2009

2009

சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில் -சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

29-train.jpgசென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர். இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும்: டி.சுதர்சனம்

sivajilingam0.jpgபிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார்.

அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரத்தில் விமர்சனங்கள் செய்து வருகிறார். அவரது இச்செயல் இந்திய அரசு அமைப்பு சட்டத்திற்கும், சர்வதேச பாஸ்போர்ட் விதிமுறைக்கும் முற்றிலும் எதிரானதும், கடுமையான தண்டனைக்கு உரியதும் ஆகும்.

எனவே, இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது

ஆம் நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி

pranabl.jpgசிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது.   தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.  இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு.  போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.  இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

ராமதாஸ், வைகோவுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன்

thirmavala.jpgஈழத் தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா.

எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கறையைவிட இந்தத் தேர்தலில் திமுகவை தோல்வியடைய செய்வதுதான் முக்கியமாக உள்ளது என்றார்.

பிரான்ஸ் அமைச்சரும் பிரித்தானிய செயலாளரும் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

29042009-2.jpgஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கலாநிதி பாலித்த கோஹன, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர்; காமினி செனரத், இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் மற்றும் பிரான்ஸ் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயந்தேர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.

அங்குள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வசதிகளை நேரில் கண்டு திருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரான்ஸ் அரசாங்கத்தால் அங்கு அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆஸ்பத்திரியையும் இவர்கள் பாவையிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தா கல்லூரியின் நிவாரணப் பொருட்கள் ஊடகத்துறை அமைச்சர் யாப்பாவிடம் கையளிப்பு!

donation_food_anandacollage.jpgவடக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு,  ஆனந்தா கல்லூரியினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஊடகத்துறை அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இது தொடர்பாக ஆனந்தா கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வைபத்தில் நிவாரணப் பொருட்களை கல்லூரியின் பழைய மாணவரும் தகவல்,  ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கல்லூரி அதிபர் கையளித்தார்.  இவ்வைபவத்தில் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட, பௌத்த மதகுருக்கள் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளின் ஆமர்பிளேட் வாகனமும் 9 சடலங்களும் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armoplate_vehicle.pngபுலிகளால் பாவிக்கப்பட்டு வந்த ஆமர்பிளேட்களினால் மறைக்கப்பட்ட ட்ரக் வண்டி உட்பட மேலும் பல வாகனங்கள் பலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வாழையர்மடம் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 600 மீட்டர் நீளமான மண் அணைக்கட்டுக்களை நேற்றுக் கைபற்றிய இராணுவத்தின் 53ஆம், 58ஆம் படைப் பிரிவினரே இந்த வாகனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

புலிகள் தமது உயர்மட்டத் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

மண் அணைக்கட்டுக்களைக் கைபற்றிய பின்னர் அங்கு தேடுதல் மேற்கொண்ட படையினர் எல்.ரி.ரி.ஈ. யினரின் 9 சடலங்களையும் ரி-56 ரக துப்பாக்கிகள் 15,  ஒரு ஸ்ணைபர் துப்பாக்கி, 11 கிளேமோர்கள்,  1கிலோ கிராம் எடையுள்ள சீ-4 ரக வெடிபொருள்,  75 டெட்டனேடர்கள்,  53 அருள் குண்டுகள், 47 கைக்குண்டுகள் மற்றும் 2 ஐகொம் தொடர்பு சாதனங்கள் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கன்டெடுத்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

armoplate_vehicle.png

உடனடி யுத்தநிறுத்தத்திற்கு பிரித்தானிய-பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு: அரசு மறுப்பு

British_French_Foreign_Ministersஇலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் வலியுறுத்தியுள்ளார். எனினும் இக்கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் பொருட்டும் இந்த உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டி சர்வதேசம் அழுத்தங்களை மேற்கொண்டு வருவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக அல்ல என அவர் தெரிவித்தார்.

பொது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டே இவ்வாறான யுத்த நிறுத்தம் தேவைப்படுவதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.  அத்துடன் மூன்று முக்கிய கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் பொருட்டு தமது இலங்கை விஜயம் அமைந்ததாக அவர் இதன் போது தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தினது அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பது குறித்தும் அதன்படி நடப்பது குறித்தும் இதன்போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்கள் மோதல் பிரதேசங்களிலும் அதற்கு வெளியே இடைத்தங்கல் முகாம்களிலும் அவலப்படும் நிலைமை குறித்து கவலை வெளியிட்டதுடன் இவை தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மூன்றாவதாக இலங்கை அரசாங்கம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணங்கி செயற்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமானதும், அமைதியானதுமான வாழ்க்கை முறைமையை உறுதி செய்வது தொடர்பிலேயே தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பான அறிக்கையினை வெளியிடவிருப்பதாகவும் இந்தச் சந்திப்பின் போது டேவிட் மிலிபேண்ட் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்ணரும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

“மோதல் பிரதேசங்களில் தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலரும் பல்வேறு கருத்தினை வெளியிடுகின்றனர். ஆனால் அங்கு உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும் அங்கு உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் மீட்கப்பட வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோளாக இருக்கிறது” என அவர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் மோதல் பிரதேசங்களிலும், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமெனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே மோதல் பிரதேச தொண்டு பணியாளர்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலமே பொதுமக்களின் உண்மையான நிலவரம் குறித்து வெளியுலகத்திற்குத் தெரிய வருவதுடன், அவர்களின் உண்மையான தேவை அறிந்து சேவை செய்யவும் முடியும் என குஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர், தங்களது உண்மையான நிலைப்பாடுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தாம் கருத்து வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். முகாம்களுக்குச் சென்று நேரடியாக அவர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவே உண்மையில் பொது மக்களின் நிலையினை அறிய முடியும், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆராய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

டேவிட் மிலிபண்டின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்

29042009.jpgபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபண்டின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. கைகளில் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரங்களை பரப்பி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி – ஊவா முதலமைச்சர்

ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை. ஒரு சிலர் உண்மைக்கு புறம்பான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். இவ்வாறு ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் காமினி விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியும் அதேபோல் கல்வியமைச்சராக பதவியேற்ற பொழுது பதுளை, மொனராகலை மாவட்டத்தில் இயங்கிவந்த மூவின பாடசாலைகளில் மலசலகூடம், கட்டிட வசதிகள் என்பன அதிகமாக இருக்கவில்லை. படிப்படியாக மேற்கொண்ட கல்வி மேம்பாட்டுத் திட்டத்தால் சகல வழிகளிலும் பாடசாலைகள் அபிவிருத்தியடைந்து வந்துள்ளதுடன், கல்வியின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் கிராம தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்தனர். தற்பொழுது அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. காரணம் கிராம தோட்டப்பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்த்து கிராம தோட்டப்பாடசாலைகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிராம தோட்டப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவந்தன. ஆசிரியர்கள் அதிகமாக இருக்கும் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. இதையெல்லாம் சரிசெய்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். மாகாணசபைக்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையில் ஒரு போதும் அரசியல் இலாபம் தேடமுனையவில்லை. சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஊவா மாகாண சபையால் 5 ஆயிரத்து 600 தொண்டர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை தீரவில்லை. 40 சித்திரப்பாட ஆசிரியர்களும் விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர். இவ் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. இருக்கும் ஆசிரியர்களிலிருந்து தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்வில் ஊவா மாகாணத்திற்கு மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.

பட்டதாரிகளுக்கு வெறுமனமே ஆசிரியர் நியமனம் வழங்க முடியாது. அவர்களுக்கு முதலில் பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி இல்லாமல் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஒரு சிலர் கூறுவது போல் ஊவா மாகாணத்தில் எந்தவொரு பாடசாலையும் மூடவில்லை.

வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் நானே முதலமைச்சர் இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைவிட கட்சியின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவன் என்ற ரீதியில் ஜனநாயக ரீதியான தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். ஒரு போதும் நிராகரிக்கமாட்டேன்.

தற்போது மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சுயவிபரக்கோவையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விபரக்கோவைகளும் கிடைக்கப்பட்ட பின்னர் அதற்கேற்ற வகையில் மறுசீரமைக்கப்படுவதுடன், கல்வியில் பாரிய மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியுமெனக் கருதுகிறேன் என்றார்.