சிசு செரிய” பாடசாலை பஸ் சேவை திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாடசாலை பஸ்களின் தொகை 522 ஆக உயர்கிறது. பாடசாலை பஸ் சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் 27 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனுராதபுரம் சீ. டீ. சீ. மண்டபத்தில் நடைபெற உள்ளதோடு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு தனியார் துறையுடன் இணைந்ததாக மேற்படி “சிசு செரிய” பாடசாலை பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பஸ்களை பாடசாலை பஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அலஹப்பெரும கூறினார்.