2009

2009

நாளை மறுதினம் சூரியகிரகணம் – வெற்றுக் கண்களால் பார்க்காதீர்கள்!

lanka-map-02.jpgசூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுத்துனர்கள் (welders)  பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார். 

கற்பிட்டி சுற்றுலா வலய ஆரம்பப் பணிகளை ஆறு மாதத்திற்குள் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgபுத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் எதிர்வரும் 06 மாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கற்பிட்டியினை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நான்காயிரம் ஏக்கர் பரப்புக் கொண்ட பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம் செய்யப்படவுள்ளது. உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் கவரும் வகையில் இதற்கான சூழல் அமைக்கப்படும். நவீன வசதிகளைக் கொண்ட நான்காயிரம் அறைகளுடன் கூடிய உல்லாச ஹோட்டல் ஒன்று இங்கே அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலா வலயத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை மேற்கொள்ளும் போது இப்பகுதியைச் சேர்ந்த அநேக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகெல்லாகம, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. பீ. ஜோர்ஜ் மைக்கல் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

bus.jpgசிசு செரிய” பாடசாலை பஸ் சேவை திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாடசாலை பஸ்களின் தொகை 522 ஆக உயர்கிறது. பாடசாலை பஸ் சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் 27 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனுராதபுரம் சீ. டீ. சீ. மண்டபத்தில் நடைபெற உள்ளதோடு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு தனியார் துறையுடன் இணைந்ததாக மேற்படி “சிசு செரிய” பாடசாலை பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பஸ்களை பாடசாலை பஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அலஹப்பெரும கூறினார்.

மேனன், அகாசி வருகை பயங்கரவாத ஒழிப்புக்கு எந்த பாதிப்பையும் தராது – போகொல்லாகம

rohitha-bougo.jpg
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடொன்றை செய்யும் பொருட்டே ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரான யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அகாசியின் இந்த விஜயத்தால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோரின் இலங்கை விஜயங்களுக்கான நோக்கம் மற்றும் அவர்கள் நடத்திய சந்திப்புகள், இவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறினார். அத்துடன், இரு தரப்பு உறவுகள், இலங்கை மற்றும் சார்க் வலய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தவே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இதன்போது மேலும் விளக்கமளிக்கையில்;  “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவானது முன்னொருபோதும் இல்லாத வகையில் சுமுகமான ஒத்துழைப்புடன் இருப்பதாக இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இருதரப்பு பேச்சுக்களுக்கான அழைப்பு எப்போதும் திறந்தே உள்ளது.  இதற்கமைய இருநாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய அரசியல், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி நன்கு மதிப்பீடு செய்து அது தொடர்பாக இருதரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் ஆகியவையே சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இதேநேரம், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜப்பானினால் மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பாடுகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடொன்றை செய்யவும், அது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசவுமே யசூசி அகாசி இலங்கை வந்திருக்கிறார்.  இந்த பேச்சுகளினால் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடங்கலோ ஏற்படாது. அகாசி இந்த விஜயத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார்’ என்றார்.

ஊடகச் சுதந்திரத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தச் செயற்பாட்டையும் அரசு அனுமதிக்காது

rivira-editor-02.jpgஊடகச் சுதந்திரத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த விதமான செயற்பாட்டையும் அரசாங்கம் அனுமதிக்காது; செய்தியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் குற்றவாளிகளைக் கண்டறிய புலனாய்வுத்துறை விசாரணைகள் முனைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும் ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கவும், ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கும் பிரபுக்களின் பாதுகாப்பு வழங்கி பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், ஊடகச் சுதந்திரம் பாதிப்படைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அண்மைய சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

11 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. ஊடாக வன்னிக்கு

red_cross.jpg
வவுனியாவிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் 11 உடல்கள் நேற்று வியாழக்கிழமை காலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ஐ.சி.ஆர்.சி.) வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கடந்த சில தடவைகள் வவுனியா, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள், வன்னியில் புலிகளுடனான தொடர்புகள் சரிவர இல்லாத காரணத்தால் ஐ.சி.ஆர்.சி.யினால் எடுத்துச் செல்லப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தந்த ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் உடல்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் (22) முதல் ஐ.சி.ஆர்.சி.யினர் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதேநேரம், படையினரால் மேலும் பத்து புலிகளின் உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆளணி, நிருவாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

karuna.jpgகல்முனை பிரதேச செயலகங்களில் தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தித்தல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முரளிதரன் எம்.பி. மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பான விசேட கூட்டமொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.  பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் முழுமையாக நிர்வகிக்கத்தக்க வகையிலும் செயற்படுத்தும் வகையிலும் ஆளணி நியமனம் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவுபடுத்தி செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி உட்பட பல கிராம பெரியார்களும், கல்விமான்களும் கலந்துகொண்டனர்.

ரீ.எம்.வி.பி அரசியல் அமைப்பாக அதனை மாற்றிக் கொண்டுள்ளது – ஆயுதக் குழுவின் தேவை இல்லை என்கிறார் கருணா

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதக் குழுவொன்றை வைத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லாமற் போயுள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்றுத் (23.01.2009) தெரிவித்தார்.

தமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளதாலும், தாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கம் போதிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், தற்போது ஆயுதக் குழுவுக்கான அவசியம் இல்லையென்று தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் கடந்த டிசம்பர் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், தமது அமைப்பில் உள்ள சகல சிறுவர்களையும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

அதேநேரம், இன்னும் சில வாரங்களில் மேலும் 20 சிறுவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் முரளிதரன் எம். பி. கூறினார்.

சிறுவர்களை விடுவிக்கும் இந்த உடன்பாட்டின்படி நேற்று முன்தினம் 14 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்கவென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையில் தனியான அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் கம்லத், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டியுமலே ஆகியோரும் தகவல்களை வழங்கினர்.

இங்கு தொடர்ந்து தகவல் வழங்கிய முரளிதரன் எம். பி, எமது அமைப்பில் சிறுவர் போராளிகள் இல்லை. எனினும் பொதுவான விடயங்களைக் கவனிப்பதற்காக சிறுவர் பிரிவொன்றை நடத்தி வந்தோம். இப்போது அதற்கான தேவை இல்லை. சகலரையும் விடுதலை செய்து புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த போது ஆறாயிரம் போராளிகளை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினேன். இதில் 1600 பேர் சிறுவர்களாவர். எமது அமைப்பில் எஞ்சியுள்ள போராளிகளை அரச படைகளில் இணைந்து பணியாற்ற வழியேற்படுத்தியிருக்கிறோம். விரும்பியோர் வெளிநாடு செல்லலாம். அல்லது சமூகத்தில் இணைந்து கொள்ளலாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒரு புதிய மாற்றத்தைக்கான விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பிரதிநிதி பிலிப் டியுமலே, சிறுவர் போராளிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கமும் ரீ. எம். வீ. பீ. யினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையைப் பாராட்டுவதாகக் கூறினார். மேலும் 53 சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், வடக்கில் 93 சிறுவர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வதாகக் கூறிய யுனிசெப் பிரதிநிதி, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார். சிவிலியன்களைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். 

ரி.எம்.வி.பி. சிறுவர் போராளிகள் 15பேர் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சிறுவர் போராளிகளுள் ஒரு பகுதியினர்  (22.01.2009) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பிரதி நிதிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

தமிழ் இயக்கங்களிலுள்ள சிறுவர் போராளிகளை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 22.01.2009 காலை சிறுவர் நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இச்சிறுவர் நலன்புரி நிலையத்தைத் திறந்து வைக்கும் வைபவத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், பிலிப் பேண்டுமாறோ, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்புப் பணிப்பாளர் அன்ரூரோக்கியா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி செளலிட்ரஸ், நீதியமைச்சின் செயலாளர், சுகத்கமன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர், ஜெயம் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

சிறுவர் நலன்புரி நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர் போராளிகளை அவ்வமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி பிரதீப் மாஸ்டர் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எமது இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

அரசாங்கத்துடன் எமது கட்சித் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய இவர்களை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 25 சிறுவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று குறிப்பிட்டார். மட்டக்களப்பு கச்சேரியில் நேற்றுக்காலை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் நலன்புரி பிரிவில் தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளராக அ. கோடீஸ்வரன் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்

ஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

handcuff.jpgஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்தி சிங்கப்பூர் செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (22) காலை நடைபெற்றது. அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
கொழும்பு 7ல் இயங்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் மூலமாகவே இந்த ஊடக அடையாள அட்டை தனக்குக் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிரகாஷ் சக்திவேலுப்பிள்ளை ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்துள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமையாலும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மற்றும் நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் முழுமையான விசாரணைகளுக்குப் பின்னர் இன்னும் ஓரிரு தினங்களில் முழு விபரங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை பயங்கரவாதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முயன்று வருவதால் ஊடகவியலாளர்கள் மிகவும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், தாம் சந்திக்கும் புதிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக சந்தேகம் ஏதும் நிலவும் பட்சத்தில் ஏனையோரின் நன்மையை கருத்திற்கொண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சகல ஊடகவியலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

கின்னஸ் சாதனைக்கு ரணில் முயற்சி சபையில் தினேஷ் கிண்டல்

denees.jpgஎதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக 15 தேர்தல்களில் தோல்வி கண்டவர். அவரது கட்சியான ஐ.தே.க. அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதும் சாதனையாகிறது.  இதனடிப்படையிலேயே ரணில் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் “கின்னஸ்’ புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றார். விரைவில் அவரது ஆசை நிறைவேறட்டும். அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த ஐ.தே.க.வினர் அதனை விவாதத்திற்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசைப் பற்றி குறை கூறவோ குற்றம் சாட்டவோ எதுவும் இல்லாததாலேயே அவர்களால் அதனை விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை. இதனால்தான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதுமாக ஐ.தே.க.தடுமாறிக் கொண்டிருக்கிறது.