2009

2009

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

Pirabakaran_V விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  உடல் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோக பூர்வமாக சற்று முன் அறிவித்துள்ளார். இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உடல் காண்ப்பிக்கப்பட்டு உள்ளது. தலையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் உடல் பாகங்கள் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகிறது.

தேசம்நெற் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.

மரபனு பரிசோதணைகளும் (DNA Test) உடல் பிரபாகரனது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவைச் சந்தித்து உள்ளார்.

பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. அதே போன்று இலங்கையின் ஒப்பிரேசன் புளுஸ்ரார் ஆக அமைந்துள்ளது  புரொஜக்ற் பீக்கன். அதில் பிரபாகரனின் மரணம் புலிகளுடைய அனுதாபிகளால் ஜீரணிக்க முடியாததாக என்றும் இருக்கப் போகின்றது.

புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். புலிகளை மீளக் கட்டமைக்கவும் போராடும் சக்தியாக வைத்திருக்கவும் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையே செல்வராஜா பத்மநாதனின் கூற்று தெரிவிப்பதாக உள்ளது.

அடுத்து வரும் நாட்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அமையலாம்.

இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை- நோர்வே

eric-solheim.jpgவிடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறினாலும் கூட போர் இன்னும் முடியவில்லை என்று நோர்வே அமைச்சரும், முன்னாள் அமைதி முயற்சிக்கான தூதுவருமான எரிக் சொல்ஹீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் மூன்றாவது தரப்பிடம் ஆயுதங்களைக் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இலங்கை அரசை மூன்றாவது தரப்பினரை போர்ப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

தற்பொழுது போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவு பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்”: செ.பத்மநாதன்

Selvarasa_Pathmanathan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது” எனவும் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும்,  இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

‘விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்’ எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாளை தேசிய விடுமுறை தினம்

sri-lankan-government.jpgயுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நாளை 20.5.2009  பொது தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

பிரபாகரன் மரணம் அடைந்தமைக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் தேடும் இந்தியா

புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி இவ்வாறு கோரியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பிரதான எதிரிகளாக பிரபாகரனும் பொட்டம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மரணித்து விட்டமைக்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நாம் இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும்: இந்தியா கோரிக்கை

india-f-m.jpgஇலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமிழ் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தமிழர் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்திய-இலங்கை உறவு புதிய விடயங்களில் விஸ்தரிக்கப்படும் – கலாநிதி பாலித கொஹண

palitha_kohona_.jpg இலங்கைக்கும்,  இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு மேலும் விஸ்தரிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கூறியுள்ளார். புலிகளின் அச்சுறுத்தல் இருந்த காலத்திலிருந்த விடயங்களைவிட புதிய விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு விஸ்தரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டகேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மன்மோகன் சிங் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணை பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஆனால், அவரின் அரசாங்கம் மீளத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் மீண்டும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனத் தெளிவாகிறது. இலங்கை இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இனி அந்தத் தொடர்புகள் பல்வேறு புதிய விடயங்களிலும் விஸ்தரிக்கப்படும்” என்றார் அவர்

இடம் பெயர்ந்த மக்களுக்கு சீனாவின் முதற்கட்ட உதவியாக 6300 கூடாரங்கள்

IDP_Campsஇலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன் கருதி 6300 கூடாரங்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு முதற்கட்ட உதவியாக வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின விவகாரம் குறித்து பிரிட்டிஷ் சபாநாயகர் வருத்தம்

_michaelmartin.jpg
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செலவினங்களுக்காக பெற்ற தொகைகளில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஊழல்கள் குறித்த விவகாரத்தில் தனது பங்கு குறித்து தான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர் மைக்கல் மார்ட்டின் கூறியுள்ளார்.

உறுப்பினர்களால் நிறைந்திருந்த மக்களவைக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த விவகாரத்தில் பிரிட்டன் மக்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காணுவதற்காக, தான் கட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அலிக் அலுவிஹாரையின் இறுதிக் கிரியைகள் 21ம் திகதி

alu.jpgசுமார் அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாத்தளை மாவட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான அலிக் அலுவிஹாரயின் ஈமக்கிரியைகள் மாத்தளை பேர்னாட் அலுவிகாரை மைதானத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ளது. 82 வயதைக் கொண்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிக் அலுவிகாரை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

ஐ. தே. கட்சியின் நீண்ட கால உறுப்பினரான அவர் 1961ஆம் ஆண்டில் மாத்தளை மாநகர சபைக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலில் புகுந்தார். பின்னர் அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் மாத்தளைத் தொகுதியின் எம். பியாகத் தெரிவானார்.

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான வஸந்த அலுவிகாரை, மாத்தளை மாவட்ட எம். பி. ரஞ்சித் அலுவிகாரை, மாத்தளை மாநகர சபை உறுப்பினர் சர்ஜித் அலுவிகாரை, தோட்ட உற்பத்தியாளர் சஹன் அலுவிகாரை ஆகியோர் இவரது புதல்வர்களாவர். காலம்சென்ற அலிக் அலுவிகாரையின் ஈமக்கிரியைகள் 21ஆம் திகதி இடம்பெற முன்னர் மாத்தளை மாநகர சபையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். இதன் பின்னர் பேர்னாட் அலுவிகாரை விளையாட்டரங்கில் ஈமக்கிரியைகள் இடம்பெற உள்ளன.