திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு. ரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
ரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.