2009

2009

கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது

கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  இந்த விடயத்தை குறிப்பிட்டு அவர், வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதில்,கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு அமெரிக்க அதிகாரிகள், தமது மருமகனின் தொலைபேசியின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சரத் பொன்சேகா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘கலைஞர் தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.’ வீ ஆனந்தசங்கரி தலைவர் த.வி.கூ

Anandasangaree V30-10-2009

மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை

பெருமதிப்புக்குரிய ஐயா,

தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன்.  எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரயோகித்து இலங்கை அரசுக்கு பிரச்சினையை தீர்க்க உதவுமாறு வேண்டியிருந்தேன். அத்தகைய கடிதங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைத்துள்ளேன். இனப்பிரச்சினைத் தீர்வு இந்திய அரசியல் சாசனத்தின் முன் மாதிரியாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். சிறிதும் எதிர்பாராத இடங்களில் இருந்தும்கூட அந்த ஆலோசனைக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையொத்த அதிகாரப்பகிர்வு இலங்கையின் மாகாணசபைகளுக்கு வழங்கினால் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு இலங்கைவாழ் மக்களின் பெரும்பாலானோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதோடு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினைக்கு  தீர்வு காண உதவிய பெருமையும் தமிழகத்திற்கு சேரும். அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தபோது விரைவில் இலங்கையிலிருந்து ஒரு உயர்மட்டக்குழு புதுடில்லிக்கு வர இருப்பதாகவும் அவர்களுடன் முக்கிய இரு பிரச்சினைகளான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம்  போன்றவை பற்றி பேசும் சந்தர்ப்பம் உண்டென குறிப்பிட்டதாக அறிகின்றேன். இந்த விடயமே இக் கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது.

50 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன் என்பது பற்றியும் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முதற் காரணமாக இருந்த பிரஜா உரிமை சட்டம் 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதும், 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டம் ஆகியன மேலும் நிலைமை மோசமடைய காரணமாக இருந்த இக்காலகட்டத்தில் நான் வாழ்ந்தவன் என்பதால் இவை பற்றி நன்கறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் கடும் போக்காளர்களின் செயற்பாட்டால் குழப்பத்திற்குள்ளாகி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்;டதோடு மறுநாள் அதன் தலைவர் இறந்ததுடன் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது. மொத்த விளைவு இலங்கையின் 25 மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 08 மாவட்டங்கள் அழிந்தன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் எதுவித வேறுபாடின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொது சொத்துக்களும் அரச சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏனைய சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லீம், தமிழ் மக்களின் உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் மிகக் கூடுதலானவை எனக் கூறலாம். கிழக்கு மாகாணத்தில் 45,000 பேரும் வட மாகாணத்தில் அதே போன்ற தொகையினர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அரச தரப்பு போர் வீரர்களின் மனைவியரும் பெருமளவில் விதவையாக்கப்பட்டுள்ளனர்.

அநாதையாக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்ததல்ல. இன்றும் கூட 1100 க்கு மேற்பட்ட, முகாம்களில் உள்ள அநாதைகளை பொறுப்பேற்க ஒரு சிறு உறவினர்களைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் இறந்துள்ளனர். அனேகர் தம் கால்கள், கைகளையும், கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், தம் நெருங்கிய அன்பு உள்ளங்களையும் இழந்துள்ளனர். நம்பிக்கையானதொரு தகவலின்படி முகாம்களில் பத்துக்கு ஒருவர் அங்கவீனர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மீன் பிடி, விவசாயம்,  பல்வேறு தொழில்கள்  பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக நிறுத்தப்பட்டும் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்ட மக்கள்  முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்த போதும் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்;தவித பாகுபாடின்றி அரசு அப் பிரதேசத்திற்கு உணவு அனுப்பியது. மக்களும் தம் சொந்த முயற்சியால் கஷ்டமின்றி வாழ்ந்தனர். அநேகர் லொறி, ட்ராக்டர், கார், பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் சைக்கிள்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். கணிசமான தொகையினர் பாற்பண்ணை, கோழிப்பண்ணை  நடத்தியதோடு பெருமளவில் விவசாயமும் மேற்கொண்டனர். இன்று இவைகள் அனைத்தும் அற்றுப் போயின.

இடம் பெயர்ந்த மக்கள் இடத்துக்கு இடம் மாறி இறுதியில் உடைமைகள், அத்தனையையும் இழந்தனர். சிலர் தமது மனைவியர், அன்பு பெற்றோர், மக்கள் ஆகியேரை இழந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்ததும், அரசால் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவேளை அவர்கள் எதுவுமற்றவர்களாகவும், உடுத்த உடையுடனும் வந்து சேர்ந்துள்ளனர். இரு மாதத்திற்குள், அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்ததன் பின், அத்தனை பேரும் பரம ஏழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட துன்பங்களை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பலாத்காரமாக எதுவித தேவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு;ள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் முகாம்களில் இருந்து தப்பி சென்று விட்டனர். 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் அப்பாவி பிள்ளைகள் 10,000 இற்கு மேற்பட்டோர் புலிகளின் சிறுவர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகளுக்காக புனர் வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று பாடசாலைகளில் கல்வி போதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கல்வியில் மிகவும் திறமைசாலிகளாக முன்னேற கூடியவர்கள். அப்பாவிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற வேளையில் உண்மையான குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.  வயதில் முதிர்ந்தோர், கர்ப்பிணி தாய்மார்கள், பிள்ளைகள், காயமுற்றோர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியாததொன்று.  அரசாங்கம் தற்போது முகாம்களில் உள்ளவர்களை பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்துவதற்காக விடுவித்து வருகின்றது. அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு போதுமான உலர் உணவு, விவசாய கருவிகள் சிலவையும், சொற்ப உதவி பணத்தொகையும் மட்டும் வழங்குவது போதுமானதல்ல. சகல இடம் பெயர்ந்தோருக்கும் அவர்களுடைய இழப்புக்களுக்கு ஏற்ப நட்டஈடு வழங்ப்பட வேண்டும். தங்களின் பங்களிப்புடனேயே இவர்கள் நட்டஈடு பெறுவது சாத்தியமாகும்.

நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்கே யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன் வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய தமது அரசிலமைப்பை உருவாக்கியுள்ளமையால் அம் மாதிரியான அமைப்புமுறை “ஒற்றையாட்சி” “சமஷ்டி” ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளை தாங்கள் ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாக கேட்டுக் கொள்கிறேன். தங்களை சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

புலமைப் பரிசில் பரீட்சை – வவுனியா நிவாரண கிராமங்களில் 507 மாணவர்கள் சித்தி : புன்னியாமீன்

000181009.jpgதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. எமது வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது 300 மாணவர்கள் சித்தியடைந்தால் போதுமென்ற இலக்கில் தான் நாம் ஆரம்பித்தோம். நாம் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

2009 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 2009 ஒக்டோபர் 02ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி மூலம் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி பின்வருமாறு அமைந்திருந்தது. கொழும்பு / கம்பஹா / களுத்துறை / கண்டி / மாத்தளை/ காலி/ மாத்தறை/ குருணாகல்/ கேகாலை மாவட்டம் 141 புள்ளிகள். நுவரெலியா 137 வவுனியா – 136,  அம்பாறை 139, திருகோணமலை – 138,  புத்தளம் 137, அநுராதபுரம்138, பொலன்னறுவை 140,  பதுளை 138, மொனராகலை 135, மன்னார் 139 இரத்தினபுரி 134, மட்டக்களப்பு 139

வன்னி நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டிருந்தமையினாலும் 6 மாதங்களுக்கு மேல் கல்வியை தொடராமல் இருந்தமையினாலும்,  பரீட்சை நடைபெறவிருந்த காலகட்டத்தில்கூட நிவாரணக் கிராமங்களினுள் வெள்ளப் பாதிப்புக்குட் பட்டிருந்தமையினாலும் நிவாரணக் கிராமங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே பரீட்சைத் திணைக்களம் நிவாரணக் கிராமங்களில் வசித்த மாணவர்களின் வெட்டுப்புள்ளியை 111ஆகக் குறைத்தது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இங்கு மன்னார்,  வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,  இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.

இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

5413 மாணவர்களது பெறுபேறுகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் பெருந் தொகையானோர் யாழ்ப்பாணம்,  மன்னார், திருமலை,  மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென அனுப்பப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன் சென்றுள்ள பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களது சொந்த மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களூடாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழ்மொழி மூலமாக யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்தார். இந்த மாணவனும் சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருகுணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

சாதாரண நிலையில் போட்டிப் பரீட்சையான புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களின் நிலையைவிட வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நிலை மிகமிக பரிதாபகரமானது. பல்வேறுபட்ட மானசீகப் பிரச்சினைகள் மத்தியிலும் போதிய கல்வி போதனைகள் இன்றிய நிலையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயமே.

இம்மாணவர்கள் அனைவருக்கும் தேசம்நெற்,  சிந்தனைவட்டம் இவற்றின் நிர்வாகத்தினரும் தேசம்நெற் வாசகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றனர். அதேநேரம்,  பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் இம்மாணவர்களை வழிநடாத்திய நிவாரணக்கிராம ஆசிரியப் பெருந்தகைகள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை – சிவத்தம்பி

24prof-karthgesu.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. அவர் மீது புலம் பெயர்ந்த தமிழர்கள்  அதிருப்தியுடன் உள்ளனர் என்று ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் போக்குக் குறித்து தமிழ் மக்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பை இது தோற்றுவித்துள்ளது.

நான் இம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்க கால அவகாசம் உள்ளது. மாநாட்டில் நான் கலந்து கொண்டால் இலங்கைத் தமிழர்  பிரச்சினை பற்றியும் தமிழக முதல்வருடன் விவாதிப்பேன். மாநாட்டில் நான் கலந்து கொள்வேன் என்று தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார். ஆனால் அவர் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது என்றார் சிவத்தம்பி.

யாழ். முஸ்லிம்கள் மீள் குடியேற எவ்விதத் தடையுமில்லை – அமைச்சர் டக்ளஸ்

011109dag.jpgபலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேற எவ்வித தடையு மில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“யாழ். முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து குடியேறலாம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி கெளரவமான முறையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்களோ, அதேமுறையில் வாழ அம்மக்கள் மீளக்குடியமர வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

பலவந்த வெளியேற்றமும் கெளரவமான மீள் குடியேற்றமும் “எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது.

மக்கள் பணிமனை நேற்று முன்தினம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கெளரவமான மீள் குடியேற்றம் என்ற சொற்பதம் இங்கு உபயோகப்படுத் தப்பட்டிருப்பினும் இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாதென்றும் ஏனெனில், இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எப்போதும் வந்து இங்கு குடியேறலாம் என்றார்.

இதற்கு யாரும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களது இருப்பிடங்கள் அம்மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை யாரும் தட்டிப் பறிக்க இயலாது என்றும் முஸ்லிம் மக்களது வீடுகளை எவராவது எடுத்திருப்பின் அவற்றை அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

நடந்தவற்றை மறந்து ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இங்குள்ள தமிழ் மக்கள் தங்களது சகோதர முஸ்லிம் மக்களை கெளரவமாக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மர்மப் பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயம்

மட்டக்களப்பு – உறுகாமம் குளத்தருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த மர்மப் பொருள் வெடித்ததில் சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பாதிக்கப் பட்டனர்.  இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

12 வயதுடைய செல்வராசா நிரோஷன் மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிவசங்கர் என்பவர்களே காயமடைந்தவர்கள்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்: மாணவர் 67 இரத்மலானை இந்துவுக்கு அனுப்பி வைப்பு

011109.jpgவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் நேற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது புலிகளால் பலாத்காரமாக படைக்குச் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தங்களது கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பூந்தோட்டம் முகாமிலிருந்து 211 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 81 மாணவர்களும், 63 மாணவிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்றுக் காலை 7.30 மணிக்கு பூந்தோட்டம் முகாமிலிருந்து 23 மாணவிகளும் 44 மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா? : ரி சோதிலிங்கம்

வன்னி முகாம்களில் உள்ள மக்களுடன் நாம் தொடர்ச்சியாக உரையாடி வருவதையும் எம்மால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருவதையும் தேசம்நெற் வாசகர்கள் அறிந்திருப்பீரகள். அவர்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும் போது நாம் வழங்கிய உதவிகள் மிகச் சொற்பம். இந்த உதவிகள் அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதிலும் எமது குற்ற உணர்வுகளை குறைத்துக் கொள்ள உதவியது. நாம் தொடர்ச்சியாக உரையாடும் போதுதான் புலம்பெயர்ந்த மக்கள் எவ்வளவுதூரம் வன்னி முகாம் மக்களில் இருந்து அன்னியப்பட்டு உள்ளார்கள் என்பதை உணர முடிந்தது. அந்த மக்களிடம் உள்ள அரசியல் தெளிவும் இராஜதந்திரமும் எந்தப் புத்தகத்தை படித்தாலும் கிடைக்காது. அதனால்தான் மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று புரட்சியை முன்னெடுத்த கம்யூனிசத் தலைவர்கள் கூறி வைத்தனர்.

ஆனால் அங்கு புலிகள் மக்களை மந்தைகளாகவும் மண்மூட்டைகளாகவும் பயன்படுத்தினர். இங்கு புலத்தில் புலி ஆதரவாளர்கள் புலிகளைக் காப்பாற்ற வன்னி மக்களை பிளக்மெயில் செய்தனர். கம்யூனிசத்தை பின்பற்றுவதாகவும் புரட்சியை முன்னெடுப்பதாகவும் வாய்ச்சவடால் மட்டும் விட்டவர்கள், வன்னி மக்களை அரசின் கைகளில் முற்றாகத் தள்ளிவிட்டனர். புலிகள் மக்களைப் பலிகொடுத்து இலங்கையரசை அம்பலப்படுத்த முயன்றனர். புலம்பெயர்ந்த இந்த வாய்ச்சவடால் புரட்சியாளர்கள் வன்னி முகாம் மக்களை அவலத்திற்குள் விட்டுவைத்தால் இலங்கையரசை அம்பலப்படுத்தலாம் என்றனர். இலங்கையரசை அம்பலப்படுத்த முன்னையவர்கள் மக்களைப் பலிகொடுக்கலாம் என்றனர். பின்னையவர்கள் அவ்வளவு மோசமில்லை வன்னிமுகாம் மக்களை அவலத்திற்குள்ளளேயே வைத்திருக்கலாம் என்றனர்.

நாங்கள் உரையாடியவரை வன்னி மக்கள் இலங்கையரசு பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் மிகத் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் இலங்கையரசு தமிழ் மக்களுடைய அரசு இல்லை என்ற உணர்வையே கொண்டுள்ளனர். அயல் வீட்டுக்காரன் பாதிக்கப்பட்ட தம்மையும் பிள்ளைகளையும் பராமரிப்பதாகவே மக்கள் உணருகின்றனர். தாங்கள் அடைக்கலம் பெற்ற இடத்தில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என உணர்கின்றனர். கிடைப்பதைப் பெற்று தங்களை ஸ்தீரப்படுத்தி தங்கள் காலில் நிற்க முயற்சிக்கின்றனர்.

தங்கள் காலில் உறுதியாக நின்று பலம்பெற்று தங்களை ஸ்தீரப்படுத்திய பின் அவர்கள் தாம் அயல்வீட்டாருடன் சேர்ந்து வாழ முடியுமா அல்லது தனித்து வாழ்வதா என்ற முடிவை எடுப்பார்கள். ஆபத்து என்று வந்தால் அவசரத்திற்கு ஓடிவருபவன் அயல்வீட்டான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள புலத்து தமிழர்கள் ஆபத்திற்கு வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளும் அந்த மக்களில் இருந்து அன்னியப்பட்டுவிட்டது. இவர்கள் ஒப்புக்கு மாரடிப்பவர்களாகி விட்டனர்.

கடைசியாக வன்னி வெள்ளை முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற யுத்தத்தின்போது புலிகளின் பக்கத்தே இருந்த பலர் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள் என்ற ஒரு கணிப்பு இருந்தது. அதுமட்டுமல்ல இவர்கள் மாவீரர் குடும்பங்கள் என்றபடியால் அவர்கள் அந்த வன்னிப் பிரதேசத்தையும் புலிகளையும் விட்டு வெளியேற முடியாமல் இருப்பவர்கள் என்றும் இவர்களில் பலர் புலிகளுடன் முக்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்ற கணிப்பும் இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இது உண்மையல்ல என்பதும் சாதாரண மக்களையே பலிக்காளாக்கினர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த கிளிநொச்சிக்கு இராணுவம் வந்தபோதே அப்போதிருந்து மக்கள் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்களினிடையேயும் புலிகளின் கட்டுப்பாட்டை மீறியும் பலர் ஓடித்தப்பியுள்ளனர்.

இறுதிக் காலத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் தமது அழிவுக்காலத்தின் போது மக்களை வலுக்கட்டாயமாக, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்ற தேசவிடுதலை கோசத்தில் இழுத்துப் போயிருந்த அந்த பிள்ளைகளின் தாய் தந்தையர் உறவுகளே. பலர் இந்த யுத்தத்தின் அந்திம காலத்தில் தாமும் இறந்துள்ளனர்.

இவர்களில் பலர் தமது குழந்தைகளை என்றுமே போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அல்லர். அல்லது புலிகளின் போர்களுக்கிடையே என்றும் எந்தவித நேரடி ஈடுபாடுகளும் இல்லாமல் இருந்தவர்கள். தமது குழந்தைகளை புலிகள் பறித்துப் போனபோது தமது குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்ற துடிப்பே இந்த பெற்றோர்கள் தமது மற்றய குழந்தைகளையும் தம்மோடு வைத்திருந்து இறந்து போயுள்ளனர். அல்லது அவர்கள் இறந்து போக குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.

பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீளப் பெறும் முயற்ச்சிகள் சரிவராது என அறிந்தபோது தாம் தப்பியுள்ளனர். சிலர் பாதிக் குடும்பத்தை அனுப்பிவிட்டு பாதி தமது குழந்தைகளை மீட்டு எடுத்துப்போக இருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் தமது சகோதரங்களை மீட்டு எடுத்துப்போக, இந்த களத்தில் தமது உடன் பிறந்த சகோரதங்களை இந்த நிலையில் விட்டுவிட்டுப்போக முடியாமல் தவித்தனர். இதன்போது தமது உயிர்களையும் இழந்தனர். இந்த உறவுகள் புலத்தில் உள்ள உறவுகள் போன்று ஒப்புக்கு மாரடிக்கவில்லை. வாடகைக்கு உணர்ச்சி வசப்படவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து தம் உறவுகளை அழைத்துச் செல்ல தவிப்புடன் நின்றன. அவர்கள் வன்னிமண் பூர்வீகமண் என்ற புலத்து தமிழர்களின் அர்த்தமற்ற கோசங்களுக்காக செல் மழை பொழிந்த யுத்தப் பிரதேசத்தில் நிற்கவில்லை. மரணத்தின் எண்ணிக்கையை வைத்து அரசை அம்பலப்படுத்தும் மூன்றாம்தர அரசியலுக்காக அந்த மக்கள் மரணிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அதற்கு புலத்தில் உள்ள புலி ஆதரவுத் தலைமைக்கு முழுமையான பொறுப்புண்டு.

புலிகளில் பெரும்பான்மையானவர்கள் தமது கட்டுப்பாட்டை மீறி தப்பிப் போகும் மக்களை கொலை செய்துள்ளனர். வே பிரபாகரனின் மகன் சார்ஸ்ள்ஸ் அன்ரனியும் அவருடைய இன்னுமொரு தளபதியும் மிக மோசமான முறையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வன்னி முகாமில் உள்ளவர்களுடன் உரையாடியதில் தெரியவருகின்றது. ‘எங்களை விட்டுவிட்டு நீங்கள் தப்பிச் செல்வதா’ என்ற உணர்வில் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். கடைசி நேரத்திலும் தமது இயக்கத்திலிருந்து தப்பிப் போனவர்களையும் தமது கட்டுப்பாடுகளை முன்பு (சில காலங்களுக்கு முன்னர்) மீறியவர்கள் இந்த வன்மையான போர் காலத்தின்போதும் சுட்டு கொன்று தமது பழிவாங்கல்களையும் செய்துள்ளனர்.

வன்னி மக்கள் இலங்கை இராணுவத்திடம் மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இலங்கை இராணுவம் தம்மை அழிக்க முற்படுகின்ற ஒரு இராணுவமாகவே பார்த்தனர். ஆனால் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் தங்களைப் பணயம் வைத்து தங்கள் மரணத்தின் மீது அரசியலை நடத்த முற்பட்டபோது மக்கள் எதிரியின் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

புலிகளின் பல மாவீரர் குடும்பங்களும் புலிகளின் பல முக்கிய ஆதரவாளர்களும் ஏற்கனவே இந்த யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர். பலர் படகுகள் மூலம் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சிய முக்கிய தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் சில முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர்.

முகாம்களை விட்டு வெளியேறிய பலர் தமது உறவினர்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் புதிய ரென்டுகளும் பந்திகள் போட்டும் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு வாடகை கொடுக்க பணம் கிடையாது. அடிப்படை உடுப்புக்கள வாங்க பணம் கிடையாது. வன்னிக்குள்ளே போனால் என்ன நடக்குமோ என்ற மனப்பயம் நிறைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தாம் தப்பி ஓடும்போது தம்மை துரோகிகள் என்று பட்டமளித்த ஜபிசி போன்ற ரேடியோக்கள் தொலைக்காட்சிகள் பற்றி அறியாதவர்கள் தலைவரைக் காப்பாற்ற போராட்டம் செய்தவர்கள் போருக்கு பண உதவி செய்தவர்கள் இன்று எங்கு போயினர் என்று அங்கலாய்த்துள்ளனர். புலிகள் அழிந்ததும் போராட்டம் முடிஞ்சுதாமோ?? என்று கேட்கின்றனர். ‘நாம் யார்? இந்தப் போராட்டம் யாருக்காக நடாத்தினார்களாம்? எங்கே இவர்கள்?’ என்ற ஏக்கம். இவர்கள் தங்களுக்காகவா மக்களுக்காகவா இவ்வளவு காலமும் இயங்கினார்கள் என்று ஏமாற்றமடைந்தவர்களாக உள்ளனர்.

தமக்காக ஒருவேளை என்றாலும் உணவு கொண்டுவந்து சேர்த்த சிங்கள மக்கள் பெளத்த துறவிகள் முஸ்லீம்கள் பற்றி நன்றியுடன் பேசுகிறார்கள் ஆனால் வன்னி மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இன்றி அந்த மக்களின் பெயரில் அரசியல் நடத்துபவர்களை அந்த மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்களா என்பது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல. மீண்டும் மீண்டும் அந்த மக்கள் இனவாத அரசு நோக்கியும் அதன் கைகளிலுமே விடப்பட்டுள்ளனர். அந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமே எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற வகையிலேயே புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

வன்னி மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் பங்கெடுக்காமல் அவர்களை புரட்சிக்கான தமிழீழத்திற்கான கூலிப்படையாகப் பயன்படுத்தும் புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா?

பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்: உலக சிக்கன தினம் (Word Thrift Day) – புன்னியாமீன்

0000lmages.jpg“சிக்கனமும்,  சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924 இல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் ‘உலக சிக்கன தினம்” என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும்,  இத்தினத்தில் சேமிப்பு,  சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு  விளக்குகின்றார்.  “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே,  இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார்.   “செய்க பொருளை” என்று (குறள் 759).

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றனர் ஆன்றோர். இந்தக் கூத்து பொருள் தேடுவதற்காக அவசியத்தை உணர்த்துகின்றது. இருப்பினும் சிலர் கூறுவார்கள் “சம்பாதிக்கிறேன் ஆனால் வரும் வருவாயோ மிகக் குறைவு. வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.” இதற்கு வள்ளுவர் பின்வருமாறு  பதில் கூறுகிறார்.”ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை” (குறள் 478). வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை. அதாவது வருவாய்க்குள் செலவு செய்பவனுக்குத் தீங்கு இல்லை, கவலைகள் இல்லை. எனவே மேற்படி கருத்துகளில் இருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக் கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். 

இந்தப் பழக்கம் சிக்கனத்தையும்,  அதே நேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின்றது.மனிதன் தனது வருமானத்தின் ஒரு பகுதியை நுகர்வுக்கும் இருபகுதிகளை முதலீடுகளுக்கும். எஞ்சும் பகுதியை திடீர் அவசரத் தேவைகளுக்குமாக சேமிக்க வேண்டுமென கெளதம புத்தர் உபதேசித்துள்ளார். சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பின் மூலம் சுபீட்சம் பெறலாமெனும் சிந்தனை புராதன காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது.

ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசத்தைக் காயவைத்தும்,  தேனில் ஊறவைத்தும் தேவைக்கேற்ப நுகர்ந்தான். விவசாய யுகத்தில் ‘நெற் குதிர்’களை அமைத்து சிக்கன முறையால் நெல்லைச் சேகரித்து வைத்தான். பின்பு விவசாயத்திற்காக நீரைச் சேமிக்கவும் பழகினான். ‘வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் கடலில் பாயவிடாது பயன்படுத்தவேண்டும்’ என மன்னன் பராக்கிரமபாகு கூறினான்.

கி.பி. நாலாம் நூற்றாண்டில் (கி.பி 303-331) ஆட்சிபுரிந்த கீர்த்திஸ்ரீ மேகவர்ன மன்னனால் பொறிக்கப்பட்ட தோனிக்கல் சிலாசனத்தில் பயறு, உளுந்து, சாமை, இறுங்கு போன்ற தானியங்கள் சேமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தோமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடு,  பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில்,  சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. தோமஸ் ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.

‘சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே,  இந்த முறையிலே அந்தச் சிக்கனம்,  சிந்தனை,  சிறந்த பண்பு,  சீர்த்திருத்தமுடன் வாழ்வு,  துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா?  போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும்,  சீர்திருத்தம் பரவ முடியும்,  சிக்கனம் நிலைக்க முடியும்,  நலம் பெற முடியும். எனவே,  அந்த முறையிலே சிக்கனம்,  சிந்தனை,  சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால்இ அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்”, என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள். இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம். (1) கஞ்சத்தனம்,  (2) சிக்கனம்,  (3) ஆடம்பரம் (4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது குறித்த மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும்,  சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ,  தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும்,  மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும,   சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது,  அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக,  வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கின்றோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி,  கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு,  மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில்,  ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார்,  “சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன்,  முதல் தர அறையை எடுத்திருக்கிறார்,  தாங்கள் ஏன்…?” உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரும்.

ஆடம்பரம்,  ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி வி;டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். பொதுவாக நாட்டார் வழக்கில் விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். ஆடம்பரம்,  ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக கிரடிட் அட்டை (CREDIT CARD) முறை  புழக்கத்திற்கு வந்துவிட்டது. சில கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது வரையறையில்லாமல் பயன்படுத்துவதையும் இதனால் பின்பு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம். பணத்தைப் பணமாக வழங்கும்போது ஏற்படக்கூடிய பக்குவம் சிலருக்கு கிரடிட் அட்டைகளை பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை. இந்த கிரடிட் அட்டைகள் பாவனையிலுள்ள எல்லா வெளிநாடுகளிலும் CREDIT CARD HISTORY என்று சொல்லப்படும்  அட்டையைப் பயன்படுத்திய பின் உரிய தொகையை உரிய நேரத்தில் செலுத்தி இருக்கிறார்களா என்ற கடன் வரலாற்றைப் பார்க்கிறார்கள். இந்த  அட்டைகளுக்கான பணத்தைத் தருவதில் தாமதம் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அட்டை செல்லா அட்டைகளாக ஆகிவிடும். ஆகவே பொருள்களை இப்படி வாங்குபவர்கள் பலமுறை யோசனை செய்து அவற்றை வாங்குவதோடு,  பணம் திருப்பித் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால் நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத் தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி,  தேவைக்கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம். இதை மீறி கடனுக்கு நாம் பழகிவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி நேரிடும்.

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்;:- “NEITHER A BORROWER NOR A LENDER BE; FOR LOAN OF IT LOSES BOTH ITSELF AND FRIEND; IT ALSO DULLS THE EDGE OF HUSBANDRY”  கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அத்தோடு குடி வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு,  சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும்,  சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை,  சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி,  பாதுகாப்பு,  ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம்,  பாதுகாப்பு,  சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன.

தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும்,  பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி,  குடும்ப மட்டத்திலும் சரி,  தேசிய மட்டத்திலும் சரி,  சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.

பிரான்ஸ் நாட்டவரான ஹியூக் டெலர்ஸ்ரே என்பார், 1611ல் முதன் முதலாக சேமிப்பு பற்றிய எண்ணக் கருக்களைக் கொண்ட ஒரு கருத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைத்துள்ளார். சேமிப்பு வங்கியென ஏற்றுக்கொள்ளத்தக்க முதலாவது வங்கி 1778ல் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1810ல் ஸ்கொட்லாந்தவரான ஹென்றிடிக்கள் சேமிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபித்தார். சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இந்நிறுவனத்தை அவர் நிறுவினார். நாளடைவில் உலகளாவிய ரீதியில் சேமிப்பு வங்கிகள் கணிசமானளவு நிறுவப்பட்டுச் செயற்படலாயின.

பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியமென உணரப்பட்டது. 19ம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. இலங்கையில் சேமிப்பு வங்கிகளை நிறுவிய முன்னோடியாக ஆளுநர் சேர். ரொபர்ட் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் கருதப்படுகின்றனர். 1832. 08.06 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி, இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியாகும்.  இவ்வங்கி கொழும்பு நகரில் உயர்மட்டப் பிரமுகர்களையும் சில வர்த்தகர்களையும் கொண்டமைந்தது. சேமிப்புக் கணக்குகள் தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டன. வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே இவ்வங்கி இயங்கியது. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் வங்கியின் வளர்ச்சி குன்றியே காணப்பட்டது. ஒரேயொரு கிளை மட்டுமே செயற்பட்டது. வைப்புக்கள் கச்சேரி மூலம் ஏற்கப்பட்டன. சேர் பொன். இராமநாதன் 1885. 04.16ல் அஞ்சல் நிருவாகத்தினுள் அஞ்சலக சேமிப்பு வங்கியை அறிமுகஞ் செய்தார். 1938 செப்ரம்பரில் அஞ்சல் தலைமை அதிபரின் கீழ் சேமிப்புப் பத்திர நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. 1942ல் இம்முறை விஸ்தரிக்கப்பட்டு இரண்டாம் உலக மகாயுத்தத்துடன் இலங்கை யுத்த சேமிப்பு இயக்கமெனும் ஒரு அமைப்பு உதயமானது.

மறைந்த நிதியமைச்சர் யூ.பி. வன்னிய நாயக்காவினால் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவொன்று 1969.08.31ல் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டதெனினும் மறைந்த கலாநிதி என். எம். பெரேரா கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971ம் ஆண்டின் 3ம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கமைய இலங்கை சேமிப்பு வங்கி சேமிப்புச் சான்றிதழ் நிதியம் தபாலக சேமிப்பு என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.03.16ம் திகதி முதல் தேசிய சேமிப்பு வங்கி அமைக்கப்பட்டன. பாடசாலைப் பிள்ளைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக பாடசாலை வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய வர்த்தக வங்கிகளிலும் சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியில் எமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு நாம் எமது உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்கும் வழிவகைகளைத் தேடவேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்குத் தேவையான முதலீட்டில் ஒரு பகுதியையேனும் சேமிப்புக்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்தக்காலில் நிற்பதற்கு (Self Relaince) எமது சிக்கன நடத்தைகளும் சேமிப்பும் எவ்வளவு துணைபுரியும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டுச் சிக்கனமும்,  சேமிப்புமே நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு கவர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிக்கனம் சேமிப்பு எனும்போது நவீன உலகில் பரந்துபட்ட ரீதியில் சிந்திக்கையில் பணச் சேமிப்பு என்பதைவிட அதன் பொருள் மேலும் பலதாக பிரிந்து செல்வதை அவதானிக்கலாம். உதாரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு எரிபொருள் சிக்கனம் சில பிரதேசங்களில் நீர் சிக்கனம் சில பிரதேசங்களில் உணவுப் பொருட்கள் சேமிப்பு என பலதுறைகளுடனும் தொடர்புபடுகின்றது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சில எளிய வழிமுறைகளைக் கொண்ட சி.டி.க்களை பள்ளிகளுக்கு இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு விநியோகித்து வருகிறதாகவும்,  சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு தண்ணீர் விழிப்புணர்வு மற்றும் சிக்கனம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் வல்லுநர்கள்,  உளவியல் நிபுணர்கள்,  பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் சிக்கனம் குறித்த கல்விப் பாடங்கள் அடங்கிய சி.டி.க்களை அவை. 
   
தற்போதைய பொருளாதார சமூக சூழலில் எரிபொருள் சிக்கனம் என்பது சமூக தன்மை வாய்ந்த மிக முக்கிய பிரச்சினையாகும். எரிபொருள் சிக்கனம் நன்றாக கையாளப்பட்டால் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. கட்டுப்பாட்டான எரிபொருள் அளவை முழுமையாக பயன்படுத்தினால் அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை தரும். முழு சமூகத்திலும் எரிபொருள் சிக்கனத்தை முன்னேற்றி அதன் பயன்பாட்டு பயனை உயர்த்தும் வகையில் சீன அரசு 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் நாள் எரிபொருள் சிக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தூரநோக்குத் திட்டத்திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். எரிபொருள் சிக்கனம் சீனாவின் அடிப்படை கொள்கையாக கருதப்பட்டுள்ளது. அதே நேரம் 2010ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் எரிபொருள் செலவினை 20 வீதத்தால் குறைப்பதென்ற குறிக்கோளை சீன அரசு முன்வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இன்று பேணப்படுகின்றது. அத்துடன்,  இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. எதிர்கால சந்ததிக்கான தற்போதைய சேமிப்பு நடவடிக்கைகளாக இவைகள் கருதப்படுகின்றன.

இவ்வாறாக நாட்டுக்கு நாடு பல்வேறுபட்ட வகைகளில் பல்வேறுபட்ட கோணங்களில் சிக்கனத்தினதும்,  சேமிப்பினதும் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. இது மட்டுமன்றி சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும்,  சிக்கனத்தையும் புகட்டக்கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் தேசிய பொருளாதார நெருக்கடிகள் அந்த நெருக்கடிகள் சேமிப்பினதும்,  சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,  நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லாமல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக!

நிவாரணக் கிராமம்: புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி 111 – பரீட்சை முடிவு இன்று

Wanni Childவவுனியா நிவாரணக் கிராமங்களில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும். பரீட்சை திணைக்களம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளரிடம் பெறுபேறுகளை கையளிக்கிறது.

இதேவேளை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவும் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

இங்கு பரீட்சைக்கு தோற்றியோருக்கான வெட்டுப்புள்ளி 111 எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.