2009

2009

யுத்த சூழல் நீங்கியதும் அரசியல் தீர்வு – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

srisena.jpgதற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும்; அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும்; அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில

சுமார் 25 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வடக்கு-கிழக்கு மக்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும் யுத்த சுழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

யுத்தத்திற்கு இன்னும் சில நாட்களில் முடிவு கட்டப்பட்டுவிடும். அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும். எப்படியான அரசியல் தீர்வு என்பதைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகின்றோம் எனக் கூறினார்.

குருக்கள் மனைவி கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீட்டு மனு

திருகோணமலை கோணேசர் ஆலய குருக்கள் மனைவி கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீடு செய்துள்ளர். இந்த ஆலய முன்னாள் பிரதம குருக்கள் சிவகடாட்சக் குருக்களான விசாகேஸ்வர ஐயர் மீது அவரின் மனைவி அம்பிகாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவில் எதிரியை குற்றவாளியாகக்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டு அரை மணித்தியாலத்தில் எதிரியின் மேல் முறையீட்டு மனுவை சட்டத்தரணி கே. எம். தில்லைநாதன் தாக்கல் செய்திருந்தார்

குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனவும் அம்பிகாவின் மரணம் தொடர்பாக நிரூபிக்கப்படவில்லை எனவும், மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு தரப்பு சாட்சியான பாலமுரளி சர்மா என்பவரின் சாட்சியம் ஒப்புறுதி செய்யப்படவில்லை என்ற காரணமும் மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் பூமியதிர்ச்சி 70 பேர் உயிரிழப்பு! இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

italyearthquake.jpgஇத்தா லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது

பூமியதிர்ச்சியின் வேகம் 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பெரும் எண்ணிக்கையிலான  வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவணம்  செலுத்திவருகிறது.

நலன்புரி நிலைய முகாமைத்துவ உதவியாளர்களாக இடம்பெயர்ந்து வந்துள்ள இளைஞர் யுவதிகள்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி நிலையங்களில், தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் 110 பேர் அந்த நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களாக மீள்குடியேற்ற அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வைபவரீதியாக வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த 110 பேரும் ஏற்கனவே இந்த நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இடைத்தங்கல் நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு இந்த உதவியாளர்கள் பல்வேறு பணிகளிலும் உதவிபுரிவார்கள் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சுகாதாரம், தண்ணீர் மற்றும் மின்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும்  மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்.

இடைத்தங்கல் நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நாளாந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

mohamed-kaleel.jpgஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் சாரதி  மெஹர் மொஹமட் களீல் இன்று இலங்கை அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற களீலின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே உட்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வைத்து பயங்கரவாதிகள்; துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது மொஹமட் களீல் துணிச்சலுடன் வாகனத்தைச் செலுத்தி கிரிக்கெட் விரர்களைக் காப்பாற்றினார்.

குடும்பத்துடன் ஒரு வார காலத்துக்கு இங்கு தங்கியிருக்கும் அவர் கண்டி, நுவரெலியா உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரும் அவருக்கு விருந்துபசாரம் ஒன்றை நடத்தவுள்ளார். 

ஆபிரிக்கா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டம்

kilimanjarociegos.jpg வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான “கிளிமஞ்சாரோ’ என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.

தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள “வணங்காமண்’ கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் மூவர் பலி

lighting.jpgசிலாபம், கருவலகஸ்வௌ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 3 விவசாயிகள் பலியாகியுள்ளனர். கருவலகஸ்வௌ, இஹெல புளியங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

(CWI- Socialist Party)

International Day of Action – Protest at INDIA HOUSE,
Aldwych,
London,
WC2B 4NA –

Wednesday 8 April 4 – 5.30 pm

சோசலிஸ்ட் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

‘பிரபாவை கைது செய்வதே இலக்கு’ – கோத்தாபய ராஜபக்ஷ

sec-def.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்வதே தற்போதைய முக்கிய விடயமாக இருக்கிறதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

படையினர் பெற்ற வெற்றி சிறப்பானதாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்த கடைசி நிலப்பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளை, தொடர்ந்தும் முன்னேறி வரும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விமானப் படையினர், மற்றும் கடற்படையினர் ஆற்றிய சேவைகளை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியுள்ளார்.

எஞ்சிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைய வேண்டும் – ஜனாதிபதி

mahinda.jpgஎஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரிடம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.தங்களது பிடியிலுள்ள அப்பாவி பொதுமக்கள் சகலரையும் உடனடியாக விடுவிக்குமாறும், பொது மக்கள் அச்சம் பீதியின்றி வாழ இடமளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

ஐ. ம. சு. முன்னணியின் தெஹிவளை, இரத்மலானை, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கொலன்னாவை ஆகிய தொகுதிகளின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.  இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நாட்டை ஐக்கியப்படுத்தும் பணியில் எமது படைவீரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.  இதன் மூலம் பாரிய வெற்றிகளை அடைய முடிந்திருக்கிறது. நாட்டை ஐக்கியப்படுத்தும் மனிதாபிமானப் பணிகள் அடுத்துவரும் சில தினங்களுக்குள் பூர்த்தியாகும்.

பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள அப்பாவி மக்களைக்கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத் தலைவர் செயற்படுகிறார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து, வழி தவறி ஆயுதம் ஏந்தியுள்ள எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் சகலரும் ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவத்தினரிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். தங்களது பிடியிலுள்ள பொது மக்களை விடுவிக்க வேண்டும். பிரபாகரனும் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. பொது மக்கள் அச்சம், பீதியின்றி வாழ இடமளிக்கப்பட வேண்டும்.

மாவிலாற்றைத் திறப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாணம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. வட பகுதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டது. பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்ற மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

புலிகளின் பிடியிலிருந்து வடக்கு, கிழக்கையும் அங்கு வாழும் மக்களையும் விடுவிக்கவென நாம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டோம். இருப்பினும் அந்த அழுத்தங்களைக் கண்டு எமது நடவடிக்கைகளை நாம் இடைநிறுத்திவிடவில்லை. எமது தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் அடைகின்ற வெற்றிகளைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் புலிகள் இயக்கத்தினருக்கு நாட்டை எழுதிக் கொடுத்தவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ரி. 56 ரகத் துப்பாக்கிகள் 5000 ஐயும், ரிசேர்ட், தொப்பிகள் மற்றும் பெனியன்களையும் வழங்கினார். அவர்கள் பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தனர். அவர்களது ஆட்சிக்காலங்களில்தான் புலிகள் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். வடக்கு, கிழக்கை விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதுவுமே இடை நிறுத்தப்படவில்லை என்றார்.