தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:- புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது. புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் – இரா.சம்பந்தன்
“விடுதலைப்புலிகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால்,விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்’. “லங்காதீப’ பத்திரிகைக்கு என்னைப் பேட்டிகண்ட செய்தியாளர் “விடுதலைப் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். இனி உங்கள் நிலை என்ன’ என்று கேட்டார். அதற்கு இவ்வாறே பதிலளித்தேன் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; “நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் காணி உரிமைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிரபாகரன் பிறப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இலங்கைத் தமிழரின் அரசியல் மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுவந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் இந்த உரிமைப் போராட்டம் இனியும் தொடரும். இதில் மாற்றம் இல்லை’ என்றார்.
பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐ. நா. அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜெயனந்தமூர்த்தி
வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காணப்படும் சர்வதேச அதிகாரம் மற்றும் பொறுப்புணர்ச்சி உரிய முறையில் வெளியிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போதிலும் அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத ஓர் போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனச்சுத்திரிகப்பு அரசாங்கமொன்றின் கைப்பொம்மையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், முக்கிய சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது தார்மீகப் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இனச்சுத்திரிகரிப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.