January

January

ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உரிமைக்கு அங்கீகாரம் தமிழரின் உரிமையை நிராகரிப்பது எப்படி? – கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்

hakeem_.jpgபலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் எப்படி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை நிராகரிக்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டுமென தமிழ், முஸ்லிம் மக்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலாத்காரத்துக்கு அடிபணிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டிவந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஒரு போதும் பலாத்காரமாக நாட்டுப் பற்றை திணிக்கக் கூடாது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் அவர்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசினால் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையை, உரிமையை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.

அரசியல் தீர்வு இப்போது அவசர தேவை கொழும்பை வலியுறுத்துகிறது பிரிட்டன்

kili-04.jpgகிளிநொச்சி நகரம் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை அவசரமாக முன்வைக்குமாறு பிரிட்டன் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சகல சமூகங்களும் சுபிட்சமடைவதற்கு வலுவானதும் நிலையானதுமான சமாதானத்தை எட்டுவதற்கு இதுமட்டுமே வழிமுறை என்று பிரிட்டிஷ் தூதரகம் செவ்வாய்க் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக பிரதியமைச்சர் மல்லோபிரவுண் பிரபுவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரும் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ச்சி கண்ட பின்னரான நிலைமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சகல சமூகங்களினதும் நியாய பூர்வமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சகல தரப்பினரும் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசரமானதென்பதை தற்போதைய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமான பாதிப்பு குறித்து நாம் கவலையுடன் இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளுக்கு அமைவான கட்டுப்பாடுகளுக்கேற்ப சகல தரப்பும் செயற்படவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு: 94 லொறிகளில் இன்று உணவுப் பொருட்கள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 94 லொறிகள் இன்று வன்னி புறப்படுமென வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 94 லொறிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. உலக உணவுத்தாபனம், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் கோதுமை மா, பருப்பு சமையல் எண்ணெய், சீனி அடங்கிய சுமார் 600 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா, தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து லொறிகள் புறப்படும், அதேநேரத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும் மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பிவைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 20 லொறிகள் வீதம் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரம் பாதுகாப்பு படையினரிடம் வீழ்ந்த பின்னர் புறப்படும் முதலாவது உணவு லொறி தொடரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. வழமையான வீதி வழியாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் உணவு தொடரணி வண்டிகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விடுவிக்கப்படாத கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென வாராவாரம் 80 லொறிகளில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென அரசாங்கம் அனுப்பிவைக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் – மேதானந்த தேரோ

ellawela-thera.jpgநாட்டின் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் ஒரே தருணத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்கச் செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்தார்.  அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-  வன்னியில் சுமார் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 80 பில்லியன் ரூபா இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அவர்கள் புலிகளுக்குரிய பங்கர்கள், முகாம்கள், பதுங்கு குழிகளையே அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்.  பிரபாகரன் தான் ஒருவரே தலைவர் என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தார். பல தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். படையினரை இழந்திருக்கிறோம். இதற்கு காரணம் எமக்குடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாமையை பயன்படுத்திக் கொண்டார்கள்.

புலிகள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலாவது பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இது தொடர்பாக சிந்தித்து செயற்படவும் வேண்டும. படையினர் வடக்கில் கைப்பற்றும் சகல பிரதேசங்களிலும் பெளத்த விகாரைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகுளங்கள் இருக்கின்றன. 1500 குளங்கள் இருக்குமானால் 1500 கிராமங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் 1500 விகாரைகள் இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன.

117 தற்கொலைதாரிகள் கொழும்பினுள் ஊடுருவல்

laksman-yaappa.jpgவடக் கில் தமக்கு ஏற்படும் தோல்விகள் காரணமாக கொழும்பிலும், முக்கிய நகரங்களிலும் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் எனவே இது குறித்து ஊடகங்கள் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படையச் செய்யும் பணியில் அனைத்து ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறைந்த வயதினரை இயக்கத்தில் சேருமாறு புலிகள் அழைப்பு

_army.jpgமுல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களில் குறைந்த வயதுடையவர்களை இயக்கத்தில் சேருமாறு புலிகள் வானொலி மூலம் அழைப்பு விடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மறைமுகமாக தப்பி ஓடிவந்து படையினரிடம் சரணடைந்துள்ள சிவிலியன்கள் இந்த தகவல்களை கூறியதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு புலிகள் தமது பலத்தை இழந்துள்ளமையை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (06) நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

இவ்வாண்டு முதலாம் திகதி முதல் ஆறாம்திகதி வரையான ஆறு நாட்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி 141 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். பரந்தன், கிளிநொச்சி, ஓமந்தை மற்றும் நெடுங்கேணி பகுதிகளிலுள்ள பாதுகாப்பு படையினரிடமே இவர்கள் சரணடைந்துள்ளனர்.

17வயதிலிருந்து 40 வயது வரையான இளைஞர்களை இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெறுமாறு புலிகள் பலாத்காரமாக அழைப்பு விடுப்பதுடன் ஏனையோரும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கூறிவருவதாக கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், நாளாந்தம் பெருந்தொகையான புலிகள் கொல்லப்படுவதுடன் படுகாயமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகமான புலிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 2 மாதத்தினுள் அபிவிருத்திப் பணிகள் – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக் கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா  அபேவர்தன தெரிவித்தார். கிளிநொச்சியை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டது ஒரு இனவாதப் போராட்டமென்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சமமான அபிவிருத்தியைத் துரிதமாக மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விடவும், வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் படையினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதென்றும் கூறினார்.

“ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் புலிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். ஆனால் புலிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் காட்டிக்கொடுத்துள்ளார் – அநுர பிரியதர்ஷன

anura-priyatharsana.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துடன் போலியான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டை முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளாரென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன  யாப்பா தெரிவித்துள்ளார்.

தன்னால் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமே யுத்தத்தில் வெற்றியடைவதற்கான அடித்தளம் இடப்பட்டதாக (05) அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளாரென்றும் தேசிய ரீதியாக வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் பிரபா- ரணில் போலி போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தேசத்துரோகத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பாகுமென்றும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘2002 பெப்ரவரி 21 ஆம் திகதி சைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எமது தாய் மண்ணின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் முழுமையாக காட்டிக் கொடுத்துள்ளது. இந்த காட்டிக் கொடுப்பின் முதலாவது காரியம் மிலேனியம் சிட்டி அனர்த்தமாகும். இராணுவ பிரிவினருக்குரிய மிலேனியம் சிட்டி இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த சூழ்ச்சிகாரர்கள் ஒன்று கூடியிருப்பதாக கூறி புலனாய்வு பிரிவினரின் பெயர் விவரங்களை புலிகளுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கொலை செய்வதற்கு வழிவகுத்தன. அச்சமயத்தில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தவிரவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து 2006ஆம் ஆண்டு மாவிலாறு மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது வரை போர் நிறுத்தம் என்ற போர்வையில் சுமார் 500 இராணுவத்தினரை படுகொலை செய்தனர். இதில் 34 தமிழ் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தயவால் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறாக இருந்தாலும், அதன் மூலம் புலிகள் தமது கொலைச் செயலை தொடர்ந்து முன்னெடுத்து வலுவான இராஜதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கும் தேவையான தேசிய மற்றும் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி புலிகளின் யுத்த பலம், தொலைத் தொடர்பு பலம், நிதி வளம் ஆகியவற்றை பல மடங்கு மேம்படுத்தி எமது இராணுவம் பலவீனமானதென காண்பித்து அவர்களை முகாமுக்குள் முடக்கும் மனோ பாவத்தை நாட்டில் ஏற்படுத்தும் வகையிலும் இவர்கள் செயற்பட்டனர். நிலைமை இவ்வாறிருக்க, நாட்டு மக்களை மேலும் தவறாக வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க கூறும் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். இதனை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்பதும் எனது நம்பிக்கையாகுமெனவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.