2009

2009

Project Beacon இறுதி 48 மணி நேரத்தில். துருக்கியின் பாடம் இலங்கைக்கும் புலிகளுக்கும் உதவுமா! : த ஜெயபாலன்

Pirabakaran 2007Abdullah_Ocalan‘தகவல் வெளிவந்தது. அது பேர்லின் கோபன்ஹேகன் ஸ்ரொக்ஹோம் லண்டனுக்கும் தெரியவந்தது. ஹேக்கில் இருந்து ஜெரூசலம் வரை பரிஸில் இருந்து சூரிச் வரை. மக்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சரியான தருணம். மின் அஞ்சல் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது. கைத்தொலைபேசிகளினூடாகவும் தகவல்கள் விரைந்தது. சில மணி நேரங்களிலேயே அந்தக் கோபம் முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் உள்ள தூதுவராலயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளானது. இதன் உச்ச கட்டமாக லண்டனில் உள்ள தூதரகத்திற்கு முன்னால் 15 வயதுச் சிறுமி தீக்குளிதால். அழகிய சிறுமி தீப்பிளம்பானால்.’ பெரும்பாலும் பிரித்தானியாவின் தேசியப் பத்திரிகைகள் அனைத்தினதும் முதற் பக்கத்தை பெற்றுக் கொண்டது அச்செய்தி.

இது இன்று நேற்று அல்லது கடந்த சில வாரங்களாக லண்டனிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் போராட்டங்கள் அல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999 பெப்ரவரி 17யைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள்.  எதிரிகளால் பயங்கரவாதி என்றும் குழந்தைகளைக் கொல்பவர் என்றும் வர்ணிக்கப்படுபவர். ஆனால் அவரது விசுவாசிகள் சூரியன் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றும் பிகெகெ – குர்திஸ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதை அடுத்தே உலகம் முழுவதும் பரந்து வாழும் குர்திஸ் மக்கள் வீதிகளில் இறங்கினர். முதல் எதிரியும் ஓச்சுலானை கைது செய்த நாடுமான துருக்கியினதும் கைது செய்யப்பட்ட நாடான கென்யாவினதும் தூதரகங்கள் புலம்பெயர்ந்த குர்திஸ் மக்களின் முற்றுகைக்கு உள்ளானது.

இன்று லண்டன் உட்பட உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்படும் போராட்டங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் பிகெகெ தலைவர் ஒச்சுலானை விடுவிக்கும்படி நடந்த போராட்டங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு வருமுன் காப்பு என்பதைத் தவிர வேறு பாரிய வேறுபாடுகள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போலல்லாது குர்திஸ் தொழிலாளர் கட்சி மார்க்ஸிச லெனினய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். அதனால் அமெரிக்காவினதும் அதன் சார்பு அணியினதும் கழுகுப் பார்வையில் எப்போதும் இருந்த அமைப்பு. தமிழீழத்தைப் போன்று ஒரு நாட்டிற்குள் மட்டும் அவர்களது குர்திஸ்தான் தாயகம் அடங்கவில்லை. வடக்கு ஈராக், மேற்கு ஈரான், தென்கிழக்கு துருக்கி, சோவியத்தினதும் சிரியாவினதும் சிறு பகுதியை உள்ளடக்கியதே குர்திஸ் மக்களின் தாயகமான குர்திஸ்தான். எண்ணை வளம் மற்றும் புவியியல் அமைவு காரணமாக காலத்திற்குக் காலம் வேறு வேறு நாடுகளால் புற அரசியல் சக்திகளால் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் சதிராடப்பட்டு வந்தது. (இக்கட்டுரையின் நோக்கம் இதைப்பற்றி ஆராய்வதல்ல. அது பற்றி தனியாக ஆராய்வதே பொருத்தமானது.)

பிகெகெ தலைவர் அப்துல்லா ஒச்சுலான் கென்யாவின் தலைநகர் நைரோபியில் வைத்துக் கைது செய்யப்பட்டதும் அதற்குப் பின் ஓச்சுலான் வழங்கிய வாக்குமூலங்களும் ஓச்சுலான் மீதிருந்த விம்பங்களைத் தவிடுபொடியாக்கியது. துருக்கிய சிறைகளில் இருக்கும் குர்திஸ் கைதிகள் சிறை ஆடைகளை அணிந்தாலோ அல்லது துருக்கிய தேசிய கீதத்தை பாடினாலோ அவர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தியது ஓச்சுலானின் தலைமை. ஆனால் ஒச்சுலான் தன்மீதான வழக்கை துருக்கி அரசு மீதான வழக்காக மாற்றுவதை விடுத்து எதற்காக ஆயிரக் கணக்காண குர்திஸ் இளைஞர் யுவதிகள் போராடினார்களோ உயிரிழந்தார்களோ அதனைக் கைவிட்டார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டார். தனது தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டார். போராளிகளை ஆயுதங்களைக் கைவிடும்படி கோரினார். துருக்கிய படைகளிடம் சரணடையும் படியும் கோரினார். ஒச்சுலானின் கட்டளைப்படி ஒரு பகுதியினர் ஆயுதங்களை ஒப்படைத்தனர். சரணடைந்தனர். ஓச்சுலானுடைய பழக்கங்கள் பயங்கரமானது ஆனால் ஒச்சுலான் விடவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் குர்திஸ்தானுக்கான சோசலிஸக் கட்சியின் செயலாளர் கெமல் புர்கே ‘ஒரு தனிமனிதனின் வாழ்வுக்காக மக்களை தியாகம் செய்ய முடியாது’ என்று தனது கட்சியின் 25வது ஆண்டு நிகழ்வில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் பெரும்பாலும் தங்களது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டனர். ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் தங்கள் இலட்சியத்திற்காக வேறு வடிவங்களில் போராடவில்லை. மாறாக அரசிடம் சரணாகதி அடைந்தனர். அன்று யாருக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அதே மக்களுக்கு எதிராக அரசுடன் இணைந்து தங்கள் ஆயுதங்களைத் திருப்பினர். இன்றும் மக்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதே காரணத்திற்காக வே பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றிக் கட்டப்பட்ட சூரியத்தேவன் போன்ற விம்பங்கள் இன்று ஈடாடிப் போயுள்ளது. ‘தலைவர்’ தலைமையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படும் போராட்டம் ஒரு மணி நேரத்திற்குள் சைக்கிளில் சுற்றிவரக் கூடிய எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்கள்’ என்ற இராணுவத் தந்திரோபாயத்தை முழுவதுமாக நம்பியிருந்த புலம்பெயர்ந்த புலி உறவுகளுக்கு ஏப்ரல் 5ல் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வன்னியில் இருந்து வந்த கட்டளைகள் யதார்த்தத்தைப் புரிய வைத்தது. மறுநாள் ஏப்ரல் ஆறாம் திகதி அவசரமாகக் கூடி உடனடியாக உலகெங்கும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. (தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்)

ஓச்சுலான் அன்று கைது செய்யப்பட்ட சூழலும் புலிகளின் தலைமை இன்று சுற்றி வளைக்கப்பட்ட சூழலும் ஒன்றல்ல. (வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதயில் இருந்து ஏற்கனவே வெளியேறி விட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் வே பிரபாகரன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளாரா இல்லையா என்பது இன்றும் மில்லியன் டொலர் கேள்வியாகவே உள்ளது.) இன்னும் 50000 மக்கள் வரையும் பணயமாக வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரச இயந்திரம் புலிகளின் தலைமையை அழிப்பதற்கு அல்லது அதற்கான முயற்சிக்கு என்ன விலையையும் எத்தினை ஆயிரம் உயிர்களையும் பலிகொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளது. இன்று புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ளவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசுக்கு அவர்களைப் பலிகொடுப்பதிலும் எவ்வித உறுத்தலும் இருக்கவில்லை. இதுவரை 7000க்கும் அதிகமான பொது மக்கள் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்டு உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு உள்ளது. 14 ஆயிரம் பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இலங்கை அரச கூறுவது போல் வே பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமை அப்பகுதியில் இருந்தால் அது அப்பகுதியில் பணயம் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மிக மிக மோசமான துரதிஸ்டமாக அமையலாம். வரலாறு காணாத மனித அவலம் ஒன்று அங்கு நிகழும் அச்சம் உள்ளது. புலிகளின் தலைமைக்கு நிகழும் ஆபத்தின் எதிரொலியாக யுத்தப் பகுதிக்கு வெளியே தயார் நிலையில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் எல்லைப் புற சிங்களக் கிராமங்களில் மோசமான படுகொலைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அது இனக்கலவரம் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் சூழலும் உள்ளது.

வன்னி மக்கள் தற்போது இரு கொலை இயந்திரங்களுக்கு இடையே மாட்டுப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவிக்கின்றனர். இரு புறம் இலங்கை இராணுவ இயந்திரம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் அறிந்த எதிரி. அந்த எதிரி இவ்வாறு நடந்து கொள்வான் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். அதனால் அந்த எதிரியைக் கையாளவும் அவர்கள் தெரிந்திருந்தனர். கடந்த அறுபது வருடங்களாக் அதனைச் செய்தும் அதனிடம் இருந்து தப்பியும் வந்துள்ளனர். ஆனால் தங்போது தங்கள் சூரியபகவானாகவும் கடவுளின் அவதாரமாகவும் கண்டவர்கள் தங்களைப் பணயம் வைத்த போதும் அவர்களின் கொலை இயந்திரத்தை தங்களுக்கு எதிராகத் திரும்பிய போதும் அவர்களால் அதனைக் கையாள முடியவில்லை.

இந்நிலையை புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் வெளிப்படுத்தவில்லை. வன்னி மக்களின் நலன்களை அப்போராட்டங்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக அப்போராட்டங்கள் சில சமயம் வன்னி மக்களின் உணர்வுகளுக்கு மாறாகவே அமைந்துள்ளது. வன்னி மக்களின் அவலங்கள் மீது ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்படுகிறது. அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரச இயந்திரம் தன் இனவாத நடவடிக்கைகளைக் கூர்மைப்படுத்தி உள்ளது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட இனவாதத்தையுடைய அரச இயந்திரம் மனிதாபிமான நடவடிக்கைகளை வெறும் பிரச்சாரத்திற்காகவே மேற்கொள்கிறது. இலங்கை அரசு பயங்கரவாதிகளாக வர்ணிக்கும் புலிகள் சிங்கள மக்களைப் பணயமாக வைத்திருந்தால் இதே மனப்பாங்குடன் அவர்களை நடத்தியிருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்திடமும் எழுவது தவிர்க்க முடியாதது.

அரசினுடைய செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களும் இந்த யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுபவர்கள் விடயத்தில் பாராமுகமாகவே உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்ததை அவர்கள் துரோகத்தனமாகவே பார்க்கின்றனர். ஆனால் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த புலி ஆதரவு அமைப்புகள் ‘வன்னி மண் அவர்களின் பூர்வீக மண்’ என்ற பிரச்சாரத்தை மையப்படுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேறவிடாது தடுக்கும் புலிகளுக்கு கருத்தியல் அரணை உருவாக்கினர். அப்படி வெளியேறுபவர்கள் இராணுவத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும், கருக்கலைப்புச் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். இவற்றையெல்லாம் ஒரு இனவாத அரச இயந்திரம் செய்யத் தயங்காது. ஆனாலும் சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரச இயந்திரம் சில முகத்தைக் காப்பாற்றும் விதிமுறைகளை பின்பற்ற முயல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசின் எதிர் நடவடிக்கைகளில் மட்டும் தங்கி இருந்து அரசியல் செய்து றிம்மில் சைக்கிள் ஓடுவதாகத்தான் புலிகளின் பிரச்சாரங்கள் உள்ளது.

இலங்கை அரசினுடைய முன்னெடுப்புகள் ஒன்றும் புலிகளுக்குக் குறைந்தது அல்ல. பிகெகெ தலைவர் அப்துல்லா ஓச்சுலான் கைது செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் இலங்கை அரசுக்கும் ஒரு பாடமாக அமையும். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சமூசத்தின் ஒரு தனிமனிதனையோ ஒரு அமைப்பையோ பணிய வைப்பதன் மூலம் அச்சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளுணர்வைப் பணிய வைத்துவிட முடியாது. ஓச்சுலானாக இருக்கலாம் பிரபாகரனாக இருக்கலாம் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறையின் பக்க விளைவுகளே அவர்கள். ஒச்சுலான் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் இன்னமும் துருக்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இராணுவத் தாக்குதல்களும் நிகழ்கிறது. அதற்குக் காரணம் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரும் குர்திஸ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை துருக்கி முன்வைக்கவில்லை. குர்திஸ் மக்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஒச்சுலான் கைது செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒருவகை ஸ்தம்பிதம் ஏற்பட்டு இருந்தாலும் இப்போது மீளவும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தலைதூக்குகின்றது. ஒச்சுலான் ‘ஆயுதங்களைக் கீழே போடுங்கள்! சரணடையுங்கள்!’ என்று சொன்னாலும் அதற்கு பணியாது பிகெகெயின் சில தலைவர்கள் ஆயுத நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த முல்லைத்தீவுச் சிறுநிலப்பரப்பில் எதுவும் நடக்கலாம். அங்கிருந்து பெரும்பாலும் பிரபாகரன் தப்பி இருக்கலாம். சிலசமயம் இறுதி மூச்சுவரை போராடுவேன் என்று போராடலாம். அல்லது சரணடையலாம். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எது எப்படியானாலும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மிக மோசமான ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசு தனது ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனஒடுக்குமுறையைக் களைந்து தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தவறினால் இந்த நச்சுச் சூழற்சி மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. பிரபாகரனும் புலிகளும் மட்டுமல்ல பிரச்சினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வை முவைக்க முடியாத இலங்கை அரசும் அரச இயந்திரமும் முக்கியமான பிரச்சினை.

இனிமேல் ஏற்படப் போகும் மனித அவலங்களுக்காவது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் ஒப்படைத்து தங்கள் வரட்டுத்தனமான ஏகபிரதிநிதித்துவக் கோசத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும். இலங்கை அரசும் அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க முடியும். இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காண உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும். அரசாக இருந்தாலும் புலிகளாக இருந்தாலும் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொண்டு இரு தரப்பும் வெற்றிகொண்டதான நிலையை உருவாக்கி தற்போதுள்ள இறுக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது மிகவும் கடினமாகி உள்ளது.

இலங்கை அரசு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகளுடன் உடன்பட்ட புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் இறுதி 72 மணித்தியாலங்ளை எதிர்நோக்கி உள்ளது. அதனை இலங்கை அரசு இன்னும் சில தினங்களில் இந்த முல்லை யுத்தம் முடிவுக்கு வரும் என்கிறது. பா சிதம்பரம் இன்னும் இரு தனங்களில் நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றார். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா நடேசன் ஏப்ரல் 28 இலங்கை அரசபடைகள் பல்முனைத் தாக்குதலை தொடங்கிவிட்டனர் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களை வீதிகளில் இறங்கிப் போராடும்படியும் அழைத்துள்ளார். இளையவர்களுக்கு விடுக்கப்பட்ட மாணவ அமைப்பு ஒன்றின் அறிக்கை இன்று ஏப்ரல் 29 திகதியை குறிப்பாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். (Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்) பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் இன்னும் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசு தனது இராணுவ நடவடிக்கைகளை முடித்துள்ளது. இந்த மூன்றாவது ஆண்டின் முடிவில் அதாவது ஏப்ரல் 30ல் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என புரஜகற் பீக்கனில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த 48 மணிநேரம் யுத்தப் பகுதியில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகவும் அதே சமயம் மிகவும் ஆபத்தானதாகவும் அமைய உள்ளது.

பிரபாகரனின் விளையாட்டு முடிவடைந்தது; உயிருடன் பிடிக்க முழுமூச்சில் முயற்சி! சி.என்.என். தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி பேட்டி

Mahinda Rajapaksa விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விளையாட்டு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முழுமூச்சில் எடுக்கப்படுகின்றன. விரைவில் அவர் பிடிக்கப்பட்டுவிடுவார் என நம்புகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படித் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான சி.என்.என்னுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே ஜனாதிபதி இப்படிக்கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க நேரிடும் அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் ஜனாதிபதி பேட்டியில் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.

எமது அரசாங்கம் போர்நிறுத்தம் எதனையும் அறிவிக்கவில்லை இப்போது பிரபாகரனைப் பற்றியோ அல்லது வேறு எவரைப் பற்றியோ கவலைப்படவில்லை அது பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது  என்றே கருதுகிறேன் என்றார் ஜனாதிபதி.

லண்டன் தாக்குதல் சந்தேக நபர்கள் 3 பேர் விடுதலை

julyassist_met_comp.jpgலண்டன் நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை, நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை அக் குற்றச்சாட்டில் இருந்து பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று விடுவித்துவிட்டது. லண்டன் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளவயது பிரிட்டிஷ் முஸ்லீம்களுக்காக லண்டன் நகரில் உளவு பார்த்ததாக வாஹீத் அலி, சாதீர் சலீம் மற்றும் முகமது ஷகீல் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் தாங்கள் லண்டனில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்க்கவே வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர்.

வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துள்ள ஜூரிகள், வாகீத் அலி மற்றும் முகமது ஷகீல் ஆகிய இருவர் மீதும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாமுக்கு செல்லத் திட்டமிட்டது தொடர்பாக குற்றம் கண்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை: இலங்கை விவகாரம்- உயர் அதிகாரிகளுடன் ஒபாமா அவசர ஆலோசனை

obama-hilari.jpgஇலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ் எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதியாகிப் போன மனிதம் : ஜோ செனவிரத்ன

Wanni_War_IDPs(லங்காஈ நியுஸ் இணையச் சஞ்சிகையில் ஜோ செனவீரரத்தின சிங்களத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் அஜீவன்.)

– http://www.lankaenews.com/Sinhala/news.php?id=8696

இன்று சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பயங்கரவாதிகளின் இறுதி எப்படி இருக்கும் என்பதிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மற்றும் உலகமும் வியப்போடு இருப்பது வியப்பான விடயமல்ல. 30 வருடங்களுக்கும் மேலாக சிங்கள மற்றும் தமிழரிடையே அரசியல் வேறுபாடுகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் துன்பத்தை மட்டுமே அளித்து வந்த போர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்பதை தினசரி செய்திகள் கூறுகின்றன.

இது சிங்களவர் மனங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும், அபிமானத்தையும் தருவதாக இருக்கிறது. ஆனால் தமிழர் மனங்களுக்கோ தமது மன உறுதி தளர்ந்து தோல்வியில் மனமொடிந்து நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது. போர் ஒன்றின் வெற்றி தோல்விகளின் பின் இறுதியாக மனித மனங்களில் ஏற்படும் இந்த உணர்வுகள், எவருக்கும் பொதுவானது. இந்த இரு தரப்பும் தமது மதங்களின் படி இறுதி நிகழ்வுகளையும் நடத்தி ஆத்ம சாந்திக்காக பிராத்தனை கூட செய்வார்கள்.

இதற்கு முன் இரு முறை அதாவது 1971, 1989 ஆகிய வருடங்களில் தேசாபிமானம் கொண்ட சிங்கள இளைஞர்கள் அப்போதைய அரசைக் கவிழ்த்து சமத்துவமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு நடத்திய புரட்சியின் போதும் இதே போன்ற வெற்றி , தோல்வி இரண்டை பெற்றவர்கள் இருந்தார்கள். ஒரு சாரார் வெற்றிக் கழிப்பில் திழைத்த வேளையில் மற்றொரு சாரார் சோகத்தில் அமிழ்ந்து கண்ணீர் வடித்ததை நம்மால் இன்றும் மறக்க முடியவில்லை.

இந்த வெற்றி பெற்றவர்களிலும், தோல்வியைத் தழுவியவர்களிலும் இடையே நடந்த மோதலுக்குள் அகப்பட்டு சின்னாப் பின்னப்பட்டவர்களது வேதனைகளை உணரும் மனித நேயமுள்ள ஒரு சிலராவது இந்த நாட்டில் எப்படியும் மீதமாகி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையே இந்த மடலை எழுதும் தைரியத்தை எனக்களித்துள்ளது.

சிங்களம் – தமிழ் என, இனவாதத்துக்குள் மனிதம் தொலைந்து போய் இருந்தாலும் இந்த யுத்த மோதல்கள்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் மனிதர்கள் என்பதை நிராகரிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இப்படியாக நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்து ஒருவரை ஒருவர் கொலை செய்வது யாரை? அது தமிழீழ பயங்கரவாதிகள் மற்றும் தேசத்தை காக்கும் வீரர்கள் என்பதாகட்டும், சிங்கள படை மற்றும் விடுதலைப் புலி போராளிகள் ஆகட்டும், நீங்கள் ஏப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால் உங்கள் உணர்வுகளில் இங்கே மனிதர்கள் யாரும் இறக்கவில்லை என்றே நீங்கள் கருதுகிறீர்கள்.

இவை காலா காலமாக ஒருவர் அடுத்தவர் மேல் உருவாக்கிக் கொண்ட, அச்ச உணர்வுகளின் பாதிப்பாகவும், அடுத்த ஒரு பகுதியினர் மீது தமது பல பிரயோகங்களை பிரயோகிக்கும் ஆசை கொண்ட அதிகார மனிதர்களால் ஏற்படுத்தப் பட்ட கொலை வெறி கொண்ட அரசியல் தன்மை என்பதாகவுமே இதை நாம் பதிவு செய்யலாம்.

அதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கொல்லப்படும் மக்களை ஒரு வெறுப்புதத் தன்மைக்குள் தள்ளி அல்லது திணித்து, அவர்களின் மனிதத் தன்மையை மறக்க வைப்பதே இந்தக் அதிகார வர்க்கத்தின் முதல் முயற்சியாகும். அவர்களால் கொடுக்கப்படும் அல்லது குறிக்கப்படும் அல்லது அழைக்கப்படும் பெயர்கள் ஆரம்பத்தில், அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் தன்மையையே மனித மனங்களிலிருந்து அகற்ற வழி செய்கிறது.

அதனால் இவர்கள் மனிதர்களாக இல்லாமல் நம்மிலிருந்து வேறுபட்டுப் போகின்றனர். அப்படி வேறுபடுத்தப் படுவோர் தன்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்றாகி விடுகிறது. தன்னைச் சாராத எதிரியை கொல்வது நியாயப்படுத்தப்படுகிறது. அது பின்னர் நியாயாமானதாகியும் விடுகிறது.

பிரிவினைவாதி – பரதேசி – துரோகி – வேற்று மதத்தவன் – இனத்துரோகி – தேசத்துரோகி – கோத்திரத்தின் எதிரி – பச்சைத் துரோகி -கெரில்லா ………….. இப்படியான பெயர்களால் நாமம் சூட்டப்படுவோர் கொல்லப்படக் கூடியவர்கள் என்றாகிவிடுகிறது. அப்படி கொல்லப்படுவோர்ர் அல்லது மரணிப்பவர்கள் மனிதர்கள் அல்ல. அந்த மனிதர்கள் மேல் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை. அந்த மனிதர்கள் எம்மை விட்டு அகன்றுவிட்ட அல்லது எம்மால் தூக்கி எறியப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பாக கலங்கவும் தேவையில்லை. அவர்களது மரணங்களே எமது வெற்றிச் சின்னங்ககள் என ஊடகங்களில் சொல்லி பெருமை கொள்ளலாம். சந்தோஷப்படலாம். அப்படி இறந்தவர்களை காட்சிப்படுத்துவதால் மகிழலாம். அவர்கள் பிணங்களைப் பார்த்து இன்பம் அனுபவிக்கின்றனர். டுட்ஸி இனத்தவரது பிணங்கள். அப்கன் போராளிகளது பிணங்கள். அசாம் பிரிவினை வாதிகளின் பிணங்கள்.பாலஸ்தின போராளிகளின் பிணங்கள் இவை அனைவரும் எம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மக்கள் மறக்கவே செய்கின்றனர். அங்கும் இறந்து போனவர்கள் எம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான் என்பதை எம்மிடையே மறைக்க வைக்க அவர்களால் இலகுவாக முடிகிறது. எம்மிடம் உருவாகும் அந்த அனுதாபத்தையும் சோகத்தையும் எம் இதயஙங்களிலிருந்து மறக்கடிக்க வைக்க அவர்களால் நிச்சயம் முடிகிறது.

வனாந்தரங்களில் உள்ள மிருகங்கள் கூட, மனிதர்கள், மனிதர்களை வேட்டையாடுவது போல வேட்டையாடுவதில்லை. மிருகங்கங்களுக்கு இல்லாத அளவு நாகரீகமும், கலாச்சார விழுமியங்களும் கொண்டு வாழும் மனிதன், இன்னொரு மனிதனை சாகடிப்பதில் திருப்பதி அடைகிறான். இவர்களிடம் ஜெனித்த புத்தரும், காந்தியும், யேசுவும், அல்லாவும், மனித உயிர்கள் மேல் மட்டுமல்ல விலங்குகள், செடி கொடி, ஆகியவற்றின் மேல் கூட அன்பு செலுத்துங்கள் என்றது மட்டுமல்லாமல் முழு உலகின் தன்மையையும் சீரழிக்காது பாதுகாக்க வேண்டுமானால் அன்பு – கருணை – நேசம் – பாசம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு பல நூறு தத்துவ விளக்கங்களோடு சொல்லிச் சென்றார்கள்.

அந்த உத்தமர்களின் தர்மத்தை, கிளிப்பிள்ளைகள் போல் மனப்பாடமாக சொல்லிக் கொண்டும், கோயில் குளங்களை நிர்மாணித்துக் கொண்டும் , உலகம் பூஜிக்கும் படைப்புகளை உருவாக்கிய மனிதன், கொலை கலாச்சாரத்தை மென் மேலும் வளர்த்துக் கொண்டே செல்கிறான்.

முதலாம் – இரண்டாம் உலகப் போரில், மாபெரும் மனித அழிவுகளுக்கு மத்தியிலும், கிரோஷீமா நாகசாக்கி போன்ற அணு சங்காரங்களிலும் மனித உரிமைகளை காப்பதற்காகவே ஐநா உருவானது. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக மனித உயிர்களைப் பலி கொள்ளும் மோதல்களும் போர்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

அண்மையில் சூடான் ஜனாதிபதி டிமால் அல் பஷீருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்யும் ஆணையொன்றை பிறப்பிக்க முயன்ற போது, அரபு லீக் மற்றும் ஆப்பிரிக்க சங்கம் அதைத் தடுத்து விட்டது. 2003ம் வருடம் சூடான் ஓர்பூர் பிரதேசத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் சாவுக்கு காரணமானவர் தப்புவதற்கு அது காரணமாகியுள்ளது. இது ஐக்கிய நாடுகள் எனும் ஈனியா தன்மை கொண்ட செயலகத்தின் வீழ்சியையே ஏமக்கு காட்டுகிறது. கொலைக் கலாச்சாரம், உலக அரங்கில் தனது அதிகாரத்தையுயும், அனைத்து மதக் கோட்பாடுகளையும் மிதித்துக் கொண்டு இன்று எழுந்து நிற்கிறது. இது மனிதனுக்கு வாழும் உரிமை இல்லாதாக்கியுள்தையே காட்டுகிறது.

நமக்காக நாம் என்போர் பிரபாகரன் மற்றும் பயங்கரவாதிகளின் மரண ஊர்வலத்தை தொலைக் காட்சிகளில் பார்க்க தயாராவார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக ஆத்ம சாந்திகள் வேறு நடைபெறும்.

ஆனால், நம்மால் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அதாவது, வடக்கு கிழக்கில் இருந்து வந்து முகாம்களுக்குள் அடைபட்டு இருக்கும் அந்த அப்பாவி தமிழர்களுக்காக எமது மனங்களில் இருக்கும் இரக்கத்தோடு உதவ முயலவோம். தமிழர்கள் என்று உதறித் தள்ளாமல் மனிதர்களாக பிறந்தவர்கள், மனிதர்களை நேசிப்பதற்கானவர்கள் எனும் உணர்வோடு, எமது கரங்களால் அவர்களை அன்போடு பற்றிக் கொள்வோம். அது எம்முள் உள்ள மனிதத்தை அர்த்தப்படுத்தும்.

மேல் மாகாண சபை முதல்வர் அமைச்சர்கள் 4 இல் பதவியேற்பு

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் எதிர்வரும் மே 4ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்ற தகுதியான சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக நியமிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எதுவித உண்மையும் இல்லை. கட்சியிலுள்ள சகல கட்சித் தலைவர்களினதும் ஒத்துழைப்புடனேயே முதலமைச்சர் நியமிக்கப்படுவார்.

முதலமைச்சர் யார் என்பது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும். அவரவர் பெற்றுள்ள வாக்குகள் சிரேஷ்டத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தெரிவு இடம்பெறும். கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்கவும் கொழும்பில் துமிந்தசில்வாவும் களுத்துறையில் ரெஜினோல்ட்குரையும் கூடுதல் விருப்புவாக்கு பெற்றுள்ளனர் என்றார்.

பன்றிக்காய்ச்சல்: தடுக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

mexico_flu_.jpgஆசியக் கண்டத்தில் அச்சுறுத்தலாகவிருக்கும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை உரிய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார். நாட்டில் இதுவரையில் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காக செயலாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி எதிர்கால திட்டங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே ஆசியாவை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்தே இலங்கைக்குள் அந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

700 மீற். நீளமண்அணை படையினரால் மீட்பு: வலைஞர் மடத்தில் புலிகளின் குண்டுலொறி தாக்கி அழிப்பு

udaya_nanayakkara_brigediars.jpg வலைஞர் மடத்திற்கு தெற்கே இர ட்டை வாய்க்கால் பிரதேசத்தில் புலி களால் அமைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமும் 700 மீற்றர் நீளமுமான மற்று மொரு பாரிய மண் அணையை பாது காப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வலைஞர்மடம் பகுதியில் நிலை கொண்டு ள்ள படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட லொறி யொன் றின் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதல்களில் அந்த லொறி முற்றாக வெடித்துச் சிதறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய ரக ஆயுதங்களைப் பாவித்த வண்ணம் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரே இந்த மண்அணையை கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்; பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளிடம் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் நேற்று அதிகாலை மற்றுமொரு பாரிய மண்அணையை கைப் பற்றியுள்ளனர்.

இந்த மண்அணையைக் கைப்பற்றிய சில நிமிடங்களில் படையினரை நோக்கி லொறி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லொறி வந்த நோக்கத்தை புரிந்து கொண்ட படையினர் அதன் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முற்றிலும் சி-4 ரக அதி சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்த அந்த லொறி வெடித்துச் சிதறியுள்ளது. இரட்டை வாய்க்கால் பிரதேசத்திலுள்ள மண் அணையை கைப்பற்றிய படையினர் அந்தப் பிரதேசத் திலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் ஏழு சடலங்கள், எம்.பி. எம்.ஜி-01, தொலைத் தொடர்பு கருவிகள் –3 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தல் – ஜனாதிபதி

Mahinda Rajapaksa பயங்கரவாதம் தற்போது தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என்பதை சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனத்திற் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொழிற்தளங்களில் மாத்திரமின்றி தொழிலாளர்களின் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் சகல விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்படல் அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் இரண்டு பகுதியிலும் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அற்றுப்போயிருந்த சுதந்திரம் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் அமைதியான சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் அதன் முன்னேற்றத்தின் எதிரியாகவே உள்ளது. எமது படையினர் பயங்கரவாதத்தை துடைத் தெறிந்து விட்டனர். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று வருட காலப் பகுதியில் நாம் பாரிய பயங்கரவாதத்துக்கெதிரான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதற்கான பதிலடியையும் கொடுத்துள்ளோம். கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் முற்பட்ட போதும் பயங்கரவாதிகள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதன் பின்னரே அரசாங்கம் அதன் உரிமையைக் கையிலெடுத்தது. பலத்தைப் பாவித்து பயங்கரவாதத்துக்குப் புரியும் பாஷையில் பதிலடி கொடுக்க நேர்ந்தது. விவசாயிகள் அவர்களது பிள்ளைகள் பாதிக்காதவாறு மிக அவதானத்துடனேயே நாம் எமது நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

இதனால் எமக்குக் கடினமான தீர்மானங்களை எடுக்க, நேர்ந்ததுடன் இறுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி காண முடிந்துள்ளது. பயங்கரவாதம் இன்று முழு உலகிலும் வியாபித்துள்ளது. வளர்முக நாடுகள் மற்றுமின்றி வறுமை நிலை நாடுகளையும் அது பாதித்து வருகிறது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த 90 வருடங்களுக்கு முன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்ட போது பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால் அது இன்று தொழிலாளர் வர்க்கம் உட்பட பல்வேறு துறைகளையும் பாதித்து வருகிறது.

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சகல துறையிலும் அச்சுறுத்தலாகிவரும் பல்வேறு வித பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் தமது கவனத்தை செலுத்துதல் அவசியம்.

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்களிப்பு அவசியமானது. யாரோ விடும் தவறினால் அதன் பாதி ப்பை அபிவிருத்தி காணும் நாடுகளும் முகம்கொடுக்க நேர்கிறது. இத்தருணத்தில் இத்தகைய அமைப்புக்கள் எமது சமூகத்தை பாதுகாப்பதுடன் சரியான திசையில் வழிநடத்தவும் முன்வர வேண்டும்.

2006ம் ஆண்டில் எமது அரசாங்கம் ‘மஹிந்த சிந்தனை’ பத்தாண்டுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. மக்களுக்கான கெளரவத்தையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பதில் இது முன்னுரிமையளிக்கின்றது.  இத்திட்டங்களில் நாம் வெற்றியடைந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுமாறு தொடர்ந்தும் பொதுமக்களிடம் கோரிக்கை

flee0009.jpg
வன்னியிலிருந்து படை நடவடிக்கை காரணமாக வவுனியா வந்தவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்து வந்த மக்களில் பலருக்கு மாற்று உடைகள் இல்லை. சமூக நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் உடைகளை அன்பளிப்பு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் சிறுவர்களுக்குரிய ஆடைகள் அதிகளவு தேவைப்படுகின்றது. சவக்கார வகைகள், துவாய், படுக்கை விரிப்புக்கள், பற்பசை. தூரிகை, முகச்சவரம் செய்வதற்குரிய பொருட்கள், சுகாதார துவாய் போன்ற பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக நலன்புரிநிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்ல எவருமே கிடையாது. சிறுவர்களுக்கு போசாக்கு உணவுகளும் தேவைப்படுகின்றது. சில தற்காலிக நலன்புரிநிலையங்களில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை எனவும் குறைகூறப்படுகின்றது.