யாழ்ப் பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கண்காணிப்பதற்குப் பெப்ரல் இயக்கம் முடிவு செய்துள்ளது.
இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் நூறு உள்ளூர் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக பெப்ரல் இயக்கத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இதேநேரம் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் எழுநூறு பேரை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என தேர்தல் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கின்றது.
இத்தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அந்தடிப்படையில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் 75 பேரையும், வவுனியா நகர சபைக்கான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 25 பேரையும் ஊவா மாகாண சபைத் தேர்தலைக் காண்காணிக்கும் பணியில் 700 பேரும் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர்.
அதேநேரம் தேர்தல் தினத்தில் யாழ்.மாநகர சபைக்கான தேர்தலை கண்காணிக்கும் பணியில் மூன்று நடமாடும் வாகனங்களும், வவுனியா நகர சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் இரண்டு நடமாடும் வாகனங்களும், ஊவா மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் 20 நடமாடும் வாகனங்களையும் ஈடுபடுத்தவுள்ளோம்.