சூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொறுத்துனர்கள் (welders) பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார்.