January

January

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

Protest_01_16Jan09‘Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ –  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக  இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கும் தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது தெரிந்ததே.

சண்டே லீடர் அசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உட்பட இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்! ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ் சிங்கள் முஸ்லிம் மலையக மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! சாதாரண மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்! என்பவற்றை முன் வைத்து இப்போராட்டம் நடாத்தப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தில் தமிழர்கள் அல்லாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இனங்களுக்கு இடையேயான நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். ‘நாங்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட பதாகைகளை இப்போராட்டத்திற்கும் எடுத்து வந்தோம். அன்றும் சரி இன்றும் சரி மகிந்த அரசு தனது பாசிசப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது’ என்று அவ்வமைப்பின் உறுப்பினர் சபா நாவலன் தெரிவித்தார். ‘ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது என்று தெரிவித்தார் சபா நாவலன்.

எஸ்எல்டிஎப் அமைப்பினரும் இக்கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் அமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை சொலிடாரிற்றி போர் பீஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

‘Stop! War on Journalists’ என்ற பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சுயாதீன ஊடக இயக்கம், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஆகிய அமைப்புகள் இப்பிரசுரத்தை வெளியிட்டு இருந்தன.

ஜனவரி 08  கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில்  காலை 10:30 மணியளவில் சண்டே லீடர் பிரதம ஆசிரியர்லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார். அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க இருந்தார்.

Protest_02_16Jan09சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19 என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

லசந்த விக்கிரமதுங்க தனது படுகொலைக்கு இரு வாரங்களுக்கு உள்ளாகவே மற்றுமொரு ஊடகவியலாளரான சோனாலி சமரசிங்கவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் சிறந்த ஊடகவியலாளருக்கான சர்வதேச விருது ஒன்றினை சோனாலி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசுக்கு எதிரான லசந்தாவின் எழுத்துக்களுக்கு இவரும் உறுதுணையாக இருந்தவர். இவர் இன்றைய மகிந்த அரசின் கடுமையான விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லசந்தவின் மரணம் இலங்கை ஊடகவியலாளர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லசந்தவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

லசந்தாவின் கொலைக்கான சூத்திரதாரியாக மகிந்த அரசு நோக்கியே விரல்கள் நீள்கின்றன. ஆனால் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படும் சக்திகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ஜனவரி 14 அன்று அலரி மாளிகையில் தன்னைச் சந்தித்த சட்டத்தரணிகளைக் கேட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்துக்கு படைத்தரப்பு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் சில தீய சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கும் ஜனாதிபதி எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்ககூடிய பலம் அரசுக்கு இருப்பதாகவும்  மிரட்டல் தொனியில் குறிப்பிட்டு உள்ளார். இது மகிந்த அரசு தன் மீது வரும் விமர்சனங்களைத் எவ்வாறு திட்டமிட்ட முறையில் கையாளப் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.

மேனன் – போகொல்லாகம நேற்று சந்தித்துப் பேச்சு. இன்று ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

sivashankar.jpg
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசியது.

இச்சந்திப்பு நேற்று முற்பகல் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றதுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் உள்ளிட்ட இந்திய உயர்மட்டக் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த சார்க் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இவ்விரு தரப்பு பேச்சுவார்த்தை இலங்கை- இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பொலிஸ் சார்ஜன்ட் கைது

handcuff.jpg10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பொலிஸ் நிலையத்தின் திடீர் சோதனைப் பிரிவில் பணியாற்றும் இவர் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவரைப் பிடித்ததாகவும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்காதிருக்க 10 ஆயிரம் ரூபாவை தனக்கு இலஞ்சமாகத் தருமாறும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நபர் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி அவர் தெல்கந்த நகரில் வைத்து குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்டிடம் 10 ஆயிரம் ரூபாவை செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளார். அதன்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்  புதன்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார

மதுபான ஒழுங்கு விதிகளை மீறியோரிடமிருந்து கடந்த வருடத்தில் ரூபா 186 மில். அபராதமாக வசூல்

mathupanam.jpgஒழுங்கு விதிகளை மீறிய மதுபான விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளரிடமிருந்து கடந்த வருடத்தில் அபராதமாக 186 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக மேற்கொண்ட 56,510 சுற்றிவளைப்புக்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானங்களை அருந்திய குற்றத்திற்காக 2962 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 23,977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் சுப்ரிண்டன்ட் உப்புல் செனிவிரட்ன தெரிவித்தார்.

கள் விற்பனையில் ஈடுபட்ட 9280 பேர் கடந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரச அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை அனுமதியின்றி விற்பனை செய்த குற்றத்திற்காக 12,016 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செனிவிரட்ண தெரிவித்தார்.

அத்துடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3358 பேரும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 1512 பேரும் கைதுசெய்யப்பட்டதுடன், கஞ்சாவை பயிரிட்ட குற்றச்சாட்டின் பேரில், 343 பேர் கைதானதாகவும், அத்துடன் சட்டவிரோத, வரி செலுத்தப்படாத, சிகரெட்டுகளை விற்பனை செய்த 2642 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுபான அனுமதிப் பத்திரத்தை கொண்டிருப்பதற்கான சட்டவிதிகளை மீறிய 5198 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 67 மில்லியன் ரூபா அபராதமாகப் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கலால் திணைக்கள ஆணையாளர், வசந்த ஹப்பு ஆராச்சியின் உத்தரவின் பேரில் இச் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளிவிடாது முஸ்லிம் இளைஞர்களை பாதுகாத்தது மு.கா.தான்- ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgவடக்கில் புலிகளின் பயங்கரவாதத்திற்கும், தெற்கில் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்திற்கும் மத்தியில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போரட்டத்திற்குள் தள்ளாது ஜனநாயக ரீதியான போரட்டத்திற்குள் உள்வாங்கியது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி ரெஹான்ஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஒருவித பீதி மனப்பான்மை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இச்சமூகத்தை வெளிக்கொணர வேண்டும். இந்த அரசு மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால், சகல இன மக்களையும் இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது கட்சியின் எதிர்காலப் போராட்டத்திற்கும் பேரம் பேசலுக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். 1988 மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 12 பிரதிநிதிகளை வட கிழக்குக்கு வெளியில் வென்றெடுத்தது. அதன் பிறகு 2004 மாகாணசபைத்  தேர்தலில் நாம் இந்த 12 ஆசனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அமைச்சரவையில் 27 சதவீதமானோர் முஸ்லிம்கள் . ஆனால் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்தான் என்ன? இவர்களின் கையாலாகாத நிலை அவர்களுக்கே தெரியும். இதுபோன்று இக்கட்சியின் தலைமைத்துவமும் இருக்க விரும்பவில்லை. எனவேதான், வெளியே வந்தோம். முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடத்தக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது எதிர்கால தேர்தல்களில் நிரூபிக்கப்படும் என்றார்.

ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு திருமணம் ஜே.வி.பி., விக்கிரமபாகு கள்ளத் தொடர்பு – விமல் வீரவன்ச கிண்டல்

vimalveera.jpgஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஐ.தே.க.வுடன் ஜே.வி.பி.யும் விக்கிரமபாகு கருணாரட்ணவும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“எமது இராணுவத்தினர் மிக விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முற்றாகத் தோற்கடித்துவிடுவர். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கோருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஜே.வி.பி. மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளனர். புலிகளை தோற்கடித்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யிடம் கோருகின்றோம்’.

பறவை மோதி ஆற்றில் விழுந்த விமானம்

air.jpgஅமெ ரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் உள்பட 155 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது.

இதையடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மன்ஹாட்டன் அருகே ஹட்சன் ஆற்றில் விழுந்தது.
.
ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். அப் பகுதியில் மைனஸ் 6-டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பலரும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்களும், கப்பலும் சென்றதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர்

cordan-bran.jpgஇலங் கையில் யுத்தநிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இந்த விடயம் தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி, ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்சல் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டு வீச்சால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் முற்றுகைக்குள்ளாக்கப் பட்டிருப்பதாகவும் முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்த கிழக்கு லெய்செஸ்ரர் எம்.பி. கீத் வாஸ், ஒரு தலைப்பட்சமாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவோ மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையை நிறுத்துவதற்காக யுத்தநிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்க பிரதமர் தனது நல்லெண்ணத்தை பயன்படுத்துவாரா? என்றும் இதன் மூலம் அழகிய தீவில் சமாதானத்தை திரும்ப ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் குறித்து தான் அறிந்துள்ளதாகவும் கௌரவ உறுப்பினரின் (கீத்வாஸ்) உரிமையை தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதேசமயம், இலங்கையில் அவசரமாக யுத்தநிறுத்தம் தேவையென்ற கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தனது மனதிலுள்ள விடயங்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுண், அடுத்த ஓரிரு தினங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஜேர்மன் அதிபரும் விஜயம் செய்யும் போது இந்த விடயத்தை அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வாரெனவும் தெரிவித்துள்ளார். சமாதானத்திற்காகவும் தீர்வுக்காகவும் தன்னால் உதவியளிக்க முடியுமென பல சந்தர்ப்பங்களில் கிழக்கு லெய் செஸ்ரர் எம்.பி. கீத்வாஸ் கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதன் மூலமே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் கூறியிருந்ததுடன், தனது நிலைப்பாட்டை பல தடவைகள் கூறியிருந்தார்.

லண்டனில் இருந்து தொலைபேசியில் தமிழ்நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

phone.jpgதமிழ் நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. லண்டனில் இருந்து போனில் மிரட்டியவன் யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. அலுவலகம் ரேஸ்கோர்சில் உள்ளது.

(14) இரவு 10.30 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. போனில் பேசியவர், “கோவை, திருச்சி, மதுரை ஆகிய 3 விமான நிலையங்களில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் என்றும், முடிந்தால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றும் ஆங்கிலத்தில் கூறி போனை வைத்து விட்டார். அந்த டெலிபோன் எண், காலர் ஐ. டி. யில் பதிவாகியிருந்தது. அது இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டன் நகர டெலிபோன் எண் ஆகும்.

கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. சிவனாண்டி, அதுபற்றி உடனடியாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் இதையொட்டி வழக்குப் பதிவு செய்து லண்டனில் இருந்து போனில் மிரட்டியது யார் என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டலைத் தொடர்ந்து கோவை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் அருண்சிங் தலைமையில் அதிரடி படையினரும், கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸாரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இரவோடு இரவாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கோவை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், பொலிஸார் தடுப்புகளை அமைத்து விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு தான் அனுமதித்தனர்.

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் புதிய நவீன கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதனை தாண்டிச் செல்லும் பயணிகள் “ஸ்கேனர்” மற்றும் “மெட்டல் டிடெக்டர்” மூலம் சோதனை செய்யப்படுகிறார்கள்.

விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலிருந்து பயணிகள் விமானத்திற்குள் ஏறும் வரை அனைத்து பகுதிகளிலும் 32 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இரண்டு புறமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு எந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர விமான நிலையத்தின் முன்பகுதியில் சுமார் 10 கமாண்டோ வீரர்கள் குண்டு துளைக்காத உடை அணிந்து இயந்திர துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாயிருப்பதால் வன்முறைகளும் குறைவு – “கபே’ கூறுகின்றது

ballot-box.jpgவட மேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்கு வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 12 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில்; வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 12 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மூன்று பெரிய வன்முறைச் சம்பவங்களாகும்.

இரு மாகாணத்திலும் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு ஈடுபாடு குறைந்து காணப்படுவதால் தேர்தல் தொடர்பிலான வன்முறைகளும் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது. எனினும், தேர்தல் நெருங்கும் போது மக்களின் ஈடுபாடு அதிகரிக்க வன்முறைகள் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. கடந்த முறை வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை வன்முறைகள் குறைவாகவே காணப்படுகின்றன. எமது இயக்கம் தேர்தலைக் கண்காணிப்பதற்கான பணிகள் குறித்துக் கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு விளக்கங்களை அளித்து வருகின்றது. தற்போது புத்தளம் மாவட்டத்தில் இதனை மேற்கொண்டுவரும் நிலையில், இருமாகாணங்களிலும் நான்கு மாவட்டங்கள் இவற்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்