2009

2009

புலிகளின் தற்கொலை பயிற்சி முகாம் முல்லை காட்டுப் பகுதியில் கண்டுபிடிப்பு – உதய நாணயக்கார

_army.jpgபுலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய பாரிய பயிற்சி முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு அடர்ந்த காட்டுப் பகுதியில் புலிகளால் மிகவும் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாரிய முகாமை இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் இந்த முகாமை பயன்படுத்தியிருக்கலாம் என்று படையினர் நம்புவதாக தெரிவித்த பிரிகேடியர், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்த உடற் பயிற்சி நிலையம், விரிவுரை மண்டபம், நிலக்கீழ் முகாம் மற்றும் பெருமளவிலான உணவு களஞ்சியத் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படையினரின் கடுமையான தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் பின்வாங்கிச் சென்ற புலிகள் விட்டுச்சென்ற ஜீப் ரக வண்டியொன்றையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஜீப்பை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோ அல்லது அவருக்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவரோ கள நிலைமைகளை ஆராய்வதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் படைத் தரப்பினர் சந்தேகிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து சென்றிருக்கலாமென படையினர் நம்புவதாக தெரிவித்த அவர், புலிகளை தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுடன் பிரபாகரன் இறுதி இராப் போசனங்களை இங்கிருந்தே எடுத்துள்ளமைக்கான அறிகுறிகளும், அடையாளங்களும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள பல்வேறு அறைகளில் ஒரு அறையில் தற்கொலை தாக்குதலை நடத்தி உயிரிழந்த புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவு உறுப்பினர்களின் படங்களும் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னி இறுதிக் கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் சாலை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் மோதல்களுக்குப் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஐந்து சடலங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

ரி – 56 ரக துப்பாக்கிகள் –  தற்கொலை அங்கிகள், தொலைத் தொடர்பு கருவிகள் – மோட்டார் சைக்கிள் –  40 மி. மீ. ரக குண்டுகள், மிதிவெடிகள் – பிஸ்டல்கள், 120 மி. மீ. ரக மோட்டார் குண்டு –  12.7 மி. மீ. ரக விமான எதிர்ப்பு பீரங்கி –  பெருந்தொகையாக வெடிக்க வைக்கும் கருவிகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கிற்கு சுபீட்சத்தை வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – ஜனாதிபதி

4-2-2009.jpg
பயங்கரவாதத்தின் பிடியில் பல்லாண்டு காலமாக அகப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் சகல மக்களும் அம் மக்களுக்கான சுபீட்சத்தையும் அன்பையும் நட்பையும் வழங்க முன்வருவதுடன் சொல்லாலும் செயலாலும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது தாய்நாடு ஒரே கொடியின் கீழ் வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், தாய்நாட்டுக்குத் தம் கடமைகளை நிறைவேற்ற சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை; யுத்தத்தின் காரணமாக சொந்த நாட்டை விட்டுச் சென்று வெளிநாடுகளில் வசிக்கும் சகல இலங்கைப் பிரஜைகளையும் மீண்டும் தாய்நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றையும் விடுத்தார்.

இலங்கையின் 61வது சுதந்திர தின பிரதான நிகழ்வு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு உள்நாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

முழு நாட்டையும் பல தசாப்த காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்த பயங்கரவாதத்தை இரண்டரை ஆண்டுகால குறுகிய காலகட்டமொன்றில் முழுமையாகத் தோல்வியுறச் செய்ய எம்மால் முடிந்துள்ளது.விடுதலைப் புலி பயங்கரவாதம் வெகுவிரைவில் முற்றாக ஒழிக்கப்படும். எமக்கு முன்னால் தலைதூக்கியிருந்த பலம்வாய்ந்த எதிரியை தோற்கடிக்க முடிந்தமை பெருமையளிக்கின்றது. பல வருட காலங்களுக்குப் பின்னர் பிரிவினை வாத பயங்கரவாதத்தின் கரு நிழலை இல்லாதொழித்து நாட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்குப் படையினர் எமக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.

அண்மைக் காலமாக உலக நாடுகளில் பல பயங்கரவாத அமைப்புக்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் பயங்கர வாதத்தைத் தோற்கடித்து தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பல அரசாங்கங்கள் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்று கூறிய போதிலும் தற்போதைய அரசாங்கம் இரண்டரை வருட காலத்திற்குள் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முப்படையினரும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். படையினரின் அர்ப்பணிப்பே தேசியக் கொடி நாடெங்கும் பறப்பதற்கு வழிவகுத்துள்ளது.

உலகில் எத்தனை நாடுகள் இருந்தபோதும் தமது தாய்நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது. அதனால் கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தச் சூழலினால் நாட்டை விட்டுச்சென்று வேற்று நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பும் காலம் உருவாகியுள்ளது. இதற்கிணங்க, சொந்த நாட்டை விட்டுச் சென்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், உள்ளிட்ட சகல இலங்கையர்களும் மீண்டும் தாய்நாட்டுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

தேசியக் கொடி தற்போது புத்தெழில் பெற்றுள்ளது. தேசிய கீதத்துக்குப் புதிய பலம் கிடைத்துள்ளது. தாயகம் ஐக்கியப்பட்டுள்ள இவ்வேளையில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவது அவசியம். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதோடு சகல சவால்களும் முடிவடைந்துவிடப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்குப் பொருத்தமான கல்வியை வழங்க வேண்டியுள்ளது.

வறுமை தலை தூக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. சிந்தனை மாற்றம் கொண்ட அரச சேவையை உருவாக்குவதும் எமது முக்கிய சவாலாகும். ஊழலுக்கும் வீண் விரயத்திற்கும் இடமளிக்காது சிறந்த அரச சேவைக்காகச் சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்கள் பூர்த்தியாகிய போது எமது நாட்டைப் பிரித்து கூறு போடுவதற்கு முயற்சித்த பிரிவினைவாதமொன்று தலைதூக்கியது. கடந்த ஆண்டுகளில் நாம் சுதந்திரத்தினை நினைவு கூர்ந்த போதும் சட்டவிரோத பிரிவினைவாத பயங்கரவாதத்துடன் நாம் வாழ்ந்ததால் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவு கூர முடியவில்லை. கடந்த காலங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளிலும் இருந்த நன்மை தீமைகளை ஆராய்ந்து புதிய வழிமுறை யொன்றை மேற்கொள்ள நாம் உத்தேசித்துள்ளோம்.

அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்போது பிளவுபடாத நாடு, பெரும்பான்மை கருத் தொருமைப்பாடு, கெளரவமான சமாதானம் ஆகியன இயல்பாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து வருவோரின் நலன்பேண ரூ. 300 மில். ஒதுக்கீடு – அமைச்சர் ரிஷாட்

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து அரசகட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகின்றவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் அடிப்படைத் தொகையாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை 1,180 குடும்பங்களைச் சேர்ந்த 2,913 பேர் வவுனியா பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 940 குடும்பங்களைச் சேர்ந்த 2,131 பேர் நெலுக்குளம் நலன்புரி நிலையத்திலும் 240 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் மனிக்பாம் நலன்புரி நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைக் குடியமர்த்துவதற்காக 350 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான வீடுகள் வழங்கப்படுவதுடன் உணவுப் பொருட்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.  இதேபோன்று சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு வருகின்ற அனைவருக்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயரும் அனைவருக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 900 ஏக்கர் நிலப்பரப்பில் 24 ஆயிரம் வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இடம்பெயரும் அனைவருக்கும் ஏனைய பகுதிகளில் வசிக்கின்றவர்களைப் போன்று வாழ உடனடியாக சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டார்.

கிளிநொச்சி, முல்லை, பூநகரி, பரந்தனில் சுதந்திர தின நிகழ்வுகள்

kilimullai.jpgஇலங்கையின் 61வது சுதந்திர தின வைபவங்கள் வன்னி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்றுக் காலை கொண்டாடப்பட்டது.

புலிகளின் பிடியிலிருந்து அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பூநகரி, மற்றும் ஆனையிறவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர். பூநகரி சந்தியில் படையினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சமாதான பூங்காவையும் ஞாபகச்சின்னமாக அமைக்கப்பட்டுள்ள வெண்புறாவைக் கொண்ட நினைவுத் தூபியையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு திறந்து வைத்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை அணிவகுப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

கிளிநொச்சி, முல்லை அரச ஊழியர்கள் செட்டிகுளம் பிரதேச செயலகத்துடன் இணைப்பு

risard.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் உடனடியாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு தற்காலிக கடமைக்கு செல்லுமாறு மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள அனைத்து அரச அலுவலர்களும் செட்டிகுளம் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட மகாநாட்டில் தெரிவித்தார்.

398 சிவிலியன்கள் இராணுவத்திடம் நேற்று தஞ்சம்

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த 398 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஓமந்தை மற்றும் சாலைக்கு மேற்கு பிரதேசங்களை நோக்கி மூன்று கட்டங்களாக 398 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சாலைக்கு மேற்கே உள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 92 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 32 பெண்களும், 30 ஆண்களும், 30 பிள்ளைகளும் அடங்குவர். இதேவேளை, மேலும் 15 பேர் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர். இதேவேளை, ஓமந்தை சோதனைச் சாவடியை நோக்கி 23 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். 22 பெண்கள், 20 ஆண்கள், 23 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களும் இவர்களில் அடங்குவர்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள 184 சிவிலியன்களும் வழக்கமான விசாரணைகளுக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக உலகநாடுகளுடன் தொடர்புகொள்ள இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும், அதிகாரப்பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திமுக செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட; இப்போது அமைக்கப் பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராக இருப்பார். தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாக இருந்து இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள ஆர்வலர்களோடு தொடர்புகொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதியரசர்கள் மோகன், பி.ஆர். கோகுல கிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.கே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்த அமைப்பு எண்.24, காந்தி மண்டபம் ரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா என்ற முகவரியில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக சாதனையை சமப்படுத்தியுள்ள முத்தையா முரளிதரன்

muttaih_muralitharan.jpgஇலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் பெற்ற 502 விக்கெட்டுகளை நேற்று முன்தினம் இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ்சிங்கின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் 502 விக்கெட் சாதனையை சமப்படுத்தியுள்ளார். முத்தையா முரளிதரன் குறைந்த போட்டிகளில் பங்கு பற்றியே இவ் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்திற்காக இனவாதம், மதவாதத்தை தூண்டிவிடக் கூடாது – எஸ்.பி.திஸாநாயக்க

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தை பெறமுடியும். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளால் நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் வாதிகளும் குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மை சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பீ.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நானுஓயா காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஐ.தே.கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

வடக்கு மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள அதிகாரப் பகிர்வு கேட்டுவந்தனர். அதை வழங்க எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் அதிகாரப் பகிர்வை வழங்க முன் வந்தனர். ஆனால் அன்றிருந்த ஒரு சில பிற்போக்கு மதகுருமார்கள் தடுத்தனர். 1957 ஆம் ஆண்டு அமரர் பண்டார நாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூட இன்று இருக்கின்ற பிரதேச சபைக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை.

1967 ஆம் ஆண்டில் அமரர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த அரசியல் சட்டத்திலும் இன்று நகரசபைகளுக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை. இந்நாட்டில் தொடர்ந்து அதிகார பகிர்வு இல்லாததால் தனிநாடு கேட்டு வடக்கில் தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாகினார்கள். இதனாலேயே இன்று இந்நாடு யுத்தத்தால் அழிந்து கொண்டிருக்கின்றது. இன்று இந்நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர்கள் வாழுகின்றனர். அவர்களுக்குள்ள உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். அப்போது தான் நாடு பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழமுடியும்.

இன்று மலையக பெருந்தோட்ட மக்கள் துன்பம், துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை வழிநடத்தும் தலைவர்கள் அரசாங்கத்துக்கு அடிமைகளாக இருப்பதால் இம்மக்களின் பிரச்சினைகளை தட்டிக் கேட்டு தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறினார்.

“பெருந்தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்’

Estate Workersபெருந் தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை கீழ் மட்ட அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும் என்று பிரிடோ வெளிக்கள இணைப்பதிகாரி எஸ். கே. சந்திரசேகரன் தெரிவித்தார். பிரிடோ பணியாளர்களுக்காக அட்டன் பிரிடோ பணிமனையில் பிரிடோ தலைவர் மைக்கல் ஜோக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; அனைத்துலக தேயிலை தினத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான கருப் பொருள் பெருந்தோட்ட பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது என்பதாகவும் அந்த நோக்கத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வருட தேயிலைதினத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நோக்கங்களை அடைய தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தீர்மானங்கள் வெற்றுத் தீர்மானங்களாக இருக்குமேயன்றி மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை.

அதேவேளை, தங்களால் அந்த பொறுப்புகளை திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியிலும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக முக்கியமான முதற்கட்ட நடவடிக்கை பெண்களை பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கீழ் மட்ட அதிகார அமைப்புகள் நிர்வாக பொறுப்புகளில் நியமிப்பதாகும். பெருந்தோட்டங்களில் கோயில் நிர்வாக சபைகள், முன்பள்ளி அபிவிருத்தி சபைகள்,தொழிற்சங்க அமைப்புகள், மரண உதவி சங்கங்கள் என்பன போன்ற அதிகாரத்தை பிரயோகிக்கும் எல்லா அமைப்புகளுக்கும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும்.

அரச பாடசாலை அபிவிருத்தி சபைகளிலும் நிர்வாக குழுக்களில் பெண்கள் நியமிக்கப்படவேண்டும். முதலில் இவ்வாறான அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் சமூக அங்கீகாரம் பெற உதவுதல் வேண்டும். இந்த முதற் படியை அடைய பெண்களுக்கு உதவி செய்யாமல் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு பற்றி பேசுவதில் அர்த்தமில்ல