சுமார் அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாத்தளை மாவட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான அலிக் அலுவிஹாரயின் ஈமக்கிரியைகள் மாத்தளை பேர்னாட் அலுவிகாரை மைதானத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ளது. 82 வயதைக் கொண்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிக் அலுவிகாரை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.
ஐ. தே. கட்சியின் நீண்ட கால உறுப்பினரான அவர் 1961ஆம் ஆண்டில் மாத்தளை மாநகர சபைக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலில் புகுந்தார். பின்னர் அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் மாத்தளைத் தொகுதியின் எம். பியாகத் தெரிவானார்.
மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான வஸந்த அலுவிகாரை, மாத்தளை மாவட்ட எம். பி. ரஞ்சித் அலுவிகாரை, மாத்தளை மாநகர சபை உறுப்பினர் சர்ஜித் அலுவிகாரை, தோட்ட உற்பத்தியாளர் சஹன் அலுவிகாரை ஆகியோர் இவரது புதல்வர்களாவர். காலம்சென்ற அலிக் அலுவிகாரையின் ஈமக்கிரியைகள் 21ஆம் திகதி இடம்பெற முன்னர் மாத்தளை மாநகர சபையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். இதன் பின்னர் பேர்னாட் அலுவிகாரை விளையாட்டரங்கில் ஈமக்கிரியைகள் இடம்பெற உள்ளன.