இலங்கை யில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர் அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம். தனக்கு வாக்களித்த மக்களை தனியே விட்டுவர மனம் இல்லாதாதால் தான் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை என்று கூறுகிறார் அவர்.
அவலங்கள் ஏற்பட்ட போதிலும் மக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் தினமும் சராசரி 30 முதல் 35 பேர் வரை கொல்லப்படுகின்றனர். அவ்வாறு மரணங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கு வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற விரும்பவில்லை.தொடர்ந்தும் அங்கேயே வசிக்க விரும்புகிறார்கள். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இப்படிக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வசிக்கின்றனர். அப்பகுதிகளில் உணவு இல்லை என்றே கூறலாம். ஒரு நாளுக்கு மூன்று லொறி களில் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை போதுமானவையல்ல. இதுவரை 5 லொறி உணவுப் பொருள்களே அனுப்பப்பட்டுள்ளன என்றார் கனகரத்தினம்.
முல்லைத்தீவில் வாழும் மக்களின் நிலை தொடர்பாக பி.பி.ஸி. செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறுகையில்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முன்னர் வசித்தனர். இப்போது இறந்தவர்கள், வெளியேறியவர்களைத் தவிர்த்து 3லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்றார்.
விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். வெளியேறுவோரை சுட்டுக் கொல்கின்றனர் எனக் கூறப்படுகிறதே எனக்கேட்ட போது அது தவறான தகவல் எனவும் வெளியேற முனைந்த மக்கள் இராணுவப் பகுதிக்கு செல்லும் போது போரின் இடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை 90வீதம் தாம் நம்புவதாகவும் என்றும் தெரிவித்தார்