ஆசியக் கண்டத்தில் அச்சுறுத்தலாகவிருக்கும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை உரிய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார். நாட்டில் இதுவரையில் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காக செயலாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி எதிர்கால திட்டங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதன்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகே ஆசியாவை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்தே இலங்கைக்குள் அந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.