ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.