2009

2009

தமிழ் தேசியத்தின் வறட்சியும் வடக்கின் வசந்தமும் : த ஜெயபாலன்

Basil Rajaparksa in Jaffna Paddy Fieldஇலங்கை அரசின் ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் பற்றிய விவரணம் வெளிவந்துள்ளது. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களுடன் இது வெளியாகி உள்ளது. (முழுமையாகப் பார்வையிட http://www.np.gov.lk/pdf/development.pdf  ) ‘கிழக்கின் உதயம்’ திட்டம் அறிவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது 180 நாள் மட்டுப்படுத்தப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணிகள் நீக்கப்படவில்லை என்பதை உலக வங்கி ஒக்ரோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவித்து இருந்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தது.

ஆனால் அடுத்த தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வை பின்னடிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றளவில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் நம்புகின்றன. ஆனாலும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பலமான நிலையில் இல்லை. இதனால் அந்த அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணியில் நின்ற உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு எதிர்காலத்தில் இவ்வாறான பல இணைவுகள் ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளது.

இவ்வாறான இணைவுகள் தமிழ் மக்களின் தனித்துவ அரசியலை தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தப் போகின்றது. இதைத் தடுக்கின்ற அல்லது மட்டுமப்படுத்துகின்ற அரசியல் பலம் காலத்திற்குக் காலம் தோண்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் வரையான தமிழ் தேசியத் தலைமைகளாலேயே அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இத்தலைமைகள் தங்கள் போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு வாழ்வுக்குப் பதிலாக அழிவையே வழங்கி உள்ளனர். தமிழ் தேசியத் தலைமைகளிடம் உள்ள அரசியல் வறட்சி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி உள்ளது. அதனை மிகத்திட்டமிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் தேசியத் தலைமைகளுக்கு மாற்றீடாக தனது தலைமையை முன்வைக்கின்றது.

வன்னி முகாம் மக்களை சென்று பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போராடவும் இல்லை. அவர்களில் சிலர் பல மாதங்களின் பின்னர் தற்போது தான் இலங்கைக்கே சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல கொழும்பு தமிழ் கட்சிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளும் அரசு தான் மட்டுமே அந்த மக்களில் அக்கறைகொண்டுள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது. தனக்குள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி அதனை நிறுவ முற்பட்டுள்ளது. மே 18 வரை அரசியல் வன்முறைமூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய அரசு தற்போது தமிழ் மக்கள் மீது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் கூட தெற்கில் உள்ள அமைச்சர்களின் தலைமையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13 பேர் கொண்ட யாழ் அபிவிருத்தியில் மலையக அமைச்சர் ஒருவரே தமிழராக உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அடிப்படை ஜனநாயக விழுமியங்களையே இல்லாதொழித்த நிலையில் அரசு தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சினிமாப் படங்களில் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸ் ஜீப் அல்லது கார் வருவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்சிய அறிஞர்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். மே 18 வரை மௌனம் காத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்ஸிய அறிஞர்களும் வே பிரபாகரன் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் புல்லும் முளைத்தபின் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்ற தங்கள் அறிவியல் விலாசத்தை எடுத்துவிடுகின்றனர்.

மிகப் பெரும் அவலத்தைக் கடந்து வந்த மக்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக செல் தாக்குதல்களுக்குள்ளும் குண்டுவெடிப்புகளுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கும் வழங்குவதற்கு தமிழ் தேசியத் தலைமைகளிடம் எதுவும் இல்லை. மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிப்பதைத் தவிர. ஓரிரு குண்டுவெடிப்புகளைச் செய்து தங்கள் தேசியத் தலைமையைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு சில புலம்பெயர் சக்திகள் முனைகின்றன. இது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு பற்றிய அக்கறையிலும் பார்க்க தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி தங்கள் பொருளாதார நலன்களைப் பேணிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக உள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வைகயில் ஓரிரு குண்டுவெடிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை புலம்பெயர் தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் வழங்கிவருவதை உணர முடிகிறது.

தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட வேண்டும், தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்தமும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. இதனையே மே 18க்குப் பின் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கை அரசு மேற்கொள்கின்ற நுண் அரசியலை மறைமுகமான இனச்சுத்திகரிப்பை கண்டுகொள்ளவோ எதிர்கொள்ளவோ தமிழ்த் தேசியம் தவறிவிட்டது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ பாலம் கட்டினால் ‘தமிழ் தேசியம்’ குண்டு வைத்து தகர்க்கும் என்பதுதான். அந்த மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்காமல் ஒப்புக்கு மாரடிக்கும் போராட்டங்களும், ஆபத்தில் மக்களுக்கு உதவாத கோசங்களும் அரசியல் வறட்சியின் வெளிப்பாடாகவே உள்ளது. ஊரில் சொல்வார்கள் ‘பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாள்’ என்று அது மாதிரியான நிலையிலேயே புலத்துப் போராட்டங்கள் அமைகின்றன.

நடிகர் ஹென்றி ஜயசேன காலமானார்

henre-jayasana.jpgபிரபல நாடகாசிரியரும், மேடை மற்றும் சினிமா நடிகருமான ஹென்றி ஜயசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 79. களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட இயக்குநர் லெண்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘கம்பெரலிய’ திரைப்படத்தில் பியல் என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தமை இவருக்கு மிகுந்த புகழை பெற்றுத்தந்தது.

அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம் – வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்

17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத்துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெறமுடியும். சாதாரணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கமைய கிராமங்களை கட்டியெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார் இராணுவப் பேச்சாளர்

தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சேவையில் ஈடுபட படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.  அந்த வகையிலேயே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங்களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர்.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவ குழுக்கள் மோதல்; ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நேற்று மூடப்பட்டது

arest.jpgஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தீவிரமடைந்ததையடுத்து நேற்று முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை இடம்பெற்ற மோதல்களில் ஐவர் காயமுற்றுள்ளதுடன் இவர்களில் மூவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மாணவர் களுக்கிடையில் இடம்பெற்ற சச்சரவுகள் நேற்றுக் காலை உக்கிரமடைந்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஆஸி. தென் ஆபிரிக்கா, மலேஷியா நாடுகளின் பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.

மார்ச் மாதமளவில் மீள்குடியேற்றம் பூர்த்தி; நாணய நிதியம் பாராட்டு

எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதென ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரி வித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஜனவரி மாதமாகும் போது பெருமளவு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். மார்ச் மாதமளவில் மீள்குடி யேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப் படும்.

கிழக்கு மாகாண மக்கள் மீள்குடி யேற்றப்படும் போது வாய்திறக்காத எதிர்க் கட்சிகளும் சர்வதேச அமைப் புகளும் வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துகின்றன. உலகில் எந்த நாடும் முன்னெடுக்காத அளவு மிக துரிதமாக வடபகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் குறித்து பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இலங்கை பொருளாதார முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்வதாகவும் துரித பொருளாதார அபிவிருத்தி கண்டு வருவதோடு மக்கள் நலபணிகளை முன்னெடுப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பிலும் அது திருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 2ம் கட்ட கடனுதவி கிடைப்பதை தடுப்பதற்காக ‘ஹியுமன் வோட்ச்’ அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு சர்வதேச நாணய நிதியம் அனுப்பியுள்ள பதிலில் இலங்கை குறித்து திருப்தி அடைவதாக கூறியுள்ளது என்றார்.

கனிமொழி பெற்றது பரிசா இல்லை பணமா?: யூட் ரட்ணசிங்கம்

Rajapaksa_and_Indian_Delegationசென்ற மாதம் சிறீலங்கா சென்றிருந்த தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளின் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோது ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தவேளை ஜனாதிபதியும் நன்றிக் கடனாகவும் நினைவுச் சின்னமாகவும் ஏதோ பெட்டியொன்றை அந்தக் குழுவில் சென்ற கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் கொடுத்ததை அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.

பெற்றுக்கொண்ட பெட்டிக்குள் பணப்பொதிகள் இருந்தன என்று ஈழத்தமிழர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. சிறீலங்கா அரசத்தலைவரிடம் பணம்பெற்று தமிழீழப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற கோணத்திலேயே புலத்திலும் தமிழ்நாட்டு புலிசார் அரசியல் மட்டத்திலும் இது ஏதோ முதன்முறையாக நடைபெற்ற சம்பவம்போல் மாறி மாறி பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது என்று வேறுசிலர் தொலைபேசியில் அழைத்து தொலைக்காட்சியில் பேசுகிறார்கள்.

இந்தத் தமிழர்கள் கூறுவதுபோல் பணத்தைப் பெற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது உண்மையென்றால் தமிழர் வரலாற்றில் பணம் பரிமாறப்பட்டது இதுவா முதல்தடவை? இவர்களா முதல் துரோகிகள்?

80 காலப்பகுதியில் JR ஜெயவர்தனாவினுடைய முதல் ஜனாதிபதி காலப்பகுதி முடிந்து இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அவரை எதிர்த்து திரு கொபேகடுவ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் JRன் வெற்றிவாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது. அன்றய காலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக மிக மோசமான அரச அடக்குமுறைகள் JR ரால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரம் தமிழ் மக்களின் வாக்கே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

தமிழ் மக்களின் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். அவரின் ஆலோசனையின்படியே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அறிய காத்திருந்தார்கள். தேர்தலும் அண்மித்தது திடீரென அவரும் அவர் பாரியாரும் லிபியாவுக்கு விடுமுறையைக் களிப்பதற்காக சென்றுவிட்டார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் வந்தன.

தமிழ் மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லை தேர்தலும் வந்தது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாது அங்கலாய்த்தார்கள். தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட வேண்டிய JR வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதியானார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் TULFன் தலைவருமான அமிர்தலிங்கத்தையும் அவர் பாரியாரையும் விடுமுறையில் லிபியாவுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்தவர் அன்றய JR என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்களின் லிபியப் பயணமே JR ஐ மீண்டும் ஜனாதிபதியாக்க உதவியது என்று அன்றய அரசியல் விமர்சகர்கள் தமது விசனத்தை தெரிவித்தார்கள்.

திரு அமிர் அவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய வரலாற்றுத் தவறுகளில் இதுவும் முதன்மையானதாகப் பேசப்பட்டது.

அதன்பின் 2004 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்கே தீர்மான சக்தியாக இருந்தது. UNP வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்ததாக அன்றய கணிப்புகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் இருந்தார். இம்முறை அவர் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்ததன் மூலம் ரணில் தோற்கடிக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்குப் பின்னால் தேசியத் தலைவர் இருந்ததாக செய்திகள் வந்தன. மகிந்தவிடம் விடுதலைப் புலிகள் 100 கோடி ரூபாய் பணம் பெற்ற அரசியல் அசிங்கத்தை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகாண்க!
கொடுக்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறுகியது என்பதை கவனத்தில் கொள்க. தவறும் பட்சத்தில் மேலுமொரு துரோகி தமிழ் மண்ணில் உருவாகிவிடுவார்.

மகிந்தவிடம் கனிமொழி பணம் பெற்றது காட்டிக்கொடுப்பென்றால் இதே மகிந்தவிடம் 100 கோடி பணம் பெற்று அவரை ஜனாதிபதியாக்கியதை எதற்குள் அடக்குவது?

மகிந்தவிடம் முதன்முதல் பணப்பெட்டி பெற்றது கனிமொழியா ? ——

கனிமொழியும் அந்தக் குழுவினரும் துரோகிகள் என்றால் 100 கோடி வாங்கியவர்கள் ? ——-

நிற்க! இனி அடுத்த குற்றச்சாட்டான அரசியல் கோமாளிகள் என்ற வாதம் உண்மைதானா என்பதைப் பார்ப்போம். அந்த உண்மைநிலையை அறிய நமது வரலாற்றில் பின்நோக்கிப் பயணிப்போம்.

ஈழத்திலேயிருந்த விடுதலைப் போராட்டத்தை படகுகளிலேற்றி இந்தியக்கரைக்கு இழுத்துச் சென்றவர்கள் ஈழப் போராளிகளே.

போனவர்கள் அங்கே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வீட்டுவாசல்களில் மண்டியிட்டுக் கிடந்தார்கள். அன்று முதலமைச்சராக இருந்த M G ராமச்சந்திரனிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பெற்றதன் மூலம் போராட்டத்தை விற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்களாக இழுத்துவந்தவர்கள் முன்னாள் தேசியத்தலைவர் மேதகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் LTTE அமைப்புமே.

இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டபோது மற்றய இயக்கங்களை மிகவிரைவில் அழித்துவிடலாம் என்ற வெறி பணம்கொடுத்து ஈழப்போராட்டத்தை இவர்கள் தமதாக்கிக் கொள்கிறார்கள் என்ற அரசியல் யதார்த்தத்தை அவர்களின் கண்களிலிருந்து மறைத்தது.

கொடுக்கப்பட்ட கோடி MGR ன் சொந்தப் பணமா? இல்லை MGRக்கு மூன்றாம் தரப்பால் கொடுக்கப்பட்ட பணமா என்பதை யாரறிவார்?

இவ்வாறான புலிகளின் வரறாற்றுத் தவறுகளையெல்லாம் மூடிமறைத்து விட்டு இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சுண்டுவிரல் காட்டி அரசியல் கோமாளிகள் என்கிறார்கள்.

point_the_fingerஅடுத்தவர்முன் சுண்டு விரலைக் காட்டுகின்ற போது மூன்று விரல்கள் காட்டுபவரை காட்டுகின்றன என்ற யதார்த்தத்தை புலிச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மண்ணில் 17 அப்பாவி இந்தியத் தமிழர்கள் ஈழத் தமிழருக்காக தம்மைத்தாமே எரித்து தம்முயிரை தியாகம் செய்தபோது தொப்புள்கொடி உறவென்றார்கள்.

அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்தி மூளையைச் சலவை செய்து முத்துகுமார்களை உருவாக்கிக் கொடுத்தபோது இந்த அரசியல் கோமாளிகள் ஈழப்போராட்டத்தின் நம்பிக்கை நாயகர்களாக வர்ணிக்கப்பட்டார்கள்.

வீர வரலாற்றோடு ஆரம்பித்த ஈழப்போராட்டத்தை இறுதியில் ஐநாவின் முன் பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொள்ளுகின்ற கொடூரமான தமிழ்நாட்டு அரசியலாக மாற்றியவர்கள், ஒட்டுமொத்த விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை இறுதியில் தானத் தலைவனைப் போற்றிப் புகழும் ஈனப் போராட்டமாக மாற்றி தமிழ்நாட்டின் தரம்கெட்ட அரசியலாக மாற்றியவர்களும் இவர்களே.

Pirabaharan_MGRMGRமுன் கைகூப்பி ஓர் பண்ணை அடிமையைப்போல் நின்ற பிரபாகரனின் புகைப்படத்தை ஏதோ வரலாற்றுப் பதிவுபோல் அடிக்கடி காட்டிப் பெருமைப்படும் இந்த புலிச்சமூகம் இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகளென்று வாய்கூசாது அழைக்கிறது.

ஈழப்போராட்டத்துக்கு இவர்கள் செய்த துரோகத்தையும் எதிர்காலம் இல்லாது ஏற்படுத்திய இடைவெளியையும் மூடி மறைப்பதற்காக தொடர்ந்தும் வேறு யார்மீதும் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.

எமது போராட்டத்தை ஆரம்பம் தொட்டே அழித்துவிட வேண்டுமென்ற கபட நோக்கம்கொண்ட சக்திகள் இவர்களின் பலவீனத்தை பற்றிக்கொண்டன. பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்யக் கூடியவர்கள் என்பதை கண்டுகொண்டார்கள். இலங்கை இராணுவத்துக்கெதிராக போரிட இந்தியாவிடமும் பின் இந்திய இராணுவத்துக்கெதிராக போரிட இலங்கையிடமும் பணம் பெற்றவர்கள். இந்திய ராணுவத்தை வெளியேற்ற முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவுடன் மிக இலகுவாக பேரம்பேசி அலுவலை முடிந்த்தார்கள்.

இதைப் பார்த்திருந்த இன்னோர் சக்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை முடித்துக்கட்ட இவர்களது பலவீனத்தை பயன்படுத்தியது. இதன் விளைவு ஓரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பலனை எதிரிக்குக் கொடுத்தது.

1) ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையில் நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தியது.
2) புலிகள் உயிருடன் உள்ளவரை இந்தியாவோடு உறவாட முடியாத நிலையை உருவாக்கி தொடர்ந்தும் இந்தியாவினுடைய எதிர் சக்திகளுடனேயே உறவாட வேண்டிய நிற்பந்தத்தை உருவாக்கியது.

இப்படியாக நமது எரிந்த வீட்டுக்குள் எத்தனை பேர்தான் இலாபம் பெற்றார்கள். (தமிழர்களைத் தவிர)

மேற்குறிப்பிட்டது போல் பல வரலாற்று உண்மைகளிருக்க கலைஞர் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்று புதுக்கதை விடுகிறார்கள்.

தொடர்ந்தும் தமிழர் தமது கற்கால சிந்தனையிலிருந்து சிந்திப்பார்களேயானால் மீண்டுமொருமுறை தமிழன் வாழ்வு வெள்ளான் முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லப்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை தோன்றும்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன இராணுவத் தளபதி SUN TSU (இவர் சரத் பொன்சேகா போன்று போர்க்களத்தில் பல வெற்றிகளைக் கண்டவர்)ன் போரியல் பற்றிய குறிப்பிலிருந்து பெறப்பட்டு 21ம் நூற்றாண்டில் வாழும் ஈழத்தமிழர்கட்கு பொருத்தமானதாக இருப்பதை அவதானித்து அதை இங்கே தருகிறேன்:

“know your enemy, know yourself and you can fight a hundred battles without disaster.”

தமிழர் தமது பலத்தை மிகைப்படுத்திப் பேசி மார்தட்டுவதைவிட தமது உண்மையான பலவீனத்தை கண்டறிவதே அவர்களின் பாதுகாப்பிற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வளம்சேர்க்கும். தமது பலத்தை கண்டறியாதவரை 21ம் நூற்றாண்டிலும் புராணங்களும் புளுகுகளுமே தமிழர் வாழ்வாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

புராணங்களையும் புளுகுகளையும் நம்பி அரசியல் செய்யும் உலகத் தமிழ்த் தலைவர்கள் ஈழத்தமிழரின் போராட்ட நாயகர்களாக வர்ணிக்கப்பட்டு தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவார்கள். அன்று MGR இல் தொடங்கி இன்று சீமானில் வந்து நிற்கிறது. நாளை எந்தப் பூமான் வருவானோ தெரியாது ஈழத்தை வென்று தர.

பின் குறிப்பு:

அரசியல் கோமாளிகள்: இதை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மரபணு சொற்சேற்க்கை என்னும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து முன்மொழிந்தார். அதனால் இது மிகவும் வீரியம் கூடிய சொற்றொடராகக் கருதப்படுகிறது. பின் இது புலம்பெயர் புலிச் சமூகத்தால் வழிமொழியப்பட்டு இப்போது இவர்களின் பாவனையில் உள்ளது.

விடுதலைப்புலிகளுடன் இவர் பல ஆண்டுகள் போரிட்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டதே இச் சொற்றொடராகும். இதன் மூலம் இவர் போரில் மட்டுமல்ல தமிழர் வாழ்விலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இச் சொற்றொடர் புலிச் சமூகத்தின் இன்பத்துக்குரியதும் புலிசார் ஊடகங்களின் ஆத்மதிருப்திக்கு உரியதுமானதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு IBC, GTV, தீபம் போன்ற சர்வதேச தரம்வாய்ந்த ஊடகங்களை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்க.

துரோகி: இது தமிழரசுக் கட்சியினால் அகழ்ந்தெடுக்கப்பட்டு TULF இனால் பட்டைதீட்டப்பட்டு விடுதலைப் புலிகளினால் மகுடமிடப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலம் அதன் ஏகபோக உரிமையாளர்களாக இருந்து கடுமையான கஸ்ரங்களின் மத்தியிலும் இதைப் பாதுகாத்து வந்தார்கள் என்ற பெருமையைப் விடுதலைப் புலிகள் தமதாக்கிக்கொண்டார்கள்.

இது புலிச் சமூகத்தின் மிகவும் இன்பகரமான சொல்லாகவும் புலிசார் ஊடகங்களின் மிகவும் கவர்ச்சியானதுமாக கணித்திருக்கிறார்கள். இது மிகஆழமான உட்பொருட்களை சுட்டி நிற்பதால் இதை ஓர் சர்வதேச தரம்வாய்ந்த சொல்லாக கருதுகிறார்கள்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் அதிகமாக பயன்படுத்திய சொல் என்பதால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியிருக்கிறார்கள்.

இதன் மேலதிக விபரங்களுக்கு www. வி. பு. அகராதி. com என்று பார்க்க.

இது Oxford அகராதிக்கு இணையானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

20க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக இணைத்து மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டு பற்றிய விடயங்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது. நவம்பர் 12ல் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இம்மாநாடு இறுதி நேரத்தில் சுவிஸ்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். இம்மாநாடு பற்றிய பின்னணிகளை அறிந்திராத நிலையில் தங்கள் கட்சித் தலைவர் அதில் பங்கெடுப்பது ஐயத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வருகின்றது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர்.

ஒரு சாதாரண சட்டத்தரணி 20க்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கட்சிகளுக்குமான விமானச்செலவு, ஒரு வாரத்திற்கான ஹொட்டல் செலவு என்பவற்றை பொறுப்பேற்பது என்பது அதன் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இம்மாநாடுக்குப் பின்னணியில் இந்திய, இலங்கை அரசுகளோ அல்லது புலிகளின் பினாமிகளோ பின்நிற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ரிஎம்விபி உறுப்பினர்களான மனோகரனும் கிருஸ்ணனும் பின்நிற்பதால் இம்மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு உள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

மாநாட்டின் நோக்கம் மாநாடு யாரால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது போன்ற அடிப்படைத் தகவல்கள் இன்றி கட்சிகள் இம்மாநாட்டில் கலந்தகொள்ளுமா என்ற சந்தேகங்களும் உள்ளது.
இதற்கிடையே நவம்பர் நடுப்பகுதி வார விடுமுறையில் இலங்கையரசு புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகெங்கும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்குடாவில் அரிய ‘காட்டு அணுங்கு’ விலங்கினம்

111109batti.jpgகல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி தெரிவித்தார்.

111109batti.jpg