“தமிழ் மக்கள் வாழ்வில் அமைதியை உருவாக்க அரசு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்’

வன்னியில் அவதியுறும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியான வாழ்க்கையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சீ.பி.வை.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழ் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழும் சூழலை பாகுபாடின்றி மகிந்த ராஜபக்ஷ, ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் இன்று இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும். விஷேடமாக கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தொழிலுக்காக தங்கியுள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருவோர் தமது தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

சுதந்திரமாக அச்சமின்றி நடமாடும் உரிமைகளையும் வழங்கி அங்கலாய்ப்பின்றி அமைதியாக வாழும் உரிமைகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும். விஷேடமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அரசின் தேவையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கையோடு வாழும் நிலைமையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *