தாம் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து “உதயன்”,”சுடர் ஒளி”பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசேõக சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.இரத்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் இந்தமனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. தாம் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவைத் தொடர்வதற்குத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து மனுதாரர் அனுப்பிய கடிதம் அவரது சட்டத்தரணியால் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது.
இதேசமயம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வித்தியாதரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து முற்றாகப் பரிசீலித்து முடிவு செய்யும் விவகாரம் பொலிஸ் மா அதிபரின் பரிசீலனையில் இருப்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கையை அவர் எடுப்பதற்கு இடமளித்து உயர்நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவின் அனுசரணையுடன் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.