2009

2009

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென 3 ஆயிரம் தற்காலிக வீடுகளை அமைக்க திட்டம்

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு செட்டிகுளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தற்காலிக மூவாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க ஐக்கிய நாடுகள் அகதிகளுக்குரிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில், இடம்பெயர்ந்து வரும் மக்கள் தனித்தனி குடும்பங்களாக தங்கவைக்கப்படுவர். கடந்த ஞாயிறு வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

அத்துடன், மேலும் அதே இடத்தில் 200 ஏக்கர் நிலம் துப்புரவு செய்யப்பட்டு இதே போன்றதொரு திட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையும் இங்கு முன்வைக்கப்பட்டது. அமைக்கப்படவுள்ள தற்காலிக வீடுகள் குறைந்த செலவில் ஏற்படுத்தப்படும். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தற்போது 13 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மேலும், 70 ஆயிரம் மக்கள் வவுனியா வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நாம் அடிக்கடி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்திவருகின்றோம். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களுக்கு உணவு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே வழங்கப்பட்டு வந்தது.

சில அசௌகரியங்களைத் தொடர்ந்து 100 பேரைக் கொண்ட ஒவ்வொரு குழுவினரை அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அவர்களே உணவு தயாரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உலக உணவு தாபனம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளையும் ஏனைய உப உணவு பொருட்களையும் வழங்கியுள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை அனுப்புகிறது இந்தியா

vanni-injured.gifஇலங்கை யில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவ, மருத்துவக் குழுக்களையும், தேவையான மருந்து மற்றும் உபகரணங்களையும் உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார் என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது. 

இலங்கையின் வடக்கே போர் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரும் நடைமுறைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.

அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியிருந்தது. அதுதொடர்பான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா உடனடியாக அவசரகால மருத்துவக் குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது. அந்த மருத்துவக் குழுவில், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

அத்துடன், தேவையான மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் இருக்கும். தேவையைப் பொறுத்து, அது மேலும் அதிகரிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிபிசி உலக சேவையின் சில பிரிவுகள் வேலை நிறுத்தம்

bbc.gifபிபிசி உலக சேவையின் தெற்காசிய பிரிவின் சில சேவைகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் ஆசிரிய பீட பணிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து இன்று 24 மணி நேர வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

ஹிந்தி சேவையின் முழுவதையும் இந்தியாவுக்கும், லண்டனில் இயங்கும் உருது மற்றும் நேபாள சேவைகளில் ஒரு பகுதியை முறையே இஸ்லாமாபாத் மற்றும் காத்மண்டு ஆகிய இடங்களுக்கும் மாற்றுவது, அந்தச் சேவைகளின் ஊடக சுதந்திரத்துக்கு பாதகமாக அமையும் என்று போராட்டத்தில் ஈடுபடும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாற்றம் அந்த சேவையின் ஊழியர்களின் பணி நிலைமை மற்றும் ஊதியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கான தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் உலக சேவையை அதனது நேயர்களுக்கு அருகில் கொண்டு செல்லும் என்று பிபிசி முகாமையாளர்கள் கூறுகிறார்கள்.

வங்கதேச கலகக்காரர்கள் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

buyinfromreuters.jpgவங்கதேச டாக்கா நகரில் கலவரம் நடத்திய படையினர் சரணடைந்துவிட்டதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது.  .

இருந்த போதிலும் சுமார் 130 அதிகாரிகளை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் சிலர் கலகக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும். கலவரத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்ட இராணுவத்துடன், பொதுமக்களும் சேர்ந்து, தெருக்களில் கூடி, இந்த நெருக்கடி தீர்ந்ததை கொண்டாடினார்கள்.

ஆயுதங்களைக் களையும் கலவரகக்காரர்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைச் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தமது ஊதியம் மற்றும் பணி நிலைமை குறித்து விசனம் தெரிவித்து, நேற்று கலவரம் செய்த டாக்கா எல்லைக்காவல் படையினரின் தலைமையகத்தை சுற்றி 14 யுத்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை, சூசையின் பதுங்குகுழி நேற்று கண்டுபிடிப்பு

uthaya_nanayakara_.jpgபுதுக்குடி யிருப்பு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் பாரிய தொழிற்சாலை மற்றும் கடற் புலிகளின் தலைவர் சூசையின் பதுங்கு குழி முகாம் ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த முகாமை சூசை பாவித்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக படைத் தரப்பினர் உறுதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த முகாமின் ஒரு பகுதி விமானப் படையினரின் விமானத் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், இராணுவத்தின் ஏழாவது சிங்க ரெஜிமண்ட் பிரிவினரும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை குண்டுகள், கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் நான்கு சடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையின் எல்லைப் புரத்திலேயே சூசை பாவித்த முகாம் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

mahi.jpgதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31வது அமர்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – கொன்ரினன்ரல் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கமவின் தலைமையில் நடைபெறும் ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இம்முறை ஏழு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் பிரதமராகவும் கடமையாற்றுவதால் இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இ. அஹமட் கலந்து கொள்கின்றார்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஏற்கனவே ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனி சந்திப்புகளை நடத்தி இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாதரன் பலாத்காரமாக கடத்தப்பட்டதாக ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

vithyatharan.jpgசுடர்ஒளி, உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் ஆயுதம் தாங்கிய குழுவினரால் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக ஐந்து ஊடக அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.  இது தொடர்பாக அந்த ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வித்தியாதரன் தமது உறவினரொருவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக கல்கிஸையிலுள்ள மலர்ச் சாலையொன்றுக்கு சென்றிருந்த போதே இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது இலங்கையில் ஊடகவியலாளர்களுக்குள்ள உயிராபத்து வரிசையில் மிக மோசமான நிகழ்வாகும். வித்தியாதரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எமது ஊடக அமைப்புகள் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொள்கின்றன.

தமது அலுவலக சகாக்கள் உட்பட பெருந்தொகையானோர் முன்னிலையில் வித்தியாதரன் இவ்வாறு கடத்தப்பட்டது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அவர் சிறிது நேரத்துக்குப் பின்னர் எம்முடன் தொடர்பு கொண்டு விசாரணைக்காகவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கு சில தினங்களுக்கு முன்னரும் இவரது பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்று தொடர்பாக இரகசியப் பொலிஸார் வித்தியாதரனை விசாரணைணக்குட்படுத்தினர். ஏதாவது ஒரு காரணத்துக்காக உரிய முறையில் கைது செய்யும் தேவை இருந்தாலும் இவ்வாறு தாக்கி பலாத்காரமாக கடத்திச்செல்லப்பட்டிருப்பது சட்ட விரோதமானதாகும்.

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் இலங்கையில் முக்கிய பத்திரிகையின் ஆசிரியரொருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றுமொரு பத்திரிகை ஆசிரியர் படுமோசமாகத் தாக்கப்பட்டார். இலத்திரனியல் ஊடகமொன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இருந்தும் இவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுமில்லை. இந்த சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இதுபோன்ற மோசமான வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதென்பதை குறிப்பிடவேண்டியுள்ளது.

இந்தப் பின்னணியின் கீழ் அரச அதிகாரியிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் நாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், வித்தியாதரன் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்ள எதுவித தடைகளும் இல்லாத நிலையில், இவ்வாறு பலாத்காரமாக கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார முறை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவு ஒழிக்க முடிந்தது – அமைச்சர் ஜீ.எல்.

glperisss.jpgநிறை வேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை இருந்ததாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு இலகுவாக ஒழிக்க முடிந்தது என வெளிநாட்டு வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார முறைமை இல்லாதிருந்திருப்பின் பயங்கரவாத ஒழிப்பு வெறும் கனவாகவே இருந்திருக்கும். நடந்து முடிந்த மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி இதனை வலியுறுத்தியும் உள்ளனர். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை மக்கள் அங்கீகரித்துள்ளமையையே கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

வடமேல், மத்திய மாகாணங்களில் 5 மாவட்டங்களிலும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை அரசாங்கம் வெற்றியீட்டியது. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியாகும். விகிதாசார முறையிலான தேர்தல் ஒன்றின் மூலம் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. 1978ம் ஆண்டுக்கு முன்பு உள்ளதைப் போன்று தொகுதிவாரியான தேர்தல் முறை இப்போது இருந்திருக்குமானால் ஜே.ஆர். ஜயவர்தனா பெற்ற ஆறில் 5 பெரும்பான்மையை விஞ்சிவிடும் அளவுக்கு அமோக வெற்றியை அடைந்திருக்கலாம். எதிர்வரும் மேல் மாகாணம் மட்டுமல்ல பொதுத்தேர்தல் ஒன்றிலும் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே வெற்றிபெறும்.

இன்றுள்ள விகிதாசார முறையிலான தேர்தல் முறையை எவரும் விரும்பவில்லை. எனினும் இந்த தேர்தல் முறையை மாற்றுவதற்காக அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவுக்குழு நியமிக்கப்பட்டாலும் இதற்கு மாற்டான ஒரு முறைமை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் முடியாதுள்ளது.

எனவே, எமக்கு கிடைக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு தேர்தல் முறைமையை மாற்ற முடியும் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கு முதலாவதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டது.

இதேபோன்றே வடக்கிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், பாரிய அபிவிருத்தி, மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்படும். இவற்றுக்கு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை அவசியமாகின்றது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவது நியாயமற்றது – யாப்பா

anura.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் குறைவின்றி செய்துகொண்டுள்ள இத்தருணத்தில் ஆதாரமற்ற இணையத்தளங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட பலர் நேரடியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் யார்? பொதுமக்கள் யார்? என்பது தொடர்பாக பிரித்தறிந்தவாறே படையினர் செயற்படுகின்றனர்.

ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி எமது மனிதாபிமான நடவடிக்கைக்கு தவறான கருத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.அத்துடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்போதே நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா மேலும் தெரிவித்தார்.

லலித் கொத்தலாவலவிற்கு விளக்கமறியல்:கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவு

lalith.gifகோல்டன் கீ நிதி மோசடி தொடர்பில் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதுடன் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவையும் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் கோல்டன் கீ வாடிக்கையாளர்களின் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை எதிர்வரும் 10 நாட்களுக்குள் செலுத்துமாறும் இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. செலிங்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலக்கு கோல்டன் கீ கடன் நிறுவன பணிப்பாளர் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு, உரிமையாளர் என்ற அடிப்படையில் லலித் கொத்தலாவலயின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.