2009

2009

பரந்தனில் மும்முனைகளில் படையினரின் முன்நகர்வை முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு

0301-ltte.jpgபரந்தன் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;

பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன?

05-raja.jpgஇலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கை தமிழர்களின் நலனுக்கு மீண்டும் இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன, போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும். போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்சே அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

வன்னியில் விமானத் தாக்குதலை நிறுத்த உதவுமாறு ஐ.நா.செயலருக்கு அவசர கடிதம்

mi24-1912.jpgவன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் 50,000 படையினர் ஈடுபடுவர்

kili-05.jpgமுல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

புலித் தலைவர் பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டது – கிழக்கு மாகாண முதலமைச்சர்

cm.jpgபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (04)  மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், புலிகளது நிருவாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம். ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கி கொலை செய்த பிரபாகரன் தானும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குண்டு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாய சமூகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இதற்காகவே தான் ஜனாதிபதியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்னேற்றங்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு பாரிய வெற்றியைக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரபு நாடுகளில் 30,000 இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

kkhaliya.jpgஅரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.

அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

டியூசன் வகுப்பு குரோதம்- அதிபரை டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை

இரத்தினபுரி கிலிமலே சமனல மகா வித்தியாலய அதிபர் (04) பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாடசாலையில் வைத்து இடம் பெற்றுள்ளது. பாடசாலையில் சிரமதான வேலையில் ஈடுபட்டிருந்த அதிபரை அங் கிருந்த ஒருவர் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பாடசாலை காரியாலயத்திற்கு காயத்துடன் சென்று விழுந்து இறந்துள்ளார்.

அதிபரை பொல்லால் தாக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினரென தெரிய வந்திருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது கிலிமலே இந்துருவயை வசிப்பிடமாகக் கொண்ட குணபால பெரேரா (46) என்பவரே இறந்தவராவார்.  டியூசன் வகுப்பு சம்பந்தமாக நீண்டகாலமாக நிலவி வந்த குரோதமே இக்கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு காரணமான நபர் தறைமறைவாகியுள்ளார். இவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் தினத்தில் நாமும் பட்டாசு கொளுத்தி மகிழ்வோம் – மனோகணேசன்

mano_ganesan.jpgஆயுத போராட்டத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ள தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மையான அதிகார பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் தினத்தன்று இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம். அந்த கொண்டாட்டத்தை தலைநகர தமிழர்களின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கொழும்பு மாநகரில் நானே நேரடியாக நின்று பட்டாசு கொளுத்தி, தெருக்கள் எங்கும் ஊர்வலம் நடத்தி கொண்டாடுவேன். அன்றைய தினமே நேரடி அரசியலிருந்து நான் விடைபெறும் தினமாகவும் அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தொடர்பிலும் இது காரணமாக நாடெங்கும் நடைபெற்றுள்ள கொண்டாட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது; கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் வெற்றியுமல்ல வடக்கிற்கு எதிரான தெற்கின் வெற்றியுமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால், இந்த கருத்துகள் நடைமுறையுடன் பொருந்தவேண்டும். வடக்கிலே இன்று ஒரு போராட்டக்களம் இருக்குமானால் கிழக்கிலே ஒரு அரசியல் போராட்டக்களம் இருக்கின்றது. அதுதான் உங்களது கிழக்கு மாகாணசபையாகும். மாகாணசபை முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. இருந்தாலும் அது இன்று அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தமாகும். ஆனால், நீங்கள் இந்த திருத்தம் என்ற சட்டத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

உங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் சொல்வதையும் நீங்கள் கேட்கவில்லை. அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான உங்களது சர்வகட்சி கடையையும் இன்று மூடிவிட்டீர்கள். அரசாங்கம் யுத்த களத்தில் வெற்றிகளை குவிப்பதாக கூறுகின்றது. அது எங்களுக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அரசியல் களத்தில் எதையுமே பார்க்கமுடியவில்லை என்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதிலும் இந்த அரைகுறை மாகாணசபை செயற்பாடுகளையும்கூட அரசாங்கத்தின் சில செல்வாக்குமிக்க பிரிவினர் எதிர்க்கின்றார்கள் இது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கின்றது.

இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி, மலாய் ஆகிய அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்கிறார். ஆனால், இன்னொரு பிரிவினர் இந்நாடு பெரும்பான்மை இன, மதத்தவருக்கு மாத்திரமே சொந்தமானது என கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது முழுமையான இராணுவ தீர்விற்கு பிறகு நடைமுறையாகும் என்ற கருத்தை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்தை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் இன்றைய மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.

மீளக்குடியேறாதோரின் காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாகர் கோவில் தெற்கு, வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் இதுவரை மீளக் குடியேறாதவர்களின் விபரங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அறிவித்துள்ளதாவது;

வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் (நாகர்கோவில் தெற்கு) 120 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு தீர்மாணிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் 72 குடும்பங்கள் குடியேறியுள்ளன. மீதி 48 குடும்பங்களும் இதுவரை குடியேறவில்லை. இவ்வாறு குடியேறாதவர்களை உடனடியாக குடியேறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குடியேறத்தவறுபவர்களின் வீடுகள் சம்பந்தமாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு காணி அபிவிருத்திச் சட்டத்தின் 106 ஆம் பிரிவின் கீழ் இவர்களுக்கான காணி ஒதுக்கீடு இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவிடயமாக, மேலதிக விண்ணப்பங்கள் எவையும் பரிசீலனை செய்யப்படமாட்டாதெனவும் உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார்.

மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன்

Scene_After_Schoolபாரிஸிலிருந்து உயிர்நிழல் இலக்கிய சஞ்சிகையைப் கொணரும், பிரான்ஸில் இயங்கும் ‘எக்ஸில் இமேஜ்’ அமைப்பு தயாரித்திருக்கும் இத்திரைப்படம், 2009 ஜனவரி ஜெர்மன் உலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வுபெற்றிருக்கிறது. தமிழகத்திலிருந்து வெளியாகும் உயிர்மை – ஜனவரி 2009 – இதழிலிருந்து இக்கட்டுரை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது : தேசம்

I

ஈழச் சூழலை முன்வைத்து, போரில் குழந்தைகள் அல்லது குழந்தைப் போராளிகள் குறித்து நிறையக் குறும்படங்கள் வந்திருக்கின்றன. காலஞ்சென்ற இயக்குனர் ஞானரதன் இயக்கிய விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சிப் படமான காற்றுவெளி, தமிழகத்தைச் சேர்ந்த சகாதேவன் எழுதிய இயக்கிய சிலோன், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த விமல்ராஜின் கிச்சான், மேற்கில் இயங்கும் ‘ஸ்கிரிப்ட்நெட்‘ அமைப்பின் அணுசரணையில் ஈழத்தின் வடக்கில் தயாரிக்கப்பட்ட ராகவனின் மூக்குப் பேணி மற்றும் கவுதமனின் செருப்பு என தொலைந்துபோன ஈழத்துக் குழந்தமை வாழ்வு குறித்து சொல்லப்படத்தக்க குறும்படங்கள் வெளியாகியிருக்கின்றன. மிகச் சமீபத்தில், 2008 ஆம் ஆண்டு இறுதியில் பிரான்சில் வாழும் பிரதீபன் எழுதி இயக்கிய என் வீட்டு முற்றத்தில் ஓரு மாமரம் எனும் குறும்படமும் வெளியாகியிருக்கிறது.

காற்றுவெளி போராளிச் சிறுவர்களுக்கும் பரந்துபட்ட ஈழத்துச் சமூக உறுப்பினர்களுக்கும் இடையிலான நேசமும் சந்தேகமும் பரிவுணர்வும் குறித்ததாக இருந்தது. சகாதேவனின் சிலோன் வானூர்தி எனும் குழந்தைகளுக்குச் சந்தோசமூட்டக் கூடிய ஒரு இயந்திரப் பறவை, எவ்வாறாக தமிழகக் குழந்தைகளுக்கு சந்தோசத்தையும் ஈழத்துக் குழந்தைகளுக்குக் கிலியையும் தருவதாக இருக்கிறது என்பதனைச் சித்தரிக்கிறது. கிச்சான் போரினால் பெற்றோரை இழந்த ஒரு சிறுவன் தொலைத்த கல்விப் பருவத்தைத் துயருடன் சித்திரிக்கிறது. பொம்மைத் துப்பாக்கிக்காக மூக்குப்பேணியை விற்கும் சிறுவனால் உயிர்துறக்கும் தாத்தாவின் அவலவாழ்வு குறித்துச் சொல்கிறது மூக்குப்பேணி திரைப்படம். செருப்பு ஒரு சிறுமியின் கனவாக இருக்க, அது கிடைக்கிறபோது அவளது கால்கள் கண்ணிவெடியில் சிதறிப்போவதனை செருப்பு படம் சொல்கிறது.

சிலோன்,கிச்சான்,மூக்குப்பேணி,செருப்பு என பெரும்பான்மையான குறும்படங்கள் போர்ச்சூழலால் இழந்துபட்ட குழந்தைமை குறித்துச் சொல்கின்றன. காற்றுவெளி மட்டுமே போராளிச் சிறுவர்களின் வாழ்வு பற்றி நேரடியாகப் பேசுகிறது. தவிரவும் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட இயக்குனர் ஜான் மகேந்திரனது தமிழகப் படமான ஆணிவேர் சிங்களப் படையினரிடம் சிக்கிப் பாலியல் வலலுறவுக்கு உள்ளாகும் பள்ளி மாணவியினது கதையை கிளைக் கதையாகக் கொண்டிருக்கிறது. என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் இழந்துபட்ட குழந்தமை, படையினரின் பாலியல் வல்லுறவு, போராளிச் சிறுமியின் அகால மரணம் என அனைத்தும் தழுவி தனது கதையைக் கொண்டிருக்கிறது.

II

குழந்தைகள் எந்தச் சமூகத்திலும் பெரியவர்களின் பராமரித்தலுக்கும் பாதுகாப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் உரியவர்கள். வளர்ந்த மனிதர்களின் நியதிகளையும் மதிப்பீடுகளையும், அவர்களது புன்னகைக்கிற முகத்திற்குப் பின் மறைந்திருக்கும் கள்ளங்களையும் குழந்தைகள் அறிவதில்லை. நிலவும் நிறுவன மதிப்பீடுகள் சமூக வரையறைகள் குறித்து குழந்தைகள் அறிவதில்லை. அவர்களைச் சீக்கிரமே ஒருவர் ஏமாற்றிவிட முடியும். தூக்க நிலையிலேயே அவர்களை மரணத்தின் வாசலுக்கு, அவர்களது விரும்பத்துடனேயே அனுப்பி விட முடியும்.

தமது சொந்த வாழ்வின் இருப்பும் பாதுகாப்பும் மகிழ்வும் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில், மனமுதிர்ச்சியற்ற கையறு நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். வெகு சாதாரணமான ஒரு சூழலிலேயே குழந்தைகள் தொடர்பான இந்தச் ஜாக்கிரதை உணர்வை ஒரு சமூகம் கொண்டிருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.

ஆயுத மோதல்களில், போர்க் காலங்களில், உள்நாட்டுக் கலவரங்களில், நிலைமை இன்னும் சிக்கலானது. ஆயுதமோதலில் இருக்கும் இரு தரப்பாரும், அரசு மற்றும் போராளிகள் என இருதரப்பாரும், தம்மால் சுயஉணர்வுடன் முடிவெடுக்கவியலாத குழந்தைகள் தொடர்பாகப் பொறுப்பான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டுமென சர்வதேசியப் போர்ச் சட்டங்கள் கோருகின்றன.

இதனை மீறுகிற அரசுகளும் இருக்கின்றன. போராளிகள் அமைப்புகளும் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக ஈரான் ஈராக் போரில் ஈரானியச் சிறுவர்கள் தற்கொலைப் போராளிகளாக இருக்க ஊக்குவிக்கப்பட்டார்கள். ஹிஸ்புல்லா மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற போராளி அமைப்புகள் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துகின்றன. மதத்தின் பெயரில் குழந்தைகள் போரில் ஈடுபட்டு மரணமுற்றால் அவர்கள் சொர்க்கம் ஏகுவார்கள் என மத அமைப்புக்களாலும், இனத்தின் பெயரில் மரணமுற்றால் அவர்கள் அந்த இன மக்களின் வெகுஜன நினைவுகளில் வாழ்வார்கள் எனப் இனப் போராட்டப் போராளிகள் அமைப்பினராலும் சொல்லப்படுகிறது.

குழந்தைப் போராளிகளைப் பற்றிப் பேசுவதும், தடம்புரண்ட மூன்றாமுலக விடுதலை இயக்கங்களின் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவதும், இப்போது சர்வதேசப் பதிப்புத்துறைக்கு உகந்த விற்பனைக்குரிய, விடுதலைப் போராட்டம் குறித்த விமர்சனம் கொண்டவர்களுக்கு மேற்கத்திய அரசு மற்றும் அரசல்லாத அமைப்புகளுடன் உரையாட, ஒரு தந்திரோபாயமான களமாக உள்ளது என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எரித்திரியா, ருவாண்டா, ஈழம் என குழந்தைப் போராளிகளின் எழுத்துக்கள் சர்வதேசப் பொதுப்புல இலக்கியத்தில் இன்று நுகர்வுக்குரிய ஒரு இலக்கிய வகையினமாகவும் ஆகியிருக்கிறது. முன்னாள் போராளியொருவர் தமது ஜனநாயக அமைப்பில், மாகாணத்தின் முதல்வராக முடிகிறது என இலங்கை ஜனாதிபதி சர்வதேசிய அமைப்புக்களுக்கு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘முன்னாள் குழந்தைப்போராளி’ எனும் அடையாளம் இன்னாளில் கொலைகளில் ஈடுபடுவதற்கான ஒரு அறம்சார் முகாந்திரமாக எந்நாட்டிலும் என்னாளிலும் ஆகிவிடமுடியாது.

வியட்நாம், ஈரான், ஈழம் போன்ற போராளி அமைப்புக்களதும், சதாம் குஸைன் போன்ற முன்னாள் அரசுத் தலைவர்களாயிருந்து மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும், சர்வதேசப் பொதுப்புலத்தில் இலக்கியங்களும் திரைப்படங்களும் வெளியாகி வெகுவாக வாசிக்கவும் பார்க்கவும் படுகிறது. ஸத்தாம் சிட்டி (ஸத்தாம் ஆட்சியின் சித்திரவதை அமைப்பு), அனில்ஸ் கோஸ்ட் (ஜேவிபி கிளர்ச்சியின் போதான மனித உரிமை மீறல்கள்) போன்ற நாவல்களும், டெரிரிஸ்ட் (ராஜீவ் காந்தி படுகொலை), டேன்ஸர் இன் அப்ஸ்டேர்ஸ் (ஸைனிங் பாத் கொரில்லா தலைவர் அபிமல் குஸ்மானின் கைது நடவடிக்கை) போன்ற படங்களையும் குறிப்பிடலாம்.

சமவேளையில் அமெரிக்க பிரித்தானிய அரசுகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய இயக்குனர் வின்டர்பாட்டம் ரோட் டு குன்டனாமோ என்றும் திரைப்படம் எடுக்கிறார். ஆயினும் ஆக்கிரமிப்பு அரசுகளால், பொஸ்னியாவில் கொல்லப்பட்ட அகதிகள் கூட்டத்தின் மேலான தாக்குதல் குறித்தும், ஈராக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்தும், சிங்கள அரசினால் ஈழத்தில் கொல்லப்பட்ட செஞ்சோலைக் குழந்தைகள் குறித்தும் சர்வதேசியப் பொதுப்புலத்தில் இலக்கியமும் இல்லை. திரைப்படமும் இல்லை என்பதனையும் ஒரு தரவாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் போராளிகள் பற்றிய பிரச்சினையை வெறுமனே போராளி அமைப்புக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கான கருத்துருவமாகப் பார்க்காமல், அதனையொட்டி சிறுவர்கள் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், அரசுகள் குறிப்பிட்ட இனமக்களின் குழந்தைகள் மீது தொடுக்கும் வன்முறை, அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் அவசரகாலங்களில் பதினெட்டு வயதுள்ளவர்களையும் போருக்குப் பாவிப்பது என அனைத்தும் தழுவியதாவே எடுத்துச் செல்லப்பட வேண்டும். மரணமுற்ற இலங்கைப் படையினர் ஒரவரது வயது பதினேழு என வெளியாகியிருக்கும் செய்தியும் கவனத்தில் கொள்ளத்தாக்கது.

அரசின் வன்முறைக்கு ஆளாகி மடிவதை விடவும், குண்டுமழை பொழியும் விமானங்களின் பெருநெருப்பில் கருகி மடிவதை விடவும், சின்னஞ் சிறுவயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மடிவதைவிடவும், போராடி மடிவது மேல் எனப் பெற்றோர்களோ அல்லது அவர்களது ஒப்புதலுடன் அரசியலை வழிநடத்துகிறவர்களோ தேர்ந்து கொள்வார்களானால், அந்த நிலைபாட்டையும் துப்புரவாக எவரும் நிராகரித்துவிடமுடியாது. இத்தகைய அவதானங்களிலிருந்துதான் குழந்தைப் போராளிகள் மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மடியும் குழந்தைகள் குறித்தும் நாம் பேச வேண்டியதிருக்கிறது.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சரி, பிற விடுதலை அமைப்புகளும் சரி பதின்ம வயது சிறுவர்களையும் சிறுமிகளையும் போரில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் பதியப்பட்டிருக்கிறது. இதனை எந்தப் போராளி அமைப்பும் மறுத்ததும் இல்லை. ஈழப் போராட்டம் சர்வதேசிய மயப்படுத்தப்பட்டதையடுத்து கொள்கை ரீதீயாக விடுதலைப் புலிகள் அமைப்பு குழந்தைப் போராளிகளைத் தமது அமைப்பு ஏற்பதில்லை என்பதனை அறிவித்தாலும் கூட, தொடர்ந்து உலக மனித உரிமை அமைப்புகள் அந்தப் பிரச்சினை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருப்பதாகவே அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது.

மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் பாலான கடுமையான விமர்சகர்கள் தற்போது குழந்தைப் போராளி எனும் பிரச்சினையை உரத்துப் பேசுகிறார்கள். இதன் எதிரொலியாக குழந்தைப் போராளிப் பிரச்சினையை இலங்கை அரசும் தம்மை எதிர்க்கும் போராளிகளுக்கு எதிராகப் பாவித்து வருகிறது. இத்தகையதொரு அரசியல் அறம்சார் விவாதங்களின் மத்தியில்தான் பிரதீபன் எழுதி இயக்கியிருக்கும் ‘என் வீட்டு முற்றத்தில் ஓரு மாமரம்’ எனும் குறும்படமும் வெளியாகி இருக்கிறது.

III

என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் படம் தமிழகத்தின் தேர்ந்த திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் அர்ஸ், ராஜ்குமார் முறையே கலை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவற்றினை ஏற்றிருக்கிறார்கள். தொழில்நுட்பப் பாவனையில் சிற்சில காட்சி அமைப்புகளின் ‘அசல்தன்மை’ குறித்து நாம் விமர்சனங்கள் எழுப்ப முடியுமேயொழிய, இசைநேர்த்தி உள்பட, படத்தின் காட்சியூடகச் சொல்நெறி சார்ந்து, அதிகமான விமர்சனங்களை நாம் கொள்ள முடியாத அளவில், நேர்த்தியாக இந்தக் குறும்படம் உருவாகி இருக்கிறது.

படத்தின் கதைச் சுருக்கம் இவ்வாறானது : பள்ளி சென்று வீடு திரும்பும் வழியில், போர்ச் சூழலில் வாழநேர்ந்த இரண்டு பள்ளிச் சிறுமிகள் வேறு வேறு வகைகளில் மரணமடைகிறார்கள். ஒரு சிறுமி அரசபடைகளின் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டுக் கொல்லப்படுகிறார். பிறிதொரு சிறுமி போராளி அமைப்பினால் குழந்தைப் போராளி ஆக்கப்பட்டுக் காவலரண் பாதுகாப்பில், அரச படைகளுடனான மோதலில் கொல்லப்படுகிறார். இரண்டு சிறுமிகளும் கொல்லப்பட, இதில் ஒரு சிறுமியின் தம்பி தன்னந்தனியே, தனியனாய் பள்ளிக் கூடம் போய் மீண்டுவருகிறான். ‘அவனது எதிர்காலம் என்ன?’ என பார்வையாளராக நமக்கு நாமே கேட்கவிட்டு படம் முடிகிறது.

இந்தத் திரைப்படம் கதைக் கரு எனும் அளவில் அல்லது அரசியல் பிரச்சினை எனும் அளவில் ஈழத்திற்கு மட்டும் பொருந்துவது இல்லை. எந்த விடுதலைப் போராட்டம் நடக்கும் நாடுகளிலும் இருக்கும் பிரச்சினைதான். ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து, சர்வதேசிய மனித உரிமைகள் அமைப்புகள் வரை அனைத்து நிறுவனங்களும் இதனால்தான், போராடும் அமைப்பு, ஆக்கிரமிப்பு அரசு என இருதரப்பாரின் மீதும் இப்பிரச்சினை சார்ந்து சம அளவில் கண்டனங்களை வைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் அந்த வகையில் இருவகையிலுமான கடுமையான, சாதகமான எதிர்விணைகளை நிச்சயமாகவே தூண்டும் தன்மையைப் பெற்றிருக்கிறது.

படம் துவங்கும்போது, தேங்கி நிற்கும் குளத்து நீரில் தெரியும் நீல நிற மேகம் நகரும் ஆகாயத்தில், குளத்தின் குறுக்கே ஒரு பறவை சிறகடித்துச் செல்கிறது. அமைதியான குளத்தில் நீர்ச்சுருள்கள் விரிகிறது. நெருக்கமான அடர்ந்த பனை மரங்கள். ஆளரவமற்ற செடிகொடிகள் அடர்ந்த வெளி. நகரத்தின் வெகுதூரத்தில் உள்ளொடங்கிய, வீடுகள் இன்னும் தட்டுப்படாத தார்ப்பாதையில் இரண்டு வெள்ளையுடை அணிந்த சிறுமிகளும் ஒரு சிறுவனும் நடந்து வருகிறார்கள். சிறுவன் பாதையை விட்டுக் கொஞ்சம் விலகி எதனையோ காலில் எத்தித் தள்ள – ஈழத்தில் எங்கெங்கும் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் நம் ஞாபகத்தில் வருகிறது – அவனது அக்கா அவனைப் பிடித்து இழுத்து, தனது பாதையில் அவனை வைக்கிறாள்.

சிறுமிகளுக்கு இடையில் உரையாடல் நடக்கிறது. தமது பள்ளித் தோழியொருத்தியின் தந்தை கடத்தப்பட்டது நமக்கொரு செய்தியாகிறது. சிறுமியர் இருவரும் தமது கையில் மாமரக் கன்றுகளை வைத்திருக்கிறார்கள். ஆசிரியை அவர்களை வளர்க்கச் சொல்லி, சிறப்பாக வளர்த்த மாமரக் கன்றுக்கு அவர் பரிசும் தரப் போகிறார். தாம் வளர்த்த மாமரக் கன்றுகளை பள்ளிக் கூடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டு, ஆசிரியையிடம் காட்டிவிட்டு, மறுபடி அவர்கள் வீட்டுக்குத் திரும்ப எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மிகச் சிறப்பாக வளர்த்ததற்கு ஒரு சிறுமிக்கு பரிசு கிடைக்கும் என அக்காச் சிறுமி சொல்கிறாள். ‘இப்போது மாமரத்திற்குப் பயனில்லையா?’ எனக் கேட்கிறாள் மற்றவள். தன் வீட்டு முற்றத்தில் அதனை விதைக்கப் போவதாகச் சொல்கிறாள் அக்காச் சிறுமி. இதுவும் நமக்கொரு செய்தி. அடுத்த நாள் ராணுவம் பள்ளியை மூடச்சொல்லி உத்தரவிட்டிருப்பதால், அவர்களுக்கு நாளை பள்ளி இல்லை என்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது.

சந்தியில் இரு புறமும் பிரியும் பாதைகளில், அக்காவும் தம்பியுமாக ஒன்றிலும், தனித்த சிறுமியாக ஒருத்தி பிறிதொன்றிலும் பிரிகிறார்கள். குழந்தைகளின் கள்ளமின்மையும், அவர்களது திட்டமற்ற எதிர்காலமும் குறித்த நேசபூர்வமான காட்சிகள் இவை. சுற்றிலும் தனித்த வெளியில் இந்தப் பிஞ்சுகளின் உலகத்தை அதிர்ச்சிகரமாக ஊடறுப்பதாக ஒரு காட்சி நமக்கு இடைவெட்டாகக் காண்பிக்கப்படுகிறது.

சிறுமிகளின் முகம் அருகாமையில் வரும்போது, இந்த அடுத்த காட்சி உறைந்த பிம்பமாக நமக்கு முன் வருகிறது. அடர்ந்த பச்சை நிறத்தில் இரு ராணுவ வாகனங்கள். அதில் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருக்கும் படையினர். இரண்டு வாகனங்கள் பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தனது கால்களை அகட்டியபடி ஒருவன் பாதையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறான். அவன் சிறுநீர் கழித்து முடிய, வாகனம் புறப்படுகிறபோது, சிறுநீர் கழித்தவன் ஒரு முதியவயதுப் பெண்ணை, அவளது முதிய கணவனை பலவந்தமாக விளக்குப் பிடிக்கப் பண்ணியபின், வல்லுறவு கொண்டு அவளைக் கொன்ற செய்தியை ஒரு வழமையான செய்திபோல், எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இன்றித் தனது சக படையினனிடம் பகிர்ந்து கொள்கிறான்.

இரண்டு சிறுமியர் இப்போது தனிவழியே மரங்களடர்ந்த பாதையில் வீடு நோக்கிச் செல்கிறார்கள்.

தனித்துச் செல்லும் சிறுமியத் தாண்டும் இரண்டு ராணுவ வாகனங்களில் பின் வாகனம் சிறுமியைத் தாண்டியதும் நிற்கும்போது காட்சி முடிகிறது. இருளில் நிற்கும் வாகனத்தின் வெளிச்சம் பாய்ச்சப்பட, படையினனொருவன் சவக் குழி வெட்டிக் கொண்டிருக்கிறான். வெட்டி முடித்த சவக்குழியில் ஒரு உடல் இறக்கப்பட்டு மண்மூடியபின் ராணுவ வாகனம் கிளம்புகிறது. அதனது வெளிச்சத்தில் ‘வெடிமருந்து நிறைந்த இடம்’ எனும் பலகை நமக்குத் தெரிகிறது.

பிறிதொரு சிறுமிக்கு என்ன ஆயிற்று? தம்பியுடன் செடிகளுக்கிடையில் வீடு நோக்கி நடக்கும் சிறுமியிடம், அசையும் செடியின் வாதுகளின் பின்னிரிந்தொரு குரல், ‘தங்கச்சி இன்றைக்கு வருகிறேன் என்று சொன்னதை மறந்துவிட்டாயா?’ என வாஞ்சையுடன் அழைக்கும் ஒரு ஆண் குரலினையடுத்து, சிறுமி எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தச் செடியின் மறுபக்கம் நோக்கி இறங்க, ‘தம்பி நேரத்திற்கு வீடு போய்ச் சேர வேண்டும்’ எனும் குரல் தொடர்ந்து கேட்கிறது.

கூந்தல் குறுகவெட்டப்பட்ட ஒரு காவலரண் போராளிச் சிறுமியாக நாம் அந்தச் சிறுமியை அடுத்த காட்சியில் பார்க்கிறோம். அருகில் துப்பாக்கியுடன், தரையில் வீட்டின் சித்திரம் வரைந்து அதில் மாமரத்தைப் விதைப்பதாய்க் கீறுகிறபோது, அவளது இருப்பிடம் நோக்கிப் படையினர் வரும் அரவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிகள் இருபுறமும் வெடிக்கிற ஸப்தம் நமக்குக் கேட்கிறது.

இரண்டு சிறுமியரும் வேறு வேறு காரணங்களால் மரணமடைகிறார்கள். அடுத்த அருகாமைக் காட்சியில், புதைமேட்டிலும் கரிய வீட்டிலும் என இரு மாமரக் கன்றுகள் உலர்ந்த நிலையில் உருக்குலைந்து கிடக்கிறது. மறுபடி முதல் காட்சியின் தனிமை. முன்பொருபோது தனது அக்காவுடனும் அக்காவின் தோழிச் சிறுமியுடனும் வந்த அந்தச் சிறுவன் நடக்கிறான். சந்தியை நெருங்கும் தனித்த சிறுவனின் முதுகு நமக்குத் தெரியப் படம் முடிகிறது.

IV

திரைப்படம் முழுமையானதொரு காட்சிரூப வடிவம் என்பதனை உணர்ந்தவர்களால் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை நிறைந்த கதைக் கருவைத் தேர்ந்து கொண்ட திரைப்படத்தின் சொல்நெறி அந்த வன்முறையின் தீவிரத்தைத் தனக்குள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அரவமற்ற, மனித சஞ்சாரமற்ற காட்டு வெளியில் தனித்து நடக்கும் சிறுமியர், இடைவெட்டி கால்களை விகாரமாக அகட்டியபடி சிறுநீர்கழிக்குகம் படையினன். பதற்றத்தில் பார்வையாளன் இருத்தி வைக்கப்படுகிறான்.

மிகக் குறைந்த வசனங்கள் எந்தச் சூழலில் அக்குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனை நமக்குச் சொல்லி விடுகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு சிறுமியர்களின் மரணங்களை அடுத்தடுத்த காட்சியில் ஒப்புநோக்கும் தன்மை கொண்டிருப்பதால், போராட்டத்தை உணர்ச்சிகரமாகப் பார்க்கிற பார்வையாளனிடம் கோபமூட்டும் தன்மையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

வன்முறையைத் தனது கதைப்பொருளாக எடுத்துக் கொள்ளும் சொல்நெறி இதனைத் தவிர்த்திருக்கவும் முடியாது. ஆனால், ‘தங்கச்சி’ என ஒரு சிறுமி அழைக்கப்படும்போது, திரைப்படம் சுட்டும் ஓப்புமையின் வன்முறை அங்கு தணிக்கப்பட்டு, திரைப்படம் பேசும் பிரச்சினையே மேலோங்கி விடுகிறது. கத்திமுனைப் பயணம் போன்ற இந்த ஒப்புமை, மிகுந்த விகாரமாகி விடக் கூடிய வாய்ப்பை காட்சிரூபச் சித்திரிப்பிலும் வசனத்திலும் திரைப்படத்தை உருவாக்கியவர்கள் கடந்து சென்றிருக்கிறார்கள்.

சிறுமிகளுக்கு நேரப்போகிற அனர்த்தம் குறித்த பதட்டம் படமெங்கும் நிரவி நிற்கிறது. திரைப்படம் நிஜத்தில் உண்மை வாழ்வோ, இல்லை யதார்த்தமோ இல்லை. வாழ்வைப் ‘போல’ அல்லது யதார்த்தம் ‘போல’, சம்பவங்களை நிகழத்திக் காட்டுவதுதான் திரைப்படம். இப்படியான ‘போலச்’ செய்கிற நிகழ்வுப் போக்கில், நிச்சயமான தொழில்நுட்பத்தைப் பாவித்து, நம்பகத் தன்மையை உருவாக்குவதுதான கலைஞனின் செயல்பாடு. படத்தின் மிக முக்கியமான காட்சி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் உடல் படையினனால் புதைகுழியில் இட்டு மூடப்படும் காட்சி. மனித உடலை இரு கைகளிலும் ஒருவர் தூக்குகிறபோது உடல் குழையும், உயிரற்ற உடலின் பாரம் தூக்குபவனை நிரம்பச் சிரமத்திற்கு உள்ளாக்கும். குறிப்பிட்ட அந்தக் காட்சியில் காண்பிக்கப்படும் உடல் ‘வெட்டையான’ உடல் என்பது தூக்கும் போதும், சவக்குழியினுள் படையினனால் ‘செத்தென’ வீசம்படும்போதும், பார்வையாளனாக அக்காட்சி நமக்கு மிகுந்த அசௌரிகயத்தை உருவாக்குகிறது. ‘அது மனித உடல் அல்ல’ என்கிற எமது எண்ணம் படத்தில் ஒன்றுவதிலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது.

அது போலவே இரண்டு மாங்கன்றுகளின் உலர்ந்து வதங்கிய அருகாமைக் காட்சி நமக்குக் காண்பிக்கப்படும்போது, புதைகுழி எனும் கலைந்த நிலப்பரப்பு, எரிந்து கருகிய வீட்டினிடையிலான சமனான நிலப்பரப்பு என இரு வேறு நிலப்பரப்புக்களுக்கு இடையிலான வித்தியாசம் நமக்குப் புலப்படாமல் போயிருக்கிறது. இரண்டு சிறுமிகளதும் மரணத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள நமக்கு முன்னால் இருப்பது இந்த அருகாமைக் காட்சிதான் எனும் போது, இக்காட்சி மிகுந்த சிரத்தையுடன் நிலவெளி வித்தியாசப்படுத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இதுவன்றி, கதை நிகழும் நிலப்பரப்பு தொடர்பான சில குறிப்புகளையும் பதிய விழைகிறேன். நிதர்சனம் தொலைக் காட்சியின் விவரணப் படங்களையும், தமது உறவுகளைப் பார்க்கத் தமது ஈழத்துக் கிராமங்களுக்குச் சென்று மீண்ட நண்பர்களின் தனிப்பட்ட ஒளிநாடாக்களையும் நான் நிறையப் பாரத்திருக்கிறேன். சிதிலமான வீடுகள், பெயர்ந்த தார்ச் சாலைகள், சுவரில் எழுதப்பட்ட தேய்ந்த வண்ணங்களிலான விளம்பரங்கள், குட்டிச் சுவர்கள், துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையாகின வீட்டுச் சுவர்கள் எனவே ஈழத்தின் போர்க்காலக் கிராமங்களின் சித்திரம் இருக்கிறது. வன்முறையும் அழிவும் இடிபாடுகளும் நிறைந்த, மயான அமைதி கவிந்திருக்கும் கிராமங்களையே என்னால் காண முடிந்தது. ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ திரைப்படமும் இந்தத் தன்மையும், அச்சமும் மயானநிலையும் கலந்த ஒரு சூழலைத் தான் சித்தரிக்கிறது. ஆனால், அந்தச் சூழல் நிரைப்படத்தின் காட்சியாக்கத்தில் கொண்டுவரப்படவில்லை என்பதனையும் அவதானிக்க வேண்டியிருக்கிறது. வேறொரு நிலச்சூழலில் படமெடுக்கும் போது (திரைப்படம் தமிழக நிலவெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது) இத்தகைய நிலைமைகளைக் கடந்து போகிற சாத்தியங்களின் பொருளாதார நிலைமைகளையும் தாண்டி, ஒரு திரைப்படம் எனும் அளவில் அதனது அசல்தன்மையை இத்தகையை காட்சிகள் கொண்டிராதபோது, திரைப்பட அனுபவம் என்பது முழுமையடைவது என்பது தவறிப் போகிறது என்பதையும் நாம் சுட்டவே வேண்டும்.

V

நிச்சயமாகவே இந்தத் திரைப்படம் மிகுந்த சர்ச்சைக்குரிய, அரசியல் முக்கியத்துவமுடைய ஒரு சமகாலப் பிரச்சினையைக் கொண்டிருக்கிறது. குழந்தைப் போராளிகள் பிரச்சினை, குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை என, போர் நிகழும் ஒரு சமூகத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் பற்பல பரிமாணங்களில், இரு பரிமாணங்களை இப்படம் பேசுகிறது. காற்றுவெளி திரைப்படம் போராளிச் சிறுவர்களாக இருக்கிறவர்களுக்கும் அவர்கள் இயங்க நேர்ந்த சமூகத்தவர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது. கிச்சான், செருப்பு, மூக்குப் பேணி, சிலோன் போன்ற படங்கள் தொலைந்துபோன குழந்தைமையைப் பேசுகிறது. என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் திரைப்படம் குழந்தைகளுக்கு வெளியில், அவர்களது சுயம் சார்ந்த தேர்வின்றி, அவர்களது பிரக்ஞைபூர்வமான பங்குபற்றுதலுக்கான மனமுதிர்ச்சியின்றி, அவர்களுக்கு வெளியிலான புறநிலைச் சக்திகளால், அவர்களது வாழ்வு தீர்மானிக்கப்படுவதைப் பற்றி, அவர்களது அகால மரணம் பற்றிப் பேசுகிறது.

பொதுவாகவே குழந்தைகள் தொடர்பான பிரச்சினை என்பது அவர்களைப் பெற்றவர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை. அவர்கள்தாம் தமது வம்சவிருட்சத்தின் தொடர்ச்சி என்பதனைப் பெற்றோர் உணர்ச்சிகரமாக உணர்கிறார்கள். தமது குழந்தைகள் மரணமடைவதை எந்தப் பெற்றோரும் விரும்பமாட்டார்கள். குழந்தைகளை ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்படுத்தக் கூடாது என்பதனை போராளி இயக்கத்தவர்கள் ஏற்கிறார்கள். அவர்களால் குழந்தைகள் போராளிகளாக இழுத்துச் செல்லப்படுவதை நியாயப்படுத்த முடிவதில்லை. இதுவே இந்தப் பிரச்சினையின் தார்மீகத் தன்மையை நிறுவப் போதுமானதாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வித் தகைமை மற்றும் சாதனைகளைக் பெருமிதத்துடன் கொண்டாடுகிற அதே போதில், கொல்லப்படும் குழந்தைப் போராளிகள் தொடர்பாக விமர்சனமற்ற வகையில் அவர்களைக் குட்டிக் கடவுள்களாக்கி, வணங்குவதற்கான பிம்பங்கள் ஆக்குவது என்பது ஒரு இருத்தலியல் முரண். பிரச்சினையின் பற்பல பரிமாணங்களையும் நாம் அலசினாலும் கூட, குழந்தைகளைப் பலிபீடத்திற்கு அனுப்புவது எனும் பெரியவர்களின் நிலைபாட்டை எதன் வழியிலும் நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்புகளும், உலக மனித உரிமை அமைப்புகளும், போராளிகள் அமைப்புகளும் குழந்தைப் போராளிகள் பிரச்சினையில் கருத்தளவில் ஓருமையான நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.

இதனைத் தாண்டியும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாலியல் வல்லுறவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கொடுமையான பிரச்சினைகளையும் விகாரப்படுத்தாமல், எவர் மீதும் திட்டவட்டமான புகார் கூறாமல், ஒரு அறம்சார் மானுடப் பிரச்சினை எனும் வகையில், இப்பிரச்சினை சார்ந்த பரிமாணங்களை முன்வைப்பது நம் காலத்தின் கலஞர்களின் கடமையாகிறது. இப்படம் அந்த வெளியில் வேர்பிடித்து, நமக்குள் இனம் தெரிந்த பிரச்சினையின் பதட்டத்தைப் பரப்பியிருக்கிறது. கண்டனம் என அல்லாமல், கலையாக இது ஆகியிருக்கிறது.

இந்தப் படம் தோற்றுவிக்கும் விவாதங்கள் இச்சிறுமிகளைப் போன்றவர்களை மீளவும் நிர்மலமாக உயிர்ப்பிக்குமானால், அதுவே குழந்தைகளை நேசிக்கிறவர்களின் ஆகச் சிறந்த எதிர்காலக் கனவாக இருக்கும்.