February

February

புலிகளின் விமானத்தின் பகுதிகள் படையினரால் வட்டக்கச்சியில் மீட்பு!

ltte_aircraft.pngமுல்லைத்தீவு வட்டக்கச்சி பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளினது விமானங்களின்; சில பகுதிகளைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விமானத்துக்குரிய சில உதிரிப்பாகங்கள் தப்பியோடிய புலிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தொடர்பான கைநூலொன்றும் அவற்றை இயக்கும் முறைகள் அடங்கிய வரைபடங்களும் இப்பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இங்கு விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் அவற்றை இயக்கும் பயிற்சியிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரதேசத்திலிருந்து மோட்டார் இயந்திரங்களின் பாகங்கள் அலுமினியத் தகடுகள்,  ஆணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

மதுரையிலும் போலீஸ்-வக்கீல்கள் மோதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும்  இடையே நடந்த வரலாறு காணாத மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார்களை தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர்.பதிலுக்கு போலீசாரும் திருப்பி தடியடி கொடுத்தனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மதுரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

ஏ 35 வீதி படையினர் வசம்!

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள ஏ 35 வீதியை படையினர் இன்று முழுமையாக கைப்பற்றியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

இந்த வீதியை மீட்பதற்காக இடம்பெற்ற மோதலில் புலி உறுப்பினர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் எனவும்   கைப்பற்றப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் மெற்கொள்ளப்பட்டு வருவதோடு படையினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

சுவாமியை கைது செய்யக் கோரி வக்கீல்கள் ரகளை- ஹைகோர்ட் காவல் நிலையம் எரிப்பு- நீதிபதிக்கும் அடி

_swamy_.jpgஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பெரும் கலவரமாக மாறியது. போலீஸாரும், வக்கீல்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்கள் சிலர் அவரை தாக்கி அழுகிய முட்டைகள், தக்காளிகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தனது தலைமையி்ல் ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்துவார்கள் என தற்காலிக தலைமை நீதிபதி முகாபாத்யாயா இன்று அறிவித்தார்.

இந் நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெருமளவில் திரண்டனர். சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. அத்தோடு நிற்காமல், போலீஸாரை கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினர்.

மேலும், காவல் நிலையத்திற்கு சிலர் தீ வைத்ததால் பதட்டம் ஏற்பட்டது. வெளியில் இருந்த ஒரு போலீஸ் பைக்கும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் எரிந்து சாம்பலானது. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சரமாரியாக தடிகளால் அடித்து விரட்டினர்.

இதனால் மேலும் கோபமடைந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி சேதப்படுத்தினர். பல மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த பயங்கர ரகளையில் ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் சில டிவி கேமராமேன்களும் காயமடைந்தனர்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அமளி துமளி நீடித்தது.

‘சன்’ நிலைய மறு ஒளிபரப்பு நிலையமே சீல்வைப்பு: ஊடக சட்டத்தை மீறிய ஊடுருவல்; – ஹெகலிய

kahaliya.jpgசென்னை யிலிருக்கும் “சன்’ தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமே வவுனியா வைரவபுளியங் குளத்தில் படையினரால் “சீல்’ வைக்கப்பட்டதாக தெரிவித்த தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமலேயே இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்கி வந்ததாகவும், இது ஊடகசட்டவிதிகளை மீறிய ஊடுருவல் எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய தரப்பில் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார். இந்த மறு ஒளிபரப்பு நிலையம் அங்குள்ள இயக்க அலுவலகமொன்றிலேயே இயங்கி வந்ததாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல அது சென்னையிலுள்ள சன் தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமாக இலங்கையில் செயற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடம்பெறும் இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரங்கள், புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை இந்த மறுஒளிபரப்பு நிலையம் தொடர்ச்சியாக இங்கு ஒளிபரப்பி வந்துள்ளது. அத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தையோ, அரச அங்கீகாரத்தையோ சன் தொலைக்காட்சி நிலையம் பெற்றிருக்கவில்லை. எனவே இது சட்டவிரோதமான ஊடக நிறுவனமாகவே இங்கு இயங்கி வந்துள்ளது. இதன் காரணமாகவே படையினர் இந்த மறு ஒளிபரப்பு நிலையத்தை மூடி சீல் வைத்ததோடு அங்கு கடமைபுரிந்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்

ஆட்களை கடத்தி கப்பம் கோரிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

police-arrest.jpgவவுனியாவில் ஆட்கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் தொடர்பாக பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்கள் கடத்தப்பட்டு அவர்களை விடுதலை செய்ய பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரிவந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

“புளொட்’ அமைப்பினரே இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆட்களைக் கடத்தி அவர்களது குடும்பத்தவர்களை தொலைபேசி மூலம் மிரட்டி அவர்களை விடுதலை செய்வதற்கு இந்தப் பெண்ணும் அவரது குழுவினரும் பெருந்தொகைப் பணத்தை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக புளொட் அமைப்புக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் இந்தப் பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சு.சுவாமி மீது தாக்குதலை பாராட்டி போஸ்டர்கள்

_swamy_.jpgசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியை தாக்கியதைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை சில வக்கீல்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் முகத்திலும், முதுகிலும் வீசி அசிங்கப்படுத்தினர். நீதிபதிகள் முன்பு நடந்த நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதை வரவேற்றும், பாராட்டும் இன்று சென்னை நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சுப்ரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல சிறப்பு செய்யுங்கள் என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன

தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை நிராகரித்தார் நாராயணமூர்த்தி

mahi-narayanasuwami.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்சே அறிவித்தார்.

இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது. குறிப்பாக கர்நாடக வன்னியர் சங்கம் இந்தக் கோரிக்கையை சற்று பலமாக விடுத்தது. மேலும், சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தமிழக கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆலோசகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்தக் காரணங்களுக்காக இப்பதவியை நான் ஏற்க முடியாது. இதை முறைப்படி இலங்கை அரசுக்குத் தெரிவிப்பேன் என்றார்.

எஸ்.பி. திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் – ரவி கருணாநாயக்க

sbdesanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸாநாயக்க எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன மற்றும் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய வாய்மொழிமூலக் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இனநெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது’ – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஇலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தற்போது இடம்பெற்று வரும் யுத்தம் இன நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடே இறுதியான சமாதானத்தை கொண்டு வரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயரின் ராஜீவ்காந்தி; “மாற்றத்திற்கான காலம்’ என்ற நூல் தொடர்பான குழு ஆய்வு நிகழ்வு புதுடில்லியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய திருமதி குமாரதுங்க, நெடிவ்கொம்மிற்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அணுகு முறை பற்றியும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழியென்ன என்பது குறித்து அவர் நினைப்பது என்ன என்பது தொடர்பாகவும் கருத்துக் கேட்கப்பட்டபோது, நான் கூறுவதை கேட்க ஜனாதிபதி விரும்புவாரென நான் நினைக்கவில்லை என்று சந்திரிகா கூறியுள்ளார்.

ஆகக் குறைந்தளவு பாதிப்புடன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அவரின் அபிப்பிராயம் பற்றி கேட்கப்பட்டபோது தமிழ் மக்களுடன் பேசுவதே ஒரே வழி முறையென்று கூறியுள்ளார். “இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாடு மட்டுமே இறுதித் தீர்வு’ என்றார் சந்திரிகா.

ராஜீவ் காந்தியின் கொள்கைக்கு அப்பால் 21 ஆவது நூற்றாண்டு சென்று விட்டதா என்பது தொடர்பான குழு நிலை ஆய்வில் கருத்து தெரிவித்த சந்திரிகா ராஜீவ் காந்தியினதும் அவரின் மதச் சார்பற்ற கொள்கைகளும் 21 ஆம் நூற்றாண்டால் தாண்டிச் சென்றுவிடவில்லை என்று கூறியுள்ளார்.  சூழ்நிலைகளால் அவர் நிலைவரத்தில் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார். அது கறுப்பு ஜூலையென கூறப்படும் 1983 ஜூலை கலவர காலமாகும். அதனால், 6 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தமிழத்திற்கு சென்றனர். ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்த கால கட்டம் அதுவாகும் என்று சந்திரிகா கூறியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் ராஜீவ் காந்தியுடன் தான் அதிகளவு உரையாடியதில்லை என்று குறிப்பிட்ட சந்திரிகா, ஆயினும் இந்திய விஜயத்தின் போது பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது தந்தையாரான மறைந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவை பிள்ளைகளையும் அழைத்து வருமாறு வலியுறுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.