மேல் மாகாண சபை முதல்வர் அமைச்சர்கள் 4 இல் பதவியேற்பு

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் எதிர்வரும் மே 4ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்ற தகுதியான சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக நியமிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எதுவித உண்மையும் இல்லை. கட்சியிலுள்ள சகல கட்சித் தலைவர்களினதும் ஒத்துழைப்புடனேயே முதலமைச்சர் நியமிக்கப்படுவார்.

முதலமைச்சர் யார் என்பது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும். அவரவர் பெற்றுள்ள வாக்குகள் சிரேஷ்டத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தெரிவு இடம்பெறும். கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்கவும் கொழும்பில் துமிந்தசில்வாவும் களுத்துறையில் ரெஜினோல்ட்குரையும் கூடுதல் விருப்புவாக்கு பெற்றுள்ளனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *