1.
தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி Revolutionary Armed Forces of Colombia (FARC), என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review தெரிவிக்கின்றது.
குறிப்பாக ரிஆர்ஓ மற்றும் எல்ரிரிஈ இன் முன்னிலை அமைப்புகளினூடாக நிதி திரட்டல்கள் இடம்பெற்றுள்ளது. இக்குற்றச்சாட்டை எல்ரிரிஈ மறுத்தே வந்தள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு மனமுவந்து நிதியை வழங்குவதாகத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு அழிவையும் நிதிதிரட்டுவதற்கான உபாயமாகவே எல்ரிரிஈ பயன்படுத்தி வந்தது. சுனாமி – சுனாமி நிதி, வெள்ளம் – கண்ணீர் வெள்ளம், வன்னி அவலம் – வணங்கா மண் என்று நிதி திரட்டலில் எல்ரிரிஈ க்கு நிகராக யாரும் இருக்கவில்லை. தங்களுடைய ஒட்டு மொத்த தலைமையே அழிந்த போதும் அதை வைத்தும் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னி முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுக்க நிதி சேர்க்கின்றனராம்.
மாவீரர் நிகழ்வில் கார்த்திகைப் பூ விற்றல் முதல் ஊர்வலங்களில் புலிக்கொடி, தமிழீழ பச், ரீசேட் என ஒரு வர்த்தக நிறுவனமாகவே அவர்கள் செயற்பட்டனர். இவ்விடயங்களில் எல்ரிரிஈ இன் வர்த்தக தொழில் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு வந்திருந்த இந்தியப் பொருளியலாளரும் இராஜதந்திரியுமான கிருஸ்ணனுடன் ஹரோ நகரசபை அறையொன்றில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதில் எல்ரிரிஈ இன் பொருளாதாரம் பற்றிக் குறிப்பட்ட கிருஸ்ணன், வரியை எப்படி அறவிடுவது என்று எல்ரிரிஈ இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகத் தெரிவித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு ‘இந்தியாவில் வாழ்பவர்களையே வரி செலுத்த வைக்க முடியவில்லை. ஆனால் ஈழத் தமிழன் ஒருவன் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவனுடைய வருமானத்தையும் அவன் செலுத்த வேண்டிய வரியையும் கணித்து வைத்து வரியை அறவிடும் அளவுக்கு நிர்வாகத் திறனுடைய அமைப்பு எல்ரிரிஈ’ என்று கிருஸ்ணன் விபரித்து இருந்தார்.
எல்ரிரிஈ வரி அறவிடுவதிலும் வியாபாரத்தைப் பெருக்கி வருமானத்தை பெருக்குவதிலும் காட்டிய ஆர்வத்தை அரசியலில் காட்டவில்லை. அரசியல் வங்குரோத்து ஒட்டுமொத்த அமைப்பையும் ஒரே நாளில் அழித்தொழிக்க வழிகோலியது. அன்று அழிந்தொழிந்தது புலிகளின் தலைமை மட்டுமல்ல புலிகளின் ஆவணங்களும் தான்.
200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.
எல்ரிரிஈ இன் சர்வதேச நியமனங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். வன்னியில் இருந்து ஐரோப்பாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள் – கஸ்ரோவுக்கு நெருக்கமானவர்கள் – பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நிதி மற்றும் அனைத்து விடயங்களையும் பெறுப்பேற்றனர். ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவின் பொறுப்பிற்கு வந்தது.
இப்புதிய நபர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டிய ஒருவர் அன்று கூறுகையில், ‘வன்னியில் துவக்கைப் போட்டுவிட்டு அப்படியே இங்கே வந்திருக்கிறார்கள்’ என்று அவர்களின் இயல்பை விபரித்தார்.
புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட கஸ்ரோ செப்ரம்பர் 11க்குப் பின்னான சூழலைப் புரிந்துகொள்ளாமல் புதியவர்களை வைத்து மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுகள் தோற்றப் போய் மிகப்பெரும் நிதி இழப்புகளையும் ஏற்படுத்தியது.
2006ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அரசின் புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையும் நெருக்குவாரத்தை வழங்கியது. 2009 முற்பகுதியில் கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ச்சியடைய மறைந்த எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக மீண்டும் கே பி யை நியமித்தார். ஆயினும் நிதி விடயங்கள் அவற்றின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் கஸ்ரோவிற்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
இந்நிலையில் மே 18ல் எல்ரிரிஈ இன் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு பில்லியன் டொலர் வரையான அசையும் அசையாச் சொத்துக்களும் அதன் ஆண்டு வருமானமான 200 – 300 மில்லியன் டொலர்களும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ளது.
2.
தற்போது எல்ரிரிஈ இன் சர்வதேச வலைப்பின்னல் பாரிய அதிகார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இந்த அதிகாரப் போட்டிக்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல. புலிகளின் தலைவர் உயிருடன் நலமாக இருக்கின்றார் என்று சொல்லும் எல்ரிரிஈ பொறுப்பாளர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது மிக நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் அதன் 200 – 300 மில்லியன் டொலர் வருமானத்தையும் தற்போது வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புதிய தலைமையிடம் – கே பி இடம் எல்ரிரிஈ இன் சொத்துக்களையும் வருமானத்தையும் கையளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதற்குத் தயாரில்லை. அதனாலேயே இவர்கள் தமிழக அரசியல் வாதிகளைத் தூண்டிவிட்டு கே பி க்கு எதிராக அறிக்கைவிடத் தயங்கவில்லை. அதனால் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள கடைசிவரை முரண்டு பிடிக்கின்றார்கள்.
மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவர் உயிருடன் இருக்கும்போதே சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே பி மட்டுமே பிரபாகரன் உயிரிழந்ததை அறிவித்து உள்ளார். முன்னர் கே பி யின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்ட எல்ரிரிஈ சர்வதேச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் பிரபாகரன் உயிரிழந்ததை ஏற்றுகொண்டு அஞ்சலி செய்துள்ளார். அதே போன்று வழுதி என்கின்ற புலிகளின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளதுடன் கே பி இன் கரங்களைப் பலப்படுத்தும்படி கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் அல்லர்.
ஆனால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன் – நோர்வே, ரிஆர்ஓ தலைவர் ரெஜி – லண்டன், ஒவ்வவொரு நாடுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் எவருமே இதுவரை உயிரிழந்த தலைவருக்கோ முக்கிய போராளிகளுக்கோ அஞ்சலி செலுத்துவதற்கே முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் கே பி க்கு எதிரான அணி ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலும் கஸ்ரோவினால் நியமிக்கப்பட்ட இவர்கள் வல்வெட்டித்துறையை – வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.
கே பி யும் கே பியை எதிர்க்கின்ற அணியினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களானாலும் கே பி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரல்ல. அவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர். அதனால் வல்வெட்டித்துறை குலக் குழுமத்தினால் அவர் நிராகரிக்கபட்டு உள்ளார். தற்போது கே பி உடன் சமரசத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் அசையும் அசையாச் சொத்துக்களையும் அதன் வருமானத்தையும் வல்வெட்டித்துறைக் குழுமமே நிர்வகிக்கின்றது. இதில் பல நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அவ்வளவு இலகுவில் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளர்கள்
முகிலன் – நோர்வே
அப்துல்லா – சுவிஸ்
பிரியன் – டென்மார்க்
வாகீசன் – ஜேர்மன் (மற்றும் ஐவர் அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பாக உள்ளனர்.)
மேத்தா – பிரான்ஸ்
தனம் – பிரித்தானியா
தமிழ் – கனடா
நெடியவன் – சர்வதேசப் பொறுப்பாளர்.
ரெஜி – சர்வதேச நிதிப் பொறுப்பாளர். (ரிஆர்ஓ ஊடாகவே புலிகள் அமைப்பின் நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றது.)
இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது முற்றாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது எழுந்தமானமான ஒரு நிகழ்வு அல்ல. இது புலிகளின் குலக் குழு மனோநிலையின் வெளிப்பாடே. புலிகள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடையாமையினால் இந்தக் குலக் குழு மனோநிலையில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. வல்வெட்டித்துறை – வடமராட்சியில் இருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் புலிகள் இயக்கம் குலக் குழுவுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொண்டது. புலிகள் இன்று தங்கள் குலத் தலைவனைப் பறிகொடுத்துவிட்டு அவரது பெயரை மட்டும் வைத்து அசையும் அசையாச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய முற்படுகின்றனர். அவர்களது அகராதியில் தமிழ் மக்கள் அசையும் சொத்துக்கள் என்ற வரையறைக்குள் வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
3.
கே பி – வல்வெட்டித்துறை (வடமராட்சி) அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலை பலவீனப்டுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வே பிரபாகரன் உயிருடன் இருக்கம் போதே சில மாதங்களுக்கு முன்னதாகவே கே பி சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் ஏற்கனவே சர்வதேசரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக கே பி இருப்பது அவருக்கு சாதகமாக உள்ள விடயங்கள். ஆனால் மறைந்த தலைவர் வே பிரபாகரனுடன் இறுதி வரையும் இலங்கையில் உள்ள போராளிகளுடன் இன்னமும் உறவுகளைக் கொண்டிருந்த போதும் புலம்பெயர்ந்த நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் கே பி க்கு ஒரு ஆதரவுத்தளம் இல்லை. புலி ஆதரவு ஊடகங்களிலும் புலி ஆதரவு அமைப்புகளிலும் கூட அவருக்கு கட்டுப்பாடு இல்லை. காரணம் அவையனைத்தும் அந்தந்த நாடுகளின் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. அதனாலேயே தனக்கென ஒரு இணையத் தளத்தை அவர் உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.
புலிகளுடைய உத்தியோகபூர்வ இணையத் தளமாக செயற்பட்ட தமிழ்நெற் கூட கே பி க்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் பொறுப்பாளரான ஜெயா என்ற ஜெயச்சந்திரன் சர்வதேச இணைப்பாளர் பொறுப்பு தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்.
கேபிக்கு எதிரான அணி பலமாக இருந்த போதும் தலைமைத்துவ ஆளுமையுடன் ஒரு குலத் தலைவனை முன்னிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அவ்வாறு ஒருவரை முன்னிறுத்தம் போதும் அவர்கள் சாதாரண புலி ஆதரவாளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு பொய் மூட்டைகளை கொட்டி உள்ளதால் அதற்கான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும். மேலும் இவர்களில் பலர் கடுமையான புலிப் போக்கையும் கொண்டுள்ளனர். இவர்களால் தற்போதுள்ள அரசியல் சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக அமையும்.
மாறாக கே பி புலிகளின் சில கடும்போக்குகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். யூன் 14ல் அவர் தேசம்நெற்றுடனான உரையாடலிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். அந்த உரையாடலில் ஏகபிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளுடனும் அவர் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
ஆயினும் புலிகள் மீதான விமர்சனம் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை அவர் முன்வைத்தால் பெரும்பான்மையான புலிகளிடம் இருந்து அவர் அன்னியப்படும் நிலையேற்படும். அதனால் அவ்விடயங்களில் அவர் அடக்கியே வாசிப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனாலும் விவாதங்கள் உரையாடல்கள் எதுவும் இன்றி நாடுகடந்த தமிழீழ அரசுக்கான செயற்குழு நியமிக்கப்பட்டமை மற்றும் அவை தொடர்பான விடயங்கள் அவரால் உடனடியான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் உள்ளதனை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விவாதம் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசு அரசியல் ரீதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன் வைக்காமல் தொடர்ந்தும் வன்னி மக்களை முட்கம்பிகளுக்குள் தடுத்த வைத்திருப்பது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இந்நிலையில் வல்வெட்டித்துறை (வடமராட்சி) குலக் குழு மனோ நிலைக்குள் இருந்து கொண்டு பரந்தபட்ட தமிழ் மக்களை பரிபாலனம் செய்ய முற்படுவது வேடிக்கையானது.
கடந்த காலம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கும் கனவை தமிழ் மக்களைப் பரிபாலனம் செய்யும் கனவை புலம்பெயர்ந்து வாழும் புலிகளும் புலிகளது ஆதரவு அமைப்புகளும் கைவிட வேண்டும். மக்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டிர்கள் என்பதற்காக எப்போதும் ஏமாறுவார்கள் என முடிவு கட்டிவிடக் கூடாது.