July

July

யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு கல்வியமைச்சு ஒத்துழைப்பு!

train_.jpgவடக்கின் வசந்தம் யாழ்.தேவி ரயில் சேவை விஸ்தரிப்பு திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

நேசத்தின் தரிப்பிடம என்ற பேரில் கல்வியமைச்சு இதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஆனையிறவு ரயில் நிலையத்தைப் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவிகளைப் பெற கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் இம்மாதம் 7ம்திகதி முதல் 17ம் திகதிவரையான இருவார காலத்துள் பாடசாலைகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தம்

profrajiwawijesinha.jpgஇலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30 ஆந் திகதியுடன் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சமாதானச் செயலக நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொந்த மனங்களை குணப்படுத்த வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது.- ஜனாதிபதி

slprasident.jpgஒருவருக் கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து,  சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சுழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையினால் பயங்கரவாதத்தினால் சகல உரிமைகளையும் இழந்திருந்த அப்பாவி மக்களை மீட்க முடிந்துள்ளது. அம் மக்களது நொந்த மனங்களை குணப்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. அபிவிருத்தியில்லாமல் நல்லிணக்கமில்லை என்பதை நம்புபவன் நான். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளைக் களைந்து நல்லுறவு,  சமத்துவமான எதிர்காலத்தை உரிமையாக்கிக் கொள்வதற்காக சகலரும் செயற் பட வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்தினால் கடந்த காலங்களில் தமது அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகத்தை இழந்த மக்கள் நம் நாட்டில் இருந்துள்ளனர் என்பதை நான்அறிவேன். மனிதாபிமான நடவடிக்கையினால் அவர்களை நாம் மீட்டுள்ளோம். உலகிலேயே பெருமளவு பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். அம் மக்களின் நொந்த மனங்களை தேற்றுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு கட்சியின் பொறுப்பு மட்டுமல்ல. அதனால் நாம் தற்போது எம் மத்தியில் நிலவும் வேற்றுமைகளை ஆராய்வதை விடுத்து நம் மத்தியிலுள்ள சமத்துவம் எதுவென ஆராய வேண்டும். அதற்கிணங்க ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

வடக்கில் நலன்புரி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நலன் பற்றியும் அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நான் முன்னரே தெரிவித்தது போன்று வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதும் அவர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். அதற்கு விரைவான அபிவிருத்தி அவசியம். நாம் தற்போது ஆரம்பித்த இந்த நடவடிக்கையை மிக ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமாகும். இப்போது மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 651 குடும்பங்களைச் சேர்ந்த 2409 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். நாம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மக்களை மீளக் குடியமர்த்த முன்னர் நாம் மிதிவெடிகளற்ற பிரதேசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

எவரையும் முகாம்களில் தங்கவைக்கும் அவசியம் எமக்கில்லை. அவர்களை மிக விரைவாக அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதே எமது நோக்கம். மிதிவெடி அகற்றப்பட்டதும் எமது முதல் நடவடிக்கையும் அதுவே. அதேபோன்று அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். அதற்காக 180 நாள் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதன் குறைநிறைகளை ஆராய்ந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. இனவாத அரசியல் கட்சிகள் எம்மத்தியில் இருகின்றன என நான் எண்ணவில்லை. இனவாதம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டது. இந்நாட்டிலிருந்து இன வாதத்தை ஒழித்து நாட்டை நேசிக்கும் மக்களை கட்டியெழுப்ப வேண்டியதும் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய நாம் விரைவில் கூட வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்

_vanankaman-captionali.jpgஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது. வணங்காமண் கொண்டு வந்த பொருட்களை இந்திய கப்பலில் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இக்கப்பலிலிருந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொலரா எனும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. பின்னர் 8ஆம் திகதி அக்கப்பல் கொழும்பு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

“தமிழினத் தாகம் தணியாது”: பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம். அறிக்கையின் முழுவடிவம்:-

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரச கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு, மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 இலட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள், கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள். இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம். உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் இருந்த ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்ததால். அந்த கட்டமைப்புக்கும் அதன் செயற்பாட்டுக்கும் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தினார்கள். தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டார்கள் இன்று அந்த கனவை நனவாக்கினார்கள்.

அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் இன்று எம்மிடம் மிக முக்கிய அவசர கடமைகள் காத்திருக்கின்றன. எமது தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், எமது போராட்டத்தின் அடுத்த வடிவமாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் 1976 ம் ஆண்டு அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 ல் இலங்கைத்தீவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பெருமித்த ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போரில் ஒப்பற்ற அர்ப்பணிப்புகளுடாக வலுப் பெற்று, சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சித்திரை 18 ம் திகதி 2009 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களால் வாக்களிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடும்.

தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்.

பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது இனத்தின் தனித்துவங்களையும், இனத்துவ அடையாளங்களையும் பேணிப்பாதுகாக்கவும், பிரான்ஸ் மக்களுடன் நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்தவும் பாடுபடும்.

இது தமிழ் மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டுச்சபையாக, எமது உரிமைகளை இந்நாட்டினருக்கும், உலகிற்கும் எடுத்துச் செல்லும் அமைப்பாக, தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அமையப்போகின்றது.

பிரான்சில் பரந்து வாழும் தமிழ் மக்களுடனும் அதற்காக உழைக்கும் அமைப்புகளுடனும், மனிதநேய தொண்டர் அமைப்புகளுடனும், ஸ்தாபனங்களுடன் தொடர்ந்து செயலாற்றவுள்ளோம்.

இந்த தமிழீழ மக்கள் பேரவையில் இங்கு வாழும் புத்திஜீவிகளும், மூத்த கல்விமான்களும், பிரெஞ்சு, தமிழ் சட்டவாளர்கள்,அரசியல்வாதிகள், தமிழினப் பற்றாளர்கள், தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இதுவரை தொண்டாற்றி வருபவர்கள் எல்லோரினதும் ஆலோசனைகளோடு, பங்களிப்போடும் உருவாக்கம் பெறவுள்ளது.

இந்த பேரவையினால் முன்னெடுக்கப்படும், செயற்பாட்டிற்கும், தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியாய் தன்மான உணர்வுள்ள தமிழராய், ஒருமித்த குரலினால் ஓங்கி வளர்த்திட உங்கள் எல்லோரினதும் அன்பையும், ஆசியையும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும், இன்னும் பிற வள உதவிகளையும் தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

 sarathfonseka.jpgயுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று முதல்முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார் யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மென்டகு சமரசிங்க இராணுவத்தளபதியை வரவேற்றார். பின்னர் அங்கு இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை பொன்சேகா ஏற்றுக்கொண்டார்.

 குடாநாட்டில் பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்ந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் மனிதாபிமான செயற்பாடுகள் கண்ணிவெடி அகற்றல் பயிற்சிகள் ஆகியவற்றில் படையினரின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கமளித்தார எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகம் திருகோணமலையில்

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்  தென்னக்கோன் தொரிவித்துள்ளார்.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் தினைக்களமே மேற்கொண்டு வந்;தது. எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மேலும்  தொரிவித்துள்ளார்

இலங்கை அரசு, வணங்கா மண் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றியமை சர்வதேச விதிகளுக்கு மாறானது: கப்டன் முஸ்தபா

_vanankaman-captionali.jpgஇலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, “வணங்கா மண்’ கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

தற்போது கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கொல்கத்தா செல்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, “வணங்கா மண்’ கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன.

இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது

மீள்குடியேற்ற இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்

வடக்கே வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர்.

அரச அதிகாரிகள் சென்று தமது கடமைகளை செய்யக்கூடிய சாதகமான நிலை உள்ளதா என்பதை அறியவே இவர்களுடைய விஜயம் அமைந்திருந்தது. புதைந்துள்ள வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வெடிபொருட்கள் இல்லை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டவேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்ற இந்திய கண்ணி வெடி அகற்றும் நிபுணர் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.இதற்கிடையே விடுவிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தில் பல கிராமங்களில் அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தேசிய சாகித்திய விழா பொலன்நறுவையில்

mahinda_yapa_abeywardene.jpgஇவ் வருடத்துக்கான தேசிய சாகித்திய விழாவை பொலன்நறுவை, ரோயல் கல்லூரியில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான பிரேரணையை கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்திருந்தார்.

இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த விழாவுடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.