை அனுஸ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் காரியாலயங்களிலும், கிளைக் காரியாலயங்களிலும் வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த 13ம் திகதிமுதல் இன்று 16ம் திகதிவரை நடைபெற்றுள்ளது. இந்த வகையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயத்திலும் கடந்த 13ம் திகதிமுதல் 16ம் திகதியான இன்றுவரையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது.
வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான இன்றும் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு விசேட பூசை வழிபாடு இன்றுகாலை 8.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு புளொட் தலைமைக் காரியாலயத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பின் பல பாகங்களிலும் வீரமக்கள் தின சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது.